Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வேலை சென்னையில; வீடு சென்னைக்கு வெளியில..." - 'டூ-லெட்' கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன்.

Featured Replies

"வேலை சென்னையில; வீடு சென்னைக்கு வெளியில..." - 'டூ-லெட்' கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன்.

 
 
Chennai: 

"நான் கவிஞர் விக்கிரமாதித்தனோட மகன். அப்பாவை வெச்சுத்தான் செழியன் சார்கிட்ட கேமரா உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். மனைவி, குழந்தைகள் எல்லாரும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டாங்க. அம்மா, அப்பா சென்னையில இருக்காங்க. சென்னைக்கும் சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம் பண்ண வேண்டிய சூழ்நிலை. இடையிடையில சினிமா வேலைகளையும் பார்த்துட்டு இருக்கேன்." ஆர்வமாக நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், தேசிய விருது வென்ற 'டூ-லெட்' படத்தின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன். 

செழியன்- டூ லெட்

"கணவன்-மனைவி இரண்டு பேர் வீடுதேடிப் போறதுதான் 'டூ-லெட்' படக்கதைனு சொல்றாங்களே..."

"2007-ல மென்பொருள் துறை தாக்கதுனால சென்னையில ஏற்பட்ட மாற்றங்களை மையமா வெச்சுப் படம் எடுக்கப்பட்டிருக்கு. அதாவது, ஐ.டி துறையினால சென்னையில ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருக்கு. மக்கள் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்குக் குடியேறுனாங்க. பொருளாதாரக் காரணமாக சென்னைக்குள்ள அவங்களால குடியிருக்க முடியாத சூழ்நிலை உருவாச்சு. வேலை சென்னைக்குள்ள இருக்கும். ஆனா, வீடு சென்னைக்கு வெளிப்புறத்துல இருக்கும். அந்தமாதிரி நானும் இந்தப் படத்துல என் மனைவியா நடித்த ஷீலா ராஜ்குமாரும் வீடு தேடிப் போவோம். எங்களுக்கு ஒரு மகனும் இருப்பான். இந்தச் சவாலை எப்படி சமாளிக்கிறோம், எங்களோட வாழ்க்கைத் தரம் என்ன என்பதுதான் கதை." 

"சுயாதீனப் படங்களுக்குப் பின் இருக்குற போராட்டத்தைப் பற்றி சொல்லுங்க..."

"சுயாதீனப் படங்கள் ஓடாதுனு பரவலான ஒரு கருத்து இருக்கு. கமர்ஷியல் ஹீரோவை வெச்சுப் பல கோடி செலவுல படம் பண்றதைவிட, ஒரேயொரு படம் கதைக்காக பண்ணலாம். அதோட ரீச் நமக்கு வேற லெவல் பக்குவத்தைக் கொடுக்கும். தமிழ்ல சுயாதீனப் படங்கள் (Independent movies) மிகக் குறைவு. இந்தப் படம் விருது வென்றதன் மூலமா, சுயாதீனப் படங்கள் தமிழ்ல அதிகரிக்கலாம். தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை எல்லாமே செழியன் சார்தான் பண்ணியிருக்கார். உண்மையான உழைப்புக்கும் திறமைக்கும் கிடைச்ச அங்கீகாரமாகத்தான் இதைப் பார்க்குறேன்."

"செழியனோட வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்துச்சு?" 

"ஒரு இயக்குநரா செழியன் சாரோட முதல் படம் 'டூ-லெட்'. சார் இயக்குநரா ஆகணும்னு நெனைச்சுத்தான் சினிமாவுக்கு வந்தார். நிறைய கமர்ஷியல் படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் அவற்றை மறுத்துட்டார். நல்ல கதையை மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கணும்ங்கிற எண்ணம் மட்டும்தான் சாருக்கு இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு சாரோட சொந்த செலவுல இந்தப் படத்தை எடுத்திருக்கார். 

செழியன் சாரோட உதவியாளர்கள்தான் இந்தப் படத்துலேயும் வேலை செய்திருக்காங்க. சில கமர்ஷியல் படங்களுக்கு இடையிலும், இந்தப் படத்துல வேலை செஞ்சதுக்காக அவங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம். 2003-ல இருந்தே செழியன் சாரை எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட 13 வருட நட்பு. 2005-ல நான் அவர்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். 'கல்லூரி', 'ரெட்டை சுழி', 'மகிழ்ச்சி', 'தென்மேற்கு பருவக்காற்று', 'பரதேசி' ஆகிய படங்கள்ல சாரோட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். இந்தப் படங்கள்ல வேலை பார்க்கும்போது, ஹீரோவோட காட்சிகளின் ஷாட் டெஸ்டுக்காக நான்தான் கேமரா முன்னாடி போய் நிற்பேன். அதுக்காகவே இந்தப் படத்துல என்னை ஹீரோவாக்கிட்டார்.

