Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி

Featured Replies

சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி

 
 
சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலிபடத்தின் காப்புரிமைTWITTER

தனது முந்தைய மூன்று படங்களையும் விஷாலை நாயகனாக வைத்து இயக்கிய திரு, இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கை கதாநாயகனாக்கியிருக்கிறார். திருவின் முந்தைய படமான நான் சிகப்பு மனிதன் படத்தோடு இந்தப் படத்தை நிச்சயம் ஒப்பிடலாம்.

அதாவது, சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கை திடீரென திசை மாறுகிறது.

பிறகு, உடல் நல பிரச்சனையுள்ள நாயகன் தன் பிரச்சனைகளுக்குக் காரணமான நபரைக் கண்டுபிடித்து பழிவாங்குவதுதான் இந்த இரு படங்களுக்கும் பொதுவான 'ஒன்-லைன்'.

   
திரைப்படம் Mr. சந்திரமௌலி
   
நடிகர்கள் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி, மகேந்திரன், அகத்தியன், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, சதீஷ்
   
இசை சாம் சிஎஸ்
   
ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம். நாதன்
   
இயக்கம் திரு
   
   

ராகவ் (கௌதம்) ஒரு குத்துச் சண்டை வீரன். தாயில்லாமல் தந்தை சந்திரமௌலியால் (கார்த்திக்) வளர்க்கப்பட்டவன்.

தந்தை சந்திரமௌலிக்கு தன்னுடைய அந்தக் கால பத்மினி கார் மீது ஏகப்பட்ட காதல். குத்துச் சண்டையில் தொடர்ந்து வெற்றிபெற்றுவருகிறான் ராகவ்.

மது (ரெஜினா கஸான்ட்ரா) என்ற பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், திடீரென ஒரு நாள் இரவில் நிகழும் கார் விபத்தில் சந்திரமௌலி கொல்லப்படுகிறார்.

ராகவின் கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. சில நாட்களில் பைரவி (வரலட்சுமி)என்ற பெண்ணின் இறப்புச் சான்றிதழ், ராகவின் வீட்டிற்கு வருகிறது.

இதற்கிடையில், நகரில் ஒரு குறிப்பிட்ட வாடகைக் கார் நிறுவனத்தின் காரில் பயணம் செய்பவர்கள் அவ்வப்போது கொல்லப்படுகிறார்கள்.

சந்திரமௌலியின் மரணம் விபத்தா, பைரவி என்பது யார், வாடகைக் கார் பயணத்தில் நிகழும் கொடூரங்களுக்குக் காரணம் என்ன என்பதை தன் பார்வைக் குறைபாடோடு கண்டுபிடித்து, பழிதீர்க்கிறார் ராகவ்.

சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலிபடத்தின் காப்புரிமைTWITTER

ஏதோ ரொமான்டிக் காமெடி படத்தைப் போலவே மிக சாவதானமாகத் துவங்குகிறது படம். அதிலும் முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் பாடல்கள் நம் பொறுமையை வெகுவாகவே சோதிக்கின்றன.

ஆனால், சட்டென இடைவேளையின்போது திசைமாறுகிறது கதை. இதற்குப் பிறகு பைரவி என்ற பாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக அடுத்தடுத்த மர்மங்களை நோக்கி படம் நகர்கிறது. பிறகு, முடியும்வரை - எதிர்பாராத, எதிர்பார்க்கக்கூடிய -திருப்பங்கள்தான்.

ராகவும் சந்திரமௌலியும் மிக அன்னியோன்யமான தந்தை - மகன் என்பதை காண்பிப்பதற்காக முதல் பாதியில் வெகுநேரம் எடுத்துக்கொள்வதுதான் படத்தின் மிகப் பெரிய பிரச்சனை. பிற்பாதியில் அதை ஈடுசெய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர்.

ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தின் காரில் நடக்கும் கொலைகள் ரொம்பவுமே அமெச்சூர் தனமாக செய்யப்படுகின்றன. இந்த ஒட்டுமொத்த கொலைகளுக்கும் காவல்துறை அதிகாரிகள் சிலர் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதும் நம்பும்படியாக இல்லை.

ஆனால், படத்தின் பிற்பாதியில் இந்த மர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக கதாநாயகன் கண்டுபிடிப்பது படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.

சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலிபடத்தின் காப்புரிமைTWITTER

சந்திரமௌலியாக வரும் கார்த்திக், தன் பழைய காரை வைத்துக்கொண்டு செய்யும் அலப்பரைகளைவிட, ஃப்ளாஷ் பேக்கில் பைரவியாக வரும் வரலட்சுமியுடன் பழகும் காட்சிகளில் மிகவும் கவர்கிறார்.

குறிப்பாக, தன்னைப் போன்ற சின்னப் பெண்ணை, தள்ளிக்கொண்டு போகும் எண்ணமில்லையா என வரலட்சுமி கேட்டதும் தொடரும் காட்சிகள், பழைய கார்த்திக்கை கண் முன் நிழலாடச் செய்கின்றன.

