Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி மணி மண்டபம்: அரசின் 'அலட்சியம்' ஏன்?

Featured Replies

சிவாஜி மணி மண்டபம்: அரசின் 'அலட்சியம்' ஏன்?

மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தைத் திறந்துவைக்க தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ செல்லத் திட்டமிடாமல் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைப்பார் என்ற அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினரும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

பராசக்தி படத்தில் சிவாஜி.படத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைAVMPRODUCTIONS Image captionபராசக்தி படத்தில் சிவாஜி.

முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவைத் தொடர்பு கொண்டு பிபிசி கேட்டபோது, அவர் "இது ஒரு வழக்கமான நிகழ்ச்சி. ரூ.2.8 கோடி செலவில், முக்கியமான பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக நான் அதைத் திறக்கிறேன். அம்மா இருந்திருந்தால் அவர் விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்திருப்பார். இப்போது நாங்கள் நேரில் சென்று திறக்கிறோம்," என்றார்.

சசிகலா குடும்பத்தை தொடர்பு படுத்தி...

அரசியல், திரைப்பட விமர்சகரான சுபகுணராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் "சிவாஜி தமிழகத்தின் மிக முக்கியமான திரைப்பட ஆளுமை. எத்தனை காலம் கழித்தாலும் சிவாஜியின் திரைப் பங்களிப்பு நினைவுகூரப்படும். ஆய்வுக்குள்ளாகும். தமிழ்நாட்டின் குறிப்பிட்ட தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் சிவாஜியை தம் குடும்பத்தில் ஒருவராக அடையாளம் கண்டனர். அவர் நடித்த ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு பாத்திரத்தோடு எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர்," என்றார்.

தம்மைப் போன்ற பலருக்கும் அவரது உருவம் தந்தைமையை உருவகப்படுத்தும் உருவம் என்று கூறிய அவர், "பல சிக்கலான காரணங்களால் ஜெயலலிதா சிவாஜிக்கு உரிய மரியாதையைத் தரத் தவறினார். இப்போதுள்ள அரசு, சிவாஜியை சசிகலா குடும்பத்தோடு அடையாளம் காண விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. மற்றபடி அடி நீரோட்டத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. இது உண்மையில் வேதனையாக இருக்கிறது. அவருக்கு மரியாதை செய்திருந்தால் உண்மையில் இவர்களுக்குத்தான் மரியாதை கிடைத்திருக்கும்," என்றார்.

ஆனால், இந்த அரசு அமைத்திருக்கிற மண்டபமும், திறப்பு விழாவும் அவருக்கு மரியாதை செய்வதற்குப் பதிலாக அவமரியாதை செய்யும் விதத்தில் உள்ளன என்றார் சுபகுணராஜன்.

கருணாநிதி தொடர்பு

எழுத்தாளரும், விமர்சகருமான தியோடர் பாஸ்கரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, மண்டபத் திறப்பு விழாவுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லையோ என்ற வாதத்தை அவர் மறுத்தார்.

"ஒரு காலத்தில் முக்கிய நட்சத்திரமாக விளங்குகிறவர்கள் காலப்போக்கில் முக்கியத்துவத்தை இழப்பது இயல்பாக நடக்கத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ஆள்கள் வருவதில்லை, அரசே மாணவர்களை அழைத்துவர வேண்டிய சூழல் இருக்கிறது என்பதைக் காணலாம்" என்றார் அவர்.

அகற்றப்பட்ட சிவாஜி சிலை Image captionஅகற்றப்பட்ட சிவாஜி சிலை.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஆர்வம் காட்டாதது குறித்துக் கேட்டபோது, "சிவாஜியின் ரசிகர்களுக்கென்று அரசியல் வலிமை ஏதுமில்லை. அதுவுமில்லாமல், இவர்கள் சிவாஜியை கருணாநிதியின் ஆதரவாளராகப் பார்க்கிறார்கள்," என்றார் அவர்.

