Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியத்தில் மருத்துவம்

Featured Replies

தமிழர் மருத்துவம்

நோய், நோய்க்கான காரணங்கள், நோய் அறியும் முறைகள், நோய் அறிபவர் (மருத்துவர்), மருத்துவ முறைகள், மருந்து, சராசரி இறப்பு வயது, மருத்துவ முறை வெளிப்படுத்தப்படாத நிலை போன்ற செய்திகளைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. மனித உடல் அமைப்புக் குறித்த செய்திகளும் இலக்கியங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கருத்தோன்றும் காலம், கருவின் தோற்றம், வளர்ச்சி, பிறப்புநிலை, கருச்சிதைவு, செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற மனித உயிரின் பிறப்பு முறைகளும், இவை மட்டுமன்றி ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக உயிர்த் தோற்றம் பற்றிய நிலைகளும், விலங்குகளின் தன்மைகளும் இலக்கியங்களில் விரிவாகப் பேசப்படுகின்றன. இக்கட்டுரை இவ் இலக்கியச் செய்திகளின் வழித் தமிழர் மருத்துவம் குறித்து அறிய முற்படுகின்றது.

நோய்

புண் (புறம் 281), புண் வழலை, மிடற்றுப் பசும்புண் (புறம். ப. 86) போன்ற புண் தொடர்பான நோய்கள் குறிப்பிடப்படுகின்றன. கருவுற்ற காலத்தில் பெண்ணிற்கு ஏற்படும் நோயாக 'வயா நோய்' குறிப்பிடப்படுகிறது. இந்நோயுற்ற மகளிர் மண் உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டிருப்பதாக நோயின் அறிகுறி புலப்படுத்தப்படுகிறது (புறம், ப. 89). பெரும்பசி (திரிகடுகம், பாடல் 60), வயிற்றுத் தீ (புறம், 74), யானைத் தீ (மணிமேக€லை) என்ற நோய்கள் 'தீராத பசி' தொடர்பான நோய்களாகக் காணப்படுகின்றன. இவை தவிர மருந்தால் தீராத பெரும்பிணி பற்றிய செய்தியும் இலக்கியத்தில் இடம்பெறுகிறது (திரிகடுகம், பாடல் 18). மேலும் சில நோய் அறிகுறிகள் இலக்கியத்தில் சுட்டப்படுகின்றன (நாலடியார் பாடல் 29, திருமந்திரம் பாடல் 148, கம்பராமாயணம் பாடல் 592) இவற்றைக் கொண்டு இந்நோய் இன்று குறிப்பிடப்படும் 'மாரடைப்பு' என்ற நோயாக இருக்கலாம் என்று யூகிக்க இயலுமா என்பது சிந்தித்தற்குரியது. குழந்தையின்மை, தொழு நோய், பால்வினை நோய் ஆகிய நோய்கள் மிகப் பழங்காலந்தொண்டு இருந்துள்ளன என்பதையும் அறிய முடிகின்றது (புறம், பாடல் 9, ப, 26; நளாயினி கதை : திருப்புகழ், பாடல் 682).

தலைவலி, சுரம், கண் ஒளி குன்றுதல் போன்ற நோய்களைத் திருப்புகழும் (பக். 10-11), குளிர் சுரம், சூலை நோய், வெப்பு நோய், முயலகன் போன்ற நோய்களைப் பெரிய புராணமும் (ப.273, 157, 316, 270) சுட்டுகின்றன. இவற்றுள் வெப்பு நோயின் அறிகுறிகளாக உடல் நடுங்குதல், உடல் வெம்மையடைதல், கனல் போன்று வருத்துதல், வெம்மை வயிற்றினுள் புகுதல், குடலினுள் புகுதல், அருகில் உள்ளோரும் வாடித் தீய்ந்து போகும்படி உடல் உலர்ந்து சுருங்குதல், வாழையின் இளங் குருத்திலும் தளிர்களிலும் நோயுற்றாரைக் கிடத்துதல், அவ்வாறு கிடத்துமிடத்து அவை வெப்பத்தால் காய்ந்து பொடியாதல், பேச்சின்றி நினைவிழந்து மயங்கி வீழ்தல் போன்றன குறிப்பிடப்படுகின்றன.

