Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுளின் நகரம் – காசி

Featured Replies

asthi-visarjan-in-kashi-1000x520.jpg

 

எப்போதும்போல பயணம் செய்யப் போகும் இடத்தின் பேரை வீட்டிலோ நண்பர்களிடமோ பகிரும்போது ஒரே பதில் தான் எப்போதும் கிடைக்கும். அது, “ஏன்டா இப்புடி தேவை இல்லாம சுத்துற!.” என்பதே. ஆனால் முதல் முறையாக இத்தனை வித்தியாசமான பதில்கள் கிடைத்தது எனக்கே வியப்பாகத்தான் இருந்தது. நீ அங்க போவணு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரம் போவணு தெரியாது, அங்க போற வயசாடா இது!, எதுவும் லவ் பெய்லியரா தம்பி, திரும்பி வருவியா? இவ்ளோ கேள்விகளைக்  கேட்க வைத்த அந்த ஊரின் பெயர்.. ‘’காசி’’. அப்படி என்னதான் அங்கு இருக்கிறது என்ற ஆவல் அதிகரிக்க நானும் நண்பன் பிரபாகரனும் கிளம்பினோம். (அலுவலகத்தில் தனக்கு திருமண நிச்சயம் என்று 10 நாட்கள் விடுப்பு எடுத்து வந்தான் உயிர்த்தோழன், நமக்கு அந்த கவலைதான் இல்லையே)

asthi-visarjan-in-kashi-701x561.jpg

படம் – asthivisarjan.com

மதியம் 3.30க்குத்தானே இரயில், என்று பொறுமையாக கிளம்பியவனை மழை வச்சு செய்தது. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் வண்டியை துரத்திப்  பிடித்து அன்ரிசர்வில் ஏறும் போது, பாரம் தாங்காமல் தோல்பையின் ஒரு பக்கம் அருந்தது. ஒருவேளை இதெல்லாம் சிவனின் திருவிளையாடலோ என்று நண்பனைப்  பார்க்க, அதிகத்  துணிகளை தூக்கி வந்ததும், தாமதமாக கிளம்பிய உன் சோம்பேறித்தனமும்தான் காரணம் என்று கழுவி ஊற்றினான். (குறிப்பு: அவனுக்கு ஹிந்தி தோடா  தோடா மாலும். எனக்கு, அதுவா அது பண்டிகை காலத்துல கோவிலுக்கு வெளிய வச்சு விப்பாங்கனு வடிவேல் சொல்லுவாரே அவ்ளோதான் வரும்…)

சென்னையில் இருந்து 36 மணிநேர பயணம். வாரணாசிக்கு. எங்களைத்  தவிர எங்களுடன் பயணித்த அனைவரும் ஹிந்திவாலாக்களே, இந்தியன் ரயில்வே உணவு சாப்பிட கூடியதா என்று தெரியவில்லை. ஆனால் விழுங்குவதற்கு மிகவும் கடினமானவை. என் கல்லூரி விடுதி சமையல் தெய்வமாகத்  தெரிந்தது. கூடப் பயணிப்பவர்கள் இரண்டு நாளைக்குமே சப்பாத்தி சுட்டுக்  கொண்டு வந்துள்ளனர். ஒரு வார்த்தைக்கு சாப்டுறீங்களானு கேக்கலையே பாவிங்க. பெரும்பாலும் உண்ண, உறங்க என்று பொழுது போனாலும் இயற்கை காட்சிகள் நம் கண்களைக்  கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

6228672459_03300944f3_b-701x465.jpg

படம் – staticflickr.com

அது மூன்றாம்நாள் காலைப்பொழுது, டேய் கங்கை ஆறுடா! நண்பனின் குரல் என்னை எழுப்பியது. எங்களின் இரயில் மிக மெதுவாக கங்கையின்மேல் கட்டப்பட்ட பாலத்தின்வழியே சில நிமடங்களே சென்றது எனலாம்!. அவ்ளோ பெரிய ஒரு நதியை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை!. இயற்கை எப்போதுமே நம் கற்பனைகளைவிட பிரம்மாண்டமானவை என்பதை உணர்ந்த  தருணம் அதுதான். அடுத்த சிறிது நேரத்தில் காசி வந்தது, ஆனால் ஒரு அறிவு ஜீவி வாரணாசியில்தான் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது என்று சொன்னதைக்  கேட்டு வாரணாசி சென்றோம்.. (ஆனால் மறுபடியும் அங்கிருந்து காசி வந்ததும் அந்த ஜீவனை, தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் அபிசேகம் செய்தோம்)