சிவாஜியையும், அவரது குடும்பத்தாரையும் எடப்பாடி தலைமையிலான அரசு சசிகலாவோடு இணைத்துப் பார்ப்பதாகவே பல தரப்பினரும் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்கின்றனர்.

மேடையைப் பகிரத் தயக்கம்

சிவாஜி குடும்பத்தாரோடு ஒரு மேடையைப் பகிர்ந்துகொள்வதை முதல்வரோ, துணை முதல்வரோ விரும்பவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத சிவாஜி ரசிகர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த திமுக ஆட்சியின்போது அவருக்கு சென்னை கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஜெயலிதா முதல்வராக இருந்தபோது சர்ச்சைக்குரிய முறையில் அந்தச் சிலை அகற்றப்பட்டது.

அவருக்கு உரிய முறையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.

சென்னை அடையாறு பகுதியில் 2.8 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபமும் அமைத்தது. அதன் திறப்பு விழா அக்டோபர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த மண்டபத்தை திறப்பார் என்று அந்த அறிவிப்பில் உள்ளது.

http://www.bbc.com/tamil/india-41425469

  • தொடங்கியவர்

சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழா சர்ச்சை... ரஜினி, கமல் கலந்து கொள்வார்களா?

 

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் சிவாஜி கணேசன், கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி மரணமடைந்தார். அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், ‘சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்க வேண்டும்’, என நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்டு, அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் ஆந்திரா மகிளா சபா அருகில் சிவாஜி மணிமண்டபம் கட்டும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இடம் ஒதுக்கி இருப்பதாக 2002-ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. மூன்றாண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை’ பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் அமைக்கும் முதல் முயற்சியாக 2005-ம் ஆண்டு அந்த இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது.

 

பிறகு 2006-ம் ஆண்டு முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்ற உடனேயே சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிவாஜிகணேசனுக்கு வெண்கலை சிலையை அமைத்தார். ஆனால் மணிமண்டபம் அமைக்கும் முயற்சி கிடப்பிலேயே இருந்து வந்தது. 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அப்போது ‘தமிழக அரசே மணிமண்டபம் கட்டித்தர வேண்டும்’ என்று நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக 2015-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி (சிவாஜிகணேசன் நினைவு நாள்) அனைத்து கட்சியினரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

இதையடுத்து சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியை அரசே மேற்கொள்ளும் என ஆகஸ்டு 26-ந்தேதி ஜெயலலிதா அறிவித்தார். அதைத்தொடர்ந்து மணிமண்டபம் அமைக்க அரசு சார்பில் ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தேர்தல் காரணமாக நடைபெறாமல் இருந்த மணிமண்டபம் கட்டும் பணி, கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி முதல் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

சிவாஜி மணிமண்டபம்

இதற்கிடையில், சிவாஜி கணேசனுக்கு கடற்கரை காமராஜர் சாலையில் கருணாநிதி அமைத்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அகற்றப்பட்டது. சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் அப்போது கூறும்போது, ‘மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றி அதனை மணிமண்டபத்தில் வைப்பதை தவிர்த்து, மணிமண்டபத்தில் புதிய சிலையை அமைக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவுப்படி, அந்த சிலை அகற்றப்பட வேண்டும் என்றால், அதை அகற்றி மெரினா கடற்கரையிலேயே காமராஜர் சிலைக்கும், காந்தி சிலைக்கும் இடையில் நிறுவ வேண்டும்’ என்றார். 

இந்த நிலையில் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளையொட்டி மணிமண்டபம் திறந்துவைக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த மணி மண்டபத்தை திறந்துவைப்பார் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. மிகச்சிறந்த கலைஞனின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வராதது பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. 

