Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வில்லங்க வேட்புமனுக்கள்... விசாரிக்காத தேர்தல் ஆணையம்!

Featured Replies

விகடன் லென்ஸ்: வில்லங்க வேட்புமனுக்கள்... விசாரிக்காத தேர்தல் ஆணையம்!

 
 

விஷாலுக்கு மட்டும் வேட்டு

 

p16_1513077486.jpgதொகுதியின் பத்து வாக்காளர்கள் முன்மொழிந்தால்தான், ஒரு சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியும். அப்படி ஆர்.கே. நகரில் பத்து பேர் முன்மொழிந்த விஷாலின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட சுமதி, தீபன் ஆகியோர், ‘அது எங்கள் கையெழுத்து இல்லை’ எனச் சொல்ல... விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி, ஏற்பு, மீண்டும் தள்ளுபடி என விஷால் வேட்புமனு பரிசீலைனையில் நடந்த விஷயங்கள் தேர்தல் ஆணையத்தை சந்தி சிரிக்க வைத்தன. ஆர்.கே. நகர் தொகுதியின் தேர்தல் அலுவலரையே மாற்றும் அளவுக்கு விஷயம் போனது.

ஆனால், அதைவிட நிறைய கோல்மால்கள் வெளிச்சத்துக்கு வராமல் அரங்கேறியிருக்கின்றன. ஆர்.கே. நகரில் போட்டியிடும் பலரின் வேட்புமனுக்களில் ஏகப்பட்ட தவறுகள். களத்தில் நிற்கும் 59 வேட்பாளர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சட்டப்படி போட்டியிடத் தகுதியில்லாதவர்கள் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சி.

‘மாநில சட்டமன்றத்துக்குப் போட்டியிடுகிறவர்கள், அந்த மாநிலத்தின் வாக்காளராக இருக்கவேண்டும்’ என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். அப்படி வாக்காளர்களாக இல்லாத சிலர், ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார்கள். 

p16a_1513077513.jpg

தேர்தலில் போட்டியிடுபவர்கள், வரையறுக்கப்பட்ட படிவத்தில் - அதாவது வேட்புமனுவோடு பிரமாணப் பத்திரத்தையும் (அஃபிடவிட்) தாக்கல் செய்ய வேண்டும். ‘எந்தத் தொகுதியில், எந்த பாகத்தில், எந்த வரிசை எண்ணில் தங்கள் பெயர் இருக்கிறது’ என்பதை வேட்புமனுவிலும் அஃபிடவிட்டிலும் தெரிவிக்க வேண்டும். சில சுயேச்சைகளின் வேட்புமனு நடைமுறைகளில் உள்ள தவறுகளை விகடன் நடத்திய புலனாய்வில் கண்டறிந்தோம். அந்தத் தகவல்கள் இங்கே...

p16d_1513077680.jpg

 

குணசேகர்: ஹெல்மட் சின்னத்தில் போட்டியிடுகிறார் குணசேகர். இவர் தனது வேட்புமனுவில் ‘தன்னுடைய பெயர்  ஆர்.கே. நகர் வாக்காளர் பட்டியலில் பாகம் 41-ல் 63-வது எண்ணில் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதனை உறுதி செய்வதற்காக ஆர்.கே. நகர் வாக்காளர் பட்டியலைப் புரட்டியபோது குணசேகரன் பெயர் இல்லை. பாகம் 41-ல் 63-வது வரிசையில் லட்சுமிபதி என்பவரின் மகன் மதனகோபால் பெயர்தான் இருக்கிறது. குணசேகரன் வசிப்போதோ புளியந்தோப்பில். அது எழும்பூர் தொகுதிக்குள் வருகிறது.

