Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொம்மைக் கடையைக் காட்டி நடையைக் கட்டும் நிலை

Featured Replies

பொம்மைக் கடையைக் காட்டி நடையைக் கட்டும் நிலை

 

கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஜே.வி.பி.யின் மே தின ஊர்வலத்தில் சுமந்திரன் எம்.பி.யும் கலந்து கொண்டிருந்தார். இந்த ஜே.வி.பி. தான் சட்ட நடவடிக்கை மூலம் வடக்கையும் ,கிழக்கையும் பிரித்து வைத்தது. அண்மையில் சுமந்திரன் எம்.பி. வடக்கோடு கிழக்கை இணைக்க கிழக்கு முஸ்லிம்கள் சம்மதிக்கவில்லை எனவும் இன்னும் சிறிது காலத்தில் கிழக்கு தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள் எனவும் கூட கூறியிருந்தார். இதன் மூலம் அவர் ஜே.வி.பி.யின் முன்னோடி செய்கையை சரி காணவே செய்கிறார் என நினைக்கிறேன்.

கிழக்கில் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் பேரின குடியேற்றங்களையும் பேரின அகழ்வாராய்ச்சிகளையும் நில அபகரிப்புகளையும் சிலை வைப்புகளையும் ஜே.வி.பி. கண்டித்ததுண்டா? சிறுபான்மைகளின் அடிப்படை உரிமைகள் அபகரிக்கப்படுகின்ற போதும் அவர்கள் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்ற போதும் எதிர்த்ததுண்டா? சிங்கள வாக்கு வங்கியில் சிறு அளவில் மட்டும் தொக்கி நிற்கும் அது. அதையும் இழக்காதிருப்பதற்காக மேலோட்டமாக மட்டும் ஜனநாயகம், பொதுவுடமை, குடியரசு என்றெல்லாம் பேசுகிறது. உண்மையாகவே சம தர்மத்தையும் பொது உடமையையும் அடிப்படைகளாக கொண்ட ஜே.வி.பி. பேரின வாதத்துக்கு எதிராகவே நிற்க வேண்டும். எனினும் அது இதுவரை சமஷ்டியை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜே.வி.பி.யோடு பேசி வருவதாகவும் அது இனப்பிரச்சினையில் இணக்கப்பாட்டுக்கு வருமாயின் அதன் 20ஆம் சட்ட திருத்தத்துக்கு தனது கட்சி ஆதரவு வழங்கும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கமே தனது கட்சியின் நீண்டகால தீர்மானம். அதை இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கியே கொண்டு வருமாறு ஜே.வி.பி.யிடம் கோருகிறோம். அதற்கு மாறாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மட்டும் ஒழிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தாலும் கூட அதுவும் எமது கோரிக்கைகளில் ஒன்று என்பதால் அதை பயன்படுத்தி அதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ் விடயத்தில் எந்த நிபந்தனையும் விதித்திருக்கக் கூடாது. காரணம் இது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் மூலம் மக்களாணை பெற்றுக்கொண்டதாகும். அது மட்டுமல்ல, நிறைவேற்று ஜனாதிபதியாக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரே இருப்பார். சகல அதிகாரங்களும் தனி மனிதனிடம் இருப்பது ஜனநாயகத்துக்கு அடியோடு முரணானதாகும்.

அதை சிறுபான்மைகளால் அகற்றவே முடியாது. தற்போதுள்ள சூழலில் பெருங்கட்சிகளும் வாக்குறுதியை மீறி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தக்க வைக்கவே முயல்கின்றன. எனவே, வேறு முக்கிய விடயங்களில் முரண்பாடுகள் இருந்தபோதும் கூட இதில் ஒன்று பட்டாக வேண்டும். ஏனெனில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே தமிழ் மக்களுக்கான தீர்வை அழித்து யுத்தத்தை தொடுத்து பேரழிவுக்கு உள்ளாக்கியது. அதையே இப்போது பேரின வாதம் அடித்தளமாக கொண்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் தனி மனித சர்வாதிகாரத்திடம் அகப்பட்டு கொண்டே இந்த நிலைக்கு உள்ளாகியிருக்கின்றன. ஜே.ஆர். ஓர் எம்.பி.யாக மட்டும் இருந்து கொண்டு 140 எம்.பி.க்களிடமிருந்து திகதியிடப்படாத இராஜினாமா கடிதங்களை பெற்று உருவாக்கியதே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையாகும். இதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சபை தனது முழு அதிகாரத்தையும் தனி மனிதனிடம் தாரை வார்த்து விட்டது. எதிர்க்கட்சியிலிருந்து சிலரை இணைத்துக் கொண்டே மஹிந்த ராஜபக் ஷ 18 ஆம் ஷரத்தை நிறைவேற்றி நிறைவேற்று அதிகாரத்தை மேலும் கூட்டி கொண்டார்.

