Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு தமிழக அரசுக்கு உப்பா, சர்க்கரையா?

Featured Replies

உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு தமிழக அரசுக்கு உப்பா, சர்க்கரையா?

தலைமைச் செயலகம்.

தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம் என்பது அரசியல் வட்டாரத்தில் விடைகாண்பதற்கு கடினமான விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

தகுதி நீக்கத்துக்கு உடனடியாகத் தடைவிதிக்க மறுத்த நீதிமன்றம் அதே நேரத்தில், அதை சாதகமாக்கிக்கொண்டு தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடித்துவிடுகிற வாய்ப்பையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு மறுத்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் இடங்கள் காலியாகிவிட்டதாக அறிவிக்கவும்

இரண்டு வார காலத்துக்கு விதிக்கப்பட்டத் தடை அரசியல் நெருக்கடிகளில் சிக்கியுள்ள அரசு மூச்சுவிடுவதற்கு கிடைத்த வாய்ப்பாக சிலர் கருதுகிறார்கள். வேறு சிலரோ எதிரணி எம்.எல்.ஏ.க்களை நினைத்தபடி நீக்கிவிட்டு வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுகிறார்கள்.

பல லட்சம் கட்டணம் வாங்கும் டில்லி வழக்குரைஞர்களை வைத்து அரசியல் கட்சிகள் நடத்திய சட்டமோதலின் முதல் சுற்று யாருக்கும் உறுதியான, விவாதத்துக்கு அப்பாற்பட்ட முன்னிலையைத் தந்துவிடவில்லைதான். ஆனால், அடுத்த சில மாதங்களில் தமிழக அரசியல் எந்த திசையில் பயணிக்கும், மாநில அரசின் ஆயுள் எப்படி இருக்கும் என்று கணிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

ஆதரவாளர்களுடன் உரையாடும் டி.டி.வி. தினகரன்.

தற்காலிக நிம்மதி

இது உண்மையில் தமிழக அரசியலை எப்படி நகர்த்தும் எனக் கேட்டபோது பிபிசிக்குப் பதிலளித்த திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "இது எடப்பாடிப் பழனிச்சாமிக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு நிம்மதியைத் தந்திருக்கும். ஆனால், இது நிரந்தர நிம்மதி அல்ல," என்றார். இதனால், அரசுக்கு நிரந்தர ஸ்திரத்தன்மையெல்லாம் வந்துவிடாது என்கிறார் அவர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை நீதிமன்றம் எடுத்துக்கொள்வது சரியா என்று கேட்டபோது, சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்குவதற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன என்று கூறிய ராதாகிருஷ்ணன் அதேநேரம் "ஆளுமையும், மனப்போக்கும், சட்ட நிபுணத்துவமும் இருந்தால் சபாநாயகர் நீதிமன்ற உத்தரவை மீற முடியும். இதெல்லாம் சபாநாயகர் தனபாலுக்கு இருக்குமா தெரியவில்லை," என்றார்.

முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் கடிதம் அளித்தாலும், சட்டமன்றத்தில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடவில்லை.

இந் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி திமுக உயர்நீதிமன்றத்தை நாடியது.

நீதிமன்ற உத்தரவால் ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் அரசு தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் 18 பேரின் தகுதி நீக்கம், அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்கான ஒரு குறுக்கு வழியை அளித்தது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இடைத் தேர்தலை எதிர்கொள்வது அரசுக்கு எளிதா?

அது வெற்றி பெற்றிருந்தால்கூட அரசு சில மாதங்களில் ஏற்கெனவே காலியாக இருக்கிற ஆர்.கே. நகரையும் சேர்த்து 19 தொகுதிகளில் இடைத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலை வந்திருக்கும். தற்போதுள்ள நிலையல் இந்த 19 என்ற எண்ணிக்கை அரசின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போதுமானது.

அதிமுக அணித் தலைவர்கள்.

