Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முற்போக்கின் தோல்வி ஏன்? - ஜெயமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கின் தோல்வி ஏன்? -1

index

ஜெ,

காந்தியம் இன்று உரையை அதிகாலையில் கேட்டேன் மீண்டும். உலகச்சிந்தனை போக்கு முதல் அது இந்தியாவுக்கு வந்தது வரை ஒரு வரலாற்று சித்திரத்தையும் அளித்த உரை. கேட்கும்போது தோன்றியதும், பதில் தெரியாததுமான கேள்வி இது.

சிந்தனையும் சமூகமும் முன்னேதானே செல்லும்? தன் எல்லா போதாமைகளுடனும் இடதுசாரிச் சிந்தனை உலகை நல்ல விஷயங்களை நோக்கித்தானே முன்னகர்த்தியது? நம் காலத்தில் நாம் மேலும் முன்னல்லவா நகரவேண்டும்?

ஜனநாயகம் உள்ள தேசங்களில் மக்கள் என்ன நினைகிறார்கள் என்பதை வாக்குகள் மூலமாவது அறிய இயல்கிறது, பிரிட்டனின் ஐரோப்பிய துண்டிப்பு, டிரம்ப் வெற்றி, இங்கே சமூகம் மோதியை தேர்தெடுத்தது எல்லாமே உலகம் வலதுசாரி கருத்தியலையும் தேசியவாதத்தையும் தேர்தெடுப்பதை தெளிவாக்குகிறது, பிரான்ஸ் சாய்ந்துவிட்டால் அதுதான் முற்றுப்புள்ளி.

ஏன்? இது முன்னேற்றம் அல்ல என தெரிகிறது, ஆனால் வலதுசாரிகளைத் தேர்ந்தெடுக்கும் மக்களை முட்டாள்கள் என வையத்தோன்றவில்லை, அல்லது இது கும்பல் ஜனநாயகமேதானா?

அரங்கா

1

ஜவகர்லால் நேரு பல்கலையில் ஒரு ஆஸாதி நடனம்

அன்புள்ள அரங்கா,

உங்கள் கேள்வியை முன்னரும் நேர்ப்பேச்சில் ஒருமுறை கேட்டிருக்கிறீர்கள். அன்று அதற்கு விளக்கமாக விடையளித்து உரையாட முடியவில்லை. இப்போதும் இந்த வினா மிகப்பொதுவாகவும், ஒட்டுமொத்த வரலாற்றைப்பற்றிய ஒற்றை வரியை சொல்லுமிடத்திற்கு நம்மைத் தள்ளுவதாகவும் உள்ளது. வரலாற்றைப்பற்றி அப்படி ஒற்றை வரியைச் சொல்வது எப்போதுமே சரியாவதில்லை. ஞானியர் சொல்லும் தரிசனங்களும் கூட. அவை குறிப்பிட்ட கோணத்தில் நம்மை யோசிக்க வைக்கின்றன என்ற அளவில் மட்டுமே முக்கியமானவை.

ஆகவே இப்படி யோசித்துப் பார்க்கலாமே என்ற எண்ணத்தில் இதைச் சொல்கிறேன். அறியப்படாத அபூர்வ உண்மைகளை நோக்கிச் செல்ல வேண்டுமென்று அறிவுஜீவிகளுக்கே எழும் இயல்பான உந்துதலைத் தவிர்த்து, மிக வெளிப்படையாக கண்முன்னே தெரியும் யதார்த்தத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இதற்கான விடையை சொல்ல முடியுமா என்று யோசிக்கிறேன்.

ஏனென்றால் இன்றைய சூழலில் அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள் சாமானியருக்குத் தெரியாத விஷயங்களைச் சொல்லியாகவேண்டும் என துடிப்பு கொண்டிருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கமுடியாத கோணங்களில் எல்லாம் யோசித்து சாமானியரை ஆச்சரியப்படுத்துகிறார்கள். ஆழ்ந்த தனிப்பட்ட காழ்ப்புகளும், சுயநல நிலைபாடுகளும், மத இன மொழி வட்டார வெறிகளும் இல்லாத அறிவுஜீவிகள் குறைவு. ஆகவே அவர்களுடைய கருத்துக்கள் எல்லாமே திரிபுபட்டவைதான். இந்த ஒட்டுமொத்த சொற்குப்பை உள்ளங்கை போல உள்ள உண்மையைக்கூட கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிடுகிறது.

ஆகவே அரசியல் சார்ந்து நான் எப்போதும் மிக நடைமுறை வாய்ந்த, மிகப்பொதுப்படையான உண்மையையே சொல்ல முயல்கிறேன். சாமானியனின் உண்மை அது. பொதுவெளியில் அதைச்சொல்லவே இன்று ஆளில்லை. எழுத்தாளன் சாமானியன் காணாதவற்றைச் சொல்லும் குரலாக ஒலித்த காலம் மறைந்து அவன் சமானியனின் குரலாகவே ஒலிக்கவேண்டியிருக்கிறது. அதுவே இந்த வினாவுக்கு தற்காலிகமான விடையாக இருக்கும். மேலும் பொருத்தமான விடைகள் வரும்போது இதைக் குறைத்துச்சென்று முடிந்தால் இறுதியில் தவிர்த்தும் கூட செல்லலாம்.

தற்போது எனக்கு மூன்று கூறுகள் கண்களுக்குப் படுகின்றன.

ஒன்று, உலகளாவ எழுந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அறைகூவல்.

இரண்டு ,முற்போக்குத்தரப்பு தன் விழுமியங்களை தானே அழித்துக்கொண்டிருப்பது.

மூன்று ,பல்லினத்தேசியம் என்னும் நவீன விழுமியத்தின் தற்காலிகத் தோல்வி

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அறைகூவல்-அதைத் தவிர்த்துவிட்டு மேலே செல்லவே முடியாது. அது இங்கே சில கூலிப்படையினராலும் போலி முற்போக்கினராலும் சொல்லப்படுவதுபோல ஊடக மாயையோ கட்டமைக்கப்பட்ட அரசியல் ஊகமோ ஒன்றும் அல்ல. நாம் அன்றாடம் சந்திக்கும் யதார்த்தம். அதை எவரும் சொற்களால் இல்லையென்றாக்கவோ குறைத்துக்காட்டவோ முடியாது.

உலகின் பல நாடுகளில் பரவியிருக்கும் ஒரு பெருமதம் இஸ்லாம். இஸ்லாமின் அடிப்படையிலேயே ஒரு சர்வதேசக்கனவு உள்ளது. மெக்காவை மையமாக்கி உலகத்தை ஓர் இஸ்லாமிய நாடாக்க வேண்டுமென்ற அறைகூவல். இஸ்லாமிய மெய்யியலில் இருந்து எளிதில் பிரிக்க முடியாதபடி அது அமைந்துள்ளது. அது எங்கே என்று அறிவுஜீவிகளைப்போல தேடவேண்டியதில்லை, ஏதேனும் ஓர் இஸ்லாமிய தொலைக்காட்சியை அரைமணிநேரம் பார்த்தாலே போதும்

உண்மையில் எல்லாத் தீர்க்கதரிசன மதங்களிலும் அத்தகைய உலகைவெல்லும் கனவு இருக்கும். பௌத்தமோ கிறித்தவமோ அந்தக் கனவிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டன. மாறாக இஸ்லாமில் சென்ற நூறாண்டுகளுக்குள், எண்ணைச் செல்வத்தின் ஆதரவுடன், அந்தக் கனவு மிக வலுவாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டு எழுந்துள்ளது. உலகம் முழுக்க வேகமாகப் பரவிவருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். அதன் உக்கிரமான முகம். ஆனால் எல்லா இஸ்லாமியப் பிரிவுகளும் வெவ்வேறு அழுத்தத்தில் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இக்கனவு இஸ்லாமிய மதம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் முன்னரே உருவாகி நிலைபெற்றிருக்கும் தேசியங்களுடன் இஸ்லாமியர்களை மோதவைக்கிறது.இந்தியத்த்தேசியத்தில் மட்டுமல்ல அத்தனை நவீன தேசியங்களுடனும் இஸ்லாம் மோதுவதைக் காணலாம். இங்கே இன்று தமிழ்த்தேசியர்கள் இஸ்லாமியத் தேசியத்தின் ஆதரவாளர்கள். ஆனால் இலங்கையில் தமிழ்த்தேசியம் உருவானதுமே முதல் முரண்பாடு இஸ்லாமியத்தேசியத்துடன்தான் உருவானது.

