Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லெண்ண வெளிப்பாடும், நல்லிணக்கச் செயற்பாடும்

Featured Replies

நல்லெண்ண வெளிப்பாடும், நல்லிணக்கச் செயற்பாடும் செல்வரட்னம் சிறிதரன்:-

reconcile.jpg

அரசாங்கத்தின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நன்மை தருமா, என்ற கேள்வி இப்போது, பல தரப்புக்களிலும் தீவிரமாக எழுந்திருக்கின்றது.

பிறந்துள்ள புதிய ஆண்டின் முதல் இரண்டு வாரங்களிலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கவலைக்குரிய இந்த நிலைமை குறித்து சர்வதேச மட்;டத்திலான தரப்பினர் அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

முன்னைய ஆட்சியில் நிலவிய அடக்குமுறை போக்கையும், அதிகார துஸ்பிரயோகத்துடன் கூடிய ஊழல் செயற்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து நல்லாட்சி புரிவோம் என்ற உத்தரவாதத்துடன் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தது.

அது மட்டுமல்லாமல், மனித உரிமை மீறல்களுக்கும், வகைதொகையின்றி இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பு கூறி நீதி வழங்குவோம் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவாதமும், உறுதிமொழிகளிலும் வெறுமனே தேர்தல் மேடைகளில் மட்டும் வழங்கப்படவில்லை. தேர்தல் அரங்கத்தைக் கடந்து, சர்வதேச மட்டத்தில், ஐநா மனித உரிமைப் பேரவையிலும் இந்த உத்தரவாதமும், உறுதிமொழிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

அந்த உயரிய சபையில் எழுத்து மூலமாகக் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான தீர்மானத்தில் புதிய அரசு தானே முன்வந்து, இணங்கி ஏற்றுக்கொண்டு, இந்த உத்தரவாதத்தையும் உறதிமொழியையும் அளித்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்தமாக யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்திருந்த அரசாங்கம் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது.

ஆயினும் நல்லாட்சி அரசாங்கத்தில் நன்மைகள் கிடைக்கும். பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். வாழ்க்கை செழிக்கும் என்ற நாட்டு மக்களின் கனவு நனவாகமாட்டாதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் காரியங்கள் திசை மாறிய நிலையில் இடம்பெற்றுவருகின்றன.

இப்போது நடப்பதென்ன?

முன்னைய ஆட்சியில் முழுமையான அளவில் இடம் பெற்று வந்த இராணுவ அடக்குமுறை போக்கு இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது. இதனை மக்கள் மகிழ்ச்சியோடும், நன்றியறிதலோடும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

அதிகார துஸ்பிரயோகமும் மறைந்திருக்கின்றது என்று கூறத்தக்கவாறு நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், ஊழல்கள் ஒழிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதில் மக்களுக்குத் திருப்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

மில்லியன்களும், பில்லியன்களும் மோசடி செய்யப்பட்டிருப்பதாக ஆட்சிப் பொறுப்பிலும் அதிகார பீடங்களிலும் இருந்தவர்கள் – இப்போதும் இருப்பவர்களுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். விசாரணை செய்யப்படுகின்றார்கள். பலர் நீதிமன்ற உத்தரவின்படி, விளக்கமறியலில் அடைக்கப்படுகின்றார்கள்.

அடுத்து நடப்பது என்ன? – அவர்கள் விளக்கமறியலில் இருந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவதாக அறிவித்தல்கள் வருகின்றன. சட்டத்தின் முன்னால் அவர்கள் தண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

ஊழல் நடவடிக்கைகள் மற்றும் பாரிய நிதிமோசடிகளில் ஈடுபட்ட எவருக்கும், புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னரான கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், உரிய தண்டனை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இதனால், கைதுகளும், விசாரணைகளும், விளக்கமறியல் உத்தரவுகளும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளாகவே காணப்படுகின்றன.