சினிமா தவிர்த்து பெர்சனல் விஷயங்களைப் பேசினால்கூட, அதுக்கு ஏற்ற மாதிரி அறிவுரைகளைக் கொடுப்பார். வெளிய இருக்கும்போது சார்னு சும்மா பெயருக்குக் கூப்பிடுவேன். உண்மையிலேயே செழியன் சார் எனக்கு அண்ணன் மாதிரி."

சந்தோஷ் நம்பிராஜன்

"படத்தைத் தியேட்டர்ல ஏன் வெளியிடலை?"

"ஆன்லைன்ல படங்களை வெளியிடுவதற்கான வசதி நம்மகிட்ட இருக்கு. அதனால, வர்த்தக ரீதியா இந்த மாதிரியான படங்கள் வெற்றியடையுமாங்கிற பயம் எங்களுக்கு இல்லை. இந்தப் படத்தை முதல்ல ஆன்லைன்ல ரிலீஸ் பண்ற ஐடியாவுலதான் இருந்தோம். இப்போ ரெஸ்பான்ஸைப் பார்த்தப் பிறகு, ஸ்டிரைக் முடிந்ததும் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலாம்னு முடிவுக்கு வந்துருக்கோம். என்னைப் பொருத்தவரை, கதையும் கதை சொல்ற விதமும்தான் முக்கியம். ஹீரோ முக்கியமே இல்லை. இந்தப் படத்துல வேலை பார்த்தவங்க எல்லாருமே புது ஆட்கள்தான். உலகளவுல அங்கீகரிக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா இது. 'விசாரணை', 'காக்கா முட்டை', 'அருவி' போன்ற படங்கள்கூட, 'டூ-லெட்' அளவுக்கு அங்கீகரிக்கப்படலை. 

"இதுவரை எந்தெந்த ஃபிலிம் பெஸ்டிவல்ல இந்தப் படம் விருது வாங்கியிருக்கு?"

 

"கொல்கத்தா இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல், ஹ்யூமன் ரைட்ஸ் அவார்ட்ஸ், கொலம்பியா இன்டர்நெஷனல் காம்படீஷன், நியூயார்க் இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவல், இந்திய தேசிய விருது உட்பட இதுவரை 12 விருதுகள் வாங்கியிருக்கு. அடுத்ததா எனக்குப் படம் பண்ணனும்னு ஆசை. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து அதுக்கான திட்டங்களை உருவாக்கிக்கிட்டு இருக்கோம்." என்று நம்பிக்கையுடன் முடித்தார், சந்தோஷ் நம்பிராஜன்.  

https://cinema.vikatan.com/tamil-cinema/interview/122204-national-award-winning-film-tolet-hero-santhosh-nambirajan-shares-his-experience.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

"புத்தர் சொன்ன அழகான விஷயமும், மேக்கப் இல்லாத முகங்களும்!" - 'டூ-லெட்' அனுபவம் சொல்லும் செழியன்

 

65-வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை  'டூ-லெட்' வென்றுள்ளது. இதை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருக்கிறார். 'ஜோக்கர்', 'பரதேசி', 'தாரை தப்பட்டை' படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த இவர் இயக்கியிருக்கும் முதல் படம் இது. செழியனிடம் பேசினோம். ''தொடர்ந்து வாழ்த்துகள் வந்துக்கிட்டே இருக்கு, ஒரு இயக்குநரா ரொம்ப சந்தோஷமா இருக்கு!" எனப் பேசத் தொடங்குகிறார், செழியன்.

டூ-லெட் செழியன்

"தேசிய விருது அறிவித்த தருணம் சந்தோஷமா இருந்தது. ஏன்னா, இத்தனை படங்களுக்கு மத்தியிலே என் படம் கவனிக்கப்பட்டிருக்கு. நிறைய சிரமங்களுக்கிடையில்தான் இந்தப் படத்தைத் தயாரிச்சோம். நண்பர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்த படம் இது. ஒரு தயாரிப்பில் இருக்கிற எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டுதான், இந்தப் படத்தை முடிச்சோம். விருதுகளுக்கு அனுப்புற படத்தைத் தரமா எடுக்கணும். இந்தப் படத்தை உருவாக்கும்போது மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்த விஷயம் இதுதான். 