தற்போது நிலவும் பொது மன நிலையில், அதிமுக வாக்குகள் பிளவுபட்டுள்ள சூழலில், இத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தலை எதிர்கொள்வது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால், நீதிமன்றம் 18 எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தை திரிசங்கு நிலையில் நிறுத்தியிருக்கிறது. உடனடியாக அவர்கள் தங்கள் பதவியையும் திரும்பப்பெறவும் முடியாது, அதே நேரம் அவர்களது இடத்துக்கான தேர்தலை சந்திக்கும் நெருக்கடியும் அரசுக்கு இருக்காது.

 

இது அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியா இல்லையா என்று மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலனிடம் கருத்துக் கேட்டபோது அவர் "இல்லை" என்றார்.

"நம்பிக்கை வாக்கெடுப்பு கோர நீதிமன்றம் தடைவிதிக்கும் என்பது அரசு எதிர்பார்க்காத ஒன்று. சபாநாயகரின் முடிவில் தலையிடமுடியாது என்று நீதிமன்றம் சொல்லும் என்பதுதான் அவர்கள் நினைத்தது. அதற்கு மாறாக, முதல்முறையாக நீதிமன்றம் இந்த விஷயத்தில் சபாநாயகருக்கும், முதல்வருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது" என்றார் அவர்.

"இந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமில்லாமல் அதிமுக சின்னத்தில் ஜெயித்த அதிமுக சாராத எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஏற்கெனவே அரசுக்கு எதிராக உள்ளனர்; அதிமுக எம்.எல்.ஏ. மதுரை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை விமர்சித்துள்ளார். அவருக்கு மேலும் சில எம்.எல்.ஏ.க்களிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, உடனே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கமுடியாமல் போனது அரசுக்குப் பின்னடைவுதான். இரண்டு மாதத்துக்கு மேல் இந்த அரசு நீடிக்கும் வாய்ப்பு இல்லை," என்று கூறினார்.

அதிமுக பெண்கள்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியான முன்னுதாரணமா என்று அவரிடம் கேட்டபோது, "தவறான நடவடிக்கைகளை எடுக்கும் அரசு, அதை சரிசெய்யாத சபாநாயகர், நடவடிக்கை எடுக்க மறுக்கும் ஆளுநர், இதையெல்லாம் மேலிருந்து ஆட்டிவைக்கும் மத்திய அரசு, இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்க்கும் ரப்பர் ஸ்டாம்பாக குடியரசுத் தலைவர் என்ற நிலை இருக்கும்போது, நீதிமன்றம் தலையிடுவதைத் தவிர வேறு வழியில்லையே," என்றார் அவர்.

அனுபவமின்மை

அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்தால், அவர்கள் பதவியையே சபாநாயகர் பறித்துவிட்டார். அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றால், தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடியும் அரசுக்கு உடனடியாக இல்லாமல் போகிறது என்பது மற்றொரு கருத்து.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுகவின் தினகரன் தரப்பு நீதிமன்றத்தை நாடியது நிச்சயமாக அவர்கள் முன் இருந்த ஒரே சட்டவாய்ப்புதான்.

ஆனால், அதுதான் அவர்கள் முன் இருந்த ஒரே அரசியல் வாய்ப்பா, வேறெப்படி அவர்கள் செயல்பட்டிருக்க முடியும் என்று கேட்டபோது, அவர்கள் தரப்பில் அரசியல் அனுபவமும் சாதுர்யமும் மிக்க தலைவர்கள் இல்லாதால் அவர்களால் சரியான அரசியல் முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விட்டது. கூட்டம் கூட்டுவதும், மேடையில் பேசுவதும் மட்டும் அரசியல் நடத்தப் போதுமானது அல்ல என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

http://www.bbc.com/tamil/india-41346642

  • தொடங்கியவர்

சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பு: தகுதி நீக்க வழக்கின் நிலை என்ன?- ஓர் அலசல்