நீங்கள் புதுவரவு என்பதைத்  தெரிந்ததும் உங்களைக்  கோழி அமுக்குவது போல் அமுக்க ஒரு ஊரே அங்கு இருக்கிறது. தெரிந்த தோட தோட ஹிந்தியை வைத்தே நண்பன் ஷேர்ஆட்டோ பிடித்துக்  காசிக்குப்  போக வழிசெய்தான். காசி போனதும் ஒரு பெரியவரிடம், “குளிக்க இங்கு பாத்ரூம் இருக்கா” என்று கேட்க அவர் என் பின்புறம் கைகளைக்  காட்டி நக்கலாய் ஏதோ சொன்னார். அது என்னவென்று நண்பனைக்  கேட்க,  உலகமே இதுல தலை முழுகுனா பாவம் போகும்னு நெனைக்கிற கங்கையைப்  பின்னாடி வச்சுகிட்டு பாத்ரூம் கேக்கறீங்களேன்னு சொன்னாராம். ஆம்  சில அடி தூரத்தில்தான்  அந்த மாபெரும் கங்கை நதி ஓடிக்கொண்ருடிந்தது.

1920-img_8620-mr-701x394.jpg

படம் – news.bbcimg.co.uk

‘ஏன்டா! அப்ப ஒனக்கு எவ்ளோ திமிர். அப்டின்னு தானே கேக்கறீங்க?’ சத்தியமா அந்தத்  தண்ணி அவ்ளோ குப்பைகள் நிறைந்திருந்தது. மொத்த ஊரின் கழிவுகளையும் சுமக்கும் இடமாக கங்கை அங்கு இருந்தது. அடிமனதில்  “அடப் பாவிங்களா! இதுவும் எங்க ஊர் கூவம் மாதிரி  ஆகிவிடக் கூடாது” என்று நினைத்துக்கொண்டே முதல் முழுக்கு போட்டேன். அருகில் பிரபா இதுவரை அடித்த பியரை கூட இனி தொடுவதில்லை என்று முங்கிக்கொண்டிருந்தான். அங்கிருந்து நதியின் வழியே கோவிலை அடைவதுதான் எளிது ஆனால் வழக்கம் போல் நம்மை கவுக்க கூட்டம் தயாராக இருக்கும்! இங்கேயும்  நண்பன் தயவால் 50 ரூபாய்க்கே படகில் போனோம். அவர்கள் எங்களிடம் ஆரம்பத்தில் கேட்டது 600 ரூபாய் மக்களே! மொத்தம் 82 படித்துறைகள் அங்கு உள்ளனவாம், அதில் ‘’அஷ்வமேத’’ என்ற படித்துறையின் அருகில்தான் கோவில் உள்ளதாக படகோட்டி கூறினார்.

அது தவிர்த்து மணிகர்னிக்கா மற்றும் ஹரிச்சந்திரா படித்துறைதான் மிக முக்கிய படித்துறைகள் என்றார். காரணம் அங்குதான் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. போகும் வழியில் அதையும் பார்த்தோம். ஒரு வழியாக கோவில் போன ஒருவரைப்  பின்தொடர்ந்து கோவிலை நெருங்கிய போது கைபேசி, துணிப்பை என்று எதுவும் கோவிலில் அனுமதி இல்லை, இங்கு கடையில் வைத்து விட்டுச் செல்லுங்கள்  என்றனர். “ஏதும் பணம் அதற்குக்  கொடுக்க வேண்டுமா?” என்றோம், அதெல்லாம் தேவை இல்லை பூசை சாமான் மட்டும் வாங்கிச்  செல்லுங்கள் என்றனர். இவ்ளோ நல்ல மக்களை சந்தித்து எவ்ளோ நாள் ஆச்சு என்று நினைக்கும் போதே, நம்ம ஊர் பூசைத்  தட்டை விடக்  கொஞ்சம் பெரிய தட்டை கையில் வைத்து 501 குடுங்கள் என்றார்கள்!. (பாவிங்களா காசிக்கு ரயில் டிக்கெட்டே 700 ரூபாய்தாண்டா!)