மருத்துவ நூல் வல்லுநர்கள் தமது பல கலைகளிலும் வகுத்து ஓதப்பட்ட மருத்துவத் தொழில்கள் எல்லாவற்றையும் செய்தும் நோய் குணமடையவில்லை என்ற முறையில் கொடுமை வாய்ந்த நோயாக இந்நோய் காட்டப்படுகிறது. இந்நோயினை இன்று குறிப்பிடும் அம்மை, அல்சர், அக்கி போன்ற நோய்களுடன் தொடர்புபடுத்திக் காண இடம் உள்ளது.

'முயலகன்' என்பது இன்று எந்தப் பெயரால் உணர்த்தப்படுகிறது என்று அறிய இயலாவிடினும் அந்நோய் பெருங் கொடிய நோய்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுதல் கொண்டு இந்நோயின் கொடுமையை உணரலாம். இந்நோய் கொண்டவர் உணர்வற்றுக் கிடப்பர் என்றும், வலிப்புடன் கிடப்பர் என்றும் நலிவுற்றுக் கிடப்பர் என்றும் சுட்டப்படுகின்றது. இத்தகைய நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு இந்நோயினைக் 'காக்காய் வலிப்பு' என்று சொல்லப்படும் வலிப்பு நோயுடன் தொடர்புபடுத்திக் காண இயலுமா என்பது ஆராய்தற்குரியது.

நோய்க்கான காரணங்கள்

பெண்ணுடன் உறவு கொள்வதால், குறிப்பாக விலை மகளிருடன் உறவு கொள்வதால் உடம்பு முழுவதும் அழுகி தொழுநோய் ஏற்படுகிறது (திருப்புகழ், பாடல் 682, நளாயினி கதை) என்றும், நண்டின் கால்களைச் சாப்பிடுவதால் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது (நாலடியார் பாடல் 123) என்றும், சுடுகாட்டுள்ளும் மரத்தடியிலும் துயிலுவதால் இந்நோய் ஏற்படும் (ஆசாரக் கோவை, பாடல் 57) என்றும் நோய்க்கான காரணங்கள் பேசப்படுகின்றன. இவை எந்த அளவு இன்றைய மருத்துவ முறைகளோடு அறிவியல் பூர்வமாகத் தொடர்புபட்டுள்ளன என ஆய்ந்து காண்பது அவசியமாகும்.

நோய் அறியும் முறைகள்

நோயுற்றவனிடத்து உள்ள நோயினை அந்நோயின் அறிகுறிகள் இன்னதென்று மருத்துவர் துணிந்து, பின்னர் அந்நோய் வருவதற்கான காரணத்தை ஆராய்ந்து தெளிந்து அதன் பின்னர் அதை தீர்க்கும் உபாயம் அறிந்து அதில் பிழையாமல் செய்தல் வேண்டும் என்றும் அவ்வாறு நோயுற்றவனின் தன்மையையும் அவனிடத்து உள்ளதாகிய நோயின் அளவினையும் மருத்துவநூலில் குறிப்பிட்டுள்ளவாறு அறிந்து செய்தல் வேண்டும் என்றும் நோய் அறியும் முறைகள் குறித்துத் திருக்குறள் சுட்டுகின்றது (திருக்குறள் 948, 949, 950).

நோய் அறிபவர் - (மருத்துவர்) :

மேற்குறிப்பிட்ட செய்தியின் வாயிலாக நோய் அறியும் அறிவு படைத்த மருத்துவர்களும், அவர்கள் மருத்துவ அறிவு பெறுதற்கான மருத்துவ நூல்களும் இருந்துள்ளன எனவும், ஆண்-பெண் இருபாலாரிலும் மருத்துவம் கற்றறிந்த மருத்துவர்கள் இருந்தனர் (தொல், பொருள், நூற்பா. 503) எனவும் அறியலாம். மேலும் சித்த மருத்துவம் கற்ற சித்தர்களும், ஆயுர்வேதம் பயின்ற மருத்துவர்களும், அவர்களது மருத்துவ முறைகளும் விளக்கப்படுகின்றன (சித்தர் பாடல்கள், தன்வந்திரி குழந்தை வாகடம் - க. லலிதாம்பிகா).

