Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம்

Featured Replies

மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம்

 
 

 

 

 

 

 

 

 

 

மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை.

கதைக்களம்

மேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டு விருதை தட்டிச்சென்றது, இந்த படம் தயாரித்ததற்காக நான் பெருமை படுகின்றேன் என்று விஜய் சேதுபதி ஏற்கனவே கூறியிருந்தார்.

அவரின் பெருமை நாம் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்கும் போது அனுபவிப்போம், ஏனெனில் உலகப்படங்களுக்கு நிகரான படம் தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.

தேனியிலிருந்து இடுக்கி வரை மூட்டை தூக்கி செல்லும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இதை கதையாக கூற முடியாது, ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் வழியாக கதையை நகர்த்தியுள்ளனர். ஒரு மூட்டை தூக்குபவன் தன் அன்றாட செலவிற்கு பணத்தை சேர்ப்பது எத்தனை கடினம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை.

படத்தை பற்றிய அலசல்

ரங்கசாமி எப்படியாவது சொந்த நிலம் வேண்டும் என்பதற்காக உழைக்கின்றான், அவனின் வாழ்க்கை வழியாக விரியும் இப்படம் ரங்கசாமி, வனகாளி என பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து செல்கின்றது.

இவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது, வாழ்ந்தே இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அன்றாட தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி என்று பார்த்து பழகி போன நம் ஜெனரேஷனுக்கு இது படம் இல்லை பாடம்.

அதிலும் ஒரு ஏழைக்கிழவன் தன் பெருமையை பேசும் இடமெல்லாம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிரட்டல், இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தில் தேனி ஈஸ்வர் இருப்பார்.

படத்தின் உயிராக இளையராஜாவின் பின்னணி இசை, நம்மை கதையுடன் கையை பிடித்து பயணிக்க பயன்படுகின்றது.

க்ளாப்ஸ்

இப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே லெனினை பாராட்டலாம்.

படத்தில் நடித்த நடிகர்கள், இத்தனை யதார்த்ததை சமீபத்தில் எப்போதும் பார்த்தது இல்லை.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

மொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடப்பட வேண்டிய படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.

https://www.cineulagam.com/films/05/100958?ref=cineulagam-reviews-feed

  • தொடங்கியவர்

தமிழ் சினிமாவுக்கு இது பெருமிதம்... பேரனுபவம்! - ’மேற்குத் தொடர்ச்சி மலை’ விமர்சனம்

 
 
 
தமிழ் சினிமாவுக்கு இது பெருமிதம்... பேரனுபவம்! - ’மேற்குத் தொடர்ச்சி மலை’ விமர்சனம்
 

சினிமா ஒரு உலகப் பொதுமொழி என்பார்கள். அதில் வெகு சில படங்கள் மட்டுமே நமக்கு ஒரு வாழ்வியல் அனுபவத்தை பரிசாக அளிக்கும். படம் முடிந்து வெளியேவரும்போது உள்ளே கனம் அதிகமாகி நம் எடை அதிகரிக்கும். அதன் மாந்தர்களும் நம்மோடு உரையாடிக்கொண்டே நடைபோடுவது போன்ற பிரமை ஏற்படும். 'மேற்குத் தொடர்ச்சி மலை' அப்படியான ஒரு படம்.

உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் அத்தனை உழைக்கும் மக்களுக்கும் ஒரே ஒரு குறிக்கோள்தான் - 'காணி நிலம் வேண்டும், அதில் பாதம் புதைய நடந்து திளைக்க வேண்டும்'. மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் வசிக்கும் ரெங்கசாமிக்கும் அதுதான் குறிக்கோள். விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவிடுவென மலையேறி மூட்டை ஏலக்காயை நாலு நடை சுமந்து வந்து சேர்த்து கிடைக்கும் பணத்தில்தான் தன் கனவை நிறைவேற்ற வேண்டும். ஆசையைத் தூண்டி அருகில் வந்தவுடன் மறைந்துபோகும் பாலை கானல் நீர்போல ஒவ்வொரு தடவையும் அவரின் லட்சியம் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அது இறுதியாக ஈடேறியதா இல்லையா என்பதுதான் கதை. 

