Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெத்த அம்மா...வளர்த்த அம்மா...

Featured Replies

பெத்த அம்மா...வளர்த்த அம்மா...

 

 
SHORT

கிரிக்கெட் மேட்ச்சில் வெற்றி பெற்ற குஷியுடன் மட்டையைச் சுழற்றியபடி வீட்டில் நுழைந்தான் கார்த்திக். சமையலறையில் எண்ணெய்யில் பொரியும் பூரியின் மணம் வாசலிலேயே வரவேற்றது. "ஹை... பூரி ...'' மட்டையை ஒரு பக்கம் வீசி எறிந்தான்... கை கால் கழுவிக் கொண்டு சாப்பாட்டு மேஜையின் முன் உட்கார்ந்து கொண்டு தாளம் போட்டபடி கத்தினான்... " அம்மா டிபன்''


 "மல்லிகா கார்த்திக் வந்துட்டான் பாரு.இந்தா அவனுக்கு கொண்டுபோய் கொடு''...ஒரு தட்டில் நாலைந்து பூரிகளை வைத்து குருமாவையும் ஊற்றி நீட்டினாள் வனஜா.
 "வேண்டாண்டியம்மா உன் பிள்ளைக்கு நீயே பரிமாறு. சொல்லிட்டேன்...''
 "உனக்கும்தானேடி அவன் பிள்ளை... உனக்குத்தான் உரிமை அதிகம்... பத்து மாசம் வயித்திலே சுமந்து பெத்தவளாச்சே...''
 "அதெல்லாம் விடு வனஜா எப்போ அவனை உன்கிட்டே ஒப்படைச்சேனோ அப்போதிருந்து அவன் உன் பிள்ளையாகத்தானே வளர்கிறான்... அவனை இங்கிருந்து பார்த்தாலே எனக்குப் போதும்... என்னைக்கண்டால் எரிந்து விழுவானே உனக்குத் தெரியாதா... நான் கொண்டுபோக மாட்டேன்''அவசர மாக மறுத்த மல்லிகாவை,
 "நல்ல பசியோட இருக்கான்... அவனுக்குப் புடிச்ச டிபன்... எதையும் பாக்கமாட்டான்... மட மடன்னு சாப்பிட ஆரம்பிச்சுடுவான்... அவர் வர்றதுக்குள்ளே நான் பூரிகளை ரெடி பண்ணணும். தயவு செஞ்சு கொண்டுபோ''ன்னு விடாமல் வனஜா வற்புறுத்தவும் பூரிகளை இட்டுத் தேய்த்துக் கொண்டிருந்த மல்லிகா தயக்கத்துடன் தட்டை வாங்கிக் கொண்டு ஹாலுக்குப்போனாள்.


 கார்த்திக்கோ மல்லிகாவைக் கண்டதும் கோபம் தலைக்கேறக் கத்தினான், "வந்துட்டியாக்கும்... நீ ஒண்ணும் எனக்குப் பரிமாற வேண்டாம்... எனக்கு எங்கம்மாதான் வேணும்..'' என்று சண்டித்தனமாய் மேஜையின் மேல் தலையைக் கவிழ்த்துக் கொள்ளவும்... கண்களை துடைத்துக்கொண்டு மல்லிகா தட்டுடன் உள்ளே போனாள்.
 "ஏண்டா கண்ணா இப்படி படுத்தறே. அவளும் உன் அம்மாதானே...''சமாதானப் படுத்தியபடியே டிபன் தட்டை தானே எடுத்து வந்தாள்...வனஜா.
 "எத்தனைமுறை சொல்லியிருக்கேன்.... எனக்கு நீ மட்டும் தான் அம்மான்னு... இன்னொரு வாட்டி இவளை என் அம்மான்னு சொல்லாதே... நான் வேண்டாம்னு தானே என்னை உனக்கு கொடுத்துட்டா. அப்புறம் என்ன அம்மா உறவு வேண்டிருக்கு... இவளைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை...எந்தத்தாயாவது தான் பெற்ற குழந்தையை இன்னொருத்தருக்குத் தூக்கிக் கொடுப்பாளா... தாய் என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாதவள். சே ...'' ஆத்திரத்துடன் கத்தியவன் சாப்பிடாமலேயே எழுந்து போனான்.
 வனஜாவுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. "சே.... நான் என்னவோ... மல்லிகாவின் தாய்ப்பாசத்திற்கு மதிப்புக் குடுக்கணும்னு நினைக்கப்போக, அவளும் வருத்தப்பட்டு... குழந்தையும் இப்படி சாப்பிடாமல்... கார்த்திக் தனக்கு கிடைத்த நினைவுகளில் மூழ்கி அப்படியே நின்றான்.