வேட்புமனுவில் இப்படி தவறான தகவல் அளித்த குணசேகர், தனது அஃபிடவிட்டில் ‘எழும்பூர் தொகுதியில் 63-வது பாகத்தில் 41-வது வரிசையில் என் பெயர் உள்ளது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனை ஆய்வு செய்தபோது சரியாக இருந்தது. வேட்புமனுவில் இருக்கிற தகவல்கள்தான் அஃபிடவிட்டிலும் இருக்க வேண்டும். ஆனால், இப்படி தவறான தகவல்களோடு வேட்புமனு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி கண்டுகொள்ளவே இல்லை.

 

p16b_1513077537.jpg

 

ஜி.தினகரன்: தனது பெயர் திருவொற்றியூர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக அஃபிடவிட்டில் குறிப்பிட்டிருக்கும் ஜி.தினகரன், வேட்புமனுவில் தொகுதியின் பெயர் என்கிற பகுதியைப் பூர்த்தி செய்யாமல், பாகம் மற்றும் வரிசை எண்ணை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். ‘முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும்’ என்கிற விதி மீறப்பட்டிருக்கிறது.

இவருக்கு முன்மொழிந்த பத்து பேரில் 6-வது நபராக R.சுலொக்சணா (இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது) என்பவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். பாகம் எண் 191, வரிசை எண் 120-ல் அவர் பெயர் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவர் கையெழுத்தும் போடப்பட்டிருக்கிறது. ஆனால், வாக்காளர் பட்டியலில் R.சுலொக்சணா பெயர் இல்லை. அங்கே மோகனா என்ற பெயர்தான் இருந்தது. ‘விஷால் விஷயத்தில் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு தேடியவர்கள், ஜி.தினகரன் விஷயத்தில் கோட்டைவிட்டது ஏன்’ என்ற கேள்வி எழுகிறது. டி.டி.வி.தினகரனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஜி.தினகரனின் வேட்புமனு தள்ளுபடியாகாமல் பார்த்துக்கொண்டார்களா என்கிற சந்தேகமும் எழுகிறது.

p16c_1513077703.jpg

 

பி.நடராஜன்: ஆர்.கே. நகர் களத்தில் டி.டி.வி.தினகரனுக்கு அடுத்தாக இடம்பெற்றிருக்கும் வேட்பாளர் பி.நடராஜன். இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னுடைய பெயர் சோழிங்கநல்லூர் தொகுதியில் 483-வது பாகத்தில் 27-வது வரிசை எண்ணில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்த வாக்காளர் பட்டியலை சோதனை செய்தபோது 27-வது எண்ணில் உமா மகேஷ்வரி (கணவர் பெயர் திருமுருகன்) என்ற பெயர்தான் இருந்தது. முகவரியாவது மேட்ச் ஆகிறதா எனச் சோதித்தோம். தனது முகவரியாக ‘ஸ்கைலாப் அவென்யூ முதல் தெரு, சித்தாலப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்’ என வேட்புமனுவில் நடராஜன் குறிப்பிட்டிருக்கிறார். அந்த முகவரியும் பொருந்தவில்லை. வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணுக்கான முகவரி, ‘வேங்கைவாசல், இந்திரா நகர் 1-வது மெயின் ரோடு’ என்றுதான் இருக்கிறது.

வரிசை எண்ணும் பாகம் எண்ணும் தவறாக மாற்றி போட்டிருப்பாரோ என நினைத்து அதையும் ஆய்வு செய்தோம் 27-வது பாகத்தில் 483-வது வரிசையில் தேடிப் பார்த்தபோது அதில் பிரேம்குமார் என்பவரின் பெயர்தான் இருந்தது. நடராஜனின் பெயர் எங்கேயும் இல்லை. ‘வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் தேர்தலில் போட்டியிட முடியாது’ என்கிறது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஏதாவது ஒரு தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டும் என்கிற விதியே மீறப்பட்டிருக்கிறது. இதைக்கூட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்யவில்லை.