Supreme%20Court

சட்டப்பேரவை சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை வரும் அக்டோபர் 2-வது வாரம் முதல் விசாரிக்க உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பெண் எம்.எல்.ஏ தொடுத்த வழக்கில் சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு வழக்கை கையிலெடுத்த உச்ச நீதிமன்றம் அக்டோபபர் 2-ம் வாரம் முதல், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து உச்ச நீதிமன்றம் வழக்கை கையிலெடுத்ததால் தமிழகத்தில் நடக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் நிலை என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

இந்தியா முழுதும் மாநில சட்டப்பேரவை தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த வழக்குகள் அவ்வப்போது நீதிமன்ற கதவை தட்டுகின்றன. இதில் வெவ்வேறு வகையான தீர்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

இவற்றில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்குகளே முக்கியத்துவம் பெறுகின்றன. சட்டப்பேரவையில் ஒரு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது ஏற்படும் பிரச்சனையில் சபாநாயகர்கள் எடுக்கும் முடிவு சர்ச்சைக்குள்ளாகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உதவும் வகையில் சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நீதிமன்ற கதவை தட்டும் போது நீதிமன்றம் சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.

நீதித்துறை போன்றே சபாநாயகருக்கும் வானளாவிய அதிகாரம் உள்ளதால் சபாநாயகரின் முடிவில் எந்த அளவுக்கு நீதித்துறை தலையிட முடியும் என்ற குழப்பம் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி ஏற்படுகிறது.

சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளால் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தை அதிகமாக நாடுவது வடகிழக்கு மாநிலங்களாகவே உள்ளன.

தமிழகத்தில் 1988-ம் ஆண்டும், 1994-ம் ஆண்டும் சபாநாயகரின் தீர்ப்பு பிரச்சனையாக மாறியது. அதன் பின்னர் தற்போது 18 எம்.எல்.ஏக்கள் இடை நீக்கம் விவகாரம் நீதிமன்ற முடிவை நோக்கி சென்றுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் , மறுப்பவர் இரண்டு பக்கமும் உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மோதுகின்றனர்.

சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது.

மாநிலத்திற்கு மாநிலம் சபாநாயகர்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு எடியூரப்பா வழக்கில் சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றம் ஏற்கமறுத்து ரத்து செய்தது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சபாநாயகரின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டன. தற்போது 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் கர்நாடக அரசின் தீர்ப்பின் அடிப்படையில் அணுக வேண்டும் என சிலரும், உத்தரகாண்ட் தீர்ப்பின் அடிப்படையில் தான் அணுக வேண்டும் என்று சிலரும் வாதிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஆந்திர எம்.எல்.ஏ ஒருவர், சபாநாயகர் அதிகார வரம்பு குறித்து தொடுத்த வழக்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது.

இந்த வழக்கில் சபாநாயகரின் அதிகாரம் குறித்தும் எந்த அளவுக்கு சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் செல்லலாம் என்பது குறித்தும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.

சபாநாயகர் எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு அவர்களுக்கு பதிலளிக்க கொடுக்கப்படும் கால அவகாசம், அதில் இடைப்பட்ட காலத்தில் முடிவெடுத்தால் விதிமீறல் உள்ளதா போன்ற விவகாரங்களை பற்றி அமர்வு விசாரிக்கும். சபாநாயகர்களின் வானளாவிய அதிகாரங்கள் குறித்தும் கேள்விகள் வைக்கப்பட உள்ளன.

இந்த அமர்வுக்கும் தமிழக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குக்கும் சம்பந்தம் உள்ளதா என கேட்டபோது தகுதி நீக்க வழக்கு தனியாக நடக்கும். இது அரசியல் சாசன அமர்வு விசாரணை மட்டுமே, இதற்கும் தமிழக அரசின் வழக்குக்கும் சம்பந்தமில்லை.

மேலும் உச்ச நீதிமன்ற வழக்கு நடக்கும் காலகட்டத்தில் பழைய முறைகளே நடைமுறையில் இருக்கும். ஆகவே இது தமிழகத்தின் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று டெல்லி உச்ச நீதிமன்ற சட்ட ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் அமர்வு விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கும் பட்சத்தில் அந்த தீர்ப்பின் அடிப்படையில் அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19735082.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.