 வனஜாவும் மல்லிகாவும் நெருங்கிய தோழிகள். வனஜா கல்யாணம் ஆகி நீண்ட நாட்கள் கழித்து உண்டாகியிருந்த சமயம், மல்லிகாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. ஒரு நாள் வனஜா நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தபொழுது ஜல்லிக்கட்டுத் திடலிலிருந்து வழி தப்பி வந்த காளையைப்போல் வேகமாக ஓடிவந்த ஒருமாடு அவளை முட்டித்தள்ளி வயிற்றில் மாட்டின் கொம்பு குத்தியதில் உள்ளே குழந்தை இறந்து கர்ப்பப்பை கிழிந்து, ஏகப்பட்ட சிக்கலாகி வேறு வழியின்றி கர்ப்ப பையையே எடுக்கும்படி ஆகிவிட்டது.
 தனக்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்றறிந்ததும் வனஜா மனம் உடைந்து போய் தவித்தாள். அந்த நேரம் அவள் துயர் துடைக்க மல்லிகாதான் ஆதரவுக்கரம் நீட்டினாள்.


 "வனஜா... என் இரண்டாவது குழந்தை கார்த்திக்கை நீ உன் குழந்தையாக ஏற்றுக்கொள்... இரண்டு மாசக்குழந்தைக்கு எந்த வித்தியாசமும் தெரியாது... எனக்கு கெüசிக்கே போதும்'' தானாகவே மனமுவந்து நீட்டிய கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டு விட்டாள் வனஜா.
 தன் குழந்தை வயிற்றில் ஜெனித்ததிலிருந்தே தன்னுள் பொங்கியிருந்த தாய்ப்பாசம் அத்தனையையும் சுவீகரித்த குழந்தைமேல் கொட்டிக் கொட்டி வளர்க்க ஆரம்பித்தாள்... கார்த்திக் வளர வளர அவன் அழகையும் விஷமத்தையும் பார்க்கப் பார்க்க... கடவுளே... எனக்கு இத்தனை இன்பமும் மல்லிகாவால்தானே கிடைத்தது... அவளுக்கு உரிமையானதை அவளும் தானே அனுபவிக்கணும்...
 வனஜாவின் மனதில் நன்றியும் நெகிழ்வுணர்வும் பரவியது. அதன் விளைவு...
 "மல்லிகா... பாசத்தை அடைத்து வைக்காதே... உன் குழந்தையை நீ பார்க்க வரலாம்.கொஞ்சலாம்... கண்ணனுக்கு தேவகி யசோதா மாதிரி நம்ம கார்த்திக்கு நாமிருவரும் அம்மாக்கள்...'' என்று வனஜா சொன்னதில் மிகவும் மகிழ்ந்து போனாள் மல்லிகா...நேரம் கிடைத்தபோதெல்லாம் குழந்தையைப்பார்க்க வரலானாள்.
 வனஜாவின் கணவன் முகுந்துக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை." வனஜா இவள் இப்படி அடிக்கடி வருவதும் குழந்தையைத் தூக்கித் தூக்கி கொஞ்சுவதும் சரியில்லை... நாளடைவில் பெற்ற தாயிடம் குழந்தை ஒட்டிக் கொண்டுவிடும்'' என்று அடிக்கடி எச்சரித்தான்.


 ஆனால் நடந்ததென்னவோ நேர்மாறாக ஆயிற்று
 கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்ததும் கார்த்திக் வனஜாவை " அம்மா. எல்லாருக்கும் ஒரு அம்மாதானே இருப்பா... எனக்கும் நீ மட்டும் தானே அம்மா... அப்புறம் மல்லிகாம்மானு இன்னொரு அம்மா எப்படி..''என்று அடிக்கடி கேட்க ஆரம்பித்தான்..
 "மல்லிகாம்மாதான்டா கண்ணு உன்னை பத்து மாசம் வயத்தில் சுமந்து பெத்த அம்மா... எனக்கு குழந்தை இல்லாததால் உன்னை எனக்கு கொடுத்துட்டா அதனால உனக்கு ரெண்டு அம்மாடா கண்ணு..'' மல்லிகா மேல் அவனுக்குப் பாசம் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வனஜா உண்மையைச் சொல்லி விட்டாள்.
 "போம்மா தன்னோட குழந்தையை இன்னொருத்தருக்கு யாராவது கொடுப்பாளா.. அன்னிக்கு ஒரு நாள் நம்ம வீட்டு பூனைக்கு குட்டி பிறந்ததே ... அது நம்மையெல்லாம் தொடக்கூட விடாம குட்டியை எப்படி பாத்துண்டது...என் பிரெண்ட் ஹரியோட அம்மாக்கு குட்டிப் பாப்பா பிறந்ததே அவங்க அந்த பாப்பாவை யாருக்கும் கொடுக்கலியே... எப்பவும் தானே தூக்கி வச்சுக்கிட்டிருப்பாங்களே... இவங்க மட்டும் எப்படி...'' கார்த்திக்கின் குழந்தை மனம் அப்போது அதை ஏற்கவில்லை... ஆனாலும், போகப் போக அவன் வளர வளர மல்லிகா மேல் அவனுக்கு வெறுப்புதான் அதிகமாயிற்று. அவளைக்கண்டாலே எரிச்சல் படுவதும் வனஜா சமாதானப்படுத்துவதும். அடிக்கடி நிகழலாயிற்று...