அது மட்டுமல்ல. மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், நீதிமன்ற விசாரணைகளிலும்கூட நீதி வழங்கப்படாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

ஆட்களை வலிந்து காணாமல் ஆக்கியதாக அரச தரப்பினர் மீதும், இராணுவத்தினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு நீதி வழங்குவதற்கென பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

ஆயினும் அ;நத நடவடிக்கையும்கூட சந்தேகம் கொள்ளத்தக்க வகையிலேயே இடம்பெற்று வருகின்றது.

அதில் உரிய வெளிப்படைத் தன்மை பேணப்படவில்லை. இந்தக் கைங்கரியத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரதிநித்துவமும் உள்ளடக்கப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேற்றப்படமாட்டாதோ என்ற சந்தேக நிலைமைக்கே ஆளாக்கப்பட்டிருக்கின்றது.

இன்னும், அரசியல் கைதிகளின் விடுதலை இழுத்தடிக்கப்படுவது தொடர்கின்றது.

குடியிருப்புப் பிரதேசங்களில், மக்களுடைய முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கின்ற இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள், பொதுக்காணிகள் இடம் பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறுவதற்கு வசதியாக முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரத் தொழில் துறைகளில் சிங்களவர்களாகிய வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் அத்துமீறல்கள் என்பன நிறுத்தப்படவில்லை………என, இது போன்று பல்வேறு விடயங்களைப் பட்டியலிட்டு அடுக்கிக்கொண்டே போகலாம்.

சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், சில காரியங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் முன்னேற்றம் காணப்படவில்லை. காலத்தை இழுத்தடித்து, அவற்றை நிரந்தரமாகப் புறந்தள்ளிவிடுகின்ற வகையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன.

இதன் காரணமாகவே நல்லிணக்க ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நன்மை தருமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

நல்லிணக்கமே நல்லாட்சியின் அடிப்படை நோக்கம்
யுத்தத்தில் வெற்றியடைந்த முன்னைய அரசாங்கம் வெற்றிவாதத்தின் மிதப்பிலேயே யுத்த வெற்றியின் பின்னரான காலத்திலும் ஆட்சி நடத்தியிருந்தது.

அடிமட்ட கிராம மக்களின் சாதாரண வாழ்க்கை தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து, நாட்டின் அரசியல் நடவடிக்கை வரையிலும் வெற்றிவாதத்தை முன்னிறுத்தியே காரியங்களை முன்னெடுத்திருந்தது.

அது மட்டுமல்லாமல் அந்த அரசாங்கம் சர்வதேச அரசியலில் வெற்றிவாதத்தை மேலும் முன்னிலைப்படுத்தியிருந்ததையே காண முடிந்தது.

யுத்த மோதல்கள் இடம்பெற்ற, மீள்குடியேற்றப் பிரதேசங்களிலும் வெற்றிவாதம் தோய்ந்த முறையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் நலன்களிலும் பார்க்க, யுத்தத்தில் வெற்றியடைந்த இராணுவத்தினரின் நலன்களே மேலோங்கியிருந்தன.

யுத்தம் காரணமாக, அனைத்தையும் இழந்து, அடையாளம் அற்றவர்களாக அடுத்த வேளை உணவுக்கும், அடுத்த கட்ட வாழ்க்கைக்கும் என்ன செய்வது என்று திகைத்திருந்த மக்களிடம் அந்த அரசாங்கம் வெற்றிவாதத்தில் தோய்ந்த அரசியல் நடத்துவதிலும், அவர்களை முழுமையாக உள்வாங்கி, சுய அரசியல் இலாபத்தை அடைவதற்கான முயற்சிகளிலுமே, முழுமையாக ஈடுபட்டிருந்தது.

இதனால் யுத்தம் முடிவுக்கு வந்த உடனேயே பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வென்று, அவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அந்த அரசு தோல்வி கண்டிருந்தது.

இந்தத் தோல்வியே, சிங்கள மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி வீரனாகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்ச, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மண்கவ்விய தோல்வியின் நாயகனாவதற்குக் காரணமாகியது.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன. ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, மகிந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டும், வெறுப்படைந்துமிருந்த மக்களின் நல்லெண்ணமே அடிப்படையாக அமைந்திருந்தது.

