Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை

Featured Replies

முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை
 

யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். 

image_933608c831.jpg

ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே கொண்டு வரும். 

புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழ் அரசியல் தரப்புகள், தமது சமூகம் சார்பில், தமக்கான தேவைகளை உச்சபட்சம் முன்வைத்துள்ளன. 

இலங்கையானது, மாகாணங்களின் அல்லது மாநிலங்களின் ஒன்றியமாக இருத்தல் வேண்டும். மத்தியும் மாகாணங்களும் தமது தகவுப் பிரதேசங்களில், பூரணமான அதிகாரத்தைப் பிரயோகித்தல் வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு ஒரு மாகாணமாக அல்லது மாநிலமாக அமைதல் வேண்டும் என்று, புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாடுகளை, ‘வெட்டொன்று துண்டு இரண்டாக’ முன்வைத்துள்ளது.  

மறுபுறம் சிங்களத்தரப்பினரும், புதிய அரசமைப்புக்கான தமது நிலைப்பாடுகளை வலியுறுத்தியுள்ளன.  

ஆனால், முஸ்லிம் தரப்பினர், தமது நிலைப்பாடுகளைத் தெளிவாகவும், முறையாகவும் முன்வைப்பதற்குத் தயங்கி வருகின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. 

குறிப்பாக, முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ‘சண்டையில், சட்டை கிழிந்து விடக் கூடாது’ என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது. 

சிங்களவர்களுக்கும் அதேவேளை தமிழர்களுக்கும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதில் மு.கா காட்டும் ஆர்வத்தை, இடைக்கால அறிக்கைக்கு நல்லதொரு முன்மொழிவைச் சமர்ப்பிப்பதில் காட்டவில்லை என்பது, வெளிப்படையாகவே தெரிகிறது.  

image_8af81018c5.jpg

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சில கட்சிகளுடன் இணைந்தும், தனியாகவும் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், ஏனைய கட்சிகளுடன் கூட்டாக மட்டுமே, தனது முன்மொழிவைப் பகிர்ந்துள்ளது.  

இதில் வடக்கு, கிழக்கை தனியொரு மாகாணமாக அரசமைப்பு அங்கிகரித்தலாகாது என்று, தனது தனியான முன்மொழிவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில், எந்தவித அபிப்பிராயங்களையும் இடைக்கால அறிக்கையில், மு.கா வெளிப்படுத்தவில்லை. 

இருந்தபோதும், அரசியலரங்கில் மு.கா தலைவர் ஹக்கீம், இது தொடர்பில் கருத்துகள் தெரிவித்துப் பேசி வருகின்றமையைக் காண முடிகிறது.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15), காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், “வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலோ, பிரிப்பு தொடர்பிலோ, முஸ்லிம் காங்கிரஸ் எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளாது” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, “வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமானால், தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டுமென்கிற கொள்கையில் இருந்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது” என்றும் அவர் கூறியுள்ளார்.  

ஆயினும், தனி முஸ்லிம் மாகாணம் தொடர்பில், அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், முஸ்லிம் காங்கிரஸ் எந்தவித முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

இன்னொருபுறம், வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்ற முஸ்லிம் காங்கிரஸ், தான் எதிர்பார்க்கும் தனி முஸ்லிம் மாகாணம் எப்படியிருக்க வேண்டும் என்பது தொடர்பாக, ஒரு வரைபடத்தையாயினும் இதுவரையில் வெளியிடவில்லை என்பதும் இங்கு கவனத்துக்குரியது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், அந்த இயக்கம் அவ்வப்போதிருந்த அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த காலகட்டங்களிலும் முஸ்லிம் அரசியல் தரப்புகள் இப்படித்தான் நடந்து கொண்டன. இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது, தமிழர்களுக்கு என்ன வழங்க வேண்டும் என்கிற முன்மொழிவை புலிகள் எழுத்தில் வழங்கினார்கள்.

ஆனால், அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில், மூன்றாம் தரப்பாகத் தாமும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய முஸ்லிம் அரசியல் தரப்பினரிடம், எந்தவிதமான தீர்வுத்திட்ட யோசனைகளும் எழுத்தில் இருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். 