அத்தனைதேசியங்களுடனும் இஸ்லாமிய உள்ளம் மோதுகிறது.அதற்குள் தங்களை அந்நியர்களாக உணர்கிறது.  . அவர்கள் ஒதுங்கும்போது மேலும் அந்நியப்படுகிறார்கள். இவ்வுணர்வு மிக எளிதில் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்னும் கற்பனைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது. அவர்களுக்கு முழுமையான பொருளியல் உரிமையும், அரசியல் உரிமையும் அளிக்கப்படும் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட சராசரி இஸ்லாமியரின் எண்ணம் தாங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட இனம் என்பதும், ஒர் இஸ்லாமிய நாட்டில் மட்டுமே தாங்கள் முழு உரிமையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கமுடியும் என்பதுமாகும். இதை அவர்கள் அத்தனை ஊடகங்களிலும் பதிவும் செய்திருப்பார்கள் –ஐயமிருந்தால் ஏதேனும் இஸ்லாமிய இதழை எடுத்து சாதாரணமாகப்புரட்டி அதன் தலையங்கத்தைப் பார்த்தாலே தெரியும்.

1

முகமில்லா முகம் ஐ. எஸ் .ஐ. எஸ்

மதகுருக்களும் பிரச்சாரகர்களும் அடங்கிய இஸ்லாமிய மதத்தின் ஒற்றைப்பேரமைப்பு மொத்த இஸ்லாமியச் சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகிறது. திரும்பத் திரும்ப இவ்வெண்ணங்களை அவர்களுக்குள் விதைக்கிறது. மிக விரிவான வாசிப்பும், வரலாற்றுப் புரிதலும், உள்ளார்ந்த ஆன்மிக வல்லமையும் உள்ள ஒருசிலர் தவிர பிறர் இந்த ஒற்றைப்பெரும் பிரச்சாரத்திலிருந்து தப்புவது இயலாத நிலை ஒன்று.

இந்த அம்சம் உலகமெங்கும் இஸ்லாமை ஒரு மோதல் நிலையிலேயே வைத்துள்ளது. இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள மலேசியா போன்ற நாடுகளில்கூட இன்று அங்கிருக்கும் பிற இனத்தவரையும் மதத்தவரையும் ஓரளவுக்கு உள்ளடக்கிய நவீன இஸ்லாமியத் தேசியத்திற்கு எதிராக பிற அனைவரையும் முழுமையாக வெளியே தள்ளவேண்டும் என கோரும் அடிப்படைவாத இஸ்லாமியத் தேசியம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக எழுந்து மோதலை உருவாக்குகிறது.

இஸ்லாம் பிற மதங்களைப்போல தன்னை ஒரு ஆன்மிக வழிமட்டுமாக அடையாளம் கண்டு கொண்டு அதில் இன்று மேலோங்கி இருக்கும் உலகளாவிய இஸ்லாமிய தேசம் என்னும் கனவை உதறினால் மட்டுமே உலகம் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். இதை அவர்களை நோக்கிச் சொல்லும் முற்போக்காளர்கள் வேண்டும். அவர்கள் சொல்வதைச் செவிகொடுக்கும் முற்போக்காளர்கள் இஸ்லாமுக்குள் உருவாகி வரவேண்டும். இஸ்லாம் உலகப் பண்பாட்டுக்கு அளித்த கொடைமேல் மதிப்பு கொண்டவர்கள், இஸ்லாமின் அடிப்படையான ஆன்மிகம் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் இதைச் செய்யவேண்டும். அதற்கு இஸ்லாம் அமைப்பு சார்ந்து இயங்குவதிலிருந்து தனிமனிதனின் ஆன்மிகமான தேடலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக ஆகவேண்டும். இன்று மதகுருக்களால் ஆளப்படும் மதமாக உள்ளது இஸ்லாம். அவர்கள் பழமைவாதிகளாகவும் தங்கள் அதிகாரத்தை எவ்வகையிலும் இழக்க விரும்பாதவர்களாகவுமே இருப்பார்கள். அவர்களிடமிருந்து விடுபட்டு இஸ்லாமின் ஆன்மிகசாரம் மேலெழவேண்டும்.

இன்று சௌதிஅரேபியாவை மையமாகக்கொண்டு ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பல்வேறு நாடுகளில் எழுந்துள்ள வன்முறை இயக்கங்களுக்கு அடிப்படையாக அமைவது உலகளாவிய இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற அந்தக் கனவுதான். அது இஸ்லாம் இருக்கும் நிலங்களில் ஒரு கணமும் ஓயாத குருதிப்பெருக்காக மாறியுள்ளது. அங்கு நிகழும் அழிவுகளில் பெரும்பாலானவை அவர்கள் தங்களுக்குள்ளே நிகழ்த்திக் கொண்டவை. நாளை உருவாகவிருக்கும் அந்த இஸ்லாமிய அகிலத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பது சுன்னிகளா ஷியாக்களா, உதிரி இஸ்லாமிய நம்பிக்கையாளர்களை என்ன செய்வது போன்றவை துப்பாக்கி முனையில் தீர்க்கப்படுகின்றன.

இஸ்லாம் அல்லாத உலகம் அறத்தை மையமாக்கியது என்றோ, முற்றிலும் நேர்மையான உலகப்பார்வை கொண்டது என்றோ ஒரேயடியாகச் சொல்ல நான் முன்வரமாட்டேன். ஆனால் சென்ற முந்நூறாண்டுகளாக ஐரோப்பா உருவாக்கிய சில விழுமியங்களே நவீன உலகின் அடிப்படைகள். ஜனநாயகம், மானுடசமத்துவம், தனிமனித உரிமை போன்றவை. அவை இஸ்லாமோ, கிறித்தவமோ, இந்துமதமோ, பௌத்தமோ உருவாக்கிய பழைய சமூகங்களைவிட இன்னும் அழகிய ஆரோக்கியமான சமூகங்களை நிறுவி உலகத்துக்கே முன்னுதாரணமாக அமைந்தவை. இந்தியர்களாகிய நாமும் ஐரோப்பாவின் அந்த விழுமியங்களையே முன்னுதாரணமாகக் கொண்டுள்ளோம். அதுவே இந்திய சுதந்திரப்போராட்டமாக மாறியது, நவீன இந்தியாவாகவும் உருமாறியது. விவேகானந்தரும், காந்தியும், நேருவும், அம்பேத்கரும் அந்த மரபில் எழுந்தவர்களே.

