Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக அமைப்புக்கள் இன்னும் 'கும்பகர்ணன் படலத்திலேயே' உள்ளன: ச.வி.கிருபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக அமைப்புக்கள் இன்னும் 'கும்பகர்ணன் படலத்திலேயே' உள்ளன: ச.வி.கிருபாகரன்

"அனைத்துலக அமைப்புக்கள் தமக்கு நிதி வழங்குவோரின் கொள்கைகள், வேண்டுகோள்களை பிரதிபலிப்பவையாகவே என்றும் உள்ளன. ஆகையால் அவர்கள் ஒன்றையும் உருப்படியாக செய்பவர்கள் அல்லர்" என்று தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

சுவிசிலிருந்து வெளிவரும் 'நிலவரம்' வார எட்டுக்கு பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் செவ்வி வழங்கியுள்ளார்.

அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழு விவரம்:

கேள்வி: தமிழர் மனித உரிமைகள் மையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன?

பதில்: இலங்கைத் தீவிலிருந்து பிரான்சிற்கு அரசியல் அகதிகளாக வந்த தமிழர்களால், தமிழர் மனித உரிமைகள் மையம் 1990 ஆம் ஆண்டு பிரான்சில் ஆரம்பிக்கப்பட்டது. எமது ஆரம்ப அங்கத்தவர்கள் வடக்கு - கிழக்கை சேர்ந்தவர்கள். சிறிலங்கா அரச படைகளினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை அவ்வேளையில் நிலைமைகளை கண்காணித்து வந்த அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் முழு அளவில் கவனத்தில் எடுக்காத காரணத்தினால் நாம், தமிழர் மனித உரிமை மையத்தை ஆரம்பித்தோம்.

கேள்வி: ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தை எவ்வளவு தூரம் அடைந்திருக்கின்றீர்கள்?

பதில்: இலங்கைதீவில் அரச பயங்கரவாதம் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலையை அடைகின்றது. அத்துடன் கூலிப்படைகள் தமிழ் துரோகக் குழுக்களின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் எமது நாளாந்த வேலைகளை கூட்டிய வண்ணமே உள்ளன.

இந்நிலையில் நாம் எவ்வளவு தூரம் எமது நோக்கத்தை அடைந்தோம் என்பதை கூறுவது கடினம். ஒரு தமிழ் அமைப்பு, சிறப்பாக மனித உரிமை அமைப்பு அனைத்துலக அளவில் வளர்ந்து வருவது என்பது மிக மிக கடினம்.

காரணம், சிங்கள பௌத்த சிறிலங்கா அரசும் அதன் தூதரகங்களும் அதன் கூலிகளும் ஒரு பக்கம். இதற்கு உரம் போடுவது போல் போட்டி போட முடியாத சங்கங்கள், கூட்டமைப்புக்களின் இயலாமையின் அடிப்படையில் உருவாகும் தனிநபர் பொறாமைகள், தொல்லைகள் வேறுபக்கம்.

இந்நிலையில் நாம் 1990 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வெற்றிகரமாக செயற்பட்டு வருவதற்கு, எமது அமைப்பின் அங்கத்தவர்களின் திட்டமிடல், கடும் உழைப்பு, கெட்டித்தனம், விடாமுயற்சி, நேர்மை அத்துடன் அனைத்துலக அளவிலான மனித உரிமை பற்றிய அறிவு போன்றவையே காரணிகளாக அமைகிறது.

இவ்வேளையில் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றோம். உலகில் எந்த தமிழ் கூட்டமைப்புக்கோ, சங்கத்திற்கோ, இல்லாத அனைத்துலக அங்கீகாரத்தை இதுவரையில் நாம் பெற்றுள்ளோம். அதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் பல சிறப்பு அனைத்துலக மாநாடுகள், கூட்டங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துடன் 'தமிழர் மனித உரிமைகள் மையம்' என்ற அரச சார்பற்ற அமைப்பின் அடையாளத்துடன் கலந்து கொண்டுள்ளோம். இந்த அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளில் ஏதாவது ஒன்று எதிர்த்தாலும் பெற முடியாது. ஆகையால் ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் எமது செயற்பாடுகளை அங்கீகரித்துள்ளனர் என்பதே உண்மை.

கேள்வி: இலங்கையில் முக்கியமாக வடக்கு - கிழக்கின் இன்றைய நிலை என்ன?

பதில்: வடக்கு - கிழக்கு வாழ் மக்களின் இன்றைய நிலை மிகவும் பாரிதாபகரமான நிலையாக உள்ளது. பிரித்தானியாவிடமிருந்து இலங்கைதீவு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிங்கள பௌத்த ஆட்சியாளருடைய அரச படைகளினால், தமிழீழ மக்கள் அடையும் துன்பங்கள் விபரிக்க முடியாதவை.