1993 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளும் அதை நீக்குவதாக கூறியே ஆட்சிக்கு வந்தன. எனினும் தனித்து ஆளும் கட்சியால் மட்டும் அதை இரத்தாக்குவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெற முடியாதிருந்தது. இரு பெருங்கட்சிகளும் சேர்ந்திருந்தால் அதை சாதித்திருக்க முடியும். இப்போது சேர்ந்திருப்பினும் வலிமை இல்லை. காரணம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 80 வீதமானோர் ஜனாதிபதி மைத்திரியோடு இல்லை மகிந்தவுடனேயே இருக்கிறார்கள். இந் நிலையில் ஜே.வி.பி.யின் தனிநபர் பிரேரணை எப்படி அமையும்? என்பதையும் சுமந்திரன் உணர வேண்டும். இந் நிலையில் 20ஆம் திருத்த யோசனையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது மட்டுமே உள்ளடக்கப்படும். ஏனைய தேசிய பிரச்சினைகள் இருக்காது என ஜே.வி.பி. கூறியுள்ளது. இது பற்றி சகல கட்சிகளோடும் பேசுவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடும் பேசி எமது நிலைப்பாட்டை தெளிவாக்குவோம் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதே நிலைப்பாட்டில் அரசும், எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும், நாட்டு மக்களும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா உறுதிபடக் கூறுகிறாரே? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் அவர் கூறி விட்டார். இது பற்றி அவர் காரணம் கூறுகையில், தேசிய பிரச்சினைக்கு தீர்வு அவசியம். அதை நாம் மறுக்கவில்லை. எனினும் தற்போதைய சூழ்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதே பிரதானமானதாகும். அதை நீக்கிய பின்பே ஜனநாயக தீர்வுகளை அனைவரும் அமர்ந்து பேசலாம். தமிழருக்கான தீர்வுகளையும் நீண்ட கால அரசியல் நெருக்கடிகளையும் பேசி தீர்வுகளை கண்டு கொள்ள முடியும் என்றார். தமிழர் பிரச்சினையை அவர் தவிர்க்க காரணம் என்ன? அதை சேர்த்து கொண்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே வென்று விடும் என அவர் கருதுவதேயாகும். மஹிந்த தரப்பு இப்போதைக்கு தனது வேட்பாளரை 2020 ஆண்டுகளுக்கான ஜனாதிபதி தேர்தலுக்கு அறிவிக்கா விட்டாலும் உரிய நேரத்தில் அறிவிக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறது. மறுமுறை போட்டியிடமாட்டேன் என மைத்திரி வாக்குறுதி வழங்கியிருந்தாலும் கூட இரு முனையில் அகப்பட்டிருக்கும் அவர் போட்டியிட முன் வருவதையும் தவிர்க்க முடியாது. மைத்திரிக்கும் மஹிந்தவுக்கும் இடையில் சிக்குண்டதால் மீள நினைக்கும் ரணிலும் களத்தில் இறங்கவே செய்வார்.

இந் நிலையில், ஜே.வி.பி. பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ள 20ஆம் திருத்தத்தை தமிழ் தரப்பினர் ஆதரிப்பதென்பது அவர்களின் கொள்கைகளில் ஒன்றாக இருந்தபோதும் பாராளுமன்ற பெரும்பான்மையின் நிலைப்பாட்டை

 புரிந்து கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யின் கோரிக்கை பாராளுமன்றத்தில் ஆளுமை செலுத்தும் சூழல் இருந்தால் தான் இது சாத்தியமாகும். வெற்றி உறுதியற்ற சின்னஞ் சிறு கட்சியை நம்பி பென்னம் பெரிய கட்சிகளை உதாசீனம் செய்தால் எதிர்கால ஜனாதிபதியிடம் பின்னடைவே ஏற்படும். தமிழர் பிரச்சினையை 20 ஆம் திருத்தத்தோடு சேர்த்தால் இரண்டும் மறுக்கப்படும் நிலைப்பாடும் உண்டு.

