Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

Featured Replies

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள்

1.இந்தியா

2.ஆஃப்கானிஸ்தான்

3.சிரியா

4.சொமாலியா

5.சௌதி அரேபியா

6.பாகிஸ்தான்

7.காங்கோ குடியரசு

8.ஏமன்

9.நைஜீரியா

10.அமெரிக்கா

எதனை அடிப்படியாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது?

சுகாதாரம், பாகுபாடு பார்த்தல், கலாசார மரபுகள், பாலியல் வன்கொடுமை, பாலியல் அல்லாத வன்கொடுமை, ஆள் கடத்தல். இந்த ஆறு மரபுகளைஅடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே, இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடு என்று கூறுகின்றன.

இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதே ஆய்வு ஏழு வருடங்களுக்கு முன்பும் நடத்தப்பட்டது. அப்போது இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.

பெண்கள் பிரச்சனைகளில் வல்லுநர்களாக இருக்கும் சுகாதார பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

சுகாதாரம்

சுகாதார குறைபாடு, எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு, பாலியல் நோய்கள், குழந்தை பேறுகால ஆரோக்கியம், குழந்தை இறப்பு விகிதம், கருத்தடை மற்றும் குடும்ப கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை கணக்கிட்டு கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதில் முதல் மோசமான நாடு ஆஃப்கானிஸ்தான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியா இதில் 4வது இடத்தில் உள்ளது.

பாகுபாடு

வேலையில் பாரபட்சம், வாழ்வாதாரத்தை இயக்குவதில் இயலாமை, நிலம், சொத்து அல்லது பரம்பரை உரிமைகளில் பாகுபாடு, கல்வி பற்றாற்குறை, உள்ளிட்டவைகளை அடக்கி பாகுபாட்டில் எது மோசமான நாடு என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா முறையே ஒன்று மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன.

கலாசார மரபுகள்

இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண் பிறப்புறுப்பு சிதைவு, குழந்தை திருமணம், கட்டாயத் திருமணம், உடல் ரீதியான துன்புறுத்தல், பெண் சிசுக்கொலை போன்றவற்றை அடிப்படையாக வைத்து கேள்விகள் கேட்கப்பட்டன.

கலாசார மரபுகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பாலியல் வன்கொடுமை

பாலியல் ரீதியான வன்கொடுமை, குடும்ப வன்முறை, யாரென்று தெரியாத நபரால் பலாத்காரம் செய்யப்படுவது, இது தொடர்பான வழக்குகளில் முறையான நீதி கிடைக்காதது, கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொள்வது என இதிலும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

பாலியல் அல்லாத வன்கொடுமை

வன்முறை, உடல் மற்றும் மன ரீதியாக இங்கு பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.

ஆள் கடத்தல்

வீட்டில் அடிமைபடுத்துதல், கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத் திருமணம் மற்றும் பாலியல் அடிமையாக நடத்தப்படுவது என இவற்றை அடிப்படையாக வைத்து பெண்களுக்கு எது ஆபத்தான நாடு என்று கேட்கப்பட்டது. இதிலும் இந்தியாவே முதலிடத்தில் அபாயகரமான நாடாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேட்கப்பட்ட ஆறு பிரிவுகளில், 3 பிரிவுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே மேற்கத்திய நாடு அமெரிக்கா என்கிறது தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவு.

https://www.bbc.com/tamil/india-44611857

  • தொடங்கியவர்

இந்தியா பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு என்பது உண்மையா?

 
 

உலகிலேயே பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸ்ன் ராய்டர்ஸ் ஃபவுண்டேஷன் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடு என்பது உண்மையா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியா ஆபத்தான நாடாகதான் உள்ளதா?

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை தன்னால் ஒப்புக் கொள்ள முடியாது என்று பிபிசி தமிழடம் தெரிவித்தார் தேசிய வீட்டுப் பணியாளர்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி.

இருப்பினும் சில சமயங்களில், குறிப்பிட்ட அளவில் பெண்களுக்கு வழங்கப்படக் கூடிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மேலும் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார் வளர்மதி.

பாதுகாப்பின்மையினால் சில இடங்களில் பெண்கள் தனியாக பயணம் செய்ய முடியாத நிலையே இன்றளவும் இங்கு இருப்பதாகவும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையே நிலவுவதாகவும் தெரிவிக்கிறார் வளர்மதி.

இந்தியா பெண்களுக்கான நாடாக இருந்தால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும் கூறினார் அவர்.