இந்துமதமும் கிறிஸ்தவமதமும் பௌத்தமும் அந்த நவீன விழுமியங்களுக்கு எதிராகவே ஆரம்பத்தில் நிலைகொண்டன. ஏனென்றால் அவை சென்ற காலத்திற்குரியவை. ஆனால் அவற்றுக்குள் சீர்திருத்தவாதிகள் தோன்றி அந்த மதங்களை நவீன விழுமியங்களை நோக்கிக் கொண்டு சென்றனர். ராஜா ராம்மோகன் ராய் முதல் காந்தி வரையிலான இந்துமதச் சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு இது. மாறாக இஸ்லாம் இந்த இருநூறாண்டுகளில் முளைத்து உலகெங்கும் பரவியிருக்கும்  அந்த  நவீன விழுமியங்களுக்கு எதிரான சமரசமற்ற போரையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன்வழியாக சென்ற முந்நூறாண்டுகளில் உலகமெங்கும் மெல்ல உருவான முற்போக்கு நகர்வுகள் அனைத்தையும் பின்னுக்கிழுக்கும் மாபெரும் எடையாக அது மாறிவிட்டிருக்கிறது. அதன் பிரம்மாண்டமான அமைப்புவல்லமை, அதில் மதகுருக்களுக்கு இருக்கும் முதன்மை இடம், அதுபரவியிருக்கும் நாடுகளில் ஜனநாயக அரசுகளே இல்லாமல் பெரும்பாலும் மன்னராட்சியே நிலவுவது, அதன் எண்ணைச்செல்வம் என பலகாரணங்களால் இந்தப்போர் மிக வலுவானதாக அமைந்துள்ளது.

அந்தப்போர் வலுக்கும் தோறும் உலகெங்கும் சுதந்திர- ஜனநாயக சமூகங்களின் மக்கள் அச்சம் கொள்கிறார்கள். தங்கள் முன்னோடிகள் முந்நூநூறாண்டுகள் கருத்தியல் தளத்திலும் சமூகதளத்திலும் போராடி தேடியளித்த அனைத்தும் அழிக்கப்பட்டுவிடுமோ என்ற பதற்றம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த யதார்த்தத்தையும், மக்களின் இந்தப் பதற்றத்தையும் முற்போக்காளர்கள் அடையாளம் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். ஒர் உயர்ந்த லட்சியவாத நிலையில் நின்று கொண்டோ அல்லது கண்மூடித்தனமான வலதுசாரிஎதிர்ப்பு எனும் வெறுப்பு நிலை எடுத்தோ அல்லது முற்போக்கு அமைப்புகளுக்குள் ஊடுருவியிருக்கும் கைக்கூலிகளின் கருத்துகளுக்கு இடமளித்தோ அவர்கள் தொடர்ச்சியாக உலக நாகரிகத்திற்கு எதிராக எழுந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதனுடன் சமரசம் செய்து கொள்கிறார்கள். அதுவே அவர்களின் முதல் தோல்வி.

இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகெங்கும் நவீன குடியரசுகள் உருவாக்கி இருக்கும் தனிமனித உரிமைகளையும், ஜனநாயக அமைப்புகளையும், நீதிமுறையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மேலெழுகிறது என்பது கண்கூடு. இவ்வரசுகளால் இதன்பொருட்டு தாங்களே உருவாக்கிக்கொண்ட, நீண்ட வரலாறுகொண்ட, ஜனநாயக அமைப்புக்களை நிராகரிக்கவும் முடியாது. விளைவாக சாமானிய மக்கள் நவீன ஜனநாயக அமைப்புகளே இஸ்லாமியத் தீவிரவாதம் என்னும் உலகளாவிய ஆபத்தை எதிர்ப்பதற்குத் திராணியற்றவை என நம்பத்தலைப்படுகிறார்கள்

உதாரணமாக இந்தியாவைப் பொறுத்தவரை மிக விரிவான நீதிமன்ற அமைப்பு இங்கு உள்ளது. இங்கு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட முறையாக விசாரிக்கப்பட்டு சாட்சிகளின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வமைப்பை அடிப்படைவாத வன்முறை அமைப்பு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் இந்திய அரசு அதை எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. இங்கே மிகமிக அரிதாகவே தீவிரவாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் மாபெரும் அமைப்புக்கு எதிராக எழுந்துவந்து எந்த சாமானியன் சாட்சி சொல்லமுடியும்?

அவ்வாறு அபூர்வமாகத் தண்டிக்கப்பட்டால் உடனே இங்குள்ள மனிதஉரிமை அமைப்புகள் கொதித்து எழுகின்றன. இங்கே தனிமனித உரிமைக்கான அனைத்துக் கோரிக்கைகளும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தண்டிக்கப்படும்போது மட்டுமே எழுகின்றன என்பதை சாமானியன் அறிவான். மனித உரிமை அமைப்புக்கள் நடைமுறையில் தீவிரவாதத்திற்கான ஐந்தாம்படைகளாகவே செயல்படுவதை அவன் காண்கிறான். ஒவ்வொரு முறையும் இதைக்காண்கையில் அவன் நம் ஜனநாயக அமைப்புமேல் நம்பிக்கை இழக்கிறான். மனித உரிமைப் போராளி என்ற பேரில் செயல்படும் கூலிஅறிவுஜீவிகள் உண்மையில் ஜனநாயக அடிப்படைகளையே அழிப்பது இவ்வாறுதான். இவையனைத்துமே மனித உரிமைகளே தேவையில்லை என வாதிடும் வலதுசாரி அமைப்புக்கு சாதகமானவையாக மாறுகின்றன. உலகமெங்கும் நிகழ்வது இதுதான்.

ஐரோப்பிய நாடுகள் அவர்களுடைய மனிதாபிமானச் சட்டங்கள் காரணமாக அகதிகளை அனுமதிக்கிறார்கள். அவர்கள் வாழ அடிப்படை நிதி வழங்குகிறார்கள். மெல்ல தங்கள் சமுதாயத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்தப் பெருந்தன்மையையும் அதன் மூலம் கிடைக்கும் உரிமையையும் மிகப்பெரும்பாலும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தவறாகவே பயன்படுத்திக் கொள்கிறது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலுமே அகதிகளாக உள்ளே நுழைந்த இஸ்லாமியர்கள் அங்கு ஒர் அடிப்படைவாத சமுதாயத்தை உருவாக்குகிறார்கள். ஒரு தலைமுறை கடப்பதற்குள்ளேயே அந்நாடுகளுக்குள் இஸ்லாமிய அகிலமொன்றை கனவு காணும் தனித்தேசியமாக தங்களைக் கட்டமைத்துக் கொள்கிறார்கள்.

இதுவே இந்தியாவிலும். எண்பதுகளின் உச்சகட்ட பஞ்சங்களின்போது இந்தியாவுக்குள் வந்த கிழக்கு வங்க அகதிகளை இந்தியசமூகம் ஏற்றுக்கொண்டது. எல்லை காக்கும் ராணுவத்தின் ஊழலும் காங்கிரஸ் அரசின் ஓட்டரசியலும் அதற்கு உதவின. ஆனால் ஒருதலைமுறைக்குள் அஸாமிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் அந்த இந்தியக் குடியுரிமை பெற்ற இஸ்லாமிய அகதிகள் இந்தியாவுக்கு எதிரான ஒரு சமூகமாகத் திரண்டுள்ளனர். அந்த உள்ளூர்மக்களுக்கு எதிரான வன்முறையாளர்களாக உள்ளனர். சென்ற வடகிழக்குப் பயணத்தில் பல ஊர்களில் வெளிப்படையாகவே பாகிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை நாங்கள் பார்த்தோம் [நாங்கள் சென்றுவந்த சிலமாதங்களில் அங்கே வன்முறை வெடித்தது]. இந்தியா முழுக்க தீவிரவாதம் அவர்களால் பரப்பப்படுகிறது. ஆனால் ஒரு சொல் கூட அதைப்பற்றிப் பேசமுடியாது, பேசினால் அது இந்துமத அடிப்படைவாதம் என இங்குள்ள கூலிப்படை ஒன்று கூச்சலிடத் தொடங்கும்.