வேட்புமனுப் படிவம் 2B-யில் போட்டோவையும் நடராஜன் ஒட்டவில்லை. அஃபிடவிட்டில் சரிபார்ப்பு என்கிற பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் சான்று தர வேண்டும். அப்படித் தரப்பட்ட ஓர் இடத்தில் 2017 மார்ச் 27-ம் தேதி எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். லேட்டஸ்ட் தேதிதான் குறிப்பிடப்பட வேண்டும். 9 மாதத்துக்கு முன்பே அஃபிடவிட் பூர்த்தி செய்யப்பட்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ‘மார்ச் மாதத்துக்குப் பிறகு நடராஜன் எதுவும் சொத்துகள் வாங்கினாரா, கடன் வைத்திருக்கிறாரா’ என்கிற விவரம் எல்லாம் எப்படி சேர்க்கப்பட்டிருக்கும்? இதையெல்லாம் தேர்தல் அதிகாரி கவனிக்கவில்லை.

முன்மொழிந்தவர்களிலும் தவறுகள். இரண்டாவதாக முன்மொழிந்தவர் 243-வது பாகத்தைச் சேர்ந்த 102-வது வரிசையில் இருக்கும் M.மோகன்குமார் என குறிப்பிட்டு அவரின் கையெழுத்து போடப்பட்டிருக்கிறது. ஆனால், வாக்காளர் பட்டியலில் மோகன்குமார் பெயர் இல்லை. பர்வீன் பெயர்தான் இருக்கிறது. விஷாலுக்கு முன்மொழிந்தவர்கள் கையெழுத்தே போலி என்றார்கள், நடராஜனுக்கு முன்மொழிந்தவர் பெயரே தவறாக இருக்கிறதே!

p16e_1513077752.jpg

இந்த வேட்பாளர் தொடர்பான ஆவணங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

எஸ்.மதுசூதனன்: 42-வது நபராக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுயேச்சை வேட்பாளர் எஸ்.மதுசூதனனுக்கு பத்து பேர் முன்மொழிந்திருக்கிறார்கள். 9-வது நபராக 201-வது பாகத்தைச் சேர்ந்த 93-வது வரிசையில் இருக்கும் வி.முத்துகுமார் குறிப்பிட்டு அவரின் கையெழுத்தும் போடப்பட்டிருக்கிறது. ஆனால் வாக்காளர் பட்டியலைப் புரட்டியபோது அந்த இடத்தில் சாந்தி என்கிற பெயர்தான் இருக்கிறது.

p16g_1513077789.jpg

 

விஸ்வநாதன்: ஃபார்ம் 2B-யில் தனது பெயர் அம்பத்தூர் தொகுதியில் 105-வது பாகத்தில் 27-வது எண்ணில் இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார். அவரே ஃபார்ம் 26-ல் அம்பத்தூர் தொகுதியில் பாகம் 101-ல் இருக்கிறது என குறிப்பிடுகிறார். ஆனால், வாக்காளர் எண்ணைத் தெரிவிக்கவில்லை. அந்தத் தகவல் பொய். ஃபார்ம் 2B-யில் உள்ள தகவல் மட்டுமே உண்மை. இப்படி ஒரே வேட்புமனுவில் வெவ்வேறு இடங்களில் தகவல்கள் மாறிமாறி இருக்கின்றன.

p16f_1513077819.jpg

 

ஜாஹிர் ஹுசைன்: இவருக்கு முன்மொழிந்தவர்கள் பற்றிய விவரங்கள் தெளிவாக எழுதப்படவில்லை. பாகம் எண்ணை ஒரு பக்கத்திலும் வரிசை எண்ணை இன்னொரு பக்கத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டாவதாக முன்மொழிந்த பரக்கத் நிஷாவும் மூன்றாவது முன்மொழிந்த கமருதீனும் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் 23-வது பாகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரின் வாக்காளர் எண்களும் ஒரே எண்ணாக (எண் 681) குறிப்பிடப்பட்டிருக்கிறது. கமருதீனின் வரிசை எண் 680 என்பதைக் குறிப்பிடவில்லை.

