Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன செய்கிறார்கள் குன்ஹாவும் குமாரசாமியும்?! - ‘ஜட்ஜ்மெண்ட் டே’ செப்டம்பர் 27 #VikatanExclusive

Featured Replies

என்ன செய்கிறார்கள் குன்ஹாவும் குமாரசாமியும்?!  - ‘ஜட்ஜ்மெண்ட் டே’ செப்டம்பர் 27 #VikatanExclusive

 
 

ஜெயலலிதா

‘உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ - 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் சொத்துக் குவிப்பு வழக்கின் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா. ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா. ஜெயலலிதாவைப் போலவே, இந்தத் தீர்ப்பால் அ.தி.மு.க தொண்டர்களும்  நிலைகுலைந்தார்கள். 'காவிரியை வைத்துக்கொள்; அம்மாவை விடுதலை செய்' என்ற முழக்கங்களும் பதவியேற்பில் கதறியழுது கொண்டே அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதும் அடுத்தடுத்த நாள்களில் அரங்கேறின. 

 

அகில இந்திய அளவில் தலைப்புச் செய்தியாக மாறிப் போனார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. 22 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு மக்கள் வெள்ளத்தில் நீந்தியவாறே போயஸ் கார்டனுக்குள் நுழைந்த ஜெயலலிதா, நீண்டநாள்களாக வெளியுலகைப் பார்க்காமல் முடங்கிக் கிடந்தார். கார்டன் கதவுகள் யாருக்காகவும் திறக்கப்படவில்லை. அவரது மனதையும் உடலையும் ஒருசேர பாதித்த நிகழ்வாக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துவிட்டது. தீர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஜெயலலிதாவும் இல்லை. அவர் அரும்பாடுபட்டு வளர்த்த இரட்டை இலையும் இல்லை. கார்டன் ரகசியங்களைப்போல, அவரது மரணமும் மர்மமாகவே முடிந்துவிட்டது. 2014 செப்டம்பர் 27 அன்று வரலாற்றுத் தீர்ப்பு எழுதிய மைக்கேல் டி குன்ஹா, எந்தவித அவசரமும் இல்லாமல் சட்டப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். 

என்ன செய்து கொண்டிருக்கிறார் மைக்கேன் குன்ஹா? 

மைக்கேல் குன்ஹா" கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, தனது சட்டப் பணியை கவனித்துக்கொண்டு வருகிறார் குன்ஹா. அண்மையில், அவருடைய நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட விழாவில், ‘ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா?’ என ஒருவர் கேள்வி எழுப்பியபோது, 'நான் ஓர் அரசாங்க ஊழியன். சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலவேதான் அந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு என்னுடைய பணி முடிந்துவிட்டது. எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்டவில்லை' என இயல்பாகப் பேசியிருக்கிறார். 'இதுதான் குன்ஹாவின் வழக்கம்' என்கிறார்கள் அவருடைய நண்பர்கள். எவ்வளவு பெரிய தீர்ப்பு வழங்கினாலும், அதைப் பற்றி பெருமிதம் கொள்ளாமல் அடுத்த வழக்கை கவனிக்கச் சென்றுவிடுவார். புத்தகம் வாசிக்கும் வழக்கம் உள்ள குன்ஹா, நீதிமன்றப் பணியில் இருந்து ஓய்வுபெற இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. 'ஓய்வுக்குப் பிறகு புத்தகம் எழுதும் முடிவில் இருக்கிறார். அதில், அவரது நீதிமன்ற வாழ்க்கை குறித்த அரிய தகவல்களை விவரிக்க இருக்கிறார்' என்கின்றனர். 

இதே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியில் வர இந்தத் தீர்ப்பு ஒரு காரணமாக அமைந்தது. அதேநேரம், 'குமாரசாமி கால்குலேட்டர்' என விமர்சிக்கும் அளவுக்குக் கெட்ட பெயர் சம்பாதித்தார். கார்டன் சொத்துகளைப் பட்டியலிடுவதில் ஏற்பட்ட 'அரித்மெட்டிக் எர்ரர்' நீதித்துறை வட்டாரத்தை கதிகலக்கியது. 'இது ஒரு மனிதத் தவறு. பொதுவாக நீதியரசர்கள் கூட்டல் கழித்தல் கணக்குகளைக் கவனிக்க மாட்டார்கள். தீர்ப்பு விவரம் சரியாக இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்' என மூத்த வழக்கறிஞர்கள் காரணம் கூறினாலும், 'குமாரசாமி கணக்கு' வரலாற்றில் இடம்பெற்றது. 