Kashi03-701x526.jpg

படம் – pilgrimaide.com

அதுக்குப்  படித்துறையிலேயே பையை வைக்கலாம்போல என்று கோவிலுக்குச்  செல்லாமல் படித்துறையை நோக்கி நடந்தோம். சிறிது நேரம்ப டித்துறையிலேயே  இருவரும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு வெளிநாட்டுகாரர் ஒரு படகோட்டியைத்  திட்டிவிட்டுப்  போனார். அவரைப்  பார்த்துச்  சிரிக்க, எங்கள் அருகில் வந்து அமர்ந்து படகு சவாரி வருகிறீர்களா? என்றார். நாங்கள் வேண்டாம் என்று மறுத்து, ஏன் அந்த வெளிநாட்டுக்காரர் கோபப்பட்டார்? என்று கேட்டோம். வந்ததில் இருந்து தொல்லை செய்கிறோம் என்றும் அதிக அளவு பணம் வாங்கி ஏமாற்றுகிறோம் என்றும் எல்லா படகோட்டிகளையும் திட்டுவதாக ஆங்கிலத்தில் சொன்னார். எப்படி இவ்ளோ நல்லா  ஆங்கிலம் பேசுகிறீர்கள் என்றதற்கு , பேசினால்தானே சோறு சாப்பிட முடியும். நான் பள்ளிக்கூடம் போனதே இல்லை 10 வயதில் இங்கு வந்தேன் எப்படி என் ஆங்கிலம் என்று சிரித்தார். தல இந்த ஆங்கிலம் கத்துக்க நான் MBA வரை படிக்கவேண்டியதாப்போச்சு. என்ன விட நல்லா பேசுறீங்க என்றேன். பலமாகச்  சிரித்துவிட்டு அவரின் அப்பா, தாத்தாவும் இங்குதான் படகு ஓட்டுகிறார்கள் என்று அவர்களைக் காட்டினார். நமக்கு வரலாறு சொல்ல ஆள் கிடைத்தாகி விட்டது என்று நானும் பிரபாவும் குஷி ஆனோம்.

வாரண், ஆசி என்ற இரண்டு ஆறுகளும் இந்த இடத்தில் கங்கையில் கலப்பதால் இந்த ஊரை வாரணாசி என்று சொல்றாங்க. ஆனால் (வாரணாசி, காசி என்று இரண்டு நிறுத்தங்கள் உள்ளன இப்போது) இத பனாரஸ், காசினும் சொல்வாங்க என்றார். 3000 வருசத்துக்கு மேல இந்த ஊர் இருக்குனு சொல்வாங்க. (கி.மு 900 முன்பே காசி இருந்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன) இங்க இருக்கற  சிவன் கோவில் ரொம்பவெல்லாம்  பழசு கிடையாது. பழைய கோவில் முகலாயர்களின்   படையெடுப்புல தரை மட்டம் ஆகியிருச்சு. இப்ப இருக்கற  கோவில் எப்ப கட்டினதுனு சரியாய்த்  தெரியல . (இப்போ இருக்கும் கோவில் கி.பி 1800க்குப்  பிற்பாடு கட்டப்பட்டதே)