மருத்துவ முறைகள்

மருந்து செய்தல், உதிரம் களைதல், அறுத்தல், சுடுதல் போன்ற அறுவை மருத்துவம் தொடர்பான மருத்துவ முறைகளும் (திருக்குறள், அதிகாரம் 95) உடலின் சக்தியைப் புருவ மத்திக்குக் கொணர்தல், வல-இட மூச்சுக்காற்று தொடர்பாகச் சில அறிவியல் உண்மைகளை விளக்குதல் என்பன போன்ற 'யோகா' தொடர்பான மருத்துவ முறைகளும் (திருமந்திரம் பாடல் 440, 462), மந்திரம், தியானம் போன்ற முறைகளால் நோய் நீக்க வல்ல மருத்துவ முறைகளும் (பெரிய புராணம், ப. 360). நாடி பார்த்து நோய் அறியும் மருத்துவ முறையும் (திருமந்திரம், பாடல் 151) தமிழ் இலக்கியங்களில் இடம்பெறுகின்றன.

மருந்து :

வீட்டின் முன்புறம் வேம்பினைச் செருகியும், வெண்சிறு கடுகினைத் தூவியும், நறுமணப் புகைகளை உண்டாக்கியும் வில், வேல், வாள் போன்ற ஆயுதங்களால் ஏற்பட்ட புண்ணைப் பாதுகாத்தனர் (புறம், 231) என்றும், பிள்ளைப் பேற்றின் பின் 'நெய்யணி மயக்கம்' என்று குறிப்பிடக்கூடிய எண்ணெய் நீராடும் செயலைப் பெண்கள் மேற்கொண்டனர் (தொல். பொருள், பேரா. நூற். 46) என்றும், உயிர் பிரிந்தபின் அந்த உடம்பு சில காலத்திற்குக் கெட்டுவிடாமல் பாதுகாத்து வைப்பதற்காக ஒருவகை எண்ணெயில் அதனை இட்டு வைத்தனர் (கம்பராமாயணம் - தைலமாட்டு படலம், பாடல் 608) என்றும், தலைமுடி நன்கு வளர்வதன் பொருட்டுக் 'கடுக்கலந்த கைபிழி' எண்ணெயைப் பயன்படுத்தினர் (தொல். சொல். சேனா. ப.19) என்றும் சில மருந்துகளின் பயன்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன.

சராசரி இறப்பு வயது :

மனிதனின் சராசரி இறப்பு வயது 70 ஆக இருந்ததாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன (திருமந்திரம் : பாடல் : 163). அதிக அளவு வாழ்நாள் பெறுவதற்கு நெல்லிக்கனி மருந்தாகப் பயன்பட்டுள்ளது (அதியமான் - ஒளவை - நெல்லிக்கனி - புறம்) திருமந்திரம் எழுதிய திருமூலரது காலத்தில் இவ்வாறு மனிதனின் சராசரி இறப்பு வயது 70ஆக இருந்ததா என்பதும் நெல்லிக்கனி நீண்ட வாழ்நாளுக்கு மருந்தாகப் பயன்படுமா என்பதும் ஆய்விற்குரியன.

தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் தொடர்பான செய்திகள் விரிவாக அன்றி, மேற்கண்டவாறு ஆங்காங்கே குறிப்புகளாக மட்டுமே பெரும்பான்மையும் கிடைக்கின்றன. தமிழர் தமது மருத்துவ முறையினைப் பிறர் அறியா வகையில் மறைத்து வைத்திருந்தமையும், மருத்துவ நூல்கள் பலவும் செய்யுள் வடிவாக இடம் பெற்றிருந்தமையும், மருந்துகளின் பெயர்கள் பிறர் அறியா வகையில் குழுஉக் குறிகளாகப் பயன்படுத்தப்பட்டமையும் இந்நிலைக்குரிய காரணங்களாகக் கருதலாம் (தன்வந்திரி குழந்தை வாகடம். பக். 3,4).