புதிய அரசாங்கத்தை நல்லாட்சிக்கான அரசாங்கமாக நிறுவி, அதனைக் கொண்டு செல்வதற்கும் அதுவே துணை புரிந்தது. இதன் காரணமாகத்தான் அந்த நல்லெண்ணத்தை மேலும் வளர்த்தெடுத்து முன்னோக்கி ஆட்சியைக் கொண்டு செல்வதற்கான நல்லிணக்க முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

அந்த வகையில் புதிய அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும், முன்னைய ஆட்சியில் சலிப்பும் வெறுப்பும் அடைந்திருந்த மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையே இலக்காகக் கொண்டிருந்தது – கொண்டிருக்கின்றது என்று துணிந்து கூறலாம்.

ஒரு கூட்டு முயற்சியின் மூலம், எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பெரிய தேசிய கட்சிகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ‘புதிய – தேசிய அரசாங்கத்தை’ வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு நாட்டு மக்களின் நல்லெண்ணமும், அவர்களுடனான நல்லிணக்கமும் அவசியம் என்பதை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

நாட்டின் வரலாற்றிலேயே முதற் தடவையாக அமைக்கப்பட்டுள்ள இரு கட்சிகள் இணைந்த புதிய அரசாங்கத்தை, நல்லிணக்கமின்றி, கொண்டு நடத்துவது கடினம் என்பதையும் ஆட்சியாளர்கள் நன்கு புரிந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டில் மட்டுமல்ல. சர்வதேச மட்டத்திலும் புதிய அரசாங்கம் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு சர்வதேச நாடுகளுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையும் உணரப்பட்டிருந்தது.

இதற்காக அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் பேரவையை ஒரு முக்கிய தளமாகப் பயன்படுத்திக் கொண்டது.

அந்த சர்வதேச அரங்கில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, அதன் ஊடாக நல்லிணக்கத்தை உருவாக்கிக் கொள்வதற்கான உத்தியாகவே, அரசு, தனக்கெதிராக அங்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையை இணங்கி ஏற்று ஆதரவளித்திருந்தது.

அந்தப் பிரேரணையில் கூறப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து ஏற்றுக்கொண்டது.
உள்ளுர் மற்றும் சர்வதேச நிலைகளில் பின்னடைவு
ஆனால் அதற்கேற்ற வகையில் அரசு நடவடிக்கைகளை உளப்பூர்வமாக முன்னெடுக்கவில்லை.

இதனால் உள்ளுரிலும். சர்வதேச மட்டத்திலுமாக இரண்டு நிலைகளில் அரசாங்கம் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.

யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமாறு காலத்தில் உண்மையான நீடித்து நிற்கக்கூடிய நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.

இந்தத் தேவையைச் சுட்டிக்காட்டி, அதனை நிறைவேற்ற வேண்டும் என சர்வதேசம் வலியுறுத்தியிருந்தது.

யுத்தம் முடிவடைந்த சூட்டோடு சூடாக இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூன் அவர்களிடம் ஒப்புக்கொண்டு அவருடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையின் மூலம், நாட்டில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதாக அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.

அந்தப் பின்னணியிலேயே, அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக, தொடர்ச்சியாக அடுத்தடுத்து பிரேரணைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த பொறுப்பு கூறலில் உண்மை, நீதி, நிவாரணம், மீள் நிகழாமை ஆகிய நான்கு முக்கிய விடயங்களை நிறைவேற்றுவதாகப் புதிய அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தது. அதற்கான கால அவகாசத்தையும்கூட கேட்டுப் பெற்றிருந்தது.

ஆனால் ஒப்புக்கொண்டவாறு, மனித உரிமை மீறல்கள், இழைக்கப்பட்ட போர்க்;குற்றங்கள் என்பவற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, நீதியையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் வழங்கி, அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் நிலைத்து நிற்கத்தக்க நியாயமான சூழலை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கவில்லை.

