Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?!

Featured Replies

அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில்

அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! - புருஜோத்தமன் தங்கமயில்

அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில்

 

‘தீர்மானங்களின் நாயகன்‘ என்று விளிக்கப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் முக்கிய தீர்மானமொன்றை எடுக்குமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த 45 மாத காலத்தில் வடக்கு மாகாண சபையினால் 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில், 2015 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டது/ நிகழ்த்தப்படுகின்றது’ என்று கூறும் தீர்மானம் முக்கியமானது. அதுபோல, ஒன்றிரண்டு தீர்மானங்களைத் தவிர, ஏனைய தீர்மானங்கள் எவை, அவை ஏன் நிறைவேற்றப்பட்டன? என்று வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கே இப்போது ஞாபகமிருக்குமா தெரியாது. அந்தத் தீர்மானங்களின் அதிகபட்ச ஆயுட்காலம், ஊடகங்களில் செய்தியாக்கப்படுவதோடு முடிந்துபோயிருக்கின்றன.

இப்போது, முதலைமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் வேறு வகையானது. தவிர்க்க முடியாதது. அது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் மோசடிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களின் பெரும் ஆணைபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து சில காலத்துக்குள்ளேயே, அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் ஆளும் கட்சி உறுப்பினர்களினாலேயே முன்வைக்கப்பட்டன. அது தொடர்பிலான பல மாத கால இழுபறிகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் குறித்த விசாரணைக்குழுவுக்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டனர். விசாரணைக்குழு கடந்த நவம்பர் மாதம் விசாரணைகளை ஆரம்பித்து, கடந்த மே மாதம் 19ஆம் திகதி, 82 பக்கங்களைக் கொண்ட தன்னுடைய விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் கையளித்திருக்கின்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளடங்கலாக ஐந்து அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்த விசாரணைக்குழு, சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருக்கின்றது. முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், அமைச்சர் குழுவின் முதல்வர் மற்றும் கூட்டுப்பொறுப்பு என்கிற அடிப்படையில், அமைச்சர்கள் தம்பிராசா குருகுலராஜா மற்றும் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் இழைத்த குற்றங்கள் அல்லது அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு, குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டிய கடப்பாட்டினையும் அவர் மீது காலம் வழங்கியிருக்கின்றது. இது, மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டதும் மறக்கப்படும் தீர்மானங்கள் போன்று இலகுவானவை அல்ல. சற்றுக் கடினமான பணி. நிதானமாக ஆனால், தீர்க்கமாக எடுக்க வேண்டியது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தம்முடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால், சொல்லிக் கொள்ளக் கூடியதான பெரிய நிர்வாகப் பொறுப்புக்களை அல்லது ஆட்சி நடைமுறைகளை தமிழ்த் தேசிய அரசியல் கடந்த எழுபது ஆண்டுகளில் கொண்டிருக்கவில்லை. இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபை தன்னுடைய நிர்வாக காலத்தினை சிறிய காலத்துக்குள்ளேயே முடித்துக் கொண்டது. ஆனால், ஒப்பீட்டளவில் வடக்கு மாகாண சபையே தமிழ்த் தேசிய அரசியலின் போக்கில் அதிக காலம் வகிக்கப்படும் நிர்வாகப் பொறுப்பு (உள்ளூராட்சி முறைமையின் கடைநிலை அமைப்புக்களான பிரதேச சபை, நகர சபைகள் தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்படவில்லை). ஏற்கனவே, மிகமிக அதிகார வலு குறைந்த நிர்வாகக் கட்டமைப்பான மாகாண சபை முறைமைக்குள்ளேயே நிர்வாகக் குறைபாடு, மோசடிக் குற்றச்சாட்டுக்கள் என்று பலத்த விமர்சனத்தை விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சரவை எதிர்கொண்டிருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுக்களை விட, ஆளுங்கட்சி உறுப்பினர்களும், ஊடகங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனும் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அதிகம்.

விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலான விமர்சனங்கள், அவரின் நிர்வாகத்தின் மீது விழுவது தேர்தல் அரசியலின் போக்கில் வழமையானது. அது எங்கும் நிகழ்வதுதான். ஆனால், அதனை அவர் புறந்தள்ளுவதற்கான ஏதுகைகளினை, அவர் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையே வழங்கவில்லை. முதலமைச்சரை சற்றுப் பதட்டத்தோடு வைத்துக் கொள்வது தொடர்பில் அவரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர்கள் அக்கறையோடு இருந்து வருகின்றார்கள். அது அவருக்கும் தெரியும். ஆனாலும், அவரின் அதிகூடிய உணர்ச்சிவசப்படுகின்ற நிலை, தொடர் சிக்கலுக்குள் அவரை மாட்டி விட்டிருக்கின்றது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பெரியளவில் மேலெழுந்து மக்கள் எரிச்சல் நிலையை அடைந்த தருணத்தில் கூட, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் நற்சான்றிதழ் வழங்குவதில் குறியாக இருந்தார். குறிப்பாக, பொன்னுத்துரை ஐங்கரநேசன், தம்பிராசா குருகுலராஜா ஆகியோர் தொடர்பில் பிணையெடுப்பதில் அதிக நேரம் செலவிட்டு உழைத்திருக்கின்றார். விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அழைத்த இடங்களுக்கெல்லாம் முதலமைச்சர் சென்றார், அவர் சொல்வதெல்லாம் வேதவாக்குப் போன்றும் நடந்து வந்தார். இப்போது, ஐங்கரநேசன் மேற்கொண்டதாகக் கூறப்படும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகள் முதலமைச்சரை முகமாக வைத்தே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்கிற தொனி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சுன்னாகம் பகுதியிலுள்ள தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிலிருந்து வெளியேறும் எண்ணெய் கழிவுகள், அந்தப் பகுதி நிலத்தடி நீரில் கலந்திருக்கின்றது என்று தெரிவித்து எதிர்ப்புப் போராட்டங்களை மக்கள் 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தனர். அந்த விடயம் தொடர்பில் நிபுணர் குழுவினை நியமித்து, நிலத்தடி நீரில் எண்ணெய் கழிவுகள் கலக்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பிக்க வைத்தமை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீது அதிருப்திகள் எழுந்திருந்தன. அண்மையில், மல்லாகம் நீதிமன்றத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சமர்ப்பித்த அறிக்கையில், சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரியில் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. மக்களின் குடிநீர்ப் பிரச்சினையில் பொறுப்பற்று செயற்பட்டு யாரோ சிலரின் தேவைகளை நிறைவேற்ற முனைந்தமை தொடர்பில் விக்னேஸ்வரனும், பொன்னுத்துரை ஐங்கரநேசனும் குற்றச்சாட்டுக்களை இப்போதும் சந்தித்து நிற்கின்றனர்.

பொன்னுத்துரை ஐங்கரநேசன் தன்னை சூழலியலாளராக தொடர்ச்சியாக முன்னிறுத்தி வருபவர். ஆனால், அது தொடர்பிலான பல செயற்திட்டங்களில் உண்மையாக அவர் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றாரா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, மருதங்கேணி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலான ஆய்வுகள் ஏதுவும் செய்யப்படாத காலப்பகுதியிலேயே அந்தப் பகுதி மக்களை கூட்டி குறித்த திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரினார். அங்கு மக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் கூட்டத்திலிருந்து இடைநடுவிலேயே வெளியேறினார். அதுபோல, குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த வடமராட்சிக் கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவரை, அரசியல் காரணங்கள் காட்டி பதவி நீக்கினார். (அமைச்சரால் பதவி நீக்கப்பட்டவரே, தற்போது மீண்டும் அந்தப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் என்பது வேறு விடயம்.)

பொன்னுத்துரை ஐங்கரநேசன் வடக்கின் இயற்கை வளத்தினைக் காப்பாற்றுவதற்காக மாகாண அதிகார வலுவிற்கு அப்பால் சென்று செயலாற்றியிருக்கின்றார். அது, அரசியல் தலைமையென்கிற அடிப்படையில் சரியானது என்கிற நியாயப்படுத்தல்கள் வைக்கப்படுகின்றன. அப்படியாயின், சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்திலும், மருதங்கேணி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலும் அவர் நடந்து கொண்டமையை எவ்வாறு எடுத்துக் கொள்வது? அதுபோல, அதிபர்கள் நியமனப் பிரச்சினை, ஆசிரியர்கள் இடமாற்றப் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தொடர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வந்திருக்கின்றார். அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