பத்து பேர் முன்மொழிவதற்குத்தான் வேட்புமனுவில் வரிசை எண் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், ஜாஹிர் ஹுசைனுக்கு 11 பேர் முன்மொழிந்திருக்கிறார்கள். கூடுதலாக முன்மொழிபவர்கள் இருந்தால் இன்னொரு வேட்புமனுவை ஜாஹிர் ஹுசேன் தாக்கல் செய்திருக்கலாம். ஜாஹிர் ஹுசேனுக்கு முன்மொழிந்த 11 பேரில் புரோஸ்கான், சாகுல் அமீது, சரவணன் ஆகியோரும் அடக்கம். இந்த மூன்று பேருக்கு வாக்காளர் பட்டியலின் பாகம் மற்றும் வரிசை எண்கள் குறிப்பிடவில்லை. அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் மட்டும் எழுதப்பட்டிருக்கிறது. அந்த எண்களை ஆராய்ந்தபோது, ‘புரோஸ்கான், சாகுல் அமீது ஆகியோருக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை’ என்கிறது தேர்தல் ஆணைய இணையத்தளம்.

பத்மராஜன்
‘தேர்தல் மன்னன்’ பத்மராஜனும் ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். அவருடைய நாமினேஷன் பேப்பர் மட்டுமே இருக்கிறது. சொத்து தொடர்பான அஃபிடவிட்டை ஏனோ பதிவேற்றவில்லை. ‘அதை அவர் அளித்தாரா’ எனத் தெரியவில்லை.

செந்தில்குமார்
இவர் தன்னுடைய பெயர் ஆர்.கே. நகர் வாக்காளர் பட்டியலில் 204-வது பாகத்தில் 141-வது வரிசையில் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். வாக்காளர் பட்டியலை சோதனையிட்டபோது அவரின் தந்தை பெயர் மாறியிருக்கிறது. வேட்புமனுவில் தன் தந்தையின் பெயரை எஸ்.எஸ்.ராஜேந்திரன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் வாக்காளர் பட்டியலில் ராமையா என இருக்கிறது.

சுரேஷ் பாபு
இவர் தனது அஃபிடவிட்டில் கோடம்பாக்கம் தொகுதியில் தனது பெயர் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கோடம்பாக்கம் என்ற தொகுதியே தமிழகத்தில் கிடையாது. தி.நகர் தொகுதி என வேட்புமனுவில் சொல்லியிருக்கிறார். அதை செக் செய்தபோது அவர் குறிப்பிட்ட வயதுக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள வயதுக்கும் இடையே 8 வயது வித்தியாசம் இருக்கிறது.

 

சந்திரசேகர்
இவருக்கு பத்து பேர் முன்மொழிந்திருக்கிறார்கள். 5-வது நபராக முன்மொழிந்திருக்கும் நபரின் பெயரில் குழப்பம். 82-வது பாகத்தில் 1154-வது எண் கொண்ட ஆயிஷா பானு முன்மொழிந்திருக்கிறார். ஆனால், அவர் அம்சா பானு என கையெழுத்து போட்டிருக்கிறார். வாக்காளர் பட்டியலில் ‘அபீபா பானு’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பத்து பேர் கையெழுத்து போட்ட பகுதியும் ஒயிட்னரால் அழிக்கப்பட்டு புதிதாகக் கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது.

கேசவன்
முன்மொழிந்தவர்களில் பத்து கையெழுத்துக்குப்பதில் ஒன்பது கையெழுத்துகள் மட்டுமே இருக்கிறது.

உமா சங்கர்
முன்மொழிந்தவர்களில் 6,7,8 ஆகிய நபர்களின் கையெழுத்துக்களை ஒரே நபர் போட்டிருக்கிறார்.

 

என்ன செய்யப்போகிறது தேர்தல் கமிஷன்?

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி


ஒத்தையா... இரட்டையா?