 ஒருமுறை வனஜா வீட்டில் இல்லாத சமயம் மல்லிகா கார்த்திக்கின் அறைக்குள் நுழைந்து, அவன் கத்தத்தொடங்குவதற்கு முன், "கண்ணா, கொஞ்சம் பொறுமையாகக்கேள்... நீ இந்த அளவு வெறுக்க, இந்த அம்மா எந்த தவறும் செய்யவில்லை... நீ பிறந்ததுமே ஒரு ஜோசியர் "இந்தக்குழந்தை உங்களிடம் இருந்தால் அவன் உயிருக்கே ஆபத்து... வேறிடத்தில் வளர்ந்தால்தான் அவன் நன்றாக இருப்பான்' என்று சொன்னதில் கலங்கிப்போயிருந்த சமயம் வனஜாவிற்கும் இப்படி ஒரு துன்பம் நேர்ந்ததும்... நான் எங்கள் இருவர் கவலையும் தீர்ந்து விடும்... நீயும் சவுக்கியமாய் இருப்பாய் என்றுதான் கண்ணா இப்படிச் செய் தேன்'' என்றெல்லாம் மல்லிகா சொல்லிக்கொண்டிருக்கும்போதே காதைப்பொத்திக்கொண்டு கத்தினான்...
 "நிறுத்தறயா... உன் கட்டுக்கதையை... இந்த வார்த்தைகளையெல்லாம் என்கிட்டே வச்சுக்காதே. ஒரு தாயால் எந்த சூழ்நிலையிலும் தன் குழந்தையை இன்னொருவரிடம் தூக்கிக் கொடுக்க முடியாது... உன் வியாக்கியானம் எதுவும் தேவை இல்லை...இங்கே எங்க அப்பா அம்மா நல்ல வசதியா இருக்கா... பணம் கொட்டிக்கிடக்கிறதுன்னு ஓடிஓடி வந்துடறே... உங்கவீட்டுக்காரர் வேலைபோய் வெட்டியாய் உட்கார்ந்திருக்கிறார்.அப்பப்போ கெடைச்சதை பத்திண்டு போலாம்னு... இந்தக் கதையெல்லாம் என்கிட்டேசொல்லிண்டுவராதே... வெளியேபோயிடு''ன்னு கத்தினான்.
 கார்த்திக்கின் வார்த்தைகள் மல்லிகாவை அவமானத்தில் கூனிக் குறுகி போக வைத்தது.


 "நான் உன்னைக் கொடுக்கும்போது இவர்கள் மிகவும் சாதாரண நிலையில்தான் இருந்தார்கள்... நீ வந்தபிறகுதான் முகுந்த் பிசினெஸ் ஆரம்பித்து கொடிகட்டிப்பறக்கிறார்... என் ஏழ்மை நிலை கண்டு வனஜா அவ்வப்போது ஏதாவது பணஉதவி செய்ய முன் வந்தால்கூட நான் ஏற்பதில்லை தெரியுமா... உன்னைப்பார்க்கவேண்டுமென்ற பாசத்துடிப்பில்தான் நீ எத்தனை திட்டினாலும் பொருட்படுத்தாது வந்துவந்து நிற்கிறேனடா கண்ணா'' என்றெல்லாவற்றையும் மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டவள் வாய் திறந்து எதுவும் பேசாமல் இடத்தை விட்டு அகன்றாள்.