Edited by வானவில்

  • தொடங்கியவர்

இனி, மனித உடலின் அமைப்பைக் குறித்துத் தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளைக்

உடல் அமைப்பு :

கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித்துவாரம் இரண்டு, வாய் ஒன்று, கருவாய் எருவாய் என இரண்டு ஆக உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. உடம்பில் ஐந்து இந்திரியங்களும், ஆறு ஆதாரங்களும் உள்ளன. எலும்பு இணைப்புகள் முப்பது உண்டு; அவற்றைச் சார்ந்துள்ள பொருத்துகள் பதினெட்டு; இவற்றின்மீது போர்த்தப்பட்ட பந்தல் ஒன்பது; வரிசையாகவுள்ள எலும்புகள் பதினைந்து என்றும் மனித உடலின் அமைப்பு இலக்கியங்களில் (திருமந்திரம், பாடல் 152, 159) பேசப்படுகிறது. 'தொல்காப்பியம்' என்ற இலக்கண நூலில், தமிழ் எழுத்துக்கள் உடலின் எந்தெந்த உள்ளுறுப்புக்களின் வழியாகத் தோன்றி, எந்தெந்த உறுப்புக்களின் வழியாக வெளிப்படுகின்றன என்ற செய்தி இடம் பெறுவதும், இந்த எழுத்துக்களின் பிறப்புமுறை அறிவியல் பூர்வமாக மொழியியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கன.

மனித உடலின் அமைப்பைப் பற்றிச் சிந்தித்த இலக்கிய ஆசிரியர்கள் உடலில் தோன்றும் உயிர்த்தோற்றம் குறித்த அறிவும் வாய்க்கப் பெற்றிருந்தனர் என்பதைச் சில இலக்கியச் சான்றுகள் வழி அறியலாம்.

கருத்தோன்றும் காலம் :

பெண்ணின் கருப்பையில் கருத்தோன்றும் காலம் குறித்து இலக்கியங்களில் இடம் பெறக்கூடிய சில செய்திகள் இன்றைய அறிவியலோடு பெரிதும் பொருந்தி வருமாறு அமைந்துள்ளன. மாதவிலக்குத் தோன்றி முடிந்த பின்னர் பன்னிரெண்டு நாட்கள் பெண்வயிற்றில் கருத்தோன்றும் காலம் என்பர் (தொல். பொருள். நச். நூற் : 187). மாதவிலக்குத் தோன்றிய நாளிலும், மற்றும் மாதவிலக்கு இருக்கக் கூடிய பிற நாட்களிலும் கருத்தங்கினால் அது வயிற்றிலேயே அழிந்துவிடும் எனவும், மூன்றாம் நாள் கருத்தங்க நேர்ந்தால் அக்கரு சிலகாலம் உயிருடன் இருந்து பின்னர் அழியும் என்றும், கணவனும் மனைவியும் உறவு கொள்ளும் காலத்து வருத்தம் இன்றி மனமகிழ்ச்சியுடடன் இருப்பின் கருமாட்சிமைப் படுமென்றும் கருதியுள்ளனர் (தொல். பொருள். நச். ப.271). பெண்ணின் வயிற்றில் கருத்தோன்றி வளரும் காலத்து அவளது உடலின் உள்ளும் புறமும் ஏற்படும் மாற்றங்களையும் இவ்விலக்கியங்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

கருவின் தோற்றமும் வளர்ச்சியும் :