கவுதம் கார்த்திக்கிற்கு இந்தப் படம் ஒரு பெரிய பிரேக் என்றுதான் சொல்ல வேண்டும். குத்துச் சண்டை வீரனாக, தந்தையின் மரணத்தைத் தாங்க முடியாதவராக, கண் பார்வை பாதிப்புடன் பழிவாங்குபவராக என கவுதம் கார்த்திக்கை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது இந்தப் படம்.

ராகவின் காதலி மதுவாக வரும் ரெஜினா கஸான்ட்ராவுக்கு படம் நெடுக கதாநாயகனுக்கு துணையாக இருக்கும் பாத்திரம். அதைச் சிறப்பாகவே செய்கிறார். இது தவிர மிகக் கவர்ச்சிகரமான உடையில் இரு பாடல்களிலும் வருகிறார்.

சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலிபடத்தின் காப்புரிமைTWITTER

சில காட்சிகளில் மட்டும் வரும் இயக்குனர் மகேந்திரன், அகத்தியன் ஆகியோரும் வில்லனாக வரும் சந்தோஷும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

வழக்கம்போல கதாநாயகனின் நண்பனாக வரும் சதீஷிற்கு நகைச்சுவையில் பெரிய பங்களிப்பு இல்லாவிட்டாலும், அவரது பாத்திரம் உறுத்தலாக இல்லை.

வரலட்சுமிக்கு உண்மையிலேயே மிகச் சிறப்பான பாத்திரம். அவருக்கும் கார்த்திக்கிற்கும் இடையிலான உறவு எம்மாதிரியானது என்று வரையறுக்காமலேயே செல்வது இயக்குனரின் புத்திசாலித்தனம் மிளிரும் தருணங்களில் ஒன்று.

கார்த்திக் - கவுதம் - ரெஜினா கூட்டணியும் பிற்பாதியில் சூடுபிடிக்கும் திரைக்கதையும் மிஸ்டர் சந்திரமௌலியை பார்க்கத்தகுந்த படமாக்குகின்றன.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44731615

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘மௌனராக’த்துக்கு ஓகே. இந்த ‘ஓகே கண்மணி’ காலத்துக்கு ஓகேவா? மிஸ்டர்.சந்திரமௌலி விமர்சனம் #MrChandramouli

 

இரு கால் டாக்ஸி நிறுவனங்களுக்கிடயே நடக்கும் தொழில் விரோதத்தில், விதியால் சிக்கி பல விளைவுகளைச் சந்திக்கிறது ஒரு சாதாரண குடும்பம். இதுதான் `மிஸ்டர். சந்திரமௌலி' படத்தின் ஒருவரிக் கதை.

‘மௌனராக’த்துக்கு ஓகே. இந்த ‘ஓகே கண்மணி’ காலத்துக்கு ஓகேவா? மிஸ்டர்.சந்திரமௌலி விமர்சனம் #MrChandramouli
 

‘சிறந்த கால் டாக்ஸி நிறுவனம்' என்ற விருதைப் பல வருடங்களாக பெற்றுவரும் 'கருடா கால் டாக்ஸி' நிறுவனத்தின் உரிமையாளர் அழகரிடம் (இயக்குநர் மகேந்திரன்) அதே துறையில் புதிதாக கால் பதித்திருக்கும் 'கோ கேப்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் விநாயக் (சந்தோஷ் பிரதாப்), 'அடுத்த வருடம் அந்த விருதை உங்கள் கையாலேயே நான் பெறுவேன்’ என்று சவால் விடுகிறார். 'நேத்து வந்த நீயெல்லாம் என்னை எதிர்க்கிற' என்று தனக்குள் கோபமாகிறார் அழகர். 

மிஸ்டர்.  சந்திரமௌலி

அதன் பிறகு சில கொடூரக் குற்றங்கள் நகருக்குள் நடக்க, ஒட்டுமொத்த சென்னையுமே பரபரப்பாகிறது. மறுபக்கம், வங்கி ஊழியர் சந்திரமௌலியும் அவரின் மகன் ராகவ்வும் தாங்கள் உண்டு தங்களது பத்மினி கார் உண்டு என நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த கால் டாக்ஸி கதையும் இந்தப் பத்மினி கார் கதையும் ஒரு புள்ளியில் எசகுபிசகாய் பிணைய, அடுத்தடுத்து பிரச்னைகளாய் நகர்கிறது கதை. இறுதியில் என்ன ஆனது என்பதே `மிஸ்டர் சந்திரமௌலி'.

 

 

மிஸ்டர்  சந்திரமௌலி

‘பாக்சர்’ ராகவாக கௌதம் கார்த்திக். இதற்கு முன் பல ஜானர் படங்களில் கதகளி ஆடியவர், இதற்கு முன்னால் வந்தப் படங்களில் என்ன செய்தாரோ அதையேத்தான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார், தவறான கதைத் தேர்வு உட்பட. கார்த்திக்குக்கு 'மௌன ராகம்' மனோகர்தான் காலத்தால் அழிக்க முடியாத கதாபாத்திரம். அலட்சியமான மாடுலேஷன், துறுதுறு நடிப்பு, நக்கல் சிரிப்பு... இதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் ட்ரேட் மார்க். அந்த மனோகரையே இந்த சந்திரமௌலியிலும் கலர் ஜெராக்ஸ் அடிக்க நினைத்து, நம்மை அடிஅடியென அடித்திருக்கிறார் கார்த்திக். அது `மௌனராகம்' காலத்துக்கு ஓகே, இந்த `ஓகே கண்மணி' காலத்துக்கு செட் ஆகலை சாரே!