 அதன் பின் மல்லிகா வனஜா வீட்டுக்கு வரவே இல்லை. காரணம் புரியாமல் வனஜா தவித்தாள்...கார்த்திக் பி.இ. , எம்.இ., எம் பி ஏ முடித்து அப்பாவின் பிசினெஸ்ûஸ பிடித்துக்கொண்டான். கார்த்திக்கின் கல்யாணத்தின் போது கூட மல்லிகாவுடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.. எங்கிருக்கிறாள் என்றே தெரியவில்லை... சொல்லப் போனால் அந்த நேரம் மல்லிகா கஷ்டத்தில் இருந்தாள். கணவர் திடீரென்று இறந்து விட... மூத்தவன் கெüசிக் அம்மாவை தனியே விட்டு விட்டு மனைவியுடன் வடக்கே எங்கேயோ போய்விட்டான். ஆதரிக்க யாருமின்றி மல்லிகா கூடுவாஞ்சேரியில் ஓர் அநாதை ஆஸ்ரமத்தில் சேர்ந்து விட்டாள்.
 இந்த விவரங்கள்எல்லாம் கல்யாணத்துக்கு வந்த உறவினர் யாரோ சொல்லப்போக வனஜா ரொம்பவே கலங்கினாள்.
 அவளுக்கு ஒரு மாறுதலாயிருக்கட்டும் என்று முகுந்த் ஒரு யாத்ரா சர்வீஸ் மூலம் வடக்கே ஒரு டூர் போய் வர ஏற்பாடு செய்தான்... டூர் போனவர்களத்தனைபேரும் ஒரு நதியில் உல்லாசப்படகில் போகும்போது படகு மூழ்கி தண்ணிக்குள்ளேயே அத்தனைபேர் வாழ்க்கையும் முடிந்து போய்விட்டது.
 செய்திகேட்டு ஓடிவந்தாள் மல்லிகா. துயரத்தில் துடித்த அந்த நிலையிலும் கார்த்திக் அவளை கடும் சொற்களால் காயப்படுத்தினான்... "சமயம் பார்த்து அம்மா பாசம் காட்டி ஒட்டிக்கலாம்னு வந்துட்டியா... அதெல்லாம் நடக்காது... என் அம்மா செத்துப்போயாச்சு... வந்தமா... துக்கம் விசாரிச்சமான்னு போயிண்டே இருன்னு'' நெருப்புமாதிரி வார்த்தைகளைக் கொட்டி விரட்டினான்.


 "என்னங்க... அவங்களைப்போய் இப்படி கடுப்பாய் பேசறீங்க... என்ன இருந்தாலும் அவங்க உங்களை பெத்தவங்க இல்லையா...'' மனைவி கீர்த்தி பரிந்துகொண்டு பேசினாள்.
 "வாயை மூடு பெத்தவங்களாம் பெத்தவங்க. பெத்த பிள்ளையைத் தூக்கிக்கொடுத்தவள்... யாராவது இப்படிச் செய்வார்களா... ஏன் நீ கொடுப்பியா...'' மனைவியிடம் கத்தினான்.
 "சும்மா... விளையாட்டுக்கு கூட அப்படியெல்லாம் பேசாதீர்கள்... நமக்குக்கல்யாணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கழித்து இப்பத்தான் எனக்கு மெய்யோ பொய்யோன்னு நாள் தள்ளிப் போயிருக்கு... நல்லபடியா முழுமாசமும் சுமந்து என் பிள்ளையை நான் பெற்று எப்படியெல்லாம் வளர்க்கணும்னு ஆசையாசையாய் காத்துண்டிருக்கேன் தெரியுமா... என்னைப் போய்...''
 குழந்தை எட்டாம் மாதமே பிறந்ததால் ஒன்றரைக் கிலோ வெயிட் தான் இருந்தான். கிட்டத்தட்ட ஒரு மாதம்போல் இன்குபேட்டரில் வைத்து, டாக்டர் சொல்வதை துளியும் பிசகாமல் கடைப்பிடித்துக் காப்பாற்றி...
 இப்பொழுது நாலு மாதத்தில் குழந்தை நன்கு தேறி கொள்ளை விளையாட்டும் அழகுமாய் பெற்றவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தான்...
 ஒருநாள் கார்த்திக் மனைவியிடம் கேட்டான், "கீர்த்தி என் குழந்தையை யாரையும் தொடக்கூட விடமாட்டேன்... என் குழந்தைக்குத் தேவையான எல்லாவற்றையும். குளிப்பாட்டுவது... தூங்கவைப்பது என்று நானேதான் பார்த்துப்பார்த்து செய்வேன்... என்று சொல்வாயே இப்பொழுதுஉனக்குத் தாய்ப்பால் சுரப்பு இல்லையென்று வேறு யாரோ ஒரு பெண்ணை உன் குழந்தைக்கு பால் கொடுக்கச் சொல்கிறாயே. ஏனிப்படிச் செய்யணும். எத்தனை உயர்ந்த பால்பவுடர் வகைகள் கிடைக்கின்றன... டாக்டரிடம் கேட்டு அவற்றில் ஏதாவதொன்றைக் கொடுக்கலாமே''