இந்த உண்மையான பிரச்னையை எதிர்கொள்வது எப்படி என்பது தான் இன்றைய கருத்துலக அறைகூவல். இதை வெற்று முற்போக்குக் கோஷங்கள் மூலம், இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுபவர்களை வலது சாரிகள் என்ற முத்திரை குத்தி வெறுப்பைக் கக்குவதன் மூலம், மிகையான மனிதாபிமான நாடகங்கள் நடிப்பதன் மூலம் முற்போக்காளர்கள் தவிர்க்கிறார்கள். ஆகவே அவர்கள் மீது ஆழமான அவநம்பிக்கையை சாதாரண மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொருநாளும் இந்த அவநம்பிக்கை வளர்ந்து வருகிறது.

இந்தியாவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி சுதந்திர ஜனநாயகவாதிகளும் இடதுசாரிகளும் அடங்கிய முற்போக்காளர்கள் வெறும் லட்சியவாதிகள், பலவீனமானவர்கள், அவர்களால் நவஉலகுக்கு எதிரான சக்தியாக எழுந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை தடுக்க முடியாது என்ற எண்ணம் சாதாரண மக்களுக்கு உருவாகியிருக்கிறது. இதுவே வலதுசாரிகள் மேலெழுந்து வருவதற்கு முதன்மைக் காரணமாகிறது. இந்த வரலாற்றுத் தருணத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள் வலதுசாரிகள். தங்களை மீட்பர்களாகவும், படைக்கலம் ஏந்திய முன்னணிப் போர்வீரர்களாகவும் காட்டிக் கொள்கிறார்கள். மிகச்சிறிய கடினநடவடிக்கைகள் சிலவற்றை எடுக்கிறார்கள். அவை பெரும்பாலும் குறியீட்டுத்தன்மை கொண்ட செயல்பாடுகள். மக்கள் ஆதரவு உருவாகிறது, வெல்கிறார்கள்.

தங்கள் வலதுசாரிக் கருத்துக்கள் மூலம் வேறு ஒருவகையில் வலதுசாரிகளும் முந்நூறு ஆண்டுகளாக ஐரோப்பாவும் நூறுஆண்டுகளாக இந்தியாவும் வளர்த்துக்கொண்ட ஜனநாயக மதிப்பீடுகளையும் மனிதாபிமான உரிமைகளையும் இல்லாமலாக்குகிறார்கள். அதாவது இஸ்லாம் எதை நிகழ்த்தும் என்று ஐயம் கொள்கிறார்களோ அதையே இவர்களும் அந்த ஐயத்தின் விளைவான அச்சத்தால் நிகழ்த்துகிறார்கள். எது அழிந்துவிடும் என அஞ்சுகிறார்களோ அதை அழிக்கும் சக்திகளுக்கே மக்கள் வாக்களிக்கிறார்கள். ட்ரம்ப் இன்னொரு வகையான ஜனநாய்க எதிர்ப்பு சக்தி என்பதில் ஐயமில்லை.

இந்தியாவில் இந்துத் தீவிரவாதம் ஒன்று உருவாகி வருவது கண்கூடு. இந்துத் தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் தன் மதத்திற்குள் என்ன செய்கிறதோ அதையே தன் மதத்திற்குள் செய்ய முயல்வதை நாம் பார்க்கிறோம். சிந்தனைச் சுதந்திரத்தை நசுக்கிறார்கள். சிறிய அளவிலேனும் மாற்றுக் குரல் எழுவதை வெறுப்புடனும் கசப்புடனும் பார்க்கிறார்கள். உச்சகட்ட வெறுப்பையே கருத்தியல் செயல்பாடாக நடத்துகிறார்கள். நமது மதம் பிற மதம் என்ற பிரிவினையை மீள மீள வலியுறுத்துகிறார்கள். ஒரு இஸ்லாமியர் ராமாயணத்திற்கு உரை எழுதியபோது கல்வி கற்றவர்களான கேரளத்தினரின் எதிர்ப்பை நாம் பார்த்தோம். இதுதான் உலகில் எழும் இக்கட்டு.

முற்போக்காளர்கள் தங்கள் பொய்யான லட்சியவாதத்திலிருந்து மீண்டு உண்மையை நேரடியாகப் பேசும் ஒரு காலம் வருமென்றால் மட்டுமே அவர்களால் வலது சாரிகளை எதிர்க்க முடியும். மாறாக வளர்ந்துவரும் வலதுசாரித் தரப்பைக் கண்டு அச்சம்கொண்டு அதை மூர்க்கமாக வசைபாடுவதும் வெறுப்பைக் கக்குவதுமே தங்கள் வழியாக அவர்கள் கொண்டார்கள் என்றால் வலது சாரிகளால் அவர்கள் மிக எளிதாக ஓரம் கட்டப்படுவார்கள். பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பிரான்ஸிலும் இதுவே நிகழ்கிறது. தொடர் தோல்விகளுக்குப் பிறகும் கூட இடதுசாரிகள் எதையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

எதார்த்தங்களை புரிந்து கொள்வதில் இடதுசாரிகளுக்கு சென்ற இருபதாண்டுகாலமாக மிகப்பெரிய சரிவுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்கள் தோற்கடிக்கப்படும் தோறும் மேலும் ஆங்காரம் கொள்கிறார்கள். அது அவர்களின் சமநிலையை இழக்கச் செய்கிறது. தங்களின் உண்மையான எதிர்நிலைகள் என்ன என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஏன் தாங்கள் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறோம் என்று வகுத்துக்கொள்ள முடிவதில்லை. ஆகவே தாங்கள் எடுக்கும் மூர்க்கமான ஒற்றை நிலைபாட்டுக்கு எதிராக ஒரு சொல் எழுந்தாலும் அவர்களை வசைபாடி உச்சகட்ட வெறுப்பைக் கக்குகிறார்கள். தங்களை மேலும் மேலும் ‘தீவிரமானவர்களாகக்’ காட்டிக்கொள்ளும் பொருட்டு மேலும் கண்மூடித்தனம் கொள்கிறார்கள்.

முட்டாள்தனங்களுக்கு இங்கு எல்லையே இல்லை. உதாரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு மனிதஉரிமை கோரிக்கைக்காக ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது அங்கே கூடவே சுதந்திர காஷ்மீருக்கான ஒரு குரலும் எழுகிறது. அதையும் ஒருவகை முற்போக்காக இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு மனித உரிமைப்போரில், ஜனநாயகச் செயல்பாட்டில் காஷ்மீரின் மதவெறியன் ஒருவன் கலந்துகொண்டாலே அது முழுமையாகப் பொருளிழந்துவிடுகிறது. அந்த ஒற்றைக்குரல் அந்த ஒட்டுமொத்த மனித உரிமை இயக்கத்தையுமே உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலுக்கு ஆதரவான கள்ளச்செயல்பாடாக மாற்றிவிடுவதை நம் இடதுசாரிகளால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதைச் சுட்டிக்காட்டுபவர்களை உடனடியாக இஸ்லாமிய எதிரிகள் என்றோ இந்துத்துவ வெறியர்கள் என்றோ அவர்கள் வசைபாட ஆரம்பிக்கிறார்கள்.

மதஅடிப்படையிலான ஒரு தேசியத்துக்கான போராட்டத்திற்கும் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இவர்கள். முந்தையது மனித குலத்தையே இருட்டுக்குள் இழுத்துச் செல்லும் பிற்போக்கு விசை என்பதை புரிந்து கொள்ள முடியாத இடத்தில் இடதுசாரிகள் இருக்கும்போது அவர்களிடமிருந்து மக்கள் அந்நியப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

[மேலும்]

http://www.jeyamohan.in/95955#.WML_xbvfVR4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கின் தோல்வி ஏன்? -2

 

images

ஜனநாயகத்தின் மூளை கருத்துக்களின் முரணியக்கம் நிகழும் அறிவுச்சூழல். முற்போக்குச் சக்திகள் முதலில் வென்றெடுக்கவேண்டிய இடம் அது என்கிறார் அண்டோனியோ கிராம்ஷி. இன்று அந்தக் கருத்துக்களத்தில் நிகழ்ந்துள்ள மாபெரும் சிக்கல் ஒன்றைச் சுட்டிக்காட்டவேண்டும். இதையெல்லாம் ஆராயும் அளவுக்கு முறையான ஆய்வுநோக்கு கொண்டவர்கள் எவரும் நம்மிடையே இன்றில்லை. ஆகவே வெறும் உளப்பதிவாகவே சொல்ல வேண்டியிருக்கிறது.