மேற்குத் தொடர்ச்சி மலை

 

 

இதுமட்டும்தான் கதையா என்றால்... இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒவ்வொரு முகடும் ஆயிரக்கணக்கான கதைகளை தாங்கி நிற்பதைப் போல இந்தப் படமும் ஏராளமான கதைகளை புதைத்து வைத்திருக்கிறது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தேர்ந்த கதைசொல்லிகளாக இருக்கிறார்கள். வீம்பாக இளவட்டங்களுடன் போட்டிப் போட்டு மூட்டை தூக்கும் வனகாளியிடம் ஒரு பெரு மழைநாளில் மலையேறிய கதை இருக்கிறது. மூளை பிசகி மரங்களுக்கு ஊடாக புலம்பித் திரியும் கிறுக்குக் கிழவியிடம் யானைகள் பற்றிய யாருக்கும் தெரியாத ஒரு ரகசியமிருக்கிறது. தினமும் எஸ்டேட்டிற்கு சுமை ஏற்றிச் செல்லும் கிழவரின் பொக்கைவாய் பற்களுக்கிடையில் கழுதைக்கும் மலைப்பாதைக்கும் இடையேயான ஒரு காதல்கதை இருக்கிறது. இந்த மண்ணும் மலையும் மாந்தர்களும்தான் மேற்குத் தொடர்ச்சிமலையை மறக்க முடியாத அனுபவமாக்குகிறார்கள்.

 

 

 

ரெங்கசாமியாக நடித்திருக்கும் ஆண்டனிக்கு இந்தப் படம் பெருமைமிகு விசிட்டிங் கார்டு. கொஞ்ச நாட்களாக நிலவிவந்த யதார்த்த கிராமத்து ஹீரோவுக்கான வெற்றிடத்தை இயல்பாக நிரப்புகிறார். அவர் தவிர, படத்தில் முகம்காட்டும் அத்தனை பேரும் ஹீரோக்கள்தான். 'என்னா மாமா' என வெட்கத்தில் சிணுங்கும் காயத்ரி, 'இதே சும்மாவிடக்கூடாது சகாவே' என நெஞ்சை நிமிர்த்தும் கம்யூனிஸ்ட் சாக்கோ, 'என் புருஷன் பேரெல்லாம் வாயால சொல்லமாட்டேன்' என அந்த வயதிலும் தயங்கும் பொன்னம்மா, 'இன்னிக்குத்தான்டா உனக்காக நீ மூட்டை தூக்குற' என நெகிழும் கங்காணி... இப்படி எக்கச்சக்கமான பேர் நகமும் சதையுமாக மலைப்புறத்து வாழ்வியலை நம் கண்முன் நிறுத்துகிறார்கள். டைட்டில் கார்டில் கோடங்கிபட்டி பொண்ணுத்தாயி, தேவாரம் சொர்ணம் என வாசிப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. அனேகமாக அதிக ஹீரோக்கள் நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும்.

விகடன் விமர்சனம்

தேனி ஈஸ்வர் குறிஞ்சி பூப்பதுபோலத்தான் படங்கள் செய்வார். அதிலும் குறிஞ்சிப் பரப்பென்றால் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் பனியில் கரையக் கொடுத்துவிடுவார் போல! ஆரம்பக் காட்சிகளுக்குப் பின் கதை நிஜத்தில் நம்மைச் சுற்றி நடப்பது போலவே இருக்கிறது. அவ்வளவு தத்ரூபம்!  சாக்கோவை பார்க்க தூரத்து மரத்திலிருந்து ஒருவர் கயிறுவழியே இறங்கி ஆளுயுர புதர்களுக்கு மத்தியில் நடந்து மேடேறும் அந்த ஒரு காட்சியில் அவ்வளவு அழுத்தம். படம் முழுக்க இப்படியான காட்சிகள் நிறைய இருக்கின்றன. 'பேரன்புகள்' தேனி ஈஸ்வர்!