‘புலிகளுக்குக் கொடுப்பது போல், எங்களுக்கும் தாருங்கள்’ என்கிற மொட்டையான கோரிக்கை மட்டுமே, முஸ்லிம் அரசியல் தரப்பினரிடம் இருந்தது. இது அவமானத்துக்குரிய விடயமாகும்.  

புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகள், சமர்ப்பிக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்திலும், முஸ்லிம் அரசியல் தரப்புகளின் நிலைவரம், அப்படித்தான் உள்ளது. 
தனி முஸ்லிம் மாகாணம் கோருகின்றவர்களுக்கே, அதன் ஆழம், அகலம் என்னவென்று தெரியாது என்பதுதான் இங்குள்ள மிகப்பெரும் வேடிக்கையாகும்.  

தனி முஸ்லிம் அலகு என்பதை, முஸ்லிம் காங்கிரஸின் கண்டு பிடிப்பைப் போல், அந்தக் கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால், அது தவறானதாகும். 

முஸ்லிம்களுக்கான தனி அலகு என்கிற சிந்தனைக்குச் சொந்தக்காரர், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும், அரசியல் ஆய்வாளருமான அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.ஐ.எம். முகைதீன் ஆவார். அவரிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் இந்தச் சிந்தனையைப் பெற்றெடுத்தது. மு.காவின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன், இது தொடர்பில் ஆழமாகப் பேசியும் எழுதியும் வந்துள்ளார். முஸ்லிம் தனி அலகு குறித்து மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பும் தனது முன்மொழிவுகள் குறித்துப் பல இடங்களில் விவரித்துள்ளார்.  

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம், 1998ஆம் ஆண்டு, மு.கா ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பை நேர்கண்டபோது, முஸ்லிம் அலகு பற்றிய தனது எண்ணத்தை அஷ்ரப் வெளிப்படுத்தியிருந்தார். 

அந்த நேர்காணலின் ஓரிடத்தில், “1995ஆம் ஆண்டு வரை, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் பற்றித்தான் முஸ்லிம் காங்கிரஸ் பேசி வந்திருந்தது. தீர்வுப்பொதி முன்வைக்கப்பட்ட பின்னர் (சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில்) முஸ்லிம் காங்கிரஸ் நிலத்தொடர்புடைய, ‘தென்கிழக்கு அலகை’ ஏற்றுக் கொண்டது” குறித்தும் அஷ்ரப் விவரித்துள்ளார். 

மேலும், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியங்களை ஒன்றிணைத்த அலகுக்கு, ‘அகண்ட தென்கிழக்கு’ என்று அவர் பெயர் சூட்டியிருந்தமையும் அந்த நேர்காணலினூடாக நாம் அறிந்து கொள்ள முடியும்.  

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், இறுதியாக ஏற்றுக் கொண்ட தென்கிழக்கு அலகு என்பது, அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். அதற்கு முன்னதாக தொண்டா - அஷ்ரப் ஒப்பந்தம் மூலம், இணைந்த வடக்கு, கிழக்கு பிராந்திய சபையில், முஸ்லிம்களுக்கென்று ஓர் உப சபையைப் பெற்றுக் கொள்வதற்கும் அஷ்ரப் தயாராக இருந்தார் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.  

அவ்வாறாயின், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர், ‘தனி முஸ்லிம் மாகாணம்’ என்ன என்பதை, முஸ்லிம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நூலும் வாலும் இல்லாத ஓர் அறுந்த பட்டத்தை, இதுதான் உங்களுக்கு விதிக்கப்பட்டது என்று கூறி, வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் தலையில் யாரும், எதையும் கட்டி விடலாம் என்று நினைப்பதைக் கூட, ஏற்றுக் கொள்ள முடியாது.  

இன்னொருபுறம், தனி முஸ்லிம் அலகு என்பது அஷ்ரப்பின் கனவு என்றும், அவருடைய தீர்வுத் திட்ட யோசனை எனவும் பேசி வருகின்றவர்கள் யோசிக்கத் தவறிய, வேறொரு பக்கமும் உள்ளது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இணைந்திருந்ததொரு காலகட்டத்தில், வடக்கு, கிழக்கை இனிப் பிரிக்க முடியாது என்கிறதொரு எண்ணப்பாடு இருந்ததொரு சூழ்நிலையில்தான், இணைந்த வடக்கு, கிழக்கில் தனி முஸ்லிம் அலகு பற்றி, அஷ்ரப் பேசினார். 

ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகவுள்ளது. வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகியுள்ளன. இந்த இரண்டு மாகாணங்களையும் இணைப்பதற்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள். 

இவ்வாறானதொரு நிலையில், இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தனி முஸ்லிம் அலகு பற்றிப் பேசுவது, பொருத்தமானதாகத் தெரியவில்லை.  

கர்ப்பத்தில் இருக்கும்போது, பெண் குழந்தையொன்றை எதிர்பார்த்து, அதற்காகப் பெண் குழந்தைகள் அணியும் ஆடைகளையும் நகைகளையும் வாங்கி வைத்திருந்த தாயொருவர், எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அதன் பிறகும், தான் பெண் பிள்ளையை எதிர்பார்த்து வாங்கி வைத்திருந்த ஆடைகளையும், அணிகலன்களையும், பிரசவித்துள்ள ஆண் பிள்ளைக்கு அணிந்துதான் பார்ப்பேன் என்று அடம்பிடிப்பது எப்படி வேடிக்கையானதொரு விடயமாக இருக்குமோ, அதுபோலதான், வடக்கும் கிழக்கும் இனிப் பிரியவே மாட்டாது என்கிறதோர் எண்ணப்பாட்டின்போது முன்வைக்கப்பட்டதொரு தீர்வுத் திட்டமொன்றை, வடக்கும் கிழக்கும் பிரிந்து விட்ட பின்னரும் கூட, முன்வைத்துப் பேசுவது அபத்தமானதாகவே இருக்கும்.  

இன்னொருபுறம், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், கரையோர மாவட்ட யோசனையை முன்வைக்க முடியாமல் போனவர்கள், தனி முஸ்லிம் மாகாணம் பற்றிப் பேசுவது ஆச்சரியமாகவுள்ளது.    

எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்க்கின்றபோது, ஒவ்வொரு சமூகமும், தமக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக முட்டி மோதிவரும் தற்போதைய காலகட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் மட்டும், கழுவிய நீரில் நழுவிய மீனாகக் காலம் கடத்தி வருகின்றமையை அனுமதிக்க முடியாது. 

யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், முஸ்லிம் சமூகத்தின் பிரதான அரசியல் கட்சி என்கிற அடையாளம் முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளது. எனவே, முஸ்லிம்களுக்கான தீர்வுத் திட்டங்களை முன்வைக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் நழுவவோ, காலம் கடத்தவோ முடியாது.  

தமிழர்கள் கோபித்து விடுவார்கள் என்பதற்காகவோ, சிங்களவர்களைப் பகைத்து விட நேர்ந்து விடும் என்பதற்காகவோ, தமது சமூகம் சார்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயங்கிவிடக் கூடாது. 

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதா, இல்லையா? என்பது குறித்து ஒரு தீரமானத்தை முஸ்லிம் காங்கிரஸ் கூற வேண்டும். அதை விடுத்து, வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலோ, பிரிப்புக் குறித்தோ நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்று, முஸ்லிம் சமுதாயத்தின் பிரதான அரசியல் கட்சியொன்றின் தலைவர் கூறுவது ஏற்புடையதாக இல்லை.   

நாட்டில் புதிய அரசமைப்பு மூலம் இனங்களுக்கான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் சிங்களவர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் தீவிர செயற்பாடுகளில் இறங்கியுள்ள நிலையில், முஸ்லிம் அரசியல் தரப்பினர், சொற்களை நடனமாட வைத்து, வார்த்தை ஜாலம் புரிந்து கொண்டிருப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது.   

ஆகக்குறைந்தது;  

* வடக்குடன் கிழக்கு இணைவதா? பிரித்தே வைப்பதா?  
* வடக்கு, கிழக்கு இணைவதற்கு நிபந்தனைகளுடன் ஆதரவு என்றால், நிபந்தனைகள் என்ன?  
* இணைந்த வடக்கு, கிழக்கில் தனி முஸ்லிம் மாகாணம் வேண்டுமென்றால், அந்த முஸ்லிம் மாகாணத்தின் ஆழ, அகலம் என்ன?  என்பது தொடர்பிலாவது, முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையான நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்-அரசியல்-சண்டையில்-கிழியாத-சட்டை/91-205663

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.