telangana-pushkaralu-701x467.jpg

படம் – blogspot.com

அப்போ அங்க இருந்த சிவலிங்கத்தைக்  காப்பாற்ற  அங்கு இருந்த ஒரு பெரியவர் அந்த லிங்கத்தோட பக்கத்துல இருந்த கிணற்றில் விழுந்துட்டாராம். பிறகு அந்த லிங்கத்தை யாரும் எடுக்கவே இல்லை. இப்போவும் அந்த கிணறுக்கு பூசைலாம் நடக்குதுன்னு சொன்னதும் கிணற்றை பார்க்க ஆசை வந்தது . (காரணம் முகலாயர்கள் மட்டும் அல்ல சமண சைவ சண்டைல்  பெரிய கோவில்களெல்லாம் அழிக்கப்பட்டபோது  அங்கிருந்த  மூலவர் சிலைகள் சிறிய கோவில்களிலோ பாதாள அறையிலையோ பாதுகாக்கபட்டதாகவும், அதில் பாதி சிலைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் படித்த ஞாபகம்)

‘சரி அப்படி  என்ன இங்க இருக்கற  கங்கைல சிறப்புனு இவளோ பேர் இங்க வந்து தெவசம் பண்றாங்க?’  என்று நான் கேக்க நெனச்சேன் நண்பன் பிரபா கேட்டுவிட்டான். பெரியவர் தொடர்ந்தார், பகரீதன் என்னும் அரசன் தன் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்க தேவலோகத்தில் ஓடுன கங்கையை நோக்கிப்  பலநூறு வருசம் தவம் பண்ண, வந்த கங்கை நான் நேரடியா பூமிக்கு வந்தா பூமி தாங்காது, என்னைத் தடுத்து அனுப்ப சிவனை நோக்கி தவம் பண்ணுனு சொல்ல, மறுபடியும் சிவனை நோக்கி தவம் பண்ணி சிவனை அழைத்தார் பகரீதன்.

9656a90a0907eb6a9d93ce7ceb5f8da7-ganga-l

படம் – pinimg.com

சிவனும் தன் சடைமுடியால் கங்கையின் வேகத்தைக்  குறைத்து பூமிக்கு அனுப்ப, தன் முன்னோர்களின் சாம்பல் இருந்த பகுதிகளின் வழியே கங்கையை அனுப்பி அவர்களுக்கு முக்தியை கொடுக்கிறான் பகரீதன். இதனால்தான் இங்கு தங்களின் கும்பத்தாரின் அஸ்தியைக்  கரைத்து அவர்களுக்கு முக்தி அளிக்கிறார்கள் அதுமட்டும் இல்லை நிறைய வயதானவர்கள் வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் வந்து இங்கு தங்கி இங்கேயே தங்கள் உயிர் பிரிவதை புண்ணியமாகக்  கருதுகிறார்கள். அதற்கு இங்கு நிறைய மடங்கள் உள்ளன என்றார். சாவை எதிர்நோக்கி ஒரு காத்திருப்பு அதுவும் இறைவன் அருளோடு என்ற அந்த சிந்தனையே புதிதாகப்பட்டது. இங்கு இருக்கும் ப்ரோகிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள், பூசை முடிந்ததும் பணம், நகை என்று பிடு ங்கிய கதை இங்கு நிறைய உள்ளது. வீடு, நிலம் எல்லாம் எழுதிக்கொடுத்தவன் எல்லாம் உண்டு எல்லாம் புண்ணியத்துக்கு என்று அவர் சொன்னதும் தலையே சுத்துச்சு. ஆமா இந்த அஹோரிங்க பத்தி….

காசி இரவுக்கான நகரம் என்று கூறுவார்கள் அது எந்த அளவு உண்மை என்று தொடர்ச்சியில் பார்க்கலாம்..

https://roar.media/tamil/travel/kashi-the-city-of-god/

 

  • தொடங்கியவர்

அகோரிகளின் நகரமா காசி?