 

 

கதையின் கனத்தை மேலும் மேலும் ஏற்றுவதில் வெற்றிகொள்கிறது இசைஞானியின் இசை. சிறுதெய்வமான சாத்தானின் கோயிலில் நம் நரம்புகளில் தொற்றிக்கொள்ளும் அவரின் விரல்வித்தை இறுதியாக முதுகு காட்டி அமர்ந்திருக்கும் ரெங்கசாமியிடமிருந்து விடைபெறும்போது பூதாகரமாக ஆட்கொள்கிறது. ஒளிப்பதிவிற்கும் இசைக்கும் தன்னாலான நியாயம் செய்திருக்கிறார் எடிட்டர் காசிவிஸ்வநாதன். இத்தனை பேரையும் ஒன்றிணைத்து ஒரு நல்ல கதையை தயாரித்தமைக்காக தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு தேங்க் யூ!

விகடன் விமர்சனம்

பெயருக்கேற்றார்போல கதைகளினூடே ஒருதலைமுறையின் அரசியல் பேசுகிறார் இயக்குநர் லெனின் பாரதி. முன்னேறத் துடிக்கும் ஒடுக்கப்பட்ட பூர்வகுடி ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, பிழைக்க வந்த லோகு சுயநல முதலாளியாக ஆதிக்கம் செலுத்தும் வர்க்க அரசியல் முகத்திலறைகிறது. சாலைகள்தான் காட்டை அழிக்கும் முதல் வழி என்பதே நிதர்சனம். காட்டை மட்டுமல்ல, அதன் மாந்தர்களையும் சாலைகள் என்ன செய்யும் என சாக்கோ வழியாக பேசியிருக்கிறார். தொழிற்சங்கங்களை அழிக்க வஞ்சகமாக திட்டம் போட்டுவிட்டு, 'இப்ப எந்தா செய்யும் சகாவே?' என நக்கலாக சிரிக்கும்  முதலாளித்துவத்தின் கோர முகமும் இந்தப் படத்தில் பல்லிளிக்கிறது.

இதைத்தாண்டி படத்தில் பாராட்ட ஒரு முக்கிய விஷயமிருக்கிறது. அது, எளியவர்களின் 'பேரன்பினாலான உலகம். வஞ்சனையில்லாமல் வாஞ்சையாக ஒருவருக்கொருவர் கைகொடுத்து தூக்கிவிடுவதும், மண்ணின் மணம் வீசும் நையாண்டியால் ஒருவரை ஒருவர் வாரிவிடுவதுமான அழகியல் நிச்சயம் இன்னொரு முறை நம்மை படம் பார்க்கவைக்கும்.

விகடன் விமர்சனம்

குறைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் தோன்றும் ஒரே விஷயம், ஆங்காங்கே தென்படும் செயற்கைத்தன்மை. ஒன்றிரண்டு கேரக்டர்கள் தவிர மற்றவற்றில் கேமராவுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள் நடித்திருப்பதால் இந்த நாடகத்தன்மை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ’கமர்ஷியல் படங்களுக்கான கூறுகள் மிஸ்ஸாவது குறைதானே!’ என சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இது நம்மிடையே உலாவும் மனிதர்களின் நிஜ வாழ்வியல். அதனால் மற்றுமொரு சினிமாவாக இதை எடைபோடாதிருத்தல் நலம்!