மாறாக அந்தப் பொறிமுறைகளை உருவாக்குவதாகப் பாவனை காட்டி, காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு போக்கையே அரசு கடைப்பிடித்து வருகின்றது.

விசேடமாக இந்தப் பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற மாட்டார்கள். அவர்களை உள்ளடக்கப் போவதில்லை உள்ளுர் நீதிபதிகளே விசாரணைகளை நடத்துவார்கள் என்று அரசாங்கம் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றது.

அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு சர்வதேச மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக குறிப்பாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறைகளை உருவாக்குவதில் அரசாங்கம் பின்வாங்கியிருக்கின்றது என்ற குற்றச்சாட்டும் சர்வதேச மட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான பின்னடைவாகும்.

சர்வதேசத்திடம் குறிப்பாக ஐநா மனித உரிமைப் பேரவையில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணை பொறிமுறைகளை அமைக்கின்ற முயற்சியின் ஓர் அங்கமாக அதுகுறித்து பொதுமக்களின் கருத்தறிவதற்காக நல்லிணக்க கலந்தாலோசனை செயலணியை அரசு உருவாக்கியிருந்தது.

அந்தச் செயலணி முழு அளவில், அதிகாரபூர்வமாக செயற்படுவதற்கு உரிய அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நாடளாவிய ரீதியில் அந்தச் செயலணி 7000 த்துக்கும் மேற்பட்ட அடிமட்டத்திலான மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் திரட்டி, ஓர் அறிக்கையைத் தயாரித்திருந்தது.

அது, 700 பக்கங்களுக்கும் மேற்பட்டதாக, முழு வடிவம் பெற்றிருந்தது. பொதுமக்களின் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு நிலையான நீதியை வழங்குவதற்குரிய பல பரிந்துரைகளும் அந்த அறிக்கையில் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

வரலாற்றிலேயே முதற் தடவையாக நாட்டு மக்களின் கருத்தறியப்பட்ட மிகவும் முக்கியமான இந்த அறிக்கையை அரசாங்கம் புறந்தள்ளியிருக்கின்றது. அதன் பரிந்துரைகளை உதாசீனம் செய்யும் வகையில் அமைச்சர்களும் அரச தரப்பு முக்கியஸ்தர்களும், கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர்.

அவற்றை ஏற்றுக்கொள்ளவோ நடைமுறைப்படுத்தவோ அவசியம் கிடையாது என்று எடுத்தெறிந்து, பொறுப்பற்ற முறையில் அவர்கள் புறந்தள்ளியிருக்கின்றார்கள். இது இரண்டாவது முக்கியமான பின்னடைவாகும்.

தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட பொறுப்பு கூறுகின்ற பொறுப்பை இவ்வாறு தட்டிக்கழிக்க முற்பட்டிருப்பது, அரசாங்கத்தை ஆப்பிழுத்த நிலைமைக்கே ஆளாக்கியிருக்கின்றது பொது எதிரணிணின் முக்கியஸ்தராகிய முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருக்கின்றார்.

இடித்துரைப்பும் வலியுறுத்தல்களும்

அரசாங்கம் சுய முடிவுகளுக்கமைவாக, தன்னுடைய விருப்பத்தின்பேரில் உருவாக்கிய நல்லிணக்க கலந்தாலோசனை செயலணியின் பரிந்துரைகளை உதாசீனம் செய்திருப்பது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைக் காப்பகம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் அதிருப்தியும் கவலையும் வெளியிட்டிருக்கின்றன.

மனித உரிமைக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நல்லிணக்கக் கலந்தாலோசனை செயலணியின் பரிந்துரைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

மனித உரிமை மீறல்களுக்கும், இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பு கூறுவதற்கு முன்வந்ததன் மூலம், உள்ளுரிலும், சர்வதேசத்திலும் வரவேற்பையும் ஒத்துழைப்பையும் பெறுவதில் அரசாங்கம் வெற்றி கண்டிருந்தது.