காசிக்கு நீங்கள் எப்பொழுது சென்றாலும், காசி உங்களுக்கு பல புல்லரிக்கும் அனுபவத்தைக்  கொடுக்கும். அதற்கு  நீங்கள் ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம்  இல்லை. அப்படிப்பட்ட அனுபவம் எங்களுக்கும் கிடைத்து. மணி 7 ஆகும்போது போய் ‘’கங்கா ஆர்த்தி’’  பாருங்க கண்டிப்பா உங்களுக்குப்  புடிக்கும்னு படகோட்டி தாத்தா சொல்ல, நானும்  நண்பனும் ‘’கங்கா பூஜா கரானாகே’’ என்று ஹிந்தியில் வழிகேட்டு , ஒரு வழியாய் கங்கா படித்துறைக்குச்  சென்றோம் . நல்ல கூட்டம் பாதிக்குப்  பாதி வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்தான் கையில் ஒரு கேமராவோடு  இருந்தார்கள். அந்த பூஜையை கங்கை ஆற்றின் மீது படகில் இருந்தபடியே பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். இருந்தாலும் நமக்கு அது கட்டுப்படி ஆகாது என்பதால் கூட்டத்தோடு ஐக்கியமாகி நின்றோம் ( இங்கும் 2௦௦ கேக்குறாங்க ,நிக்கிற படகுக்குமாடா ! ).

ganga_varanasi-701x359.jpg

வாரணாசி. pixabay

நான்கு இளம்வயது பூசாரிகள் ஒரே மாதிரி பட்டுடை அணிந்து, அவர்களுக்கென  இருந்த இடத்திற்கு வந்து நின்றார்கள். அவர்களின் முன் பூசை பொருட்கள் இருந்தது . நால்வரும் மண்டியிட்டு கங்கையை வணங்கி அவர்களிடம் இருந்த சங்கை ஒவ்வொன்றாக ஊதினார்கள் . அந்த ஓசை நதிக்கரையின் மறுபுறம் பட்டு எதிரொலித்த அந்த உணர்வு உண்மையில் புல்லரித்துதான் போனது. பின் ஏதோ ஒரு ஹிந்தி சாமி பாடல் ஒளிபரப்பானது , அதற்கு தகுந்த வண்ணம் மந்திரம் ஓதிக்கொண்டே பூசையைத்  துவங்கினார்கள் அப்படியென்றால் அது கடவுள் மந்திரம் செபிக்கும் பாடல்தான் என்று புரிந்து கொண்டோம். அருகில் இருந்த  வெளிநாட்டுக்காரர் எதற்கு இப்படி உடல் அசைவுடன் கூடிய ஒரு வழிபாடு என்று அவரின் வழிகாட்டியிடம் ஆங்கிலத்தில் கேட்க ,நடனத்தின் கடவுளே சிவன் தான் என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த வழிகாட்டி.

901c819fab654b428eca1e151f5d91af15fdd041

கங்கா ஆர்த்தி.  pixabay

முதலில் சாம்பிராணி , மயிலிறகு ,பின் ஒரு மெல்லிய துணி என்று ஒவ்வொரு பொருளைக் கொண்டும் நான்கு புறமும் பூசை செய்ய ஆரம்பித்தார்கள் ,பின் பல அடக்கு தீபத்தைக்  கொண்டு கங்கையைப்  பூசித்தார்கள், ஒவ்வொரு முறையும் பூசை முடிந்த பின்பு  பயன்படுத்திய  அந்த பொருளை நீர் விட்டு சுத்தம் செய்தபின்தான் வைத்தார்கள் .இப்போது அனைவரும் உற்சாகமாக  “ஹர ஹர மஹா தேவா” என்று ஒற்றை குரலில் சொல்ல நாக வடிவிலான  தீபத்தால் பூசை செய்தார்கள் ,அவர்கள் நெருப்புடன் ஒரே நேர் கோட்டில் நின்று, பின் குனித்து, சுற்றி என செய்த அனைத்தும் பக்தியைத்  தாண்டி ரசிக்கும்படியும் இருந்தது .நெருப்பு கையில் இருந்தும் இசைக்கு தகுந்தாற்போல் நான்கு புறமும் அதை அவர்கள் கையாண்ட விதமும் சுத்தி இருக்கும் பக்தர்களின் ஒற்றை கோஷமும் என அந்த இடம் தரும் அனுபவம் முற்றிலும் புதிதுதான்.பூசை முடிந்ததும்  அனைவரும் தீபங்களை வாங்கி ஆற்றில் விட ஆரம்பித்தார்கள். வழக்கம்போல் 2௦ரூபாய் தீபத்தை கொடுத்து 20௦ என வெறி ஏத்திக்கொண்டிருந்தனர். பொட்டுவைக்கவோ , சடங்குகளை பின்பற்றவோ வெளிநாட்டவர் எந்த தயக்கமும் காட்டவே இல்லை நண்பன் ஆங்கிலத்தில் ஒரு வெள்ளைக்காரப்  பெண்ணிடம் இதைக்  கேட்டும் விட்டான் ( அடப்பாவி ஆரம்பத்துல இருந்து ,அது என்ன பாத்து சிரிச்சுட்டே இருந்துசு. இவன் பேசிட்டானே என்ற கடுப்பில் நான் அருகில் இருந்தேன் ) கடவுள் எல்லாம் ஒருத்தர்தான், நாமதான் நமக்கு பிடிச்சமாதிரி கும்புடுறோம்னு கண்களை சிமிட்டியபடி சொல்லி பறந்தது அந்த வெளிநாட்டு பறவை .