கைது, சித்திரவதை, பாலியல் வன்முறை, காணாமல் போதல், கொலை, கொள்ளை, சொத்துக்கள் பறிப்பு இழப்பு, நில இழப்பு, பொருளாதார தடை, இடப்பெயர்வு என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அத்துடன் நான் ஏற்கனவே கூறியது போன்று, சுயநலவாதிகளான சிங்கள அரசின் தமிழ் கூலிப்படைகளும் துரோகக் குழுக்களின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் வடக்கு - கிழக்கு வாழ் மக்களை இன்னும் மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.

கேள்வி: இலங்கையில் விடுதலைப் புலிகள்தான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக சிறிலங்கா அரசு செய்யும் பிரசாரத்தை தானே வெளிநாடுகள் நம்புகின்றன. இது பற்றி என்ன கூறுகிறீன்றீர்கள்?

பதில்: ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் பெரும்பான்மையான மேற்கு ஐரோப்பிய நாடுகளும், இன்னும் சில உண்மையான ஜனநாயக நாடுகள் தவிர்ந்த மற்றைய சகல நாடுகளும் மனித உரிமை மீறல்களில் மிகவும் மோசமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த அடிப்படையில், உலகில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு இடையில் நிலவும் ஒற்றுமை இதற்கு ஒரு காரணமாகவுள்ளது. இதை விட உலகில் மிகவும் பலம் பொருந்திய நாடு என்று கூறும் போது, தற்போது ஒரு நாடு தான் உள்ளது. இப்படியான பலம் உள்ளவருடனான சிறிலங்காவினுடைய நட்பும் இன்னுமொரு காரணமாக அமைகிறது. அந்த நாட்டுடன் ஒத்துப் போகும் நாடுகள் எல்லாம் எதையும் செய்யலாம் என்ற நியதியில் உலகம் இன்று உள்ளது.

கேள்வி: கொழும்பிலும் வடக்கு - கிழக்கிலும் நடைபெறும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள் போன்ற மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு வழி இல்லையா? இதற்கு மனித உரிமைகள் மையத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் நீங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?

பதில்: கொழும்பிலும் வடக்கு - கிழக்கிலும் நடைபெறும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள் விடயத்தில் நாம் தினமும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இவற்றை தடுத்து நிறுத்துவது என்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தின் கையில் தான் உள்ளது. இவர்கள் தான் அரச படைகளையும் தமிழ் கூலிப்படைகளையும் துரோகக் குழுக்களையும் ஏவிவிட்டு இவற்றை செய்விக்கின்றனர்.

தமிழ் கூலிப்படைகளும் பணத்திற்காக மார் அடிக்கும் குழுக்கள். ஆகையால், தமது இனம் சொந்த பந்தங்கள் என்பதை மறந்து வடக்கு - கிழக்கில் ஆட்கடத்தல்களிலும் படுகொலைகளை செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கேள்வி: மிக மோசமான படுகொலைகள் ஆட்கடத்தல்கள் அச்சுறுத்தல்கள் போன்ற ஆபத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கான வழி என்ன?

பதில்: அனைத்துலக அளவில் சில நாடுகளின் அனுபவங்ளை நோக்கும் போது, வடக்கு - கிழக்கு வாழ் மக்கள், தமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்போர்களின் கைகளை பலப்படுத்துவதன் மூலம், தங்களை பாரிய மனித உரிமை மீறல்களிலிருந்து காப்பாற்ற முடியும் என முன்னைய அனைத்துலக உதாரணங்கள் காட்டுகின்றன.

கேள்வி: அனைத்துலக அமைப்புக்கள் வெறுமனே அறிக்கைகளுடன் நின்று விடுகின்றனரே?

பதில்: அனைத்துலக அமைப்புக்கள் தமக்கு நிதி வழங்குவோரின் கொள்கைகள், வேண்டுகோள்களை பிரதிபலிப்பவையாகவே என்றும் உள்ளன. ஆகையால் இவர்கள் ஒன்றையும் உருப்படியாக செய்பவர்கள் அல்லர். இவர்கள் இன்னும் 'கும்பகர்ணன் படலத்திலேயே' உள்ளனர்.

கேள்வி: இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: இதுவரையில் இல்லை. தற்போது ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில், சிறிலங்கா மீது அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் நான்காவது கூட்டத்தொடரில் ஏதும் நடக்கலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒன்றை மட்டும் நாம் இங்கு மறக்கக்கூடாது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் செல்வாக்கு சிறுபான்மையாகவே இருந்து வருகிறது.

கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியாக ராதிகா குமாரசாமி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது இலங்கைக்கு சாதகமான விடயம் என்றும் அவர் சிறிலங்கா அரசு செய்யும் மனித உரிமை மீறல்களை திட்டமிட்டு மூடிமறைத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறதே?

பதில்: இது முழுக்க உண்மையான விடயம். ராதிகா குமாரசாமியை பொறுத்த வரையில் இவர் மிக நீண்டகாலமாக தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எதிரானவராக தன்னை வெளிப்படையாக இனம் காட்டி வருகிறார்.