மிகச் சமீபகாலமாக உருவாகி வந்திருக்கும் இணைய கலாச்சாரம் நம் கருத்துச்சூழலையே பொருளற்றதாக ஆக்கிவிட்டிருக்கிறது. இணையக் கலாச்சாரம் அத்தனை சாமானியர்களும் பொதுவெளியில் வந்து பேச வசதி செய்து கொடுக்கிறது. பேசுபவனின் தகுதி என்ன, வாசிப்பு என்ன, பின்புலம் என்ன எதுவுமே முக்கியமில்லாமல் ஆகிறது. அனைத்துக் குரல்களுக்கும் ஒரே வகையான இடமளிக்கும் இணையத்தில் இயல்பாகவே ஓங்கி ஒலிக்கும் குரல்கள் முண்டி மேலெழுகின்றன. சமநிலை கொண்ட ஆராய்ச்சிப் பின்புலம் கொண்ட, முழுமையான வரலாற்று நோக்கு கொண்ட இணையப் பதிவுகள் மிகக்குறைவு அவற்றை வாசிப்பவர்கள் அதைவிட குறைவு.

வெறுப்பையும் தர்க்கமற்ற உணர்வுக் கொந்தளிப்புகளையும் கொட்டும் பதிவுகளே அதிகமாக விரும்பப்படுகின்றன. ஏனென்றால் அவை சுடச்சுட வாசிக்க ஏற்றவை. சுருக்கமானவை. மூளையுழைப்பு தேவையற்றவை. அனைத்தையும்விட மேலாக, வாசிக்கும் சாமானியனை தாழ்வுணர்ச்சி இல்லாமல் தானும் ஓர் அறிவுஜீவியே என மயக்கம் கொள்ளச்செய்பவை. அவனும் ஏதாவது சொல்ல வாய்ப்பளிப்பவை. ஒரு கீழ்மைநிறைந்த பதிவு நூறு பதிவுகளை உருவாக்குகிறது. அவை ஒட்டுமொத்தமாக வெற்றுக் கொந்தளிப்பு நிறைந்த ஒரு தரப்பை கட்டமைக்கிண்றன. அங்கு நடுப்போக்குகளுக்கு, நிதானமான பேச்சுக்களுக்கு இடமே இல்லை. ஏதேனும் ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு மறுதரப்பின் மேல் கக்கப்படும் கட்டற்ற வெறுப்பு மட்டுமே செல்லுபடியாகிறது.

இந்நிலை உண்மையான இடதுசாரிகளுக்கும் சுதந்திர ஜனநாயகவாதிகளுக்கும் மிக மிக எதிரானது. எப்போதும் தர்க்கபூர்வமான நிலைபாடு எடுத்தாகவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அவர்கள். உக்கிரமான வலதுசாரி வெறுப்பு அவர்களையும் இந்த உணர்வுக் கொந்தளிப்புக்குள் கொண்டுசெலுத்துகிறது. அவர்கள் வெறுப்பைக் கக்குபவர்களாக மாற மாற தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொள்கிறார்கள். விளைவாக வலது சாரிகளுக்கான இடத்தை உருவாக்கி அளிக்கிறார்கள்.

இணையத்தில் வெறுப்பைக் கக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்தவர்கள். மிகச்சாதாரணமான அன்றாட வாழ்க்கை வாழ்பவர்கள். இச்சமூகத்தின் முதலாளித்துவ அமைப்பின் அனைத்து நலன்களையும் பெற்றுக் கொள்பவர்கள். எங்கோ இருக்கும் குற்ற உணர்ச்சி, எவரின்மீதோ எழும் ஊமைத்தனமான எரிச்சல், அன்றாட வாழ்க்கையின் சலிப்புக்கு எதிரான ஒரு ரகசியக் கிளர்ச்சி, தன்னை பிறிதொருவனாக புனைந்து கொள்ளும் ஆர்வம் என பல்வேறு காரணங்களால் இவர்கள் இணையத்தில் மிகையுணர்ச்சிகளைக் கொட்டி வெறுப்பைக் கக்குகிறார்கள். அதன் வழியாக எந்த தரப்பை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களோ அதை தர்க்கமற்ற ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

எது ஒன்றும் தர்க்கமற்ற உணர்வாக வெளிப்படும்போது நிகரமதிப்பாக மெல்ல மெல்ல மூர்க்கமான வலதுசாரித்தனமே வெல்கிறது. இடதுசாரித்தனம் பொருளிழந்து அழிகிறது. ஜனநாயக பண்பு என்பது மாற்றுக் கருத்தை செவிகொடுக்கும் நிலையில் இருத்தல். எப்போதும் விவாதிக்க முனையும் மனநிலையில் இருத்தல். வரலாற்று முழுமையை கணக்கில் கொண்டு அணுகுதல். இன்று இணையத்தில் இத்தகைய குரல்களாக ஒலிப்பவை எவை?

இங்கே மூன்றுவகை குரல்கள். ஒன்று வலதுசாரிகள். மதம், சாதி, இனம், மொழி என அடிப்படைவாதம் பேசும் எவரும் வலதுசாரிகளே. அவர்கள் ஒருசில தளங்களில் இடதுசாரிக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டிருக்கலாம், அது அவர்களை இடதுசாரிகளாக ஆக்குவதில்லை. இனவெறியரான சீமான் மத எதிர்ப்பு எடுப்பது முற்போக்கு அல்ல. அது பிற்போக்கின் இன்னொருவகை பேதம், அவ்வளவுதான். இன்னொரு தரப்பு இடதுசாரிகள். இவர்கள் அனேகமாக கண்ணுக்கே படவில்லை.

இரண்டுக்கும் நடுவே உள்ள மாபெரும்தரப்பு போலி இடதுசாரிகள். ஜனநாயகம், பகுத்தறிவு, மனித உரிமை, சூழியல் என அத்தனை முற்போக்குக் கோஷங்களையும் தங்கள் சொந்த காழ்ப்புகளுக்கு ஆதாரமாக, இடமும் தருணமும் நோக்கி மாற்றி மாற்றிக் கையாளும் ஒரு பெருங்கூட்டம். அவர்கள் சசிகலாவை எதிர்க்கையில் முற்போக்கின் அத்தனை ஒலிகளும் கிளம்பும், ஆனால் மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக பேசும்போது முற்போக்கை பொத்திக்கொள்வார்கள். கெயில் குழாய் பதிப்புக்கு எதிராக கூச்சலிடுவார்கள், மணல் வைகுண்டராஜனின் அமைப்புக்களில் சென்று கைநீட்டி காசு வாங்கிக் கொள்வார்கள். மதத்தை எதிர்ப்பார்கள். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்குக் கூலிக்குக் குற்றேவல் செய்வார்கள்.

2

இவர்களின் குரலே இணையத்தில் ஓங்கி ஒலிக்கிறது. இந்த வெற்றுக்கும்பலால் உண்மையில் இங்குள்ள உண்மையான முற்போக்குத்தரப்பு முழுமையாகவே மூடப்பட்டுவிட்டது. முற்போக்கு என்றாலே மக்களுக்குத் தெரிவது காழ்ப்பைக் கக்கிக்கொண்டே இருக்கும் கூலிப்படையின் முகமே. அவர்கள் மேல் மக்கள் கொள்ளும் ஆழமான அவநம்பிக்கை முற்போக்குத்தரப்பு மேல் படிகிறது. விளைவாக வலதுசாரிகள் வெல்கிறார்கள்.