ஜே.வி.பி.யின் பேரின செயற்பாடுகள் என்ன? யாப்பில் பௌத்த மத சாசன முன்னுரிமைகளோடு சிறுபான்மை காப்பீடான 29ஆம் ஷரத்து அகற்றப்பட்டிருப்பதையும் அது ஆட்சேபித்திருக்கிறதா? இல்லையேல் சம தர்ம ஜனநாயக குடியரசு என யாப்பில் இயற்றி கொண்டு பேரின வாதம் அமுல்படுத்தப்படுவதை ஆட்சேபித்ததுண்டா இல்லையே?

எனினும், இலங்கையில் எல்லோரும் சமம் என அது அடிக்கடி முழங்கி வருவதையும் சிறுபான்மைகள் தாக்கப்படுகையில் ஆட்சேபிப்பதையும் மறுக்க முடியாது தான். எனினும் சம தர்ம கொள்கையின் படி பேரின வாதத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து உரிய தீர்வுகளை வழங்குவதற்கான எவ்வித அடையாளங்களையும் இதுவரை காட்டவில்லை. சுமந்திரனின் கருத்திற்கு பின்பும் கூட பிரதிபலிப்பு எதுவும் இல்லையே. அதற்கு ஜே.வி.பி. உடன்படா விட்டால் என்ன செய்வது என்பது பற்றியே கூடி ஆராய விருக்கிறார்களாம். எனினும், தனிப்பட்ட முறையில் சுமந்திரன் குறிப்பிடுகையில், ஜே.வி.பி. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மட்டும் ஒழிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தாலும் கூட அதுவும் எமது கோரிக்கைகளில் ஒன்று என்பதால் அதை பயன்படுத்தி அதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்கிறார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம் முழு நாட்டுக்கும் உரிய விடயமாகும். இனப் பிரச்சினைக்கான தீர்வு சிறுபான்மைகளுக்கு மட்டும் உரியதாகும். இந்த அரசு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக கூறி மக்களாணையை பெற்றுத்தான் அதை பாராளுமன்றத்தோடு பகிர்ந்து கொண்டது. இப்போது கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்துள்ள இரு பெருங் கட்சிகளும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மீது தனித்தனியாக கண் வைத்திருக்கின்றன. பாதி பாதி அதிகாரங்களால் இரண்டும் இழுபறிப்பட்டதாலேயே தனியாக முழு அதிகாரங்களையும் பெற முயல்கின்றன. இரு கட்சிகளும் அதை பங்கிட விரும்பா விட்டால் நீக்க விரும்புமா?

ஜே.வி.பி.யின் 20ஆம் சட்ட திருத்தத்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தொடர்ந்தும் இருப்பதில் நாட்டுக்கு நன்மை என்றால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்களை ஆராய்ந்து தீர்மானம் எடுப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசிம் தெரிவித்திருக்கிறார்.

யுத்தம் முடிந்து விட்டதால் நிறைவேற்று ஜனாதிபதி அவசியமில்லை என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். எனினும், தற்போதைய சூழலின் படியே அதை தீர்மானிப்போம் எனவும் அவர் கூறினார். யுத்த சூழலுக்காக நாட்டின் நலனை எண்ணியே இத்தகைய முறையை எமது கட்சி அறிமுகப்படுத்தியது. அப்போது ரோஹண விஜேவீரவும், மஹிந்த ராஜபக் ஷவும், சந்திரிகா பண்டாரநாயக்கவும் அமைந்த குழுக்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். எனினும் அப்போது எதிர்த்தவர்கள் இப்போது வேண்டும் என போராடுகின்றனர். இது கேலிக்கு உரியதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. சந்திரிகா எதிர்த்த போதும் நீக்கும் வாய்ப்பு அமையவில்லை. மஹிந்த ராஜபக் ஷ ஆரம்பத்தில் எதிர்த்த போதும் பின்பு மேலும் அதன் வலிமையை கூட்டி கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதே அந்த முடிவுக்கு வந்தது. இப்போது நாட்டின் சூழலை காட்டி அதை மேலும் தொடர நினைக்கிறது. எனினும் தற்போது யுத்தம் இல்லாமையால் அது அவசியமற்றது எனவும் கூறி கொள்கிறது. அதுவும் கூட முடிந்த முடிவல்ல. நாட்டு நலனுக்கு அது அவசியமாயின் திருத்தங்களோடு அதை அமுலாக்குவோம். எனவே, ஜே.வி.பி. கொண்டு வருகிறது என்பதற்காக அதை ஆதரிக்கும் அவசியம் எமது கட்சிக்கு இல்லை. இது பற்றி ஆராய்ந்தே உரிய தீர்மானத்தை எடுப்போம் என்றெல்லாம் கபீர் ஹாஷிம் கூறுகிறார்.