ராதிகாவைப் பொறுத்தவரையில் தான் ஒரு இலங்கையின் குடிமகன் எனவும் தமிழ் மக்களின் பிரச்சனை இலங்கையின் இறையாண்மைக்குள் தான் தீர்க்கப்படவேண்டும் என்ற கொள்கையை கொண்டவர். சிங்கள பௌத்த அரசின் உதவி இல்லாது, தான் எந்தவித அனைத்துலக பதவிகளையும் அடைய முடியாது என்பதை ராதிகா குமாரசாமி நன்கு உணர்ந்து செயற்பட்டு வருகின்றார். அவர் இலங்கையில் இருந்த காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தார்.

கேள்வி: மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக ராதிகா குமாரசாமி இருந்த காலத்தில்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் இடம்பெற்றன. இவற்றை எல்லாம் அவர் மூடிமறைத்து விட்டார் என குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் சிறுவர் விவகாரத்திற்கு நியமித்திருக்கிறதே. அத்தோடு சிறிலங்கா அரசாங்கம் சிறார்களை படைக்குச் சேர்த்துக்கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இன்றைய நிலையில் சிறிலங்கா அரசுக்கு துணைபோகும் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபை சிறார் விவகாரத்திற்கு பொறுப்பாக நியமித்திருக்கிறதே இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: சிறிலங்காவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக விளங்கிய ராதிகா குமாரசாமி, ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் விவகாரத்திற்கு நியமிக்கப்பட்டதும் இரு வேறுபட்ட விடயங்கள்.

இவ்விடயமாக எமது அமைப்பு நீண்ட ஓர் பத்திரிகை அறிக்கையை கடந்த ஆண்டு யூலை 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை சிறார் விவகாரத்திற்கு பொறுப்பாக ராதிகா குமாரசாமி நியமிக்கப்பட்டதன் பின்னணியில் சிறிலங்கா அரசு மட்டுமல்ல, ஓர் உலக வல்லரசும் உள்ளது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை.

பெண்கள் மீதான வன்முறைக்கு பொறுப்பாக இவர் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்த காலத்தில் கூட, வடக்கு - கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. அத்துடன் மிக நீண்ட காலமாக தமிழீழத்தில், போரினால் பாதிக்கப்பட் சிறார்களை பற்றி எந்த அக்கறையும் காட்டாது மௌனமாக இருந்துவிட்டு இப்போது தமிழ் சிறார்கள் பற்றி 'முதலைக் கண்ணீர்' விடுவது மிக வியப்பானது. ராதிகா குமாரசாமியின் தற்போதைய வேலைத் திட்டங்கள் யாவும் அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் 'மனித உரிமை கண்காணிப்பு' எனக் கூறப்படும் அமைப்பின் பின்னணியில் உள்ளது.

கேள்வி: இலங்கை தமிழர்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அமைப்புக்கள் பாராமுகமாக இருப்பதாக தமிழ் மக்கள் ஆதங்கப்படுகிறார்களே அது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: உலகில் அண்மைக் காலங்களில் வெற்றியடைந்த விடுதலைப் போராட்டங்கள் போன்று, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை உரிமை மறுக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்காக உதவிக்கரம் நீட்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுகள் முன்னைய காலங்களில், எப்போதும் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு சார்பாகவே அமைந்துள்ளன. இதில் பாலஸ்தீன மக்களும், மேற்கு சகாரா மக்களான 'சாகாரவி' மக்களின் நிலைமைகள் வேறுபட்டுள்ளன. ஆனால் இவைகளும் இன்னும் இறுதிக்கட்டத்தை அடையாத போராட்டங்களவே உள்ளன என்பதை நாம் மறக்கக்கூடாது. தமிழர் பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடும் காலம் வந்துவிட்டது.

கேள்வி: உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: இனிமேலும் சிறிலங்காவின் சிங்கள பௌத்த அரசாங்கங்களின் தயவில் வடக்கு - கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் வாழ்வது என்பது நிச்சயம் முடியாத காரியம். இதை உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் பலர் உணர்கின்றனர், சிலர் உணர தொடங்குகின்றனர். சிலர் தமது சுயநலங்களுக்காக உணர மறுக்கின்றனர்.

இந்நிலையில் வடக்கு - கிழக்கு வாழ் மக்களுக்கான சமூக பொருளாதார வாழ்வை பலப்படுத்த வேண்டும். அதற்கான வேலை திட்டங்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும். எதிர்வரும் தமிழீழ சந்ததியினர் எம்மை குறை சொல்லாதவாறு, நாம் எமது தாயக பூமியை கடும் உழைப்பு, விடமுயற்சி, நேர்மையான வேலைத்திட்டங்கள் மூலம் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

-புதினம்

அவை 30 வருசமாக அப்படித்தான் இருக்கினம். குமுதினிப்படகில் தொடங்கிய கொலை இன்னும் நிக்கவில்லை. யார் கேட்கினம்.

உலகமே பம்மாத்து தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.