நமது தொலைக்காட்சி விவாதங்கள் இணைய விவாதங்களின் அடுத்த கட்டமாக மாறியுள்ளன. இணையத்தில் கூச்சலிடுபவர்களில் இருந்து எவர் அதிக கூச்சல் போடுகிறார்களோ அவர்களை தேர்ந்தெடுத்து தொலைக்காட்சிகளில் அமரவைக்கிறார்கள். தொலைக்காட்சிகளைக் கூர்ந்து பார்த்தபோது சென்ற இரண்டாண்டுகளில் நிதானமான குரலில் பேசும் இடதுசாரிகள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டு வெறுப்பைக் கக்கும் நாலாந்தர இடதுசாரிக் கூச்சலாளர்களே அமர வைக்கப்படுவதையும், அவர்களுக்கெதிராக நாலாந்தர வலதுசாரிகள் அமரவைக்கப்பட்டு தொடர்ச்சியான உச்சகட்டமோதல் ஒன்று திட்டமிட்டு நிகழ்த்தப்படுவதைக் காணலாம். விளைவாக செய்தி வெறும் கேளிக்கை என்று ஆகிறது. வெறும் உச்சகட்ட உணர்ச்சி மோதல் என்றாகிறது. அதில் கற்றலுக்கும் புரிதலுக்கும் இடமில்லை. இலட்சியவாதமே இல்லை. வாதத்திறன், தொண்டைத்திறன், கூச்சநாச்சமில்லாமை மட்டுமே வெல்கிறது. இச்சூழலின் லாபமும் வலதுசாரிகளுக்கே.

இங்கே ஆக முற்போக்கு என நம் முன் வந்து நிற்கும் பல இயக்கங்க்கள் அப்பட்டமான அடிப்படைவாத அமைப்புக்கள் என்பதும் எது முற்போக்கு என்பதில் மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்குகிறது. உதாரணமாக, ஓர் இயக்கம் தமிழ்ப்பெருமிதம், தமிழ்த்தூய்மை, தமிழ் இனவாதம் ஆகியவற்றை ஓங்கிக் கூவுகிறது. தமிழர்கள் அப்பழுக்கற்றவர்கள் அதன் எதிரிகள் இந்தியதேசியமும் இந்தியாவின் பிற மக்களும்தான் என சொல்கிறது. அது ஃபாஸிஸம் அன்றி வேறென்ன? அதற்கும் ஐ.எஸ்.ஐ.எஸுக்கும் என்ன வேறுபாடு? நவீன ஜனநாயக விழுமியங்களுக்கு அது முழுமையாகவே எதிரிதானே?

ஆனால் நாம் அதை முற்போக்கு என்போம். ஏனென்றால் நாம் வெறுக்கும் ஒன்றை அதுவும் எதிர்க்கிறது. அந்நிலைபாட்டினூடாக முற்போக்குக்கும் பிற அமைப்புகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நிறுவப்படுகிறது. முற்போக்கு அமைப்பு என்பது எந்தவகையான விழுமியங்களும் உள்ளதல்ல, இரண்டின் இயல்புகளும் ஒன்றே, எதிரிகள்தான் வேறுவேறு என்றாகிறது

இந்தச் சூழலில் முற்போக்குத் தரப்பிலேயே அதியதிதீவிரப்பாவலா முற்போக்கு ஒன்று உண்டு – உதாரணம் வினவு கோஷ்டி. அவர்கள் இங்குள்ள பிரிவினைவாத, ஃபாசிஸ அமைப்புகளிடமிருந்து கோஷங்களை கடன்வாங்கி வெறுப்பையும் காழ்ப்பையும் கக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு பத்துநாள் படிக்கும் ஒருவன் அரசியல்ரீதியாக அதற்கும் ஃபாஸிஸத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றே நினைப்பான்

உண்மையான முற்போக்குத்தரப்பே வலதுசாரித்தனத்தை வெல்லமுடியும். ஏனென்றால் வலதுசாரிகள் பேசும் அடிப்படைகள் மதம், இனம், சாதி, மொழி போன்றவை மிகநீண்ட வரலாறுள்ளவை. மக்களிடம் அடிப்படையாகவே வேரூன்றியவை. பிறன் பற்றிய ஐயத்தை உருவாக்கி மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்பு அடையச்செய்வது மிகமிக எளிது. மக்கள் எவரையேனும் வெறுக்கவும் தங்கள் பிரச்சினைகளுக்கு எதிரிகளே காரணம் என நம்பவும் எப்போதுமே தயாராக இருப்பவர்கள். ஆகவே உண்மையான இலட்சியவாதத்தை முன்வைக்கும் இடதுசாரிக்குரல்களே அதை எதிர்கொள்ளமுடியும். வெற்றுக்காழ்ப்பாக அவர்கள் வெளிப்பட்டால் அவர்கள் பொருளிழந்துபோவார்கள். நிதானமான குரல்கள் அழிய அழிய இடது சாரிகளின் அடிப்படை லட்சியவாதம் அழிகிறது.

மூன்றாவதாகபல்லினத்தேசியம் என்னும் நவீன விழுமியத்தின் தற்காலிகத் தோல்வி., இது ஒரு மெல்லிய ஐயம் என்றே சொல்வேன். ஒரு கொள்கையாகச்ச் சொல்லுமளவுக்கு என்னிடம் தரவுகள் இல்லை. நூறாண்டுகளுக்கு முன்பு உலகளாவிய நவீனதேசம் குறித்த நோக்கு ஒன்று உருவாகிவந்தது. ரஸ்ஸல், ஏ.என்.வைட்ஹெட் போன்ற தத்துவஞானிகளால் முன்வைக்கப்பட்ட கனவு அது. உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தேச எல்லைகள் இல்லாத சர்வதேசிய அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற அந்த இலட்சியம் வலுப்பெற்றது. ஆனால் பனிப்போர் முடியும் காலம் வரைக்கும் தேசியஎல்லைகள் மிக இறுக்கமாக இருந்தன. ஆகவே அனைத்து தேசிய இனங்களும் கலந்த பெருந்தேசியம் என்னும் எண்ணமும் உலகளாவிய நவீனத் தேசியம் மற்றும் தேசஎல்லைகளற்ற உலகம் என்ற கனவும் கொள்கை அளவிலேயே இருந்தன.

பனிப்போர் முடிந்த பிறகு பல நாடுகள் அக்கனவை நடைமுறையாக்கத் தொடங்கினார்கள். ஆஸ்திரேலியா ஓர் உதாரணம். பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உதாரணம். அனைத்து இன மக்களும் சேர்ந்து வாழும் ஒரு வாழ்நிலமாக தங்கள் நாட்டை அமைக்க வேண்டும் என்ற கனவு நடைமுறைக்கு வந்தது பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் குடியுரிமைகள் அளிக்கப்பட்டன. உலகெங்கிலும் இருந்து பஞ்சத்தாலும் போர்களாலும் புலம்பெயர்ந்த மக்களுக்கு அச்சமூகங்களில் இடமளிக்கப்பட்டது.

