Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை

Featured Replies

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை
 

article_1493191136-article_1479829865-prமருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ‘சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித்தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த 18ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.   

மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.   

இந்தக் கூட்டத்தின் போது, கடல் நீரைக் குடிநீராக்கும்திட்டம் தொடர்பிலான விஞ்ஞான ஆய்வினை மேற்கொண்ட இலங்கைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள கடலடிஆய்வுப் பிரிவான ‘நாரா’வின் தலைமை அதிகாரி கலாநிதி கே.அருளானந்தமும் கலந்து கொண்டிருந்தார்.   

குறித்த கூட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தாம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை கே.அருளானந்தம் முன்வைத்தார். அதன்பின்னர், தமக்குள்ள சந்தேகங்களைக் கேள்விகளாக வடமராட்சி கிழக்கு அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.   

அங்கு முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பூரண விளக்கம் அளிக்கப்படாத பின்னணியிலும் ஆய்வு முடிவுகளில் பாதகமான தன்மைகளேஅதிகம் காணப்படுவதாக உணரப்பட்டதாலும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினை கைவிடுவதாக கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.   

குறித்த அறிவிப்பினை கூட்டத்தின் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் வெளியிட்டார். அந்த அறிவிப்பினை சுமந்திரன் வெளியிடும் போது, அவரின் வலது புறத்தில் யாழ். மாவட்டச் செயலாளரும் அமர்ந்திருந்தார். ஆக, இந்த அறிவிப்பு குறிப்பிட்டளவு உத்தியோகபூர்வமானது என்று கொள்ள முடியும்.   

ஆனால், கே.அருளானந்தம் அடுத்த நாள் (ஏப்ரல் 19) யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, “மருதங்கேணி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் ஏதுவும் இல்லை. குறிப்பாக, சூழல் பாதிப்புகள் இல்லை” என்றுஅறிவித்தார்.   

அத்தோடு, தம்முடைய ஆய்வு முடிவுகளையும் அவர் அங்கு முன்வைத்தார். ஆனால், அந்த ஆய்வு முடிவுகள் தொடர்பில் முதல்நாள் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பூரண விளக்கங்களை அளிக்காத பட்சத்திலேயே, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை.   

இந்த இரு ஊடக சந்திப்புகளையும் அடுத்து, மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் இரண்டு வகையான விடயங்கள் மக்கள் மத்தியில் பெருப்பிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டன.   

அதில் முதலாவது, குடிநீரின்றி அல்லாடும் மக்களுக்கு, குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளுக்கு வடமராட்சி கிழக்கு மக்கள் தடையாக இருக்கின்றார்கள் என்கிற தோரணையிலானது.   

இரண்டாவது, சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைபயன்படுத்திக் கொண்டு பழிதீர்க்க எண்ணியமைக்கான முனைப்புகள் ஆகும்.  

ஆனால், மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலான ஆரம்பம் அதன் தற்போதையை நிலை தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்கும் உரையாடுவதற்கும் ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை.   

மாறாக, ஒருவித நழுவல் போக்கிலேயே அவை இருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், வடக்கின் பெரும்பான்மை மக்கள் மத்தியில், வடமராட்சி கிழக்கு மக்களின் நீதிக் கோரிக்கைகளை ஒவ்வாத ‘கலகம்’ மாதிரியாகக் காட்சிப் படுத்துவதில் சில தரப்புகள் குறியாக இருக்கின்றன.  

விடயங்களை ஆழமாக ஆராயும்போது அல்லது அதன் உண்மைத் தன்மைகளை உணர்ந்து கொள்கின்றபோது, ஏழைஎளிய மக்களின் கோரிக்கைகளின் பக்கத்திலுள்ள நியாயங்களைப் புரிய வேண்டிவரும்.  

 அது, அந்த மக்கள் சார்பிலான முடிவுகளை எடுக்க வேண்டி வரும் என்கிற அச்சத்திலும் குறிப்பிட்ட அளவானவர்கள் விடயங்கள் சார்ந்து உரையாடுவதற்கு மறுக்கின்றார்கள். இதனை ஏழைஎளிய மக்களைப் புரிந்து கொள்ள மறுக்கின்ற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவும் கொள்ள முடியும்.   

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கு மாகாண சபை உள்ளிட்ட தரப்புகளினால் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது.   

இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் முனைப்புகளுக்கு கிளிநொச்சி மாவட்ட விவசாய சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டதன் பின்னர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பற்றிய உரையாடல் மேல் நோக்கி வந்தது.   

சடுதியாக ஒருநாள், மருதங்கேணியின் தாளையடிப் பகுதியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.   

சூழல் சமநிலையில் தாக்கம் செலுத்தக் கூடியதாகக் கருதப்படும் திட்டங்களை முன்வைக்கும்போது, அவை தொடர்பிலானஆய்வுகளைப் பல கட்டங்களில் மேற்கொண்டு, சாதக பாதகத் தன்மைகள் தொடர்பில் தெளிவாக அறிக்கையிடப்பட வேண்டும்.   

அதன்பின்னர், அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச மக்களோடு தொடர் கலந்துரையாடல்களை நடத்தித் தெளிவுபடுத்தி, மக்கள் இணங்கும் பட்சத்தில், குறித்த திட்டங்களை முன்னெடுப்பதுதான் நடைமுறை வழக்கம். அதுதான் அடிப்படை அறமுமாகும்.   

ஆனால், மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் வரையில், அந்தப் பகுதி மக்களுக்குஅது தொடர்பில் தெரிந்திருக்கவில்லை.   