main-qimg-7f0261f7bce972ad9083c88f6d941b

கங்கா ஆர்த்தி-2. pixabay

இரவு கார்ணிக்கா படித்துறைக்கு (மயானம்) அருகில் இருக்கும் குறைந்த விலை விடுதி ஒன்றில் அறை எடுத்தோம்( வெறும் 4௦௦ ரூபாய்தான்) . அந்த விடுதியை எங்களுக்குக்  காட்டிய நபர் உங்களுக்கும் புகைக்க வேண்டும் என்றால் கீழே வாருங்கள் என்று புன்னகைத்தார். “ஆம் கஞ்சாவே தான், காசியில் இதற்கு அனுமதி உண்டு, பயப்பட வேண்டாம் என்றும் சொன்னார்”. நான் நண்பனைப்  பார்க்க பெரிய கும்புடு போட்டு என்னை அழைத்துச் சென்றான். விடுதி வாசலைத்  தாண்டினால் மயானம், போய்தான் பார்ப்போமே என்று வந்தோம். ஆர்பாட்டமே இல்லாமல் பிணம் ஒன்றை முழுவதும் துணியால் சுற்றிக் கொண்டு வந்தார்கள். நதிக்கரையில் வைத்துதான் எரிக்கிறார்கள் நான்கு பிணம் எரிந்துகொண்டிருந்தது. நண்பன் வழக்கம்போல் போட்டோ எடுக்க ஆரம்பித்தான் .அப்போது ஒரு கை என் தோளைத்  தொடவே, திடுக்கிட்டு திரும்பினேன் , அதே கஞ்சா ஆசாமி நின்றார் புகைத்துக்கொண்டே.

 

Manikarnika-Ghat-701x511.jpg

எரிக்கப்படும் பிணங்கள்

“ஒரு நாளைக்கு எத்தனை பிணம் எரியும்?”என்றேன் .கணக்கு இல்லை என்றார். ஆனால் அதிலும் சில கட்டுப்பாடு இருக்கிறது ,1௦ வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் , அகோரிகள் ,சிவனடியார்களை எரிக்க மாட்டர்களாம் அவர்கள் சிவனின் அங்கமாகப்  பார்க்கிறார்கள். நாங்கள் பேசுவதைக்  கேட்ட எரிக்கும் நபர் “இப்போது இங்கும் மின்மயானம் வந்துவிட்டது, இருந்தும் இந்த நெருப்பு அனைவதே இல்லை” என்றார். ஆண்களின் மார்புப்  பகுதியும், பெண்களின் இடுப்புப்  பகுதியும் நீண்ட நேரம் எரியுமாம். சில நேரம் அதை ஆற்றில் விட்டுவிடுவோம் என்றார் .( இது தெரியாம 2, 3 தடவ குழுச்சுட்டேனே ! ) அது போன்று மேல் சொன்ன சிவ வடிவமாக பார்க்கும் நபர்களையும் அப்படியே ஆற்றில் விட்டுவிடுவார்களாம். இது தவிர்த்து ஹரிசந்த்ரா படித்துறையும் மயானமாக உள்ளது என்றார்.