ஆனால், பல வருடங்களாக நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி வழங்குவதில் சர்வதேசத்தின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அந்த உறுதிமொழியில்; இருந்து அரசாங்கம் பின்வாங்க முடியாது என்று மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடாம்ஸ் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், நல்லிணக்க கலந்தாலோசனைக்கான செயலணியின் அறிக்கையை அரசாங்கம் மிகவும் சாதாரணமாகப் புறந்தள்ளியிருப்பது (சர்வதேச மன்னிப்புச் சபையை) அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது என அது தெரிவித்துள்ளது.

‘இழைக்கப்பட்டுள்ள போர்க்குற்றங்களையும், மனித உரிiமைகள் மீறப்பட்டிருப்பதையும், உயிரிழப்புக்கும், ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமைக்கும் ஆளாகியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, நீதி வழங்குவது குறித்து சர்வதேச சட்டங்களின் கீழ் ஆராய்ந்துள்ள நல்லிணக்கக் கலந்தாலோசனை செயலணி கண்டறிந்துள்ளறை;றையும், அதன் பரிந்துரைகளையும் அரசு புறந்தள்ளுவதென்பது, பொறுப்பு கூறுகின்ற கடமையில் இருந்து அரசாங்கம் நழுவிச் செல்வதாகவே அமையும்’ என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கை இடித்துரைத்திருக்கின்றது.

அதேநேரம், சர்வதேச விவகாரங்களுக்கான லண்டன் ரோயல் நிறுவனத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்தக் கூற்று, உண்மை நிலைமைகளை மறைக்கின்ற, வெறும் வாய்ப்பந்தல் செயற்பாட்டையே காட்டுவதாக அந்த அமர்வில் கலந்து கொண்டிருந்த முக்கியஸ்தர்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

நல்லிணக்க வாரம் சாதிக்கப் போவது என்ன?

இந்தப் பின்னணியிலேயே அரசாங்கம் புதிதாகப் பிரகடனப்படுத்தியுள்ள நல்லிணக்கத்திற்கான வாரம் அனுட்டிக்கப்பட்டிருக்கின்றது.

இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தி, ஐக்கியத்தையும் சமாதானத்தையும் மேலோங்கச் செய்வதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கச் செயற்பாடுகளையே அடிப்படையாகவும், அடிநாதமாகவும் கொண்டுள்ள அரசாங்கத்தின் நல்லெண்ண வெளிப்பாட்டு நடவடிக்கைகளும் பிரச்சினைகளுக்கு இணக்கமான முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ள நிலையில் நல்லிணக்கத்துக்கான வாரம் எதனைச் சாதிக்கப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முதலில் தனது நல்லெண்ணத்தைச் செயல் வடிவத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் மிக்க சுதந்திர தினம் உள்ளிட்ட தினங்களிலும் தேசிய விழாக்கள் கொண்டாடப்படுகின்ற தினங்களிலும் நல்லெண்ண வெளிப்பாடாகக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனை ஆயுள் தண்டனையான ஜனாதிபதியினால் குறைக்கப்படுகின்றது.

ஆனால், விசாரணைகளின்றியும், சட்டத்திற்கு முரணான வகையிலும் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இந்த முக்கிய தினங்களிலாவது ஒவ்வொருவராக என்றாலும் மன்னிப்பளித்து விடுதலை செய்து அரசு தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். அத்தகைய நடவடிக்கையை அரசு முன்னெடுக்கவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையானது, பாதிக்கப்பட்ட மக்களின் பெரும் அதிருப்தியைத் தொடர்ச்சியாகச் சம்பாதித்துள்ள விவகாரமாக மாறியிருக்கின்றது,

இந்த விடயத்திலாவது அரசாங்கம் தனது நல்லிணக்கச் செயற்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை.

நல்லிணக்கத்துக்காகவே வாரம் ஒன்றைப் பிரகடனப்படுத்தியுள்ள அரசாங்கம், அதனையொட்டியாவது, தமிழ் அரசியல் கைதிகளைப் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முன்வர வேண்டும்.

முன்வருமா?

http://globaltamilnews.net/archives/13833

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.