இந்தநிலையில் செய்தி மற்றும் மிக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு சிவாஜி குடும்பத்தார் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில், “அப்பாவின் நினைவு மண்டபம் என்பது புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவு திட்டம். அம்மா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் அப்பாவின் நினைவு மண்டபத் திறப்பு விழாவை தலைமையேற்று நடத்திவைத்து அவரின் புகழுக்கு பெருமை சேர்த்து இருப்பார். இந்த நிலையில் அப்பாவின் நினைவு மண்டபம் அவரின் பிறந்தநாளான அக்டோபர் 1ம் தேதி திறக்கப்பட உள்ளது என்பதை அறிந்து மகிழ்ந்தோம். ஆனால் அந்த நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் இருவரும் கலந்துகொள்ளவில்லை என்ற செய்தி எங்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. 

அவர் தன் திரைப்படங்களின் மூலம் தமிழ் கலாசாரம், தமிழ்மொழிக்கு மிகப்பெரிய புகழ் சேர்த்தவர். அதனால் தயவுசெய்து இதுபோன்ற சிறிய நிகழ்ச்சியாக நடத்துவது எங்களின் அப்பாவின் புகழுக்கு மரியாதைக்குறைவாக இருக்கும் என கருதுகிறோம். அதனால் தயவுசெய்து தங்களின் முடிவை மறுபரிசீலணை செய்து முதல்வர் மற்றும் மற்ற அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு உயரதிகார்கள் அனைவரும கலந்துகொண்டு மிகப்பெரிய நடிகனின் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டும என்பது எங்களின் தாழ்மையான வேண்டுகோள். இது எங்கள் குடும்பம் மற்றும் நடிகர் திலகத்தின் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோள். உங்களின் நேர்மறையான பதிலை எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். 

சிவாஜி மணிமண்டபம்

அரசை காத்துக்கொள்ள நாளொரு பஞ்சாயத்து, பொழுதொரு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் முதல்வரும், துணை முதல்வரும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க என்ன காரணம் என்று விசாரித்தோம். அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் வெவ்வேறு விஷயங்களை காரணங்களாக சொல்கிறார்கள். முதலில் அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘சசிகலாவின் உறவினரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ளவருமான சுதாகரன், சிவாஜியின் பேத்தியை திருமணம் செய்துள்ளார். இப்போது கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்திருக்கும் சூழலில் சிவாஜியின் சிலை திறப்புக்கு போனால் மத்திய அரசின் எரிச்சலுக்கு ஆளாக வேண்டி இருக்குமோ என ஈபிஎஸ்-ஓபிஎஸ் அஞ்சுகிறார்கள்’ என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். சினிமாவில் விசாரித்தால், ‘அதற்கு காரணம் ரஜினி-கமல்தான். ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதாக பேசிக்கொள்கிறார்கள். கமல் நாளொரு ட்வீட்டாக அரசை வறுத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர்களை தவிர்க்கவே முதல்வர் கலந்துகொள்ளவில்லை’ என்கிறார்கள். 

பிரபல நடிகர், நடிகைகள், சங்கங்களுக்கு மணிமண்டப திறப்புவிழா அழைப்பிதல் சென்றுள்ளதா என்பதை அறிய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரை தொடர்புகொண்டு பேசினோம். இவர் சிவாஜியுடன் ‘தேவர் மகன்’ படததில் நடிக்கும்போது அவராலேயே பாராட்டப்பெற்றவர். ‘'பாய்கூட நடிக்கும்போது பார்த்து நடிக்கணும், இல்லைன்னா நம்மளையே தூக்கி சாப்பிட்டுட்டு போயிடுவான்’ என்று இவரை சிவாஜி புகழ்ந்து பேசியிருக்கிறார். 

“நடிகர் திலகம் சிவாஜி  நடிப்பின் பல்கலைக்கழகம். இந்த தலைமுறை அல்ல, இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் அத்தனை பேருக்கும் நடிப்புக் கலையை கற்றுக் கொடுக்கும் கலை பொக்கிஷம். சிவாஜி மணி மண்டப திறப்பு விழா அதுவும் அவருடைய பிறந்தநாளில் என்றால் அந்தநாள் நடிகர் உலகத்துக்கே திருவிழா. தமிழக அரசு சிவாஜி மணிமண்டப திறப்புவிழாவுக்கு ஏற்பாடு செய்யும் கமிட்டியோடு எங்கள் நடிகர் சங்கத்தையும் இணைந்து பணியாற்ற சொல்லி இருந்தால் நாங்களும் அவர்களோடு இணைந்து திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தும் வேலையில் இறங்கி இருப்போம். சிவாஜி மணிமண்டப திறப்பு விழா அக்டோபர் 1-ம்தேதி நடக்கிறது. இப்போது செப்டம் 28-தேதி ஆகிவிட்டது எங்கள் சங்கத்துக்கு இன்னும் அழைப்பிதழே வரவில்லை என்ன செய்வது" என்று கேட்கிறார். 