852fdba99529240dfcfc59a5e75c1287-701x394

கங்கையில் விடப்படும் பிணம்

( ராஜா ஹரிச்சந்திரா இந்த நாட்டை ஆண்ட மன்னன் எனவும், அவரும் விதி வசத்தால் வெட்டியானாக இருந்தார் எனவும், அதனால் அந்த இடத்திற்கு  அவர் பெயர் எனவும் கூறுகிறார்கள். நமக்கு நம்ம ஊர் அரிச்சந்திர மயான காண்டம் நினைவுக்கு வருது..)

“ஆமா அகோரிங்கள எங்க பாக்கலாம்?” என்றேன். பலமாகச்  சிரித்துவிட்டு “அகோரிங்க சாதாரணமாக சாமியார்  மாதிரிதான் சுத்துவாங்க, தங்களை அகோரின்னு காட்டிக்க மாட்டங்க. நாம அவங்கள பின் தொடர்வது பிடிக்காமதான், அவுங்க உடைகள் இல்லாம திருநீற பூசி சுடுகாட்டுல இருக்காங்க. ஆனா நாம அப்படியும் அவுங்கள விடுறது இல்லை”னு சொல்லி மீண்டும் சிரித்தார். “மனுஷ கரி சாப்பிடறது உண்மையா அத பாக்க முடியுமா ?” என்றேன். “இங்க வரவங்கலாம் இப்படித்தான், இங்க இருக்க அகோரி  எல்லாரும் மனித மாமிசம் சாப்டுவாங்கனு நினைக்குறீங்க. ஆனா உண்மை என்னன்னா மிகவும்  கம்மியான அகோரிங்க மட்டும்தான் அப்படிப்  பண்றாங்க அதுவும் ஒரே ஒரு பிரிவு அகோரிங்க மட்டும் தான். ( தங்களை யாரும் அணுகக்  கூடாது என்பதற்காக, இறந்த அந்த நபருக்கு மோட்சம் கொடுக்க என்று பல கதைகள் சொல்லப்படுகிறது.) பெரும்பாலும் கால பைரவரை முதன்மையாகக்  கொண்டு இயங்கும் நாக அகோரிகள்தான் அப்படிச்  சாப்பிடுவது” என்று கூறினார்.

Kumb-Mela-The-Aghori-Way-of-Life.jpg

அகோரி. pixabay

‘சென்ற மாதம் உங்க தமிழ்நாட்டுல இருந்துகூட ஒரு அகோரி வந்தார் ,அவரும் இப்படித்தான் விளக்கம் சொன்னார்’ என்று  நம்ம கஞ்சா ஆசாமி ஆரம்பித்தார். இங்க திடீருன்னு கும்பலா , தனியானு  வருவாங்க நதிக் கரைக்கு அந்த பக்கம் தங்கி நதியில வர பிணத்தை வச்சோ, சுடுகாட்லயோ பூசை பன்னுவாங்க. ஆனா யாரையும் தொந்தரவு செய்யமாட்டங்க என்றார். ‘நண்பா போடோஸ்லாம் செம ! ஒரு வாரத்துக்கு பேஸ்புக் செத்துச்சு’ என்று வந்தான் பிரபா. திரும்பினால் கஞ்சாஆசாமியோ, எரிகாட்டில் இருந்த நபரோ யாரும் இல்லை. அங்கு பிணம் மட்டும்  தீ சுவாலையில் எரிந்துகொண்டிருந்தது. வந்தவங்க அகோரியா  இருக்குமோ? என்று யோசிக்கும்போது, “அறையில் பைகளை வைத்துவிட்டு நாளை காலையாவது சாமியைப்  பார்க்கவேண்டும் வா!” என்று .அறைக்கு இழுத்துச்  சென்றான் நண்பன். என் கண்கள் அவர்களையே தேடியது.