ஜே.ஆர். யுத்த சூழலுக்காகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டு வந்திருந்தார் என்றால் ஐக்கிய தேசியக் கட்சி யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டே அதை எதிர்த்திருக்க வேண்டும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வரை அதை எதிர்க்காதிருந்ததே ஏன்? இப்போது மக்களாணை பெற்ற பின் மறுக்க முடியுமா? யுத்த சூழலால் தான் கொண்டு வரப்பட்டது என்கிறாரே கபீர் ஹாசிம்? யுத்த சூழல் தான் இப்போது இல்லையே? நீக்க வேண்டியது தானே? நாட்டு நலனுக்கு அவசியமாயின் திருத்தங்களோடு அமுலாக்குவோம் என்கிறாரே.

ஜே.வி.பி.முன்வைக்கும் திருத்தங்களுக்கு அவை இசைவானவையாக இருக்குமா? ஜே.வி.பி. என்ன கூறுகிறது?

1)மக்களால் தெரிவாகும் நிலையை நீக்கி பாராளுமன்றத்தால் தெரிவாகும் நிலையை உருவாக்கல்

2)பல அதிகாரங்கள் அமைச்சரவைக்கு வழங்கப்படுவதால் சில அதிகாரங்களோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவராக இருப்பார்.

3)தற்போதுள்ள ஜனாதிபதியின் பதவி காலம் முடிந்த பிறகே புதிய திருத்தம் நடைமுறைக்கு வரும்.

4)அடுத்த ஜனாதிபதி பாராளு மன்றத்தாலேயே தெரிவு செய்யப்படுவார்.

5)இந்த திருத்தம் 8ஆம் திகதி ஜனவரி மாதம் 2020 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததும் பாராளுமன்றம் கலைக்கப்படும்.

6)பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி தொடர்ந்தும் அரச தலைவராக செயற்படுவார்.

7)ஜனாதிபதி அரசாங்கத்தின் தலை வரல்ல, அரச தலைவராக இருப்பார்.

8)முப்படை தளபதியாக இவர் தொடர்ந்தும் செயற்படுவார். தேசிய பாதுகாப்பு இவரிடமே இருக்கும். இவரே தேசிய பாதுகாப்பு குறித்த தீர்மானங்களையும் எடுப்பார்.

9)இவர் அமைச்சராக செயற்பட மாட்டார். அமைச்சரவையில் பங்கு கொள்ளவும் மாட்டார். அதன் தலைவராகவும் இவரால் செயற்பட முடியாது.

எனினும் அதில் தனது கருத்துக்களை முன் வைக்கும் அதிகாரம் உண்டு. மற்றோர் முன்வைக்கும் கருத்துக்களை தெரிந்து கொள்ளும் உரிமையும் உண்டு.

10)13 ஆம் ஷரத்துக்கான ஜனாதி பதியின் அதிகாரங்கள் மாற்ற முடியாது. மாகாணங்களில் ஆளுநர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரங்களும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் அப்படியே இருக்கும்.

11)அதிகார பரவலாக்கல் குறித்த எந்த யோசனையையும் உள்ளடக்க இடமளிக்க மாட்டோம்.

12)ஒற்றையாட்சி, பௌத்த மத முன் னுரிமை ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

13)உயர்ஸ்தானிகர் நியமனம் நேர டியாக இவரால் நியமிக்கப்படாமல் அமைச்சரவை அனுமதியோடு நிகழும்.

14)பொது மன்னிப்பு வழங்கப்படும் செயற்பாடும் இது போன்றே அமையும்.

15)விரும்பும் நேரம் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் அதிகாரமும் ஜனாதிபதியிடம் இல்லை.

16)நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும்.

17)அமைச்சர்கள் கட்சி மாறுவது தடுக்கப்பட வேண்டும். ஏனெனில், மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படுவோர் சுய இலாபத்துக்காக அவ்விதம் செய்வதை நிறுத்த வேண்டும் எனும் திருத்தங்களை ஜே.வி.பி.தனது 20ஆம் சட்ட திருத்தத்தில் கொண்டுவரவிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிடி கொடுத்து ஆட்டம் இழந்து விடக் கூடாது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-12#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.