Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேண்டியது வேண்டாமை

Featured Replies

 
 

வேண்டியது வேண்டாமை

 

அம்மா வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து வேதனையாக இருந்தது. காலையில் மாயா இறந்ததாக செய்தி கிடைத்து அப்பா அவசரமாக கிளம்பிச் சென்றதிலிருந்தே அம்மா இப்படித்தான் வருத்தத்தைச் சுமக்கிறாள். ‘‘அம்மா, எதுக்காக துக்கப்படறீங்க? பீடை ஒழிஞ்சதுன்னு நிம்மதியா இருங்க...’’ என்றேன்.
8.jpg
என்னை உற்றுப் பார்த்தாள். நான் கூறியது மனிதாபிமானம் குறைந்த வாக்கியம் என்பது எனக்கே தெரிந்ததுதான். ஆனால், கடந்த பல வருடங்கள் எங்களுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்த வலியும், ஏளனப் பார்வைகளும் என்னை அப்படிக் கூற வைத்தன. ஆனால், இப்போது அம்மாவிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் திகைப்பை அளித்தன. ‘‘உங்க அப்பாவை நினைச்சால் பாவமாய் இருக்குடா. இதிலிருந்து அவர் தேறிவருவது கஷ்டம். நீயும், நானும் அவருக்கு ரொம்ப ஆதரவாக இருக்கணும்...’’ என்றாள்! 

‘என்ன ஒரு முட்டாள்தனமான பதில்’ - நினைத்தபோதே அம்மா எதையுமே சற்று வித்தியாசமாகவும் தெளிவாகவும் அணுகுபவள் என்பது நினைவுக்கு வந்தது. எதனால் அம்மாவை விட்டுவிட்டு அப்பா அந்த மாயாவிடம் அடைக்கலமாகி இருக்க வேண்டும்? இப்படி யோசிக்கும் போதெல்லாம் அம்மாவின் நிறம் மனதில் எட்டிப் பார்க்கும். மாநிறத்துக்கும் கருப்புக்கும் இடைப்பட்ட நிறம்.

‘‘நல்லவேளையா நீயாவது உங்க அப்பா மாதிரி சிகப்பாகப் பிறந்தியே...’’ என்பாள் அவ்வப்போது. சின்ன வயதில் இதைக் கேட்டபோது பெருமையாக இருக்கும். தன்னை எதற்காகவோ அம்மா பாராட்டுகிறாள் என்ற கோணம் மட்டுமே மனதில் பதியும். ஆனால், வளர வளர அம்மாவின் தாழ்வு மனப்பான்மையையும், குடும்பத்தின் வித்தியாசமான நிலையையும் உணர முடிந்தது.

அந்த மாயாவின் வலையில் அப்பா எப்போது வீழ்ந்தார் என்று தெரியவில்லை. சோர்வடையும் அம்மாவை நான் விதவிதமாக சமாதானம் செய்ய முயற்சித்ததுண்டு. சில சமயம் சீரியஸாகவும், சில சமயம் நகைச்சுவை கலந்தும். ‘‘அப்பா அந்த மாயாவிடம் சாய்ந்ததற்கும் உங்க கலருக்கும் நிச்சயம் தொடர்பு இருக்காது. கருப்புன்றதும் ஒரு கலர். அவ்ளோதான். நம்ம திராவிடத் தோலே கருப்புதான்.

இங்கே பிரபலமான கட்சிக் கொடிகளில் சிகப்போடு கருப்பும்தான் இருக்கிறது...’’ தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி கூறிக் கொண்டிருந்தாள். ‘‘கிருஷ்ணன் கிருஷ்ணன்னு நாம கொண்டாடுகிறோமே, அந்த வார்த்தைக்கு அர்த்தமே ‘கருப்பு’ என்பதுதான்...’’ பெருமை பொங்க, ‘‘இவங்க என் ஃபிரண்டு சுகந்தனோட அம்மா...’’ என்றேன்.

அடுத்த முறை சுகந்தனை சந்திக்கச் சென்றபோது அம்மாவையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். அம்மாவின் கருப்பு நிற தாழ்வு மனப்பான்மை குறித்து எப்படி ஆரம்பிப்பது என்று யோசிக்கத் தொடங்கினேன். சுகந்தனின் அம்மா மனவியலில் ஆராய்ச்சி செய்தவர். அவரது பேச்சு நிச்சயம் அம்மாவுக்கு இதம் தரும். எனக்கு எந்த சிரமமும் அளிக்காமல் தானாகவே அந்த டாபிக் வெளிப்பட்டு விட்டது.
 
