Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?!’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar

Featured Replies

`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?!’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar

 
 
 

என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்.

`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?!’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar
 

`குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் 
பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்'.

நா.முத்துக்குமார் தனது `வேடிக்கை பார்ப்பவன்' புத்தகத்தில் இந்த ஜென் கவிதையைக் குறிப்பிட்டிருப்பார். அவர் வாழ்வை இந்த ஜென் மனநிலையில் இருந்துதான் பார்த்திருக்கிறார். நாம் காண மறந்த அல்லது கண்டு கடந்துபோன நிகழ்வுகளை தரிசனம்போல நுட்பமாக அணுகியவர் முத்துக்குமார். பெருமழைக்குப் பிறகு இலைகளில் வழியும் மழைத்துளியை, அணில்கள் சுவைத்துத் தின்னும் கொய்யாப்பழங்களை, டிராஃபிக் நிறைந்த சென்னையில் ரிக்‌ஷாக்காரர் பாடும் கானாவை என நுட்பமாக வாழ்வை ரசித்து, அதைத் தன் எழுத்துகளில் நமக்குக் கொடுத்த ஒப்பற்றக் கலைஞன் நா.முத்துக்குமார்

`சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை...' அவர் வரிகளைப்போலவேதான் அவர் வாழ்வும். தன் அம்மா, அப்பா, மகன் குறித்து `அணிலாடும் முன்றில்' புத்தகத்தில் அவர் எழுதியவை இங்கே...

 

 

முத்துக்குமார்

அம்மா:

`அம்மா, நீ நிரந்தரமானவள். உனக்கு அழிவு இல்லை. ஆகாயம் நீ. அதில் சுற்றிச் சுடரும் சூரியன் நீ. சந்திரனும் நீயே. நட்சத்திரங்களின் நின்று ஒளிரும் பிரகாசத்திலிருந்து புலப்படுவது உன் கண்களன்றி வேறு என்ன?

 

 

 

நீயே முகிலாகவும், முகில் தூவும் மழையாகவும், மழையில் நனையும் நிலமாகவும் மலர்ந்துகொண்டிருக்கிறாய். நதியும் நீ, கரையும் நீ, கரை தாண்டி விரியும் காட்சியும் நீ!

சிறுபிள்ளை உடன் இருக்க, கார்த்திகை மாதத்தின் அந்திக் கருக்கலில் திண்ணை எங்கும் அகல்விளக்கு ஏற்றுபவளிடமும்; ஆலமரக் கிளையில் பழஞ்சேலையைத் தூளியாக்கி, கைக்குழந்தையைக் கிடத்திவிட்டு, அறுவடை வயலில் வேலைசெய்தபடி நொடிக்கொரு தடவை திரும்பிப் பார்ப்பவளிடமும்; அப்பார்ட்மென்ட் பூங்காவின் சிமென்ட் பெஞ்ச்சில் காத்திருக்கும் மகனை அலுவலகம் முடிந்து வந்து சட்டைப் புழுதியோடு அள்ளி அணைப்பவளிடமும்; பள்ளியின் மெயின் கேட் மூடிவிடக் கூடாதே என்கிற பதைப்பதைப்பில், மாநகரத்து சிக்னலில் இடுப்பில் யூனிஃபார்ம் குழந்தையோடு கடப்பவளிடமும்; புதைக்கிற மகன்களையெல்லாம் விதைக்கிற விதைகளாக எண்ணிக்கொண்டிருக்கும் ஈழத்துத் தாய்களிடமும் நான் காண்பது உன் முகம்தானே தாயே!

 

 

முத்துக்குமார்

அப்பா:

அன்புள்ள அப்பாவுக்கு...

உங்களுக்கு நான் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் `அன்புள்ள’ எனத் தொடங்கி, `இப்படிக்கு’ என முடியும் மிகச்சிறிய கடிதங்கள்.

முதன்முறையாக என் மனதின் ஆழத்திலிருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை நான், நீங்கள் உயிருடன் இருந்தபோதே எழுதியிருக்கலாம். படித்துப் பார்த்து, ஒரு புன்னகையோ ஒரு துளிக் கண்ணீரோ பதிலாகக் கொடுத்திருப்பீர்கள். நிச்சயம் புன்னகைதான் உங்கள் பதிலாக இருந்திருக்கும். அப்படியெல்லாம் அழுகிற மனிதர் அல்ல நீங்கள். இப்போது யோசித்துப்பார்க்கும்போது, என்றுமே நீங்கள் அழுது நான் பார்த்ததில்லை. எந்த அப்பாக்கள், பிள்ளைகள் முன்பு அழுதிருக்கிறார்கள்?