 

 

 

 

இருவருமே நிஜத்திலும் அப்பா - மகன் என்பதால், இவர்கள் செய்யும் குறும்பு சில காட்சிகளில் தத்ரூபமாகவே இருக்கிறது. 'ரெஜினாவுக்கு இந்தப் படத்தில் வித்தியாசமான ரோல்' என இயக்குநர் சொல்வாரெனில், அது 'அந்த' கிளாமர் பாடலுக்காகத்தான் இருக்கும். முதல் பாதி முழுக்க காமெடி, காதல், பாக்ஸிங் என்றே நகரும் கதை, பாதிக்கு மேல்தான் முழு வீச்சோடு நகர ஆரம்பிக்கிறது. ஆனால், அந்தக் காமெடி, காதல், பாக்ஸிங் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதுதான் பரிதாபம். ஒன்றிரண்டு காமெடிகளுக்காவது சிரிக்க முடிகிறதே என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். மற்றபடி திரையில் காமெடி செய்பவர்கள்தான் சிரித்தும்கொள்கிறார்கள். சதீஷ், நண்டு ஜெகன் போன்றவர்களை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். 

 

 

எல்லாக் காட்சிகளையும் தேவையில்லாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சின்ன சாம்பிள். 'அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்' இவ்வளவுதான் பதில். ஆனால் 'அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நானும் அப்பாவும் லன்ச் சாப்பிட்டுட்டு இருந்தோம். நெஞ்சு வலிக்குதுனு சொன்னார். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனோம். கார்டியாக் அரஸ்ட்னு சொல்லிட்டாங்க' இப்படி புளிப்பு மிட்டாய் வசனங்களை எல்லாம் ஜவ்வு மிட்டாய் ஆக்குகிறார்கள்.

சாம் சி.எஸ்ஸின் மியூஸிக் எல்லாமே 'அல்ரெடி கேம் ப்ரோ' ரகங்கள். பின்னணி இசையைக் கேட்கும்போது `விக்ரம் வேதா' எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது. அதுவும்போக நின்றால் பாட்டு, நடந்தால் பாட்டு, நிமிர்ந்தால் பாட்டு எனப் `பாடி'படுத்தியிருக்கிறார்கள்.

Mr. Chandramouli

த்ரில்லர் படங்களில் லாஜிக் மீறல்கள், முதல் பாதி வரை கதைக்குள் வராமல் இருத்தல், அவர்களே ஜோக் சொல்லி அவர்களே சிரித்தல், அடிக்`கடி' பாடல்கள்கூட ஓகே. படத்தில் நினைத்தவர்களையெல்லாம் நினைத்த இடங்களில் வைத்து நினைத்தபடி போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். என்னதான் காவல்துறை ‘உங்கள் நண்பன்’ ஆக இருந்தாலும், ஒரு லிமிட் இல்லையா பாஸ்.

லாஜிக் ஓட்டைகளை எல்லாம் அடைத்து, திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் ஜாலியான ரைடாக இருந்திருக்கும் இந்த 'மிஸ்டர். சந்திரமௌலி.’

https://cinema.vikatan.com/movie-review/130018-mr-chandramouli-tamil-movie-review.html

  • தொடங்கியவர்

 

மிஸ்டர் சந்திரமௌலி என்பது, மௌன ராகம் படத்தில் கதாநாயகி ரேவதியின் தந்தையின் பெயர். அந்தப் படத்தில், கார்த்தி 'மிஸ்டர் சந்திரமௌலி' என அழைப்பது பிரபலமான நிலையில், இந்தப் பெயர் கார்த்திக் தன் மகனுடன் நடிக்கும் படத்திற்கு சூட்டப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நவீனன் said:

மிஸ்டர் சந்திரமௌலி என்பது, மௌன ராகம் படத்தில் கதாநாயகி ரேவதியின் தந்தையின் பெயர். அந்தப் படத்தில், கார்த்தி 'மிஸ்டர் சந்திரமௌலி' என அழைப்பது பிரபலமான நிலையில், இந்தப் பெயர் கார்த்திக் தன் மகனுடன் நடிக்கும் படத்திற்கு சூட்டப்பட்டிருக்கிறது.

 மெளனராகம் படத்தில் மிஸ்டர் சந்திரமெளலி...மிஸ்டர் சந்திரமெளலி என்று கூப்பிட்டு கார்த்திக் பண்ணுற லொள்ளு..  எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி அது.

கார்த்திக் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் ரேவதியின் அப்பா பாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று படக்குழு யோசித்துக்கொண்டிருந்தபோது கடைசியில் ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராமோட அப்பா பெயரை தெரிவு செய்தார்களாம்..

பிசி.ஸ்ரீராமோட தந்தை பெயர் சந்திரமெளலி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.