மாகாண அமைப்பு முறை என்பது அதிகார வலு மிகவும் குறைந்தது. அதனை அதிகாரப் பகிர்வின் அங்கமாகவே கொள்ள இயலாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அது, அரசியல் ரீதியான உறுதிப்பாடு சார்ந்தது. ஆனால், அந்த வலுக்குறைந்த அவையினூடு ஆற்றப்படக் கூடிய சில விடயங்களை போருக்குள் முப்பது வருடங்களுக்கும் மேலாக அல்லாடியவர்களாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களில் வழி இலங்கைக்குள் வந்த மாகாண சபை முறைமையால், அதிக பலன்களை இப்போது, தெற்கு பெற்று வருகின்றது. மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த வடமத்திய மாகாணமும், வடமேல் மாகாணமும் மாகாண சபை முறைமையூடு பல வெற்றிகரமான கட்டங்களைத் தொட்டிருக்கின்றன. ஆனால், அதிக தேவைகளோடு இருக்கின்ற வடக்கு மாகாண சபை, கிடைத்துள்ள மிகக்குறைந்த அதிகாரங்களைக் கொண்டே மோசடிகளில் ஈடுபட்டிருக்கின்றது என்பது வேதனையானது. மன்னிக்கவே முடியாதது. இழைத்த குற்றங்களுக்கு தார்மீகக் பொறுப்பை ஏற்று அமைச்சர்கள் இருவரும் பதவி விலகுவார்களா அல்லது பதவி நீக்கப்படுவர்களா என்பதை காலம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும்!

http://thuliyam.com/?p=70317

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி.... ஒரு நிலைமை,  வந்தால்....
அடுத்த முதல்வர்...  புருஜோத்தமன் தங்கமயில் தான்.....
தங்க மயில் அண்ணே... நீங்க, ரெடியாகுங்கண்ணே....   :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளடங்கலாக ஐந்து அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்த விசாரணைக்குழு, சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருக்கின்றது

இதுதான் ‍"ஹைலட்"....வடமாகாணசபையை இல்லாமல் பண்ணுவதே பலரின் குறிக்கோள்.....மத்திய அரசின் சில செயல்களை செய்யவிடாமல் தடுப்பதனாலும் ...மற்றும் இராணுவ வெளியேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை விடுவதானாலும் ..

  • தொடங்கியவர்

 

VA

சிக்கலுக்குள் சிக்கியது அமைச்சர்களா? முதலமைச்சரா?

(ஆசிரியப்பார்வை)

தமிழ்மக்கள் மத்தியில் அண்மைய நாட்களாக பேசுபொருளாக மாறியிருப்பது வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் தொடர்பிலான விசாரணைக்குழு பரிந்துரையும் சில ஊடகங்கள் அவற்றுக்குக் கொடுத்த முக்கியத்துவமும்.

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லாத சமூகத்தில் வாழ்ந்த மக்கள் இந்த விடயத்திற்கும் தண்டனையை எதிர்பார்ப்பதை இம்மியளவும் நிராகரிக்க முடியாது. அது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா என்பதாகவோ அல்லது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் என்பதாகவோ இருக்கலாம் ஏன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனாக இருந்தால் கூட குற்றம் இழைத்திருந்தால் இழைக்கப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளவே முடியாது. தப்பித்துக்கொள்ளவும் கூடாது.

ஆனாலும்,

விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட இறுதித் தாளுக்கு முன்பாக சொல்லப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்களும் அவற்றுக்கு சேகரிக்கப்பட்ட சாட்சியங்களும் முடிவில் குழுவினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தனியே எழுத்துக்களாக மட்டுமல்லாமல் அதனுள்ளே பல்வேறு பாரதூரமான விடயங்களையும் தாங்கிநிற்கின்றது.

ஊடகங்கள் சில அமைச்சர்கள் தொடர்பில் வெளியிட்ட செய்திகளும் வெளியிடப்பட்ட பாணியும் பார்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அமைச்சர்களும் குறைந்தது பத்து மில்லியன் ரூபாய் என்றாலும் கையாடியிருப்பார்கள் என்று எண்ணவைத்திருந்தன. ஆனால் ஒரு ரூபாய் கூட அவர்கள் மோசடி செய்திருக்கிறார்கள் என்பதை அறிக்கையின் ஒரு வரியிலும் தரிசிக்க முடியவில்லை.

கணக்காய்வாளர்கள் எவரும் சாட்சிக்கு அழைக்கப்பட்டதாகவோ, அவர்கள் குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ததையோ குறிப்பிடவில்லை.