”சட்டங்களை சரியாக பயன்படுத்த வேண்டும்”

இந்த ஆய்வு எடுக்கப்பட்ட முறை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என பிபிசி தமிழிடம் பேசத் தொடங்கிய மனித உரிமை செயற்பாட்டாளர் சுதா ராமலிங்கம், அந்த ஆய்வில் குறிப்பிட்ட அளவுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடு என்று தான் உணரவில்லை என்று கூறுகிறார்.

"இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமையால் பிரச்சனைகளை வெளியே கொண்டு வருகின்றனர்."

காலம் காலமாக பெண்கள் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டும் வருகின்றனர். எனவே அது இன்றைய சூழலில் திடீரென அதிகரித்துவிட்டதாக கூறுவதை தான் கேள்விக் குறியுடன் பார்ப்பதாகவும், தற்போது பெண்கள் தங்கள் பிரச்சனைகளை வெளியே சொல்ல அதிகமாக முன்வருவதாகவும் தெரிவித்தார்.

ஊடகங்கள், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் படிப்பறிவு ஆகிய காரணங்களால் சின்ன பிரச்சனைகளாக இருந்தாலும் அதற்கான நிவாரணத்தை பெண்கள் நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சுதாராமலிங்கம்.

தற்போது இருக்கக் கூடிய சட்டங்களை சரியாக பயன்படுத்தினாலே குற்றங்களை நிச்சயமாக குறைக்கலாம் என்றும் கூறுகிறார் சுதாராமலிங்கம்.

இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடு என்பது உண்மையா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகவே உள்ளது என்கிறார் எழுத்தாளர் தமயந்தி.

பெண் பாதுகாப்பு என்பது மனரீதியான பாதுகாப்பு என்பதையும் குறிக்கும் எனத் தெரிவிக்கும் தமயந்தி, இங்கு ஒன்றோடு ஒன்றோடு தொடர்புடையதாகவே உள்ளது என்கிறார். கலையின் பிரதிப்பலிப்பு அரசியலிலும், அரசியலின் பிரதிப்பலிப்பு சமூகத்திலும், சமூகத்தின் பிரதிப்பலிப்பு தனி மனித வாழ்க்கையில் வெளிப்படும். எனவே அனைத்திலும் பெண்களின் இருப்பு என்பது மேம்பட வேண்டும் என்று கூறும் தமயந்தி, சக மனிதர்களை மதிக்காமல் சமூக வளர்ச்சி என்பது ஏற்படாது என்கிறார்.

’இந்த ஆய்வை ஏற்க முடியாது’

இந்த ஆய்வை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா போன்ற மிகப்பெரிய ஒரு நாட்டில் இந்த ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

 

 

இந்தியாவில் உள்ள பெண்கள் இதற்கு முன்பு இருந்த காலங்களை காட்டிலும், சட்ட உரிமைகள் மற்றும் சட்ட அமைப்பை அணுகும் நடைமுறைகள் குறித்து நன்கு அறிந்துள்ளனர் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தியாவுக்கு அடுத்து இடம்பெற்றுள்ள சில நாடுகளில் பெண்கள் பொதுவெளியில் பேசுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை"

மேலும் தேசிய பெண்கள் ஆணையம், மாநில மகளிர் ஆணையம், பல்வேறு அமைப்புகள், மற்றும் ஊடகங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் என்ன நிலை?

இதுகுறித்து தமிழக மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதனை தொடர்பு கொண்ட போது, தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்த கருத்தை அவரும் முன்மொழிந்தார்.

மிகச் சிறிய எண்ணிக்கையிலான நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வைக் கொண்டு இந்தியா ஆபத்தான நாடு என்று கூற இயலாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் தற்போதுதான் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையே வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் என்று கூறப்படும் நாடுகளில் குற்றங்கள் எந்தளவுக்கு வெளியில் காட்டப்படுகின்றன என்பது தெரியவில்லை என்றும் கூறுகிறார் அவர்.

ஊடகங்களில் விழிப்புணர்வுக்காக குற்றங்கள் அதிகமாக காட்டப்படுகின்றன. ஆனால் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக அதற்கு அர்த்தமில்லை. குற்றங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெற்றாலும் தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த கண்ணகி பாக்கியநாதன், விரைவில் அரசுடன் கலந்தாலோசித்து பெண்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்படும் என்றும் கூறினார்.

 

https://www.bbc.com/tamil/india-44624638

  • தொடங்கியவர்

இந்தியா பெண்களுக்கு ஆபத்தான தேசம்: இந்த ஆய்வை எப்படி எடுத்துக்கொள்வது?