ஒரு மக்கள் கூட்டத்தின் மீது, எந்தவித முன்னறிப்பும் இன்றித் திட்டமொன்று திணிக்கப்பட்டதான உணர்வு நிலையை அது ஏற்படுத்தியது. அதனையடுத்து, வடமராட்சி கிழக்கு மக்கள் பெரும் ஏமாற்றத்தின் புள்ளியில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தயாரானார்கள்.   

இங்கு, எதிர்ப்பு நடவடிக்கை என்பது, எந்தவித தார்மீகங்களையும் மீறிய வகையில் அமையவில்லை. மாறாக, தமது கடலை நம்பிய வாழ்வாதாரத்தின் மீதான சம்மட்டி அடியாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமையப் போவதான அச்சத்தின் புள்ளியில் அந்த முடிவுக்கு வந்தார்கள்.   

அத்தோடு எதிர்ப்பு நடவடிக்கை என்பது எந்தவொரு தருணத்திலும் குடிநீரின்றி அல்லாடும் மக்களுக்குக் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைளுக்கு எதிரானதாகவும் அமையவில்லை. மாறாக, ஆய்வுகள் எதனையும் நடத்தாமல்த் தங்களை உரிய வகையில் தெளிவுபடுத்தாமல், ஆதிக்க மனநிலையோடு தம்மீது திணிக்கப்பட்ட முடிவுக்கு (திட்டமொன்றுக்கு)எதிரானது.   

இது, பாதிக்கப்படும் சமூகங்கள் உலகம் பூராவும் முன்னெடுப்பதுதான். அதனைத்தான் வடமராட்சி கிழக்கு மக்களும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தார்கள். அப்போதும், வடக்கு மாகாண சபையாலும் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அநேகராலும் குறித்த திட்டத்தினை எப்படியாவது திணித்துவிட வேண்டும் என்கிற முனைப்பே காணப்பட்டது. அப்போதுதான், மக்கள் இன்னும் இன்னும் விழிப்படையத் தொடங்கினார்கள்.   

இந்தப் பின்னணியில்தான், குறித்த திட்டம் தொடர்பிலான விஞ்ஞான ஆய்வுகளை நடத்துவதற்கு வடக்கு மாகாண சபை உள்ளிட்ட தரப்புகள் ஒரு வருடத்தின் பின் இணங்கின.  

 அந்த ஆய்வுகள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. அது தொடர்பிலான அறிவிப்பே கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதன் பின்னரே, பாதகத் தன்மைகள் அதிகமாக இருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து, திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.   

ஒரு திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பிலான ஆய்வுகள், குறைந்தது மூன்று இடங்களைத் தெரிவு செய்து நடத்தியிருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலான ஆய்வு மருதங்கேணியில் மட்டுமே நடத்தப்பட்டது.   

அது ஏன் என்று கேள்வியெழுப்பப்பட்ட போதும் சம்பந்தப்பட்ட தரப்புகளினால் பதில் அளிக்கப்படவில்லை. குறித்த திட்டத்தினை முன்னெடுக்கக் கூடிய சூழலுள்ள பகுதியென்று கருதப்படும் பகுதிகளில் ஒன்றான, கீரிமலைக் கடலில் ஏன் பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற கேள்விக்கு, அங்கு இறுதிக் கிரிகைகள் நடத்தப்படுவதால் அது சாத்தியமில்லை என்கிற விளக்கம் சொல்லப்பட்டது.   

இவ்வாறான, எழுந்தமான மனநிலையோடு பாதிக்கப்பட்டதாகக் கருதும் மக்களை அணுகும் முறை எங்கிருந்து வந்தது?   

கடல் என்பது பரந்து விரிந்தது; அதிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதால் என்ன பாதிப்பு வரப் போகின்றது என்ற மேலோட்டமான சிந்தனை மக்களிடம் உண்டு. ஏன், மெத்தப்படித்த பொறியியலாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்புகளிடமும் இருப்பதை அண்மைய நாட்களில் உணர்ந்து கொள்ள முடிந்தது.   

கடல் நீரில் உப்புள்ளது; அப்படிப்பட்ட நிலையில், கடல் நீரைக் குடிநீராக்கியதும் உப்புக் கழிவுகளையும் இரசாயனக் கழிவுகளையும் கடலில் கொட்டுவதால் என்ன பாதிப்பு என்கிற கேள்விகளை மேலோட்டமாக நாம் கேட்கின்ற புள்ளியில், பாதிக்கப்படும் ஏழைஎளிய மக்களின் கேள்விகளைப் புறந்தள்ள எத்தனிக்கின்றோம்.   

கொஞ்சம், பாதிக்கப்படும் மக்களின் கருத்துகளையும் சந்தேகங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள். 
அதன் பின்னர், உங்களின் இறுதி முடிவுகளுக்கு வரலாம். அதுதான், நியாய பூர்வமானதாகும்.   

அதனையே, வடமராட்சி கிழக்கு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். மாறாக, அவர்கள் மீது குடிநீர் தர மறுக்கும் அற உணர்வு அற்றவர்கள் என்கிற அடையாளப்படுத்தல்கள் அடிப்படையற்றது; அபத்தமானது.    

- See more at: http://www.tamilmirror.lk/195463/கடல-ந-ர-க-க-ட-ந-ர-க-க-ம-த-ட-டம-மர-தங-க-ண-மக-கள-ந-க-க-ய-வச-#sthash.vLIIuCM8.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.