குமாரசாமி'இப்போது என்ன செய்கிறார் குமாரசாமி?' என நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தோம். 

“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விடுதலை என தீர்ப்பு வழங்கிய ஓர் ஆண்டிலேயே குமாரசாமி ஓய்வு பெற்றுவிட்டார். பொதுவாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அவரை அரசு சார்ந்த துறைகளின் விசாரணை அதிகாரியாகவோ, தனி அதிகாரியாகவோ அரசு பயன்படுத்திக் கொள்ளும். ஓய்வுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் பணியாற்ற விருப்ப கடிதம் கொடுத்தார் குமாரசாமி. அந்தக் கடிதங்களைக் கிடப்பில் போட்டுவிட்டது கர்நாடக அரசு. அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்திரசேகரை (ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி இவர்) பல்வேறு அரசுத் துறைகளில் பயன்படுத்திக்கொண்டது கர்நாடக அரசு. இதனால் மனம் நொந்து போன குமாரசாமி, மத்திய அரசின் ரயில்வே வாரியத்தின் (Accident claim) பணிக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மீண்டும் கர்நாடக அரசின் அட்மினிஸ்ட்ரேஷன் கிரிமினல் (Criminal Justice Administration) என்ற பதவிக்கும் விண்ணப்பித்தார். இந்தப் பதவியையும் சந்திரசேகருக்கு அளித்துவிட்டு, குமாரசாமியை குப்புறத்தள்ளியது அரசாங்கம். 

 

ஒரே ஒரு தீர்ப்புக்காக ஒருவர் கொண்டாடப்படுகிறார். மற்றவர் நிராகரிக்கப்படுகிறார். ‘நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்' என்ற அர்த்த சாஸ்திர வரிகளை மைக்கேல் டி குன்ஹா நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் போலும்.

http://www.vikatan.com/news/tamilnadu/103452-what-are-the-judges-of-jayalalithaas-case-doing.html

  • தொடங்கியவர்

“நீங்கள் குற்றவாளி!” - ஜெயலலிதாவின் சரிவுக்கு வித்திட்ட நாள் இன்று #3YearsOfJayaVerdict

 
 

ஜெயலலிதா

விறுவிறுப்பான திரில்லர் படத்துக்கு இணையாக 'பர...பர...' காட்சிகளால் நிறைந்திருக்கிறது தமிழக அரசியல் களம். தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியான அ.தி.மு.க-வில் நிலவிவரும் குழப்பங்களும், பிரச்னைகளும் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழப்பங்களுக்கு யார் காரணம்? எப்போது துவங்கியது இந்த குழப்பங்களும், பிரச்னைகளும்? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

 

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர்தான் இந்தப் பிரச்னை பரவலாக எழுந்தது எனச் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழக அரசியல் சூழ்நிலை மாற்றி அமைக்கப்பட்டு, மூன்றாண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது என்பதுதான் உண்மை. மூன்றாண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் (செப்.27) தனது வலிமையான பேனா முனையால் தமிழக அரசியல் சூழலை மாற்றி அமைத்தவர் கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. 

தமிழக முதல்வராக நீதிமன்றத்துக்கு வந்த ஜெயலலிதாவை, 'நான்காண்டு சிறை;  100 கோடி அபராதம்' என முதல்வர் பதவியை பறித்துக்கொண்டு, அப்படியே சிறைக்கு அனுப்பி வைத்தது அந்த தீர்ப்பு. அடுத்த பல ஆண்டு தமிழக அரசியல் சூழ்நிலையை இந்தத் தீர்ப்பு மாற்றி அமைக்கும் என அப்போதே விமர்சிக்கப்பட்டது. அதைத்தான் அண்மைகால நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

குன்ஹா

முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஒருசேர இழந்து சிறைக்குச் சென்றவர், பின்னர் பிணையில் விடுதலையாகி, மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மக்கள் மத்தியில் இந்தத் தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அடுத்து வந்த இடைத்தேர்தலில் வென்று 5-வது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. தொடர்ந்து 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்று, 6-வது முறையாகவும் முதல்வரானார். அசைக்க முடியாத வெற்றிதான் இது. கட்சியிலும், ஆட்சியிலும் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை இது உணர்த்தியது. 

