Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

CTC மாநாட்டில் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CTC மாநாட்டில் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா ?

 

Raj-Thavaratnasingham
ரமணன் சந்திரசேகரமூர்த்தி

 

பிரித்தாளும் இராஜதந்திரத்தில் கைதேர்ந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தமிழர் தரப்பை பிளவுபடுத்தி சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் “ஒன்றுமில்லாத தீர்வினை தமிழர்கள் மீது திணிப்பதில்” பெரு வெற்றிகளை கண்டு வரும் நிலையில் நாங்கள் இன்னும் இன்னும் எங்களுக்குள்ளான மோதல்களை தீவிரப்படுத்தி பிளவுபட்டு எம்மினத்தின் அழிவிற்கு துணைபோகும் செயல்பாடுகளையே அதிக வீச்சுடன் செய்து கொண்டிருக்கப் போகின்றோமா என்ற கேள்விகள் இப்போது தவிர்க்க முடியாமல் எம்மத்தியில் எழுகின்றன.

யுத்தக் குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேசத்தின் பார்வையில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களும் சர்வதேச விசாரணைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் சோகம் குறித்து சிந்திப்பதற்கு எமக்கு நேரம் இல்லாமல் இருக்கின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தெடார்பில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு எவ்வாறான பாதிப்புகளை தரப்போகின்றது  என்பது குறித்தோ அதனால் இலங்கை அரசாங்கம் பெறப்போகும் வரப்பிரசாதங்கள் குறித்தோ நாம் ஆராயப் போவதில்லை.

இதுவரை இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொள்ளப் போகின்றது. அது குறித்தும் எமக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

ஏனென்றால் நாம் இவற்றை எல்லாம் விட முக்கியமான விடயங்கள் எம்மைச் சுற்றி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கேளாமல் வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர் அவர்கள் கனடாவிற்கு வருகை தந்திருக்கின்றார்.

ஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வீன் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருடனும் தமிழ் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளோடும் முதல்வர் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்.

அதேபோல் அவரின் வருகையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக “அறிவிக்கப்பட்ட” முல்லைத்தீவை மார்க்கம் நகரத்தின் இணை நகரமாக்கும் ஒப்பந்தம் இந்த வார இறுதியில் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதன் மூலமாக யுத்தத்தால் தமது அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் முல்லைத்தீவு மாவட்டம் நன்மை பெறும் என்று நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.

ஏற்கனவே இங்கிலாந்தின் கிங்ஸ்ரன் நகரமும் யாழ்ப்பாணமும் இணை நகரமாகியதில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகளும் யுத்தத்தினால் தமது வாழ்க்கைத் துணையினை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் இப்போது சீரும் சிறப்புமாக வாழ்ந்து நாம் கண்ணாரக் கண்டு வருவதால் அதே போன்ற “ நன்மைகள்” முல்லைத் தீவிலும்” வவுனியாவிலும் விரைவில் கிடைக்கும் என்றும் நம்புவோம்.

வடமாகாண முதல்வர் கனடாவில் இரட்டை நகர உடன்படிக்கை செய்து கொள்ளும் அததே நேரம் அவருடைய மாகாண சபையில் அமைச்சர்களாக இருக்கும் சிலர் உட்பட பல்வேறு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கலந்து கொள்ளும் ‘இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு’  என்ற உயர் நிலை மாநாடும் இதே கனடாவில் தான் நடைபெறப் போகின்றது.

முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு ( கட்டணம் செலுத்தாத) நடைபெறும்  ஜனவரி 15ம் திகதி  இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடனான உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடும் நடைபெறப் போகின்றது.

ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வடக்கின் முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

வடமாகாண முதலமைச்சர் கனடாவில்  இருக்கின்ற போது அவர் கலந்து கொள்ளமால் வடக்கு கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடனான உயர் மட்ட பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படுவது ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலரிடம் இருந்து இப்போது எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள விக்னேஸ்வரன் எதிர் சம்பந்தன் என்ற மோதல் நிலையின் தொடர்ச்சியும் கனடாவில் தமிழ் தேசியம் பேசும் அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளின் பரிணாம வளர்ச்சியுமே இதற்கு காரணமாகும்

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் செல்வாக்கு பெற்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் அவரின் ஆதரவாளர்களையும் அதில் இருந்து வெளியேற்றி அவர்களின் அரசியல் எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிய தரப்பினர் தான் இப்போது விக்னேஸ்வரனின் கனேடிய வருகையின் போது அவரின் வலதும் இடதுமாக இருக்கின்றார்கள் என்பது கவனிப்பிற்குரியது.

இதனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல் அந்திமத்தை வடமாகாண முதல்வருக்கும் ஏற்பட்டு விடமோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவாக விளங்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவது ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்காது

தாயகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் தெளிவான தெரிவாக சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கின்றது.அதன் மூலமாகத்தான் தான் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற யதாspesialர்த்தம் மறைக்கப்பட முடியாதது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தவறு என்று தாயக மக்கள் உணர்ந்தால் அடுத்த தேர்தலில் அவர்கள் மாற்று தலைமை குறித்து தீர்மானிப்பார்கள் முடிவு செய்வார்கள்.

அதற்கான கால அவகாசத்தையும் அதற்கான வெளியினையும் தாயக மக்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

அந்த மக்களின் அரசியல் தெரிவுகளை தவறென காண்பிக்க முயல்வதும் அந்த மக்கள் பிரதிநிதிகளை அவமரியாதை செய்வதும் அவர்களை பிரித்தாள முயல்வதும் அந்த மக்களின் உரிமைகள் மீதான அத்துமீறலாகவே கருதப்பட வேண்டும்.

இந்த பின்னணிகளோடு தான் வடமாகாண முதலமைச்சரின் கனேடிய விஜயத்தையும் நாம் நோக்க வேண்டும்.

அவரின் கனேடிய விஜயம் நம்பிக்கைகளுக்கு பதிலாக எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளை அதிகம் ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் நன்மைகள் குறித்தும் எதிர்காலம் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டிய முதல்வரும் அமைச்சர்களும் எதிர் எதிர் முகாம்களில் இருப்பதை அவதானிக்கும் துர்ப்பாக்கியம் கனடாவில் வாழும் எமக்கு ஏற்பட்டுள்ளது.

கட்டாவில் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும் மாநாட்டில் தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் செயல்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்காலம் குறித்து ஆராய்ப்படவுள்ள  இந்த மாநாட்டில் கனடாவில் தங்கியுள்ள வடமாகாண முதல்வர் கலந்து கொள்ளமாட்டார் என்ற கசப்பான செய்தி  பலரை கவலை கொள்ள வைத்துள்ளது

முதலமைச்சரை அழைத்த தரப்பினருக்கும் மாநாட்டை நடத்தும் தரப்பினருக்கும் இடையில் நிலவி வரும் பனிப்போரின் விளைவே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்களின் தேவைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நாள் மாநாட்டில் ஏன் வடமாகண முதல்வர் கலந்து கொள்ளவில்லை என்று இங்குள்ள மாகாண அரசோ மத்திய அரசோ கேள்வி எழுப்பினால் யாரால் என்ன பதில் சொல்ல முடியும் என்று மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் குழப்பமடைந்துள்ளனராம்.

முதல்வரை அழைத்தவர்களுக்கும் எங்களுக்கும் எட்டாப் பொருத்தம் அதனால் “அவர்” எங்கள் நிகழ்விற்கு வரமாட்டார் என்று அவர்கள் சொல்வார்களா ? அல்லது மார்க்கம் நகரின் அழைப்பில் வந்த முதல்வரை நாம் எப்படி ஸ்காபுரோவில் நடைபெறும் மாநாட்டிற்கு அனுப்புவது அதனால் தான் அவர் மாநாட்டில் கலந்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்று இவர்கள் தான் சொல்லப் போகின்றார்களா ? தெரியவில்லை. எது எவ்வாறயினும் முதல்வர் கலந்து கொள்ளாமல் இந்த மாநாடு நடைபெறுமானால் அது மிகப்பெரிய ஏமாற்றத்தையும் எமது மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளையுமே ஏற்படுத்தும்.

உண்மையில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் நலன் தான் இவர்களின் பிரதான நோக்கம் என்றால் ஏன் இவ்வாறு பிரிந்து நின்று மக்களையும் செயற்பாட்டாளர்களையும் இந்த அமைப்புகள் குழப்ப வேண்டும்.

இந்த பிரிவுகளாலும் பிளவுகளாலும் யாருக்கு என்ன இலாபம் கிடைத்து விடப் போகின்றது.

இங்குள்ள அமைப்புகளின் தலைமைகளுக்கிடையிலான அதிகாரப் போட்டிக்கு ஒட்டுமொத்த இனத்தின் எதிர்காலத்தையும் தாயக மக்களின் வாழ்வையும் விலையாகக் கொடுக்கப் போகின்றோமா ?

தமக்கான குறைந்த பட்ச நன்மைகளையாவது ஏற்படுத்தி தருவார் என்ற பெரும் எதிர்பாரப்போடு வடக்கின் முதல்வராக அங்கு வாழும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.

தன்னை தெரிவு செய்த தாயக மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் தேசங்களில் வெவ்வேறான காரணங்களால் பிரிந்து நிற்கும் தமிழர் தரப்புகளை ஒன்றிணைக்கும் பணியினை அவர் மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும்.

அதன் மூலமாக தாயக மக்களின் துயர் துடைக்கும் பணியினை வினைத்திறனுடன் முன்னெடுக்க அவர் முன்வரவேண்டும்.