எம்.ஜி.ஆர்-சிவாஜிக்கு பிறகு தமிழ்சினிமாவில் இரு துருவங்களான ரஜினி, கமல் இருவருமே சிவாஜியின் பரமரசிகர்கள். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அவர்களுக்கே இன்னும் அழைப்பிதழ் அனுப்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து ' சிவாஜி  மணி மண்டபத்தை திறப்பதற்கு முதல்வருக்கோ, துணை முதல்வருக்கோ  நேரம் இல்லையென்றால் தமிழ் சினிமாவில் இருக்கும் மூத்த சினிமா கலைஞர்களை வைத்து திறப்பு விழா நடத்தி இருக்கலாம். முதலில் கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலையை அகற்றி அவமானப்படுத்தினர். இப்போது சிவாஜியை அவமானப்படுத்தி பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் திறப்புவிழா நடத்துகிறார்கள்" என்று சிவாஜி சமூகநல பேரவை கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. 

இதுகுறித்து சிவாஜி சமூகநல பேரவையின் தலைவரான சந்திரசேகரனிடம் பேசினோம்.  ' ' நடிகர்கள் உலகத்தில் பிதாமகன் சிவாஜி. எங்கள் உணர்வை கண்டன அறிக்கை வாயிலாக வெளியிட்டு இருக்கிறோம். விரைவில் தமிழக அரசு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். நாங்கள் எத்தனையோ முறை சிவாஜி மணி மண்டபத்தை கட்டச் சொல்லி போராட்டம் நடத்தி இருக்கிறோம். அதற்காக இப்போது தங்கள் கோபத்தை காட்டுகிறேன் என்று சொல்லி திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிப்பு செய்வதில் அர்த்தமில்லை. விரைவில் வேறு ஒரு வடிவத்தில் எங்கள் உணர்வை வெளிப்படுத்துவோம்" என்று முடித்துக்கொண்டார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், கொடிகாத்த குமரன்... இப்படி தன் நடிப்பால் சுதந்திரப் போராட்ட வீரர்களை நம் கண் நிறுத்தியவர் சிவாஜி கணேசன். அவ்வளவு ஏன் இந்தத் தலைவர்கள் அனைவரும் நம் மனதில் சிவாஜியின் முகங்களாகத்தான் பதிந்து இருக்கிறார்கள்.

 

‘கணேசன்’ என்ற நடிகருக்கு ‘சிவாஜி’ என்று பட்டம் சூட்டியதே பெரியார்தான். ஆனால் திராவிட அரசியலில் வந்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்ஸுக்கு இந்த வரலாறுகூட தெரியாமல் போனதுதான் வருத்தம். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இருவருக்கும் ஒரு கேள்வி...  தமிழினமே கொண்டாடும் ஒரு சிறந்த கலைஞனின் நினைவை போற்றுவதைவிட உங்களுக்கு வேறென்ன முக்கியமான வேலைகள் இருக்கிறது? இத்தனைக்கும் அந்த மணிமண்டபத்திற்குப் பின்னால்தான் உங்கள் இருவரின் வீடுகளும் உள்ளன. பொடிநடையாக நடந்து வந்தாலே, சிவாஜி கணேசன் என்ற மகத்தான கலைஞனுக்கு மரியாதை செய்யலாம். செய்வீர்களா? 

http://cinema.vikatan.com/tamil-cinema/103592-will-rajini-and-kamal-attend-sivaji-manimandapam-funcion.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.