ஆனால், அவரது உடல்நிலையை இந்தத் தீர்ப்பு பாதித்தது. ஜெயலலிதா உடல்நிலை மோசமடைய முக்கியக் காரணம் சர்க்கரை அதிகரிப்பு உள்ளிட்டவை. இவை எல்லாம் டென்ஷன் அதிகரிப்பால் வரும் பிரச்னைகள். 'ஜெயலலிதாவை சமீபகால நிகழ்வுகள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றன. அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்' என்றுதான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சொல்லப்பட்டது. அதில் மிக முக்கியமான டென்ஷன் இந்த சொத்துக்குவிப்பு வழக்கு.

கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனுவின் மீது, இன்னும் 4 வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்ற அறிவிப்புதான் அது. இது ஜெயலலிதாவுக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுத்திருக்கும். குன்ஹாவின் தீர்ப்பால் சிறை சென்ற ஜெயலலிதாவை நிச்சயம் இந்த அறிவிப்பு பாதித்திருக்கும். தீர்ப்பு எப்படி வருமோ என்ற பதைபதைப்பு அவரிடம் இருந்திருக்கும். இது டென்ஷனை அதிகரித்திருக்கக் கூடும் என சொல்லப்பட்டதை சாதாரணமாகக் கடந்து விட முடியாது. ஜெயலலிதா மரணமடைந்த பின்னரும் இந்த தீர்ப்பின் பாதிப்பு இருக்கவே செய்தது.

சசிகலா

ஒற்றைத் தலைமைதான் அ.தி.மு.க-வின் முகம். ஜெயலலிதாவுக்குப் பின்னர் சசிகலா ஒற்றைத்தலைமையை ஏற்று நடத்தும் சூழல் ஏற்பட்டபோது, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வந்தது. குன்ஹாவின் தீர்ப்பை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம். ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க-வுக்கு சரிவராத கூட்டுத்தலைமை உருவானது. அதிகாரத்துக்கான போட்டி உருவானது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், தீபா என பல முனைகளில் அ.தி.மு.க. பிரிந்து நின்றது. இன்றுவரை அ.தி.மு.க-வில் நடக்கும் விறுவிறுப்பான காட்சிகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது சொத்துக்குவிப்பு வழக்கும், அதில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பும்.

ஒருவேளை குன்ஹாவின் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டிருந்தால் இவை எல்லாம் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே பார்க்க வேண்டும். சிறையில் அடைக்கப்படாமல் இருந்திருந்தால், உடல்நிலையை கவனிக்க கொடநாடு சென்று ஓய்வு எடுத்திருந்திருப்பார். மனதளவில் சோர்வும், டென்ஷனும் ஏற்படும்போதெல்லாம் கொடநாடு சென்று உடலையும், மனதையும் சரிப்படுத்திக்கொண்டு வருவதுதான் ஜெயலலிதாவின் வழக்கம். அதை மாற்றி அமைத்தது இந்த வழக்கின் தீர்ப்பு.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் குன்ஹாவின் தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்றே சொல்ல வேண்டும். சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் இந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு வந்தது. ஒருவேளை உச்சநீதிமன்றம் குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்யாமல் இருந்திருந்தால், சசிகலா முதல்வராகி இருக்கக் கூடும். அ.தி.மு.க. ஒற்றைத்தலைமையுடன் இருந்திருக்கக் கூடும்.

இந்தக் குழப்பத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் எப்படியேனும் கால்பதித்துவிட வேண்டும் என முயன்றது பி.ஜே.பி. மறுபுறம் ரஜினிகாந்த் அரசியல் ஆசைகளை வெளிப்படுத்தினார். கமலஹாசன் தனது அரசியல் அறிவிப்பை வெளிப்படையாகவே வெளியிட்டார். இப்படி தமிழக அரசியல் பெரும் பரபரப்பாகவும், குழப்பமாகவும் மாற வித்திட்ட நாள் இன்று.

http://www.vikatan.com/news/coverstory/103441-jayalalithaa-conviction-3-years-of-jaya-verdict.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.