Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேவிச்சித்ரா சொன்ன பதில்...

Featured Replies

தேவிச்சித்ரா சொன்ன பதில்...

 

தேவிச்சித்ரா தன் அறையில் ஆளுயரத்திற்கு இருந்த கண்ணாடி முன்பாக நின்று தன்னையே அதில் உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தாள். சென்ற வருடத்தைக் காட்டிலும் சோபை இழந்து விட்ட முகமாக தன் முகவடிவு மாறியிருப்பதைக் கண்டாள். ஐயம்பாளையம் கிராமத்தில் நூற்றி ஐம்பது வீடுகள் இருக்கின்றன. தேவிச்சித்ராவின் வீடு ஊரின் கிழக்குக் கடைசியில் காட்டுக்குள் நின்றிருந்தது. இவளின் சித்தப்பா ஊருக்குள் மெத்தை வீடு கட்டிக்கொண்டு போய் ஐந்தாறு வருடங்களாயிற்று. இங்கிருந்து அவர் அண்ணனோடு பாகம் பிரித்துக் கொண்டு சென்ற நாளில் இருந்தே அவர் குடும்பம் மகிழ்ச்சியாய் இருப்பதை ஊரே பேசிக்கொண்டு தானிருக்கிறது, இன்றுவரை.

மெத்தை வீடு கட்டி குடி புகுந்த ராசியோ என்னவோ, அவரின் இரண்டு பெண்களையும் வெளியூருக்கு கட்டிக் கொடுத்து கடமையை முடித்துக் கொண்டார். அவர்களும் ஆளுக்கு ஒரு ஆண் குழந்தை பெற்று கணவரோடு மகிழ்ச்சியாய், நோம்பி நொடி என்றால் ஊருக்கு வந்து போகிறார்கள். அப்படி அவர்கள் ஊருக்கு வரும் பட்சத்தில் ‘அக்கா!’ என்று இவளையும் பார்த்துப் போக பழைய வீட்டுக்கு வந்து போவார்கள். ‘பெரியப்பன் எப்பத்தானக்கா உனக்கொரு மாப்ளை பார்த்து முடிச்சு வைப்பாரு?’ என்று தங்களின் ஆதங்கத்தையும் இவளிடம் பதிவு செய்து போவார்கள். அப்போதெல்லாம் இவள் ஒரு புன்னகையை மட்டும் தங்கைகளுக்கு பதிலாகத் தருவாள்.

அப்பா எத்தனையோ பக்கம் இவளது ஜாதகத்தை தூக்கிக் கொண்டு போய் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார். ஜாதகத்தில் இருந்த எல்லா சொத்தைகளையும் கோயில் குளம் என்று போய் கழித்து விட்டும் வந்திருந்தாள் தேவிச்சித்ரா.  சென்னிமலை அரசாங்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக இந்த நான்கு வருடங்களாக சென்று வந்து கொண்டிருந்தாள். அது ஒன்றுதான் இவளுக்கு மன நிம்மதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
15.jpg
‘‘பிள்ளைக்கி வேலையையும் பிடிச்சுப் போட்டே! இனி மாப்பிள்ளைங்க வரிசையா வருவாங்க பாரு!” என்றுதான் வேலைகிடைத்த புதிதில் இவள் அப்பாவிடம் இந்த ஊர் பேசியது. அப்படியும் அது நடைபெறவில்லை. ‘நடக்கும்போது தானாக நடக்கட்டும்’ என இவளும் அப்பாவிடம் சில மறுப்புகளையும் காட்ட ஆரம்பித்து விட்டாள். இந்த வருடத்தில் மொத்தமே நான்கு மாப்பிள்ளைகள்தான் இதுவரை வீடு வந்து சென்றிருந்தார்கள். அப்பா தானவாதிக்காரர்களையும் மாற்றிப் பார்த்து சோர்ந்து போனார்.