இதில் இன்னொரு விடயத்தினை மிக முக்கியமாக சுட்டிக்காட்ட முடியும், வடக்கு மாகாணசபை தனியான நிர்வாக அலகாக செயற்பட்டாலும் அதற்கென தனித்தனியான அரச அதிகாரிகள் செயற்பட்டாலும் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற கணக்காய்வாளர்கள் அமைச்சர்களின் நிதிப்பங்கீடுகள் தொடர்பில் ஆய்வு செய்யவோ, முறைப்பாடு செய்யவோ முடியும் என்ற நிலையில் இந்த விசாரணைக்குழு ஏன் அவ்வாறான ஆதாரங்களை சேர்க்கவோ இணைக்கவோ முற்படவில்லை என்ற கேள்வி பெரிதாகவே தெரிகிறது.

பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டபோதிலும் அவற்றுக்கான சரியான சான்றாதாரங்களை சேகரிக்காமலேயே விசாரணை முடிவுகளை அறிவிக்கும் கைங்கரியத்தை விசாரணைக்குழு மேற்கொண்டிருக்கிறது.

விசாரணைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணை முடிவுகள் தொடர்பிலும் விசாரணைக்குழு வெளியிட்டிருக்கின்ற அனைத்து விடயங்களையும் எமது இணையத்தளத்தில் வாசகர்கள் பார்வையிட்டுக்கொள்ளலாம்.

இந்த இடத்தில் முக்கிய விடயத்திற்கு வரலாம்,

விசாரணைக்குழு அறிக்கையால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் இருவருமா அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரா? என்பது தொடர்பில் ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கம்.

தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் பிரதான பாத்திரம் வகிக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. வலுவான ஆரோக்கியமான மாற்று சக்தி எதுவுமே இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் தேர்வுசெய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் குரலாகச் செயற்படுவதாகச் சொல்லி செயற்பட்டும்வருகிறது.

வலுவான மாற்று சக்தி இன்மையால் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தில் இருக்கின்ற ஒரு சிலரே தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற வகையிலும் செயற்பட்டும் வருகின்றனர். உதாணமாக இறுதிப்போரில் நிகழ்ந்த கொரூரங்களில் இருந்து அன்றைய ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் கைங்கரியத்தில் இன்றுவரையில் ஈடுபடும் பணியில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் வலுதீவிரமாகச் செயற்பட்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் இலங்கை அரசில் அங்கம் பெறுகின்ற அரசாங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் தோள்கொடுத்துக் காக்கின்ற பணியில் கூட்டமைப்பு தீவிரம் காட்டி செயற்பட்டே வருகிறது.

இந்த இடத்தில் தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியை கனகச்சிதமாக பயன்படுத்த முற்பட்டது மட்டுமல்லாமல் அதில் வெற்றியும் பெற்றுவருகின்றார்.

நாற்பது ஆண்டுகளால் இனவிடுதலைப்போராட்டத்தில் இரண்டறக் கலந்த எமது தமிழ் மக்கள் இணக்க அரசியல் என்கிற பாதையை என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை சம்பந்தன் மிகத் தெளிவாக புரிந்துகொண்டவர் தான்.. எனவே அரசாங்கத்துடன் இணக்க அரசியலில் கை கோர்த்துள்ள சம்பந்தன் எதிர்பரசியல் மனோ நிலையில் இருக்கின்ற தமிழ் மக்களின் வாக்குவங்கியை கூட்டமைப்பு கைக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதை விரும்பினார்.

சம்பந்தனின் சூட்சுமம் நிறைந்த இந்தத் திட்டத்திற்கு துருப்பாகப் பயன்படுத்தப்படுகிறார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன். தொடக்கத்தில் இருந்த போக்கிற்கும் பின்னாளில் ஏற்பட்ட மாறுதலுக்கும் ஒரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தன் எதிர்ப்புக் காட்டவோ, முதல்வரைக் கட்டுப்படுத்தவோ முற்படவில்லை என்பது பகிரங்கமான விடயம். இந்த இடத்தில் தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கூட்டமைப்பினர் கடுமையான எதிர் நிலைப்பாட்டினை எடுத்த நிலையிலும் சம்பந்தன் மட்டும் முதல்வருக்கு பச்சைக் கொடி காட்டியிருந்ததன் உள்நோக்கத்தினை இப்போது வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும்.

பின்நோக்கிச் சென்று பார்த்தால்,

முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் சில இடங்களில் ஈழவிடுதலைப்போராட்டப் பாதை தொடர்பில் முன்வைத்த எதிர் நிலைக் கருத்துக்கள் சமூகத்தில் பலத்த எதிர்ப்புக்களைச் சம்பாதிக்கத் தொடங்கின.