காலை ,கோவிலை நோக்கிச்  சென்றோம் .வழியெல்லாம் ஒரே  லஸ்ஸி கடைகள் தான் ,வித விதமான லஸ்ஸிகள். 1௦ ரூபாயில் இருந்து 1௦௦ ரூபாய் வரை இருந்தது .கண்டிப்பாகப் பருகலாம், மிகச் சிறந்த ருசி. மிகக்  குறுகிய பாதையின்  வழியாக கோவிலுக்குச்  சென்றோம் .பெண்களை சோதிக்க பெண் போலீஸ் இருந்தாலும் தனி வரிசையோ தனி இடமோ இல்லை அவர்கள் பெண்களைச்  சோதிப்பதை பார்க்கும்போது அத்தனை கோபம் வந்தது. மிகச் சிறிய கோவிலாகத்தான் இருந்தது ( தொடர் படையெடுப்பில் அழிந்துவிட்டது அல்லவா) அங்கேயும் தனி பூசைகள் செய்ய பூசாரிகள் வரிசையாக உள்ளனர் . மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்தில் இருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார்.லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத்  தகடு உள்ளது. லிங்கத்தின்மேல் ஒரு பாத்திரம் கட்டித்  தொங்க விட்டுள்ளார்கள் .அதிலிருந்து கங்கா தீர்த்தம் சொட்டுச்  சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிசேகம் செய்கிறது. இங்கிருக்கும் லிங்கம் மிகவும் புனிதமான லிங்கமாக கருதப்படுகிறது.

kashi-vishwanath-shivling.jpg

காசி விசுவநாதர். indianmandirs

மோட்சத்தின் கடவுளை அருகில் இருந்து பார்த்தாகி விட்டது என பிரபா சொன்னான் ,அன்பே சிவம் என்று நான் சிரிக்க .அன்று இரவு பஞ்சாப்பில் இருக்கும் பொற்கோவிலை பார்க்க ரயில் புக்கிங் உறதியாகிவிட்டது என்று நண்பன் நினைவூட்ட அறையை நோக்கிச்  சென்றோம். இப்போதும் சொல்லிவைத்தார் போல் பிணம் எங்களுக்கு முன் சென்றது. ஏன்டா நம்ம ஊர்லலாம் பிணம் வீட்டத்  தாண்டி போனா  குடம் நெறைய தண்ணியக்  கொண்டுவந்து வீட்டு வாசல்ல ஊத்துவாங்க . இங்கலாம் என்ன பண்ணுவாங்கடா ! யோசிப்பது போல் முகத்தை வைத்துகொண்டு கேட்டான் பிரபா. மரணத்தை வரவேற்கும் ஊரு பங்காளி இதுவும் கடந்துபோகும்னு போயிருவங்கனு சொல்ல மீண்டும் புகைபடம் எடுக்க ஓடினான் .

இரவு பஞ்சாப்பிற்கு  ரயில் ஏறனும். மீண்டும் 1௦௦௦ கி.மீ பயணம் அங்கு எங்களுக்கு நடக்கபோகும் சில சம்பவங்கள் பற்றி கொஞ்சமும் தெரியாமல் பயணத்திற்கு தயாரானோம். விடுதியின் வாசலை அடைந்ததும் ,அப்போதுதான்  ஒரு பிணத்திற்குக்  கொல்லி வைத்துச்  சத்தமாக சங்கை ஊதிப்  பாடத்  தொடங்கினார்  வெட்டியான். இறப்பு உறுதி என்று தெரிந்தும் ஆடும் மனிதா இறந்த பின்னாவது அமைதிகொள் . ஹர ஹர மஹா தேவ்….

( அவர் ஹிந்தியில் தான் பாடுனாரு மொழிபெயர்ப்பு நம்ம தோடா தோடா ஹிந்தி மாலும் நண்பன் பிரபா)

 

https://roar.media/tamil/travel/kashi-agori/

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் காசியை வாசித்து சுவாசிக்கிறோம்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அலங்கோலங்களையும் சுமக்கின்ற கங்கை...நிச்சயம் பூசிக்கப் படவேண்டியவள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!

 

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் நரகம் என வாசித்து வந்து பார்த்தால் அது உண்மையோ என தோன்றுகிறது..!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.