இரண்டு மாதம் முன்பாக தன் டிவிஎஸ் பைக்கில் சென்னிமலையிலிருந்து வந்து கொண்டிருந்தவர் தோப்புப்பாளையம் அருகே கீழே விழுந்து கையையும் ஒடித்துக் கொண்டார். எல்லாமே கெட்ட விசயங்களாகவே நடந்து கொண்டிருந்தன. இவளின் தம்பி முருகசாமி சென்னிமலையில் தறிக்குடோன் ஒன்றை லீசிற்குப் பிடித்து சென்னிமலையேகதி என்று தங்கிவிட்டான். வீட்டுக்கு எப்போதாவது வந்து போனான்.

இன்று என்னவோ தறிக்கு பாவு இல்லை என்று காலையிலேயே வீடு வந்திருந்தான். பத்தாவதோடு படிப்பு ஏறவில்லை என்று தறிக்குடோனுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவன். அவன் வாழ்க்கை தறிகளின் கடக் முடக் சப்தத்தோடுதான் இனி கடைசி காலம் வரை கழியுமென நினைத்தாள் தேவிச்சித்ரா. இவர்களுக்கு என்று இருந்த தோட்டம் ஒருகாலத்தில் கிணற்றுப் பாசனத்தில் நூறு தென்னைகள், இருபது மாடுகள் என்று இருந்ததுதான். மழை குறைந்து தென்னைகள் அழிந்து இப்போது கிணறும் வறக்கிணறாக கிடக்கிறது.

தோட்டத்தை இப்போது காடு என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்பாவுக்கு காங்கேயம் தானாவதி முருகேசன் இன்று காலையில் போனில் தகவலைச் சொல்லியிருந்தார். இன்று பத்துமணி வாக்கில் மாப்பிள்ளையைக் கூட்டி வருவதாக. அப்பாவுக்கு இந்தமுறை பெரும் நம்பிக்கை இருந்தது. தானாவதி முருகேசன் இவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதையே மறந்துவிட்டாரோ! என்றுதான் இரண்டு வருடங்களாக இந்தப் பக்கமே வராமல் இருந்தார்.

இனி அவராலும் வண்டி வாகனத்தை எடுத்துக் கொண்டு முன்பு போல சிட்டாட்டம் கிளம்பவும் முடியாது. முருகசாமியும் தேவிச்சித்ராவும் அப்பாவை வண்டியை இனி கையால் தொடவே கூடாது என்று சொல்லி விட்டார்கள். தேவிச்சித்ராவின் அம்மாவுக்கு மகள் ஆசிரியை ஆனதில் மிகப்பெருமைதான். அம்மா இப்போதும் கைநாட்டுதானே! சந்தோசம் இருக்கத்தானே செய்யும்.

முருகசாமி இவள் அறைக்கு வந்து, ‘‘மாப்ளை வீட்டுக்காரங்க கார்லதான் வர்றாங்களாம். சென்னிமலை தாண்டிட்டாங்களாமாம் அக்கா...’’ என்று தகவலைச் சொல்லிச் சென்றான். தானாவதி முருகேசனுக்கு வயது அறுபது இருக்கும். மீசை, தாடி, தலைமுடி அனைத்தும் பஞ்சுப் பொதிபோல வெள்ளை நிறத்தில் இருக்க சந்தனம் இட்டிருப்பார் நெற்றியில்.

ஏற்கனவே கடைசியாய் அவர் இரண்டு வருடம் முன்பு கூட்டி வந்த மாப்பிள்ளை தாராபுரத்தில் ஆசிரியராக இருந்தவர். தேவிச்சித்ராவின் அம்மாதான் கூடி வரும் நேரத்தில் குறுக்கே நுழைந்து ‘மாப்பிள்ளை உயரமா இருக்காரு’ என்று  சொல்லி விட்டது. அன்றிலிருந்து என்னவோ தானாவதி முருகேசன் இந்த வீட்டுப்பக்கமே வருவதில்லை. இன்று வருகிறார் என்றால் பழைய விசயத்தை மறந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