‘‘இந்தப் புடவையின் கலர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு...’’ என்றாள் அம்மா. அது வாங்கப்பட்ட கடையின் பெயரையும், விலையையும் கூறிய சுகந்தனின் அம்மா, ‘‘நீங்களும் இதுமாதிரி ஒரு புடவையை வாங்கிக்கலாமே?’’ என்றாள். ‘‘இல்லங்க. உங்களை மாதிரி சிகப்பு நிறத்திலே இருக்கிறவங்களுக்குதான் இது பொருத்தமா இருக்கும்.

கருப்பு கலரிலே இருக்கிறவங்களுக்கு இப்படிப் பல டிஸட்வான்டேஜஸ் இருக்கு...’’ அடுத்த கணமே சுகந்தனின் அம்மா பொரிந்து தள்ளினார். ‘‘கலர்லே என்னங்க இருக்கு? ஒவ்வொரு கலரும் ஒவ்வொரு அழகு. கருப்பா இருந்தாலும் களையா இருக்கிறவங்கஎவ்வளவோ பேர் உண்டு. ஏன் இப்ப நீங்க இல்லையா? எனக்குத் தெரிஞ்சு கருப்பாய் இருக்கிறவங்க அதிக நேர்மையோடு இருப்பாங்க.

என்னுடைய மாமா பெண் வீட்டில் அப்படித்தான். அவ கருப்பாய் இருப்பா. அவ புருஷன் சிகப்பாய் இருப்பார். ஆனால், கேரக்டர் நேரெதிர்...’’ வீட்டுக்கு வந்தவுடன், ‘‘இப்பவாவது உங்க  மனசு கொஞ்சம் தெளிவாச்சா? உங்க கலர் காம்ப்ளக்ஸ் தள்ளிப்போச்சா?’’ என்று கேட்டேன். பதிலாக எதிர்பாராத ஒரு வாக்கியம் வெளிப்பட்டது.

‘‘சுகந்தனின் அம்மா சும்மா ஒப்புக்குப் பேசறாங்க. அவங்க அடிமனசிலேயும் சிகப்புத் தோல்தான் உசத்தி!’’ அடிபட்டதுபோல் உணர்ந்தேன். நண்பனின் அம்மாவின்மீது எதற்காக வீண்பழி சுமத்த வேண்டும்? ‘‘நான் ஒண்ணும் வீணாகப் பழி போடலேடா. கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கறவங்க உண்டுன்னா அதுக்கு அர்த்தம் என்ன? கருப்பு என்பது ஒரு நெகடிவ் விஷயம்போலத்தானே அதற்கு அர்த்தம்? சிகப்பாக இருந்தாலும் களையா இருக்கான்னு யாரையாவது சொல்றாங்களா?’’ அசந்து போனேன். அம்மா தொடர்ந்தாள்.

‘‘அதுமட்டுமில்லே. தன் மாமா பெண்ணைப் பற்றிப் பேசும்போது ‘அவ கருப்பு. அவ ஹஸ்பண்ட் சிகப்பு. ஆனால், கேரக்டர் நேரெதிர்’ என்றால் என்ன அர்த்தம்? யோசிச்சுப் பாரு. உனக்கே விளங்கும்...’’ வாரம் மூன்று நாட்கள் அப்பா ‘அங்கே’ போகத் தொடங்கினார். பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில்கூட காலை வேளைகளில் அவசரமாக பூஜை செய்துவிட்டு சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு சென்றுவிடுவார்.

‘‘அம்மா நீங்க ஏன் இதைப்பற்றி அப்பாவிடம் கேட்கமாட்டேங்கறீங்க? நீங்க கேட்கல்லேன்னா நான் கேட்கிறேன்...’’ துணிவைத் திரட்டிக் கொண்டு அப்பாவிடம் இதுபற்றிக் கேட்டுவிட்டேன். அவர் திடுக்கிடுவார், குற்ற உணர்ச்சியில் தவிப்பார், தடுமாறுவார் என்றெல்லாம் நான் நினைத்தது நிஜமாகவில்லை.

சில நிமிடங்கள் மெளனத்தில் கழிந்தன. பிறகு, ‘‘உங்களுக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டேன்...’’ என்றார். இதென்ன பதில்? தவிர அது எப்படிச் சாத்தியம்? இதை எப்படிச் சரி செய்வது? அந்த மாயாவிடமே பேசிவிடலாமே. அம்மா மறுத்தாள். அதில் பலன் இருக்காது என்றாள். அவளுக்குத் தெரியாத எந்தப் புதிய வாதத்தை என்னால் முன்வைக்க முடியும் என்று கேட்டாள்.