நாம் எல்லாருமே மேற்குத் தொடர்ச்சிமலைத் தொடரை ஒருமுறையாவது கடந்து வந்திருப்போம். குளுமையும் கொண்டாட்டமுமான கனவுப் பிரதேசமாகவே அதைப் பார்த்துப் போயிருப்போம். அடுத்த முறை அம்மலைத் தொடரைக் கடக்கும்போது கூர்ந்து கவனியுங்கள். ரத்தம் கக்கும் குரலில் வனகாளியின் இருமலும், 'எல்லாத்தையும் கொன்னுப்போட்ருவேன்' என்ற கிறுக்குக்கிழவியின் அலறலும் தூரத்து மரத்தில் சடசடத்துப் பறக்கும் ரெங்கசாமியின் வேட்டியும் உங்களுக்கு தென்படக்கூடும். நிஜத்தில் அதுவும்தான் 'மேற்குத் தொடர்ச்சி மலை'!

https://cinema.vikatan.com/movie-review/135018-merku-thodarchi-malai-movie-review.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: மேற்கு தொடர்ச்சி மலை - ’படம் பார்த்த மாதிரி இல்ல நேர்ல ஒரு சம்பவம் பார்த்த மாதிரி இருந்தது’

 

 
Merku%20Thodarchi%20Malai%20Posterjpgjpg

விஜய் சேதுபதி தயாரித்து லெனின் பாரதி இயக்கிய ‘மேற்குத் தொடர்ச்சி மலை இவ்வாரம் திரைக்கு வெளிவந்துள்ளது இதுகுறித்து  நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

Mahendran

 

‏#மேற்குத்தொடர்ச்சிமலை ஒரு உணட்வுப்பூர்வமான அனுபவத்தை எனக்கு கொடுத்து உள்ளது சிறப்பான இயக்குனர் தமிழ்சினிமாக்கு கிடைத்து உள்ளார்.

இரா.நமச்சிவாயம்.DCE

‏எளிதில்  நெருங்கிட முடியவே முடியாத “எளிமை” யை அனாயசமாக கலை என்னும் பேரானுபத்தை திரைவழியே கடத்திய இயக்குனர் @leninbharathi1 &இசைவழியே உணர்வுகளை சிலுப்பிய “முன்னத்தி ஏர் #இளையராஜா நன்றியும் மகிழ்ச்சியும்!!!ஆம்”எளிமை” காட்சிபடுத்துதல் என்பது ஆகப்பெரும் போர் #மேற்குத்தொடர்ச்சிமலை

ததாகதத்தர்

‏டூட் #மேற்குத்தொடர்ச்சிமலை இயக்குநர் லெனின் பாரதிட்ட உணர்ச்சிக்கு இடமளிக்காக அறிவுப்பூர்வமா கேள்வியா கேட்டுத்தள்ளவும்.... அவர்ட்ட சொல்ல ரெம்ப இருக்கும் போல

Saran saravanan

‏உங்கள் மனதை ஆக்கிரமிக்க போகும் #மேற்குத்தொடர்ச்சிமலை

வேதா

‏படம் பார்த்த மாதிரி இல்ல

நேர்ல ஒரு சம்பவம் பார்த்த மாதிரி இருந்தது

Karthi

‏அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

ramanan

‏சிறந்த படைப்பு மக்களின் நிஜவாழ்க்கையை மிக அற்புதமாக உருவாக்கியதற்கு நன்றி

Kayal Devaraj

‏இது மக்களின் சினிமா

மக்களுக்கான மகத்தான சினிமா

அவசியம் பார்க்க வேண்டிய படம்

கற்றுத் தெளிய வேண்டிய பாடம்

SELVAM KARUPPIAH

‏உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம்

சொம்பு நசுக்கி

இந்த படத்தை நாம ஆதரிக்காம போனா ..

மேலும் #MassHero படங்கள் வரும் ...

மேலும் குப்பையை சேர்க்கும் ....

இளஞ்சேரன் விசாகன்

‏நல்ல இயக்குனர் வெல்லட்டும், நல்ல தயாரிப்பாளர் வெல்லட்டும், நல்ல படம் வெல்லட்டும், லெனின் வெல்லட்டும், அந்த மலை வெல்லட்டும்,

https://tamil.thehindu.com/opinion/blogs/article24770941.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.