இதோ வீட்டின் முன்பாக கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. வந்தவர்களைக் கும்பிட்டு வரவேற்று ஹாலில் சோஃபாவில் அமரவைத்தார்கள் தேவிச்சித்ராவின் தம்பியும் அப்பாவும். ‘‘ரொம்ப நாளு ஆயிப் போச்சுங்க! இவருதான் மாப்பிள்ளை!” என்று மாப்பிள்ளையை இருவருக்கும் தானாவதி முருகேசன் அறிமுகப்படுத்தினார். “அவங்க ரெண்டுபேரும் அவரோட அம்மா, அப்பா. மாப்பிள்ளைக்கி தங்கச்சிங்க ரெண்டு பேரு.

ரெண்டு பேரையும் கட்டிக் கொடுத்துட்டாரு. திருப்பூர்ல பனியன் கம்பெனி தனியா வச்சிருக்காரு. சொந்த பங்களா காங்கயத்துல டவுன்லயே இருக்கு. நிலம் இல்ல. பிள்ளையைக் கூப்பிடுங்க...” என்றார் தானாவதி முருகேசன். தேவிச்சித்ராவின் அம்மா தட்டில் பலகாரங்களுடன் முன்பாக வந்து டேபிள் மீது வைக்க தேவிச்சித்ரா தட்டில் காபி டம்ளர்களோடு வந்து ஒவ்வொருவருக்கும் நீட்டினாள். அவர்களும் எடுத்துக் கொண்டார்கள்.

அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருந்தது. “பொண்ணு டீச்சரா சென்னிமலை ஸ்கூலுக்கு போயிட்டு இருக்குற விசயத்தை மாப்பிள்ளைக்கி சொல்லிட்டேன். சித்ரா ஜாதகம் என்கிட்டயே இருந்ததால அவங்க பார்த்துட்டாங்க! எட்டு பொருத்தமிருக்குறதால பிள்ளையைப் பார்த்துட்டு வந்துடுவோம்னு கிளம்பிட்டாங்க...” என்றார். அப்போது தேவிச்சித்ராவின் அம்மா, “என்ன இருந்தாலும் நிலம்னு மாப்பிள்ளைக்கி ஒரு அஞ்சு ஏக்கராவது இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்...” என்றது.

அப்போது தானாவதி கோபமாய் எழுந்தார். “எங்கடா ஒண்ணும் சொல்லலையே அம்மான்னு பார்த்தேன். மாப்பிள்ளைகிட்ட பணமிருக்கு. நாளைக்கே அஞ்சு ஏக்கரா வாங்கிடுவாருங்கம்மா! உங்க பொண்ணு அங்க வந்து மாடு கன்னு மேச்சுட்டு, குப்பை மேட்டுல சாணி வழிச்சுக் கொட்டீட்டு இருக்குமா? இருக்கும்னா சொல்லுங்க, காத்தால நெலம் வாங்கிடுவாரு மாப்பிள்ளை.

என்ன பேச்சு பேசுறீங்க இந்தக் காலத்துல? அன்னைக்கி அப்பிடித்தான் மாப்பிள்ளைக்கி காரு இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னீங்க! உங்க பிள்ளையை இப்படியே பேசிட்டு வீட்டோடயே வச்சிக்கங்க மகராசியா! எந்திரிங்க மாப்பிள்ளை, உலகத்துல பொண்ணா இல்லை!” என்று தானாவதி கோவப்பட்டு அவர்களைக் கிளப்பும் போது, தேவிச்சித்ரா, ‘‘முருகேசன் மாமா!” என்று கூப்பிட்டு ஹாலுக்கு வந்தாள். மகள் என்ன சொல்லப் போகிறாள் என்பது தாய்க்கு மட்டுமல்ல... அங்கிருந்த அனைவருக்குமே புரிந்தது.

kungumam.co.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.