 
 
 

இந்தியாதான் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்று கூறும் தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் நானும் கலந்துகொண்டேன். இது இந்தியாவுக்கு எந்த இடம் கிடைத்துள்ளது என்பது முக்கியமல்ல.

பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் மீதான வெறுப்பும், ஆணாதிக்கமும் இந்த சமூகத்தை ஆள்கிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆறு பெண்களின் பிரச்சனைகளிலும் இந்தியா மிகவும் மோசமான நிலையிலுள்ளது.

இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது என்று ஊடகங்களில் வந்ததும் நமது விவாதம் மாறிவிடுகிறது.

இது நமது நாட்டுக்கு எதிரான புள்ளிவிவரம் என்று கூறுவதை விடுத்து, இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து நாம் விவாதிக்க வேண்டும். அவர்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.

இத்தகைய விவாதத்தை தூண்டுவதன் மூலம் இந்த ஆய்வு நன்மையே செய்துள்ளது.

அரசு மட்டுமே இதற்கு பொறுப்பு என்று நான் கூறவில்லை. குடிமைச் சமூகத்துக்கும், இந்திய மக்களுக்கும் இதில் பங்குள்ளது.

எல்லா விதமான வர்க்கப் பின்னணியும் உடைய, எல்லா சமூகக் குழுக்கள் இடையிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அவர்களை இரண்டாம் தரமானவர்களாக நடத்தும் புறக்கணிப்பு நிகழ்கிறது.

அதிக வருமானம் உடைய, நன்கு படித்தவர்கள் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர்.

பெரும்பாலான பெண்கள் எல்லா மட்டத்திலும் பாரபட்சத்தை சந்திக்கின்றனர்.

பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2013லேயே பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எத்தனை பெண்களுக்குத் தெரியும்?

இந்தியா ஒரு மக்களாட்சியைப் பின்பற்றும் நாடாக உள்ளபோதிலும், இந்தியப் பெண்களில் ஒரு பகுதியினர் முன்னேற்றம் அடைந்துவரும் சூழலிலும், ஆணாதிக்கம் தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது.

மக்களாட்சி உள்ள இந்தியா மக்களாட்சி இல்லாத அரசுகள் உள்ள நாடுகளுடன் இந்த ஆய்வில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்தக் கேள்வி எழுவது இயல்பானதுதான். சிரியா, ஆப்கானிஸ்தான், சௌதி அரேபியா, சோமாலியா ஆகிய நாடுகள் போரால் பாதிக்கப்பட்ட, பழமைவாதம் அதிகமாக உள்ள நாடுகள்.

அந்த நாடுகளில் வாழும் பெண்கள் எளிய வாழ்க்கை வாழ்வார்கள் என்று யாரும் எதிரிபார்க்கவில்லை. அந்த நாட்டுப் பெண்கள் அதிக அளவிலான இன்னல்களுக்கு ஆளானவர்கள்.

  •  

ஆனால், இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு நிகராக இருந்திருக்க வேண்டும். அந்த நாடுகளின் சட்டதிட்டங்கள் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்குகின்றன.

இந்த ஆய்வின் முடிவுகளை சரியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தேசமாக எங்கு தோல்வியடைந்துள்ளோம் என்பதை ஆராய வேண்டும்.

ஆளும் கட்சி மட்டுமல்லாது எதிர்க்கட்சிகள் கூட, பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவை குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

women

காவல்துறை உள்ளிட்ட அரசின் துறைகளும் இன்னும் அதிகமாக உணர்ந்து செயல்பட வேண்டும். காரணம், பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது இங்கு மிகவும் இயல்பானதாகப் பார்க்கப்படுகிறது.

வரதட்சணைக்காக கணவன் மனைவியை அடிப்பதுகூட இந்த சமூகத்தில் இன்னும் முழுமையாக விலக்கி வைக்கப்பட்டதாகவில்லை. ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளும் பெண்கள் உரிமை மற்றும் சமத்துவத்தை இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

இந்த சமூக ஆய்வை கண்டிப்பதைவிட, நமது சமூகத்தில் நிலவும் சூழலைக் குறிப்பிடும் ஒன்றாகவே இதை அணுக வேண்டும். இந்தியாவை அவமானப்படுத்துவதாக இந்த ஆய்வை கண்டித்தால், ஆணாதிக்க சமூகத்தை பொறுத்துக்கொள்கிறோம் என்றே பொருள்.

ஜாக்கியா சோமன் பாரதிய முஸ்லிம் மகிலா அந்தோலன் அமைப்பின் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவர்.

https://www.bbc.com/tamil/india-44632039

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.