நள்ளிரவில் வீடு வந்தாலும், தான் வாங்கிவந்த தின்பண்டங்களை மனைவி திட்டத் திட்ட... உறங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைகளை எழுப்பி, அப்போதே ஊட்டிவிட்டு ரசிக்கும் பாசமான அப்பாவின் முகம்; உறவினர்கள் ஒன்றுகூடும் திருமணங்களில் முன்னிரவு நண்பர்களுடன் சீட்டாடிக்கொண்டிருக்கும்போது மடியில் சென்று அமர்ந்தால், சட்டெனக் கடுமை காட்டித் துரத்திவிடும் கோபமான அப்பாவின் முகம்; மாதக் கடைசியில் யாரிடம் கடன் வாங்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிச் சுற்றுலாவுக்குப் பணம் கேட்டால், பதற்றமாகும் அப்பாவின் முகம் என... அப்பாக்களுக்குப் பல முகங்கள் உண்டு. அழுதுகொண்டிருக்கும் அம்மாக்களின் முகங்கள்போல பிள்ளைகளுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதல்ல... அழுதுகொண்டிருக்கும் அப்பாவின் முகம்.

அப்பா... நீங்கள் உயிருடன் இருந்தபோது பல முறை பேச நினைத்து, எழுத நினைத்து, முடியாமல்போனதைத்தான் இந்தக் கடிதத்தில் எழுதப்போகிறேன். கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா! காலத்தின் காற்று எப்போதும் தாமதமாகத்தான் வீசும்போல. எல்லா பிள்ளைகளுக்கும் அப்பாதான் முதல் கதாநாயகன் என்பார்கள். அப்பா என்றால் அறிவு. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். நீங்கள் இறந்த 18-ம் நாள், பரணில் இருந்த உங்கள் பழைய டிரங்குப் பெட்டியைக் கிளறியதில், உங்கள் நாட்குறிப்புகளைப் படிக்கும் பெரும்பேறு கிடைத்தது. யாரோ, எப்போதோ படிக்கப்போகிறார்கள் எனத் தெரிந்தே எழுதப்படுபவைதானே நாட்குறிப்புகள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல், அப்பா, உங்கள் அதிகப்படியான தன்னம்பிக்கைதான் என் நம்பிக்கை என்று அப்போது புலனானது. இன்று வரை உலகை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் உங்கள் முகத்திலிருந்தே எனக்கான உணர்ச்சியை கடன் வாங்கிக்கொள்கிறேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில், உலகின் மூன்றாவது அறிவாளி என் கையைப் பிடித்து இழுத்து விளையாட அழைக்கிறான். அவனுக்கும் உங்கள் பெயரைத்தான் வைத்திருக்கிறேன். பெயரை உடையவன்தானே பேரன்!

முத்துக்குமார்

மகன்:  

அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கிறாய். உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும். பின்னாளில் இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் தகப்பன் உனக்குச் சேர்த்த ஆகப்பெரிய சொத்து இதுதான் என உணர்வாய்.

என் ப்ரியத்துக்குரிய பூக்குட்டியே! உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க... மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை; குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை; கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

உலகிலேயே மிகப்பெரிய இன்பம் எது, தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை. `தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்’ என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், மெய்யாகவே மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்துபோனேன். உன் பொக்கைவாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டிருந்தாய்.

நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழ்ந்து, தலை நிமிர்ந்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாடினாய், தரையெல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் கைவிரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசீர்வதித்தாய்.

முத்துக்குமார்

என் பொம்முக்குட்டியே! இந்த எல்லா தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய். என் செல்லமே! இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும், சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக் கவிழ்ந்து, பிறகு தலை நிமிர்ந்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாட வேண்டும். தரையையெல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும்; எழ வேண்டும்; விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.

என் சின்னஞ்சிறு தளிரே... கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்துகொள்வதைவிட, தீண்டி காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான், கற்றுப்பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப்பார்.'

நா.முத்துக்குமார் இந்தப் பிரபஞ்சத்தின் ஓயாத ஒளித்துகள்கள்போல நிறைந்து நம் நினைவுகளில் என்றுமிருப்பார்.

https://www.vikatan.com/news/miscellaneous/130577-namuthukumars-statement-about-his-father-mother-son.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.