இவ்வாறான நிலைப்பாடு தொடர்ந்த நிலையில், தன்னுடைய போக்கில் சடுதியான மாற்றத்தை வெளிக்காட்டியதுடன், அதனை பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் தவறவில்லை. அப்போது தொடக்கம் அவர் தமிழ் மக்களின் குரலாகச் செயற்படத் தொடங்கினார். இன்றுவரையில் அவருடைய பயணம் இடையறாது தொடர்கிறது.

சம்பந்தனின் எண்ணப்பாட்டின் அடிப்படையில் அறிந்தோ அறியாமலோ விக்னேஸ்வரன் முன்னெடுத்துச் செல்லும் எதிர்ப்பரசியல் பாதை எல்லை மீறிச் செல்லக்கூடாது என்பதில் சம்பந்தன் மிகத் தெளிவாக நடந்துகொள்கிறார் என்பதை புரிந்துகொள்வதற்கு பல சம்பவங்களை குறிப்பிடமுடியும்.

அதற்கான பணியினை சம்பந்தனின் பிரத்தியேக செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் காத்திரமாக முன்னெடுத்துவருகிறார்.

வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு நெருக்கடி தரும் விடயங்களை ஏற்படுத்துவது, மிக நெருக்கடி ஏற்படுவதாக தோற்றம் காணப்படும் சந்தர்ப்பங்களில் சம்பந்தன் தலையிட்டு விக்னேஸ்வரனுக்கு சாதகமாக நடந்துகொள்வது போன்று முடிவுகளை அறிவிப்பார். இதன் மூலம் விக்னேஸ்வரன் எப்போதும் சம்பந்தனின் அன்புக்குரியவராக தான் இருப்பதாகவே எண்ணிக்கொள்ளலாம்.

ஆனாலும் முருங்கை மரமும் வேதாளமும் என்பதாக சுமந்திரனின் ஆணைக்கு தலைசாய்த்து செயற்படும் மாகாணசபை உறுப்பினர்கள் குழு மட்டும் சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம் முதலமைச்சரை நெருக்கடிக்கு ஆளாக்கும் முயற்சிகளை கைவிட்டதே கிடையாது. முதலமைச்சரை நெருக்கடிக்குள் தள்ளும் தொடர் நடவடிக்கைகளை குறித்த குழு மேற்கொண்டு வந்தது.

இதன் ஒரு கட்டம் தான் முதலமைச்சருக்கு விசுவாசமாகத் தெரியும் அமைச்சர்களை ஓரங்கட்டுவது அல்லது அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது.

இதே குழுவினால் அமைச்சர்கள் மீது தொடர்ந்தும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து அதற்கு முடிவுகட்ட முற்பட்டு இன்று பாரிய இக்கட்டுக்குள் சிக்கியிருக்கிறார் வடக்கு முதல்வர்.

மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்க குழு ஒன்றை நியமித்தார் முதல்வர். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கானதாய் ஆகிவிட்டது அவருடைய முடிவு.

விசாரணைக்குழு அறிக்கை ஊடகங்களில் கசிந்து, பின்னர் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் எதிர்பாராத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதுதான் இந்தப் பத்தியின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படவேண்டியது.

வழமையாக முதல்வருக்கு எதிராகவும் அவருக்கு ஆதரவானவர்களுக்கு எதிராகவும் பொங்கி எழுகின்ற சுமந்திரப் புன்னகைகள் இன்று தலைகீழாக தங்கள் நிலைப்பாட்டை எடுத்திருந்தன.

மாகாணசபை சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்தத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டியதில்லை என்ற சாரப்பட கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே மாகாணசபை அமர்வுக்கு முன்பாக மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் தலைமையில் கூடிய கூட்டத்தின் போது, முதலரைமச்சரே பார்த்துக்கொள்ளட்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறார்கள்.

எனவே மிகத் தெளிவான முடிவு ஒன்றை அவர்கள் இந்த இடத்தில் எடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.

அவர்களுடைய பார்வையில்,

இந்த விவகாரம் முதலமைச்சருக்கு மிகுந்த நெருக்கடியைத் தரவல்லது.

தாமே தெரிவு செய்த குழுவினர் வழங்கிய தீர்ப்பினை நிராகரிப்பதா?