 "நீங்கள் சொல்வதுபோல் நான் ரொம்பவுமே பொசசிவ் குணமுடையவள் தான்... ஆனாலும் என் குழந்தை எனக்கு எல்லாவற்றிற்கும் மேல்...அவன் குறைமாசத்திலேயே பிறந்துவிட்டதால் எடை வேறு ரொம்பவே கம்மியாயிருந்ததால் கவனமாக பராமரித்து வளர்க்கணும்... தாய்ப்பால் கொடுத்தால்தான் குழந்தை தேறி வளருவான்... பின்னாட்களில் அடிக்கடி நோய்நொடின்னு தொந்தரவு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பான்... குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும் நோயெதிர்ப்புச்சத்தும் தாய்ப்பாலில் கிடைப்பது போல் பவுடர்ப்பாலில் கிடைக்காது... என்று டாக்டர் கண்டித்துச் சொல்லிவிட்டாரே... நானென்னசெய்ய.... என் குழந்தை எனக்கு எவ்வளவு முக்கியம்... ஆனாலும் அவனுக்கு கொடுக்கவேண்டிய உணவு என்னிடம் இல்லையே... அதனால்தான் டாக்டர் ஏற்பாடு செய்துகொடுத்தபடி வேறொரு தாய் தன்னிடம் தன் குழந்தையின் தேவைக்குமேல் சொரிந்த பாலமுதத்தை என் குழந்தைக்கும் கொடுக்கிறாள்... பாவம்... அந்தப்பெண் கஷ்ட ஜீவனம்... அவள் குழந்தைக்குண்டான மற்ற தேவைகளை நாம் கவனித்துக்கொள்கிறோம்''


 மனைவியின் வார்த்தைகளத்தனையும் கார்த்திக் மனதில் இனம் புரியாத ஓர் உணர்வை ஏற்படுத்தியது... தாய்ப்பாசத்திற்குத்தான் எத்தனை பரிமாணங்கள்... நினைத்துப் பார்க்க பார்க்க பிரமிப்பாயிருந்தது.ஒருதாய் தன்னால் மட்டுமே தன் குழந்தைக்குப் புகட்டி வளர்க்கத் தேவையான பால் சுரப்பு தனக்கு இல்லையென்றதும்... தன் மகவின் நலன்கருதி வேறொரு தாயிடம் யாசிக்கிறாள்... அந்தத் தாயோ தன் குழந்தைக்காகவே தன் குழந்தைக்கு மட்டுமே உரிமையான அந்த அமுதத்தை தான் பெறாத வேறொரு குழந்தைக்கும் வழங்குகிறாள்... புராணத்தில் கண்ணன் கதையும் இப்படித்தானே... கண்ணனுக்கு நேரவிருக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவே அவனைப் பிறந்த உடனேயே இரவோடிரவாக தேவகி... யசோதா வீட்டிற்கு அனுப்பி வளர செய்யவில்லையா... ஏன் என்நிலையும் அப்படித்தானே .
 ஆனால் நான் வனஜாம்மாவை மட்டுமே தாயாக நினைத்து அந்த அம்மாவின் பாசத்தில் திளைத்தவன் என்னைப் பெற்ற தாயை எப்படியெல்லாம் உதாசீனம் செய்தேன்... பாவம் மல்லிகாம்மாவின் மனம் எப்படி வேதனைப்பட்டிருக்கும்... இப்படி ஒரு நினைவு தோன்றியதுமே கார்த்திக்கின் மனம் உருகி நெகிழ்ந்தது... பாவம்... என்னைப்பெற்ற என் அம்மா எங்கோ அநாதையாக கஷ்டப்படுவதாவது... நான் இருக்கும்போது என் அம்மாவை தவிக்கவிடலாமா... நாளைக்கே நான் கூடுவாஞ்சேரி போய் அம்மாவை என் வீட்டிற்கு அழைத்துவரப்போகிறேன்... கார்த்திக்கின் மனம் அப்பவே அம்மாவிடம் ஓடியது.

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/sep/03/பெத்த-அம்மாவளர்த்த-அம்மா-2993296.html

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை ..பகிர்வுக்கு நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.