மானுடம் உருவாக்கிய மிகப்பெரிய கனவுகளில் ஒன்று அது. மாபெரும் லட்சியவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் அது. ஆனால் நடைமுறையில் அது தோல்வி அடைந்து வருவதையே உலகம் காட்டுகிறது. தோல்வியடையலாகாது என்றே நான் விழைகிறேன். புல்வெளிதேசம் போன்ற பயணநூல்களில் பெரும் மன எழுச்சியுடன் இந்த நவீன சமூகத்தைப்பற்றிய என் நம்பிக்கையைப் பதிவுசெய்துமிருக்கிறேன். ஆனால் யதார்த்தம் வேறு

images

2005ல் முன் ஆஸ்திரேலியாவில் பிரதமர் எத்தியோப்பியாவிலிருந்து குடியேறிய அகதிகளை நோக்கி உளமுருக்கும் ஒரு விண்ணப்பத்தை வைத்தார். எத்தியோப்பியப் பஞ்சத்தின் போது அங்கிருந்த பல்லாயிரம் கறுப்பின இஸ்லாமியர்களுக்கு ஆஸ்திரேலியா இடமளித்தது. அவர்கள் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாத வாய்ப்புகளை அளித்தது. வெற்றிகரமான வாழ்க்கையை அவர்களுக்கு உருவாக்கியது. ஆனால் ஒரு தலைமுறை தாண்டியபோது அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக கற்பனை செய்து கொண்டார்கள். தங்கள் நாட்டிலிருந்து மதவெறியைக் கக்கும் மதகுருக்களை வரவழைத்து ஆஸ்திரேலியாவின் நவீன ஜனநாயக விழுமியங்களுக்கும் மத ஒற்றுமைக்கும் எதிரான முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு ஷரியத் சட்டம் வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதுமட்டும் அல்ல மொத்த ஆஸ்திரேலியாவையும் ஷரியத் சட்டப்படி ஒர் இஸ்லாமிய தேசமாக கைப்பற்றும் வரை அங்குள்ள இஸ்லாமியர்கள் அமைதியடையக்கூடாது, ஒரு நிலையிலும் அங்குள்ள கூட்டமைப்பை நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அவர்களின் மதகுரு சொன்னார். பன்மதத் தேசியம் என்பது இஸ்லாமுக்கு எதிரானது என்று அறைகூவினார்.

தங்களுடைய நம்பிக்கை தோற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ‘உங்களுக்கு நாங்கள் இத்தனை வாய்ப்புக்களை அளித்தோம் அதற்குப்பதிலாக நீங்கள் அளிப்பது இதுதானா?’ என்று கேட்டிருந்தார். ‘ஷரியத் சட்டத்தை விரும்புபவர்கள், ஆஸ்திரேலியாவின் நவீன ஜனநாயக அரசில் நம்பிக்கை அற்றவர்கள் வெளியேறலாம்’ என்றார்.

ஓர் இலட்சியவாதத்தின் வீழ்ச்சியைக் கண்ட துயரம் அது. ஆனால் அது நடைமுறை யதார்த்தம் பிரான்ஸிலும் ஐரோப்பாவின் பலநாடுகளிலும் பயணம்செய்யும்போது அங்கு குடியேறி இருக்கும் மத்திய ஆசிய இஸ்லாமிய மக்கள் எவரும் அங்குள்ள பண்பாட்டுடன் இணைத்துக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் கண்டோம். தங்களை அவர்கள் தனித்த அடையாளத்துடன் ஒதுக்கிக் கொள்கிறார்கள் அதன் பிறகு மிக உச்சகட்ட வெறுப்பை அங்குள்ள நவீனப் பண்பட்டின்மேல் உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்நாட்டை தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப வென்றெடுப்பதைப் பற்றிய கனவுகளை வளர்க்கிறார்கள். பிரான்ஸில் அப்படி கோரிக்கையை எழுதி கையில் தட்டியாகப் பிடித்துக்கொண்டு நிற்பவர்களையே கண்டேன்.

பிரான்ஸோ ஜெர்மனியோ கடந்த முந்நூறு ஆண்டுகளில் எத்தகைய மாபெரும் பண்பாட்டுக் கொந்தளிப்புகளை அடைந்திருக்கின்றன, என்னென்ன மகத்தான லட்சியங்களைக் கண்டடைந்திருக்கின்றன, எத்தனை தத்துவப் பரிணாமங்களினூடாக அவை இன்றிருக்கும் இடத்தை அடைந்திருக்கின்றன என்பதைப்பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. தங்கள் மதம், தங்கள் இனம் கொண்டிருக்கும் அடையாளம் மட்டுமே மெய்யானது, சரியானது என்று அவர்கள் நம்புகிறார்கள். பிரெஞ்சுக்காரர்களோ பிரிட்டிஷ்காரர்களோ தங்கள் பண்பாட்டுக்கு மிகக்கீழ்நிலையில் இருக்கும் மக்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு பொய்யான தன்னம்பிக்கையை அளிக்கிறது

சென்ற ஆண்டுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈபில் டவரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே இரவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வல்லுறவுகள் பதிவாகியிருக்கின்றன என்கிறார்கள். அவற்றில் மிகப்பெரும்பாலானவற்றில் சமீபத்தில் அங்கு குடியேறிய மத்திய ஆசிய இஸ்லாமிய அகதிகள் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பது பதிவாகியிருக்கிறது. பிரெஞ்சுக்காரர்களால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தங்கள் சொந்த நாட்டில் வாழ வழியின்றி தவிக்கும் மக்களுக்காகத்தான் அவர்கள் வாசல் திறந்து கொடுத்தார்கள். வாய்ப்புகளை அளித்தார்கள் .தங்கள் வளங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இருந்தும் கூட தங்கள் மேல் இவ்வளவு காழ்ப்பையும் வன்முறையையும் இவர்கள் மேல் ஏன் செலுத்துகிறார்கள் என்று மீள மீளக் கேட்கப்படுகிறது.

1

அந்த திகைப்பை ஐரோப்பா முழுக்கவே காணமுடிந்தது. நான் லண்டனிலும் ஐரோப்பாவிலும் சுற்றிக் கொண்டிருந்தபோதுதான் பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும்படி வாக்களித்தது. டிரம்ப் முன்னேறி வந்துகொண்டிருந்தார். அங்கிருந்த பொதுமனநிலையை கண்டு டிரம்ப் வெல்லக்கூடும் என நான் அப்போதே நண்பர்களிடம் சொன்னேன், எழுதவும் செய்தேன்.

பல்லினச்சமூகம், தேச எல்லைகள் அற்ற உலகம் என்னும் கனவு மகத்தானதுதான். ஆனால் உலகெங்கும் ஜனநாயக மனிதாபிமானக் கருத்துக்கள் ஓரளவேனும் சென்று சேர்ந்து, ஓரளவேனும் சமானமான பண்பாட்டுக்கல்வி நிகழாதவரைக்கும் அதை நடைமுறைப்படுத்த முடியாது. குறிப்பாக இஸ்லாமிய உலகம் நவீன ஜனநாயப் பண்புகளை சற்றேனும் கற்றுக்கொள்ளாமல், நவீன நீதிமுறையும் நவீன மானுட சமத்துவ நோக்குள்ள சமூக அமைப்பும் அங்கெல்லாம் உருவாகாமல்அதற்கென முயல்வதுஒரு தற்கொலை முயற்சியாகவே முடியும். ஐரோப்பா அதைக் உணர்ந்து வருகிறது. மிகமிகக் கசந்து அதை ஏற்றுக்கொள்கிறான் முற்போக்கான ஐரோப்பியன்.