அவர்கள் முன்னாள் நீதிபதிகள் உள்ளடங்கியவர்கள் என்பதால் அவர்கள் பரிந்துரையை நிராகரிப்பது முன்னாள் நீதியரசர் என்ற அடிப்படையில் தவறாக அமையாதா?

தீர்ப்பில் திருப்தியில்லை எனத் தெரிவித்து நிராகரித்தால் தனக்கு நெருக்கமானவர்கள் என தோற்றம் காட்டுகின்ற அமைச்சர்களை காப்பாற்றுவதாக மற்றையவர்கள் கருதமாட்டார்களா?

பரிந்துரைக்கு அமைய நடவடிக்கை எடுத்தால், ஏனைய அனைவரும் எதிர் நிலை எடுக்கும் போது அத்தனை பேரையும் எதிர்த்து தன்னுடன் நிற்பவர்களை வெளியில் விட்டால் தனிமரம் ஆகிவிடமாட்டோமா?

இன்னும் ஏராளம் கேள்விகளுக்குள் சிக்கியிருக்கிறார் முதலமைச்சர் என்பதே முக்கியமாகிறது. எனவே மிக மிக நெருக்கடிக்களுக்குள் சிக்கியிருக்கின்ற முதலமைச்சரின் கையறு நிலையினை பயன்படுத்தி அதிலும் ஆதாயம் தேடமுற்பட்டே சுமந்திரனின் வாரிசுகள் தங்கள் போக்கில் மாறுதலை ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பதே வெளிப்படையானது.

வழமையாக சிறிய சிறிய விடயங்களுக்கே பொங்கி எழும் அவர்கள் தற்போது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் காட்டுவதன் உள்நோக்கம் தான் என்ன?

இதனிடையே அண்மைய காலமாக தமிழ் மக்கள் மனங்களில் உயரிய இடத்தினை பெற்றிருக்கின்ற முதலமைச்சர் தெரிவு செய்த விசாரணைக்குழுவினர் எவ்வாறு தவறான முடிவுகளை வழங்குவர் என்ற கேள்வி தவிர்க்கமுடியாதுதான்.. இந்த இடத்தில் தான் முதலமைச்சர் சொன்ன பதிலையே அந்தக் கேள்விக்கான பதிலாக வழங்க முடியும்.

கொழும்பிலிருந்து வந்த எனக்கு இங்கு அனைத்துமே புதியவை தான்.. மக்களுடன் நாளுக்கு நாள் பழகி அறிந்துகொண்டவற்றின் அடிப்படையிலேயே நான் என்னில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கினேன் என்ற சாரப்பட முதலமைச்சர் ஒரு நிகழ்வில் உரையாற்றியிருந்தார்.

இந்த விடயத்தினையே விசாரணைக்குழுவினர் தெரிவிக்கான பதிலாக ஏன் வழங்கக்கூடாது.

விசாரணைக்குழுவினரை முதமைச்சருக்கு பரிந்துரைத்தவர்கள் உள்நோக்கத்துடன் செயற்பட்டிருக்கலாம். அல்லது அவர்கள் தொடர்பிலான பின்னணி தெரிந்திருக்காமல் அவர்கள் தொடர்பில் சரியான விபரங்கள் தெரியாமலேயே முதலமைச்சர் நியமித்திருக்கலாம்.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கருதுகோள்களாகவும் ஆதாரங்கள் அற்றவையாகவும் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் இருந்து அவர்களால் இலகுவில் வெளியில் வந்துவிடமுடியும் என்று வைத்துக்கொண்டாலும் இந்தச் சிக்கல்களில் சிக்கிக்கொண்டிருப்பவர் முதலமைச்சர் தான் என்றால் அதில் மாற்றுக்கருத்து இருப்பதற்கு இடமில்லை.

கடந்த கூட்டத் தொடரின் போது, அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றிய முதல்வர் கருத்துத் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம், ஆனால் இறுதி முடிவை தானே எடுப்பேன் எனத் தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.

ஆக ஒரு தெளிவான உறுதியான முடிவினை அவர் முன்வைக்கத்தான் போகிறார்.. எந்த முடிவும் அரசியல் சூழ்ச்சிகளைக் கடந்ததாய், நீதியின் பக்கம் நிற்பதாய் அமையவேண்டும் என்பதே தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பாகும்.

-தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

http://tamilleader.org/?p=2147
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Athavan CH said:

மருதங்கேணி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலும் அவர் நடந்து கொண்டமையை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

எங்கன்ட "யாழ்கள மருதங்கேணியரை" ஆய்வு கட்டுரை சமர்பிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்..... :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.