ஏற்கெனவே நிறைய ஃபிலிம் பெஸிட்டிவல்களில் இந்தப் படம் விருது வாங்கியிருக்கு. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சவுண்ட்... கிட்டத்தட்ட எல்லா விருதும் வாங்கியிருக்கு. இத்தனை விருதுகள் வாங்கியிருந்தாலும், இந்தியாவில் தேசிய விருது வாங்கியிருப்பது இன்னும் சந்தோஷம். டி.வியில தேசிய விருது அறிவிச்ச சமயத்தில் நண்பர் ஒருவர்,  'டி.வியைப் பாருங்க'னு போன் பண்ணி சொன்னார், ஒவ்வொரு விருதுகளா அறிவிச்சுக்கிட்டு இருந்தாங்க. தமிழ்ப் படம் குறித்து எதுவும் இல்லை. 

அப்போ, ஒரு நிருபர் 'தமிழ் படத்துக்கு விருது சொல்லலை'னு பேசிக்கிட்டு இருந்தார். உடனே, சிறந்த தமிழ்ப் படம் 'டூ லெட்'னு சொன்னாங்க. கேட்டதும், அவ்ளோ சந்தோஷம். இந்தப் படத்தை தேசிய விருதுக்காக அனுப்பியிருந்தேன். நம்ம படம் தரமானதா இருந்தா, விருதுக்கு முன்னிலை பெறும்னு நம்பிக்கை இருந்தது. தவிர, நிறைய தகுதியான விருதுகளை என் படம் ஜெயிச்சிருந்ததுனால, நம்பிக்கை கொஞ்சம் அதிகமாவே இருந்தது. தேசிய விருது எப்போ அறிவிப்பாங்கனு தெரிஞ்சா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். எப்போ அறிவிப்பாங்கனு தெரியலை. அதனால, ரொம்ப எதிர்பார்க்கலை. தேசிய விருதுகளை ஒவ்வொன்னா சொல்லிக்கிட்டு இருக்கும்போது, எனக்கு த்ரில்லர் படம் பார்த்த ஃபீலிங். 'டூ-லெட்' படத்துக்கு தேசிய விருது கிடைச்ச சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துறதுனு தெரியலை. 

இந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களோட வாழ்க்கையில இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்கள் வாழ்க்கைனு எல்லாமே இந்தப் படத்துல இருக்கு. 'உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி'ங்கிற அழகான விஷயத்தை புத்தர் சொல்லியிருக்கார். நம்ம வாழ்க்கையிலே நாமளே பெரிய சூழ்நிலையில மாட்டிக்கிட்டு இருக்கும்போது, நாமளே அதுக்குக் காட்சியா இருப்போம்னு தோணுச்சு. அதனாலதான் வாழ்க்கையில நடந்த சம்பவங்களையே படமாக்கிட்டேன்.  

இந்தப் படத்தை 2016 டிசம்பர்ல எடுக்க ஆரம்பிச்சேன். டீமானிடைஷேசன் அறிவிப்பு வந்திருந்த சமயம். அதனால, ரொம்ப சிரமப்பட்டேன். படத்துல ஒரு சின்னப் பையன் நடிச்சிருக்கான். அவனை வெச்சு நாள் முழுக்க ஷூட் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஏன்னா, அவன் ரொம்ப சோர்வு அடைஞ்சிருவான். சென்னையிலதான் படத்துக்கான ஷூட்டிங் நடந்தது. படத்துக்காக எந்த செட்டும் போடலை. எல்லாமே லைவ் லொக்கேஷன்ல எடுத்ததுதான். முப்பது நாளில் முழுப் படத்தையும் எடுத்து முடிச்சுட்டோம். படத்துல நடிச்ச யாரும் மேக்கப்கூட போடலை. இந்தப் படத்தை தயாரிக்கச் சொல்லி  சில தயாரிப்பாளர்களை அணுகினேன். ஆனா, எல்லோருமே படத்துல சில பாடல் காட்சிகளை வைக்கச் சொன்னாங்க. ஹீரோயினா நடிக்க, பெரிய நடிகை யாரையாவது ஒப்பந்தம் பண்ணுங்கனு சொன்னாங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. ஏன்னா, இது எதார்த்தமான படம். படத்துல பாடல் மட்டுமில்ல, இசையே கிடையாது. இப்படி ஒரு முயற்சியை எடுக்க யாரும் முன்வராதப்போதான், என் மனைவியே இந்தப் படத்தை நாமே தயாரிக்கலாம்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த ஊக்கத்தில் தயாரிக்க ஆரம்பிச்சேன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என் மனைவிதான். இந்தப் படம் நிறைய விருதுகள் வாங்கினது அவங்களுக்கும் சந்தோஷம். முக்கியமா, தேசிய விருது வாங்குனது ரொம்பவே சந்தோஷம்!'' என்று முடிக்கிறார், செழியன்.

 

வாழ்த்துக்கள் செழியன்!

https://cinema.vikatan.com/tamil-cinema/news/122232-director-chezhian-shares-his-feelings-for-receiving-national-award-for-tolet-movie.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.