ஆர்.
கே. நகரில் போட்டியிட்ட சில வேட்பு மனுக்கள் மட்டும் பரிசீலனையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதிலும் அரைகுறைதான். பத்து பேர் முன்மொழிந்துள்ளனரா என ஒவ்வொருவராக டிக் அடித்து செக் செய்ய வேண்டும். ஆனால் அப்படி எல்லோருக்கும் செக் செய்யவில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருக்கு மட்டும் பென்சிலால் டிக் அடித்து Ok என எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான மனுக்களை ‘ஒத்தையா... ரெட்டையா’ போட்டு செலக்ட் செய்திருக்கிறார்கள்.


p16h_1513077936.jpg

‘‘தகுதியான வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் தேர்தல் வெற்றியே செல்லாது!’’

ஜெ
யலலிதாவின் தேர்தல் வழக்குகள் பலவற்றை கையாண்ட மூத்த வழக்கறிஞர் என்.ஜோதியிடம் பேசினோம். ‘‘விஷால் மனு நிராகரிக்கப்பட்டது முற்றிலும் சரி. ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர், அதிகபட்சமாக நான்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். இதுகூட தெரியாமல் விஷால் ஏன் ஒரு மனு மட்டும் போட்டார்? சினிமா ஷூட்டிங்கில் வேண்டுமானால் ரீடேக் எடுக்கலாம். வேட்புமனுவில் அப்படிச் செய்ய முடியாது.

வேட்பாளர்களின் தகுதிகள், முன்மொழிபவர்கள், டெபாசிட் தொகை, உறுதிமொழிப் பத்திரம் தாக்கல், உறுதிமொழி அளித்தல், அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஃபார்ம் A மற்றும் B ஆகியவற்றின் அடிப்படையில்தான் வேட்புமனுக்கள் செல்லுமா என்பதைத் தேர்தல் அதிகாரி முடிவு செய்வார். தொகுதியின் தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவில், தலைமைத் தேர்தல் ஆணையரே தலையிட முடியாது.

1952 பொதுத் தேர்தலில் நாமக்கல் சட்டசபை தொகுதியில் என்.பி.பொன்னுசாமி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருடைய மனுவில் குறைபாடு இருந்தால் மனுவைத் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். உடனே அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார் பொன்னுசாமி. அங்கே மனு தள்ளுபடி ஆனது. சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார். தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி மற்றும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், ‘தேர்தல் நடைமுறைகள் தொடங்கியபிறகு நீதிமன்றம் தலையிட முடியாது’ என 21.1.52 அன்று தீர்ப்பு வழங்கியது. தேர்தல் நடைமுறைகள் ஆரம்பித்துவிட்டால் நீதிமன்றமும் தலையிட முடியாது.

‘தேர்தல் அதிகாரி வேட்புமனு பரிசீலனையில் தனது கடமையை சரிவரச் செய்தாரா?’ என்ற கேள்வியை அந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் கேட்காது. ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுசாமியை மாற்றியதுகூட என் அளவில் தவறுதான். அவரை மாற்றியதன் மூலம் ‘தவறு செய்திருக்கிறார்’ என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டார்கள். 

சரியான வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், தேர்தலுக்குப் பிறகு வழக்கு போடலாம். உண்மை என நிரூபிக்கப்பட்டால் அந்தத் தேர்தல் முடிவு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும். இப்படித்தான் 2009-ம் ஆண்டு இளையாங்குடி இடைத் தேர்தலில் வென்ற தி.மு.க. வேட்பாளர் மதியரசன் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. மதியரசனை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் மாநாட்டுக் கட்சி உறுப்பினர் கலைமணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். ‘சரியான காரணமின்றி கலைமணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை’ எனச் சொல்லி நீதிபதி தனபாலன் இப்படித் தீர்ப்பளித்தார்.

இதன்படி பார்த்தால் வேட்புமனுவில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் போட்டியிட்ட வேட்பாளர்களோ அல்லது தொகுதியின் வாக்காளர்களோ நீதிமன்ற படியேறினால் நியாயம் கிடைக்கும்’’ என்றார்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.