ஐரோப்பாவின் இடதுசாரிகள் காலம் முதிரும் முன்னரே தொடங்கப்பட்டுவிட்ட பல்லினச்சமூகம் என்னும் கனவை ஒரு லட்சிய வெறியுடன் வலியுறுத்துகிறார்கள். அதைக்கண்டு அங்குள்ள எளிய மக்கள் அச்சம் கொள்வதைக் காண முடியவில்லை அவர்களால். உலகெங்கும் இடது சாரிக்கருத்துக்கள் பலவீனமடைந்து வலது சாரிக்கருத்துக்கள் மேலோங்குவதற்கு காரணங்களில் இதுவும் ஒன்று என்று சொல்ல முடியும். இடதுசாரிகள் தங்களை மூர்க்கமாக ஆக்கிக்கொண்டு கனவுலகு ஒன்றை முன்வைக்கும் சில குறுங்குழு மத அமைப்புகளாக ஐரோப்பாவில் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். பிரான்ஸிலும் ரோமிலும் அவர்கள் தெருமுனைகளில் தட்டிகளுடன் நிற்பதைக் கண்டபோது அவ்வெண்ணமே உருவாகியது.

இறுதியாகச் சொல்ல வேண்டியது நவீனக் காட்சி ஊடகம். முன்பும் ஊடகங்கள் இருந்தன. அவை மொழியூடகங்கள். ஆனால் காட்சியூடகத்தின் பெருக்கம் கடந்த முப்பதாண்டுகளாகத்தான். அதை இன்று நிகழ்த்துவது நுகர்பொருள் வணிகம். நேற்று பெங்களூரில் ஒரு விடுதியறையில் ஓரிரவு மட்டும் தொலைக்காட்சியைப் பார்த்தேன் எவ்வளவு நுகர்பொருட்களின் விளம்பரங்கள் சாமானியனின் தலைக்கு மேல் கொட்டப்படுகின்றன என்று பார்த்தேன். வாங்கு, நுகர், வாங்கு, நுகர் — பிறிதொன்றுமில்லை வாழ்க்கையில் என்று அவை அறைகூவிக்கொண்டே இருக்கின்றன. நுகர்பொருட்களால் நிறைந்த ஒரு உலகக்கனவை அவர்கள் மேல் கொட்டுகின்றன.

சென்ற காலங்களில் மனிதர்கள் மதங்களுக்குள் பிறந்து வளர்ந்தார்கள். மதம் அளிக்கும் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நவீன ஐரோப்பா உருவானபோது ஐரோப்பிய லட்சியங்களின் மடியில் குழந்தைகள் பிறந்து வளர்ந்தார்கள். இந்திய மறுமலர்ச்சிக்காலத்தில் அந்த ஐரோப்பிய இலட்சியவாதத்தின் இந்தியவடிவம் தங்களைச் சூழ்ந்திருக்க அவர்கள் வளர்ந்தனர். இன்றைய தலைமுறைகள் நுகர்வுவெறியில் பிறந்து வளர்கிறார்கள். பிறிதொன்றும் அவர்கள் அறிவதேயில்லை.

இன்று இருபத்தைந்து வயதான இளைஞனைப் பார்க்கையில் அவனுக்கு நுகர்வு தவிர எதிலும் ஆர்வமோ அடிப்படைப் பயிற்சியோ இல்லையென்பதைப் பார்க்கலாம். இசைகேட்கவோ, நூலைப்படிக்கவோ, சிந்தனை செய்யவோ, விவாதங்களில் ஈடுபடவோ அவனுக்குப் பயிற்சி இல்லை. தன் சொந்த இயல்பால் லட்சத்தில் ஒருவரே விதிவிலக்காக அமைகிறார்கள்.

இவ்வளவு நுகர்வுவெறி கொண்ட ஒரு சமூகம் எந்த லட்சியங்களையும் நோக்கி செல்லாது. அந்நுகர்வை மேலும் மேலும் வாக்குறுதி அளிக்கும் அரசியலையே அது விரும்பும். இலட்சியங்கள் எல்லாம் கேலிப்பொருளாகும். கேலி ஒரு மைய உணர்வாகவே நீடிக்கிறது. நுகர்வோனாக தன்னை உணர்பவன் ஒருவகையில் உயர்வுமனநிலை கொண்டவன், நேற்று அவன் முன்னோர்கள் அடையாத எல்லாமே அவனைச் சூழ்ந்திருக்கிறது. இன்னொருவகையில் தாழ்வுணர்ச்சி கொண்டவன், அவனுக்கு சிந்திக்கவோ புதிதாக எதையேனும் செய்யவோ ஆற்றல் இல்லை. ஆகவே அவன் நையாண்டி வழியாக அதைக் கடந்துசெல்கிறான்.

தொலைக்காட்சியின் எழுச்சி உலகெங்கும் இடதுசாரிக்கனவுகளை இல்லாமலாக்கியது என்று சொன்னால் அது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்குமான முடிச்சாக இருக்காது என்று நினைக்கிறேன். மகத்தான ஒன்றுக்காக போராடுவதில், அதன் பொருட்டு தன்னை இழப்பதில் ஒர் இன்பம் உள்ளது என்பதை அறிந்த இளைஞர்கள் உலகெங்கும் மிகக்குறைந்து கொண்டிருக்கிறார்கள். கருத்துகள் எங்கும் எவரையும் கவராமல் ஆகின்றன. இடதுசாரிகள் என்றல்ல எந்த ஒரு இலட்சியமும் இன்றைய இளைஞனைக் கவர்வதில்லை. அப்பட்டமான உக்கிரமான வெறுப்பை கக்குவது மட்டுமே அவனுக்குச் சுவாரசியமாகப் படுகிறது. அதற்கு ஓர் இலக்கை உருவாக்கிக்கொடுத்தால்போதும். மதம், இனம், மொழி ஏதோ ஒன்று. தமிழகத்தை விட கேரளச்சமூகத்தின் மாற்றத்தைக்கொண்டே இதை நான் எழுதுகிறேன்.

ஆனால் வரலாற்றின் பரிணாமம் என்பது ஒற்றைப்படையான ஒரு முன்னகர்வு அல்ல என்றே ஹெகலையோ அல்லது மார்க்ஸையோ கற்றவன் சொல்வான். அது முரணியக்கம்தான். ஒவ்வொன்றும் நேர்எதிரான விசைகளுடன் முரண்பட்டு போராடி சமநிலைப்புள்ளிகளைக் கண்டடைந்து உருவாகும் கோடுவழியாகவே வரலாறு முன்னகரும். அதுவே உண்மையில் சரியான முன்னகர்வாக இருக்க முடியும். ஒற்றைப்படையான தாவல் என்பது அதே அளவுக்கு பேரிழப்பையும் உருவாக்கும்.

அதைப்பார்த்தால் அறுபது எழுபதுகளில் உலகெங்கும் உருவான இடது சாரி எழுச்சிகள் பெரும்பாலானவை எத்தனை இலட்சியவாத நோக்கு கொண்டனவோ அதேயளவு கண்மூடித்தனமான தாவல்களும்கூட. கியூபா போன்ற ஒரே ஒரு [அரைகுறை] விதிவிலக்கு தவிர மற்ற அத்தனை முயற்சிகளும் பேரழிவாகவே முடிந்தன. காங்கோ பொலிவியா இந்தோனேசியா இலங்கை இந்தியா என தோல்விகளின் அழிவுகள். கம்போடியா போல வெற்றிகளின் பேரழிவு அதைவிட பலமடங்கு.

அடுத்த அலை, எதிர்த்திசை நகர்வு இப்போது நிகழ்கிறது என்று தோன்றுகிறது. முந்தைய நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களின் பிழைகளை சரிசெய்வதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பாக இருக்கலாம். அக்கருத்துக்கள் உருவாக்கிய பல்வேறு பிரிவினைகளை மனிதர்கள் வென்று அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்காக இருக்கலாம். தொழில் நுட்பத்திலும் வணிகத்திலும் மானுடம் ஒரு பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கலாம் இது. இதன் எதிர்விசையாக மீண்டும் இடதுசாரி அலை, லட்சியக்கனவுகளின் ஒரு காலம் எழுந்து வருமென்றே எதிர்பார்க்கலாம்.

ஜெ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.