போலீஸில் புகார் செய்தால்...? அம்மாவின் முகம் கலவரமாக மாறியது. எனக்குமேகூட இதில் முழு சம்மதம் இல்லை. மிகவும் பாமரத்தனமான ஒரு யோசனைகூட வந்தது. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சில நடிகைகள் இதுபோன்ற குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்களே, அவர்களை அணுகினால்...?

‘‘என்னடா சொல்ற? உங்க அப்பாவோ மாயாவோ அந்த நிகழ்ச்சிக்கு வருவாங்களா? வந்தாலும் என்ன ஆகும்? அப்பாவைத் திட்டுவாங்க. நீயோ நானோ அழுதால் நம்மை ஃபோகஸ் பண்ணுவாங்க. மாயா பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அப்பாவை என் பக்கத்திலே உட்காரச் சொல்வாங்க. சோபாவிலே மாறி உட்கார்ந்தா பிரச்னை தீர்ந்திடுமா?’’

பலவித சிந்தனைகள். படிப்பில் கவனம் குறைந்தது. மதிப்பெண்கள் குறையத் தொடங்கின. அப்பா மேலும் அடிக்கடி அந்த மாயாவின் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினார். அம்மா அடிக்கடி மோட்டு வளையை வெறித்துப் பார்க்கத் தொடங்கினாள். எப்படியாவது அப்பாவின் மனம் மாறுவதுதான் இதற்கான ஒரே வழி.

அது எப்படி நடக்கும்? ‘‘எனக்கு மாயாதான் உன்னைவிட முக்கியம்...’’ என்று அம்மாவிடம் அப்பா பலமுறை கூறத் தொடங்கியிருந்தார். இந்த நிலையில்தான் இப்படியொரு எதிர்பாராத தீர்வு கிடைத்திருக்கிறது. மாயா இறந்திருக்கிறாள். ‘ஏதாவது ஒரு மாயம் நடந்து அவர் நம்மிடமே இருக்கத் தொடங்கினா அதைவிட ஒரு சந்தோஷம் எனக்கு இல்லை’ என்று அம்மா துக்கத்தோடு சில நாட்களுக்குமுன் பேசியது நினைவுக்கு வந்தது.

அதற்கு இறைவன் ஒருவழியாக செவிசாய்த்து விட்டான். மாயாவை மயானத்திற்கு கொண்டு சென்று விட்டதாகவும், அப்பாதான் கொள்ளி வைத்ததாகவும் அவ்வப்போது தகவல்கள் எங்களை எட்டிக் கொண்டிருந்தன. இரவு எட்டரை மணிக்கு அப்பா வந்தார். தொலைக்காட்சியை ஆன் செய்தார். வேகமான ஒரு திரைப்படப் பாடல் ஒளிபரப்பாக அவர் கால்கள் தன்னிச்சையாக தாளம் போட்டன.

‘‘சாப்பிடலாம் வாங்க’’ என்று அம்மா கூப்பிட உடன்பட்டார். ரசித்துச் சாப்பிட்டார். பின்னர் திடீரென்று அம்மாவைப் பார்த்து, ‘‘இனிமேல் எனக்கு நீதான், உனக்கு நான்தான்...’’ என்றார். அம்மா நெகிழ்வாள் அல்லது ஆறுதலாக எதையாவது சொல்வாள் என்று நான் எதிர்பார்த்திருக்க, அங்கிருந்து வேகமாக கொல்லைப்புறத்திற்குச் சென்றாள். நானும் பின் தொடர்ந்தேன்.

‘‘அடுத்த மாதத்திலேயிருந்து நாம தனியா வேறே வீட்டுக்குப் போயிடலாம். அல்லது உங்கப்பா வேறே வீடு பார்த்துக்கட்டும்...’’ என்றாள். திகைப்பாக இருந்தது. ‘‘என்னம்மா இது! இனிமேல்தான் அப்பா உங்க மேலே முழுமையான அன்பை செலுத்தப் போகிறார். இப்பப் போய் இப்படி ஒரு முடிவெடுப்பதா?’’ ‘‘அடப் போடா. இவ்வளவு நாள் உயிருக்குயிராக விரும்பியவளோட சாவே அவரை ஒரு நாளைக்குக் கூட முழுசா அசைச்சுப் பார்க்கலையாம். இவர் நம்மிடம்தான் உண்மையான அன்பு செலுத்தப் போறாரா? வா, தனியாப் போயிடலாம்!’’ என்றாள் அழுத்தந்திருத்தமாக.      

www.kungumam.co

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.