மாறாக இங்கு ஏற்கனவே பிளவு பட்டு நிற்கும் தரப்புகளிடையிலான விரிசல்களை பெரிதுபடுத்தும் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

அதேவேளை வடமாகாண முதல்வரை இது போன்ற சங்கட நிலைக்குள் தள்ளுவதன் மூலம் தமது எதிர்தரப்பை வென்றுவிட எண்ணும் செயற்பாட்டாளர்களால் எமது மக்களுக்கான விடிவினை ஒரு போதும் பெற்றத்தர முடியாது என்ற உண்மையும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்

எமது இனத்தின் மீது கொடும் இன அழிப்பினை புரிந்த சிங்கள தேசமே எமக்கெதிராக இன்றும் ஒன்று பட்டுத் தானே நிற்கின்றது.

அரசியலில் எதிரியாக இருந்தாலும் தன் இனம் என்பதால் மகிந்த தரப்பையும் தமிழ் மக்கள் மீது யுத்தக் குற்றங்களைப் புரிந்த படையினரையும் சர்வதேச போர்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றுவதில் ரனில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் காண்பித்து வரும் அக்கறை எங்கள் கண்களுக்கு ஏன் இன்னமும் புலப்படவில்லை.

சிங்கள தேசத்திடம் இருந்து ஒரு இனமாக சிந்த்திப்பதும் செயல்படுவதும் குறித்த பாடங்களை கற்றுக் கொள்ளாமல் விக்னேஸ்வரனையும் சம்பந்தனையும் மோத வைப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மேலும் பிளவு படுத்துவதாலும் நாம் விரும்பும் தீர்வுகளை அடைந்து விட முடியுமா ?

எங்களுக்குள் இங்கிருக்கின்ற இந்த பிரிவுகளை  சரி செய்து ஒட்டுமொத்த சக்தியாக மாறி எமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை முன்வைக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும்.

இந்த  முரண் நிலைகளை மாற்றுவதற்கான எழுச்சி மக்களிடம் இருந்து பிறக்க வேண்டும்.

தமது அதிகாரங்களுக்காகவும் தமது சுயலாப இருப்புகளுக்காகவும் மக்களையும் மக்கள் பிரிநிதிகிகளையும் கூறுபோடும் சந்தரப்பவாத சக்திகளின் மாயவலைகள் அறுத்தெறியப்பட வேண்டும்.

எமது மக்களின் நல்வாழ்விற்கான முன்னெடுக்கப்படும் செயல்பாடுகளில் “அமைப்பு” அரசியல் இல்லாமல் பொது நலன் நோக்கிய செயல்பாடுகள் இருப்பது இனியாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிலை இதுபோன்றே தொடர்வதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது.

கூறு பட்டு கூறுபட்டு நாம் கூர் உடைந்த பேனாவாய் ஆகி மௌனிப்பதற்கு முன் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்களின் மருத்துவம் கல்வி உட்பட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கனடாவில் நடைபெறும் முதலாவது சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் இங்குள்ள அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்க்கும் நடவடிக்கையினை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இதன் மூலம் புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஒளியினை அவர் ஏற்றி வைக்க வேண்டும்.

அதை விடுத்து என்னை அழைத்தவர்களுக்கு எதிரான தரப்பின் நிகழ்வில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று அவர் அடம்பிடிப்பது ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தாது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கனடாவில் வடமாகாண முதல்வர் அவர்களை சந்தித்து வரும் பல்வேறு தமிழர் தரப்புகளும் இதனை அவருக்கு வலியுறுத்துவதன் மூலம் இதனை சாத்தியமாக்க முடியும்.

கனடாவில் வாழும் தமிழ் புத்திஜீவிகளும் அமைப்பு சாரா பொது நிறுவனங்களும் இந்த “அமைப்பு” சார் அரசியலால் ஏற்படும் முரண்பாடுகளையும் முட்டுக்கட்டைகளையும்  முடிவிற்கு கொண்டு வருவதற்கான அர்த்தபூர்வமான செயல்பாடுகளை இனியாவது மேற்கொள்ளத் தொடங்க வேண்டும்.

ஒரு சிலரின் அடவாடித் தனங்களில் ஒட்டுமொத்த இனத்தின் எதிர்காலம் சிதைந்தளிந்து போவதை தடுக்கும் நடவடிக்கைகள் உடனடியாக  முன்னெடுக்கப்பட வேண்டும்.

முதல்வரின் கனேடிய வருகையானது தமிழர் வாழ்வில் புதிய மாற்றம் ஒன்றின் ஆரம்பமாக அமைய வேண்டும் என்பதே இங்குள்ள பலரின் எதிர்பார்ப்பாகும்

மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றம் இங்கிருந்து இனியாவது பிறக்கப்பட்டும். அது எமது மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் மாற்றமாக இருக்கட்டும்.

 

ரமணன் சந்திரசேகரமூர்த்தி

http://ekuruvi.com/devolopnorthandeast/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.