கரு பெண்ணின் கருப்பையில் முதன் முதல் சென்று தங்கும் போது உள்ள அளவினைப் பட்டினத்தடிகள் பனித்துளியில் பாதி அளவு என்று குறிப்பிடுகிறார். கரு முதலில் குழம்பாக இருந்து பின்னர்க் கட்டியாகி, மூளை, கரு நரம்பு, வெண்மையான எலும்பு, தோல் முதலியன உண்டாகப் பெற்று உருவாகும். இந்த உண்மையை ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் தேவாரத்தில் சுட்டியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் தாயின் வயிற்றில் கரு எவ்வாறு மாறுதலடைந்து தப்பிப் பிழைத்து வருகின்றது என்பதை மாணிக்கவாசகர் திருவாசகம் போற்றித் திரு அகவலில் விளக்குகிறார் (தாயின் மணி வயிற்றில், அ.மு. பரமசிவானந்தம், பக், 58-60). திருமூலர் திருமந்திரத்தில் கருவின் வளர்ச்சி நிலை குறித்து 436வது பாடல் முதல் 438வது பாடல் வரை சொல்லிச் செல்கிறார். மேலும் உயிர் கருவினுள் அருவுடம்போடு இருக்கும் நிலையினைப் 'புலம்பு நிலை' என்று குறிப்பிடுவார் என்றும் கரு தாயின் வயிற்றில் முந்நூறு நாள்கள் (பத்து மாதங்கள்) தங்கும் என்றும் விளக்குகிறார் (திருமந்திரம், பாடல் 437, 440).

பிறப்பு நிலை :

பெண்ணின் வயிற்றில் தோன்றி வளர்ந்து வரும் கரு எவ்வெக் காரணங்களால் எவ்வெக் காலத்து, ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும் தோன்றும் என்பது பற்றியும் குழந்தை கருவில் இருக்கும்பொழுதே ஆணா, பெண்ணா எனக் கண்டறியும் நிலை பற்றியும், எவ்வெக் காரணங்களால் குழந்தை உறுப்புக் குறைபாடுடையதாக, முடமாக, கூனாக, மந்தத் தன்மையுடையதாக, ஊமையாக, குருடாகப் பிறக்கும் என்பது பற்றியும், எவ்வெக் காரணங்களால் இரட்டைக் குழந்தை உருவாகிறது என்பது பற்றியும் திருமந்திரம் வெளிப்படுத்துகின்றது (திருமந்திரம் பாடல் 462, 466). இவை மட்டுமன்றி அறிவு மங்கிக் குழந்தை பிறக்கும் தன்மையும் தசைத் திரளாகக் குழந்தை பிறப்பதும், விலங்கு வடிவுடன் பிறப்பதுமாகிய நிலைகளும் சுட்டப்படுகின்றன (புறம், பாடல் 28).

கருச்சிதைவு :

கருவுற்றோர் தாமே கருவைச் சிதைத்தலும், ஒருவரது கருவைப் பிறர் சிதைத்தலுமாகிய செயல்கள் இலக்கியங்களில் இடம் பெறுகின்றன (புறம், பாடல் 34., இந்து புராண ஆராய்ச்சி, ந.இராமலிங்கம் ப.2.) இங்கு சிவனும், உமையும் உறவு கொண்டதன் காரணமாக உமையின் வயிற்றில் உருவாகிய கருவை அழித்துவிடுமாறு சிவனிடம் இந்திரன் வேண்டிக் கொள்ள, அவ்வேண்டுதலுக்கு இணங்கிச் சிவன் உமையின் கருவைச் சிதைத்தான் என்ற கதை பேசப்படுகிறது. இச் செய்தியை முற்றிலுமாகக் 'கற்பனை' என்று விலக்கிவிட இயலாது. இதில் சிவன், உமை, இந்திரன் என்ற பெயர்கள் கற்பனையாக அமைந்த போதிலும் 'கருவைச் சிதைத்தல்' என்னும் செயலை அறிவியல் சார்ந்த நிகழ்வாகக் கொள்ளுதலே பொருந்தும்.

கருமாற்றம் :

இந்திரன் வேண்டிக் கொண்டதன் காரணமாகச் சிவன் சிதைத்த கருவினை ஏழு முனிவர்கள் பெற்றுச் சென்றனர் என்றும், அக்கருவை அந்த முனிவர்கள் மனைவியர் எழுவரும் அவ்வாறே ஏற்றுக் கொண்டால் அவர்கள் கற்பு நிலையிலிருந்து வழுவியவர்களாகக் கொள்ளப்படுவர் என்பதால் வேள்வி செய்து அக்கருவை அழலில் பெய்து (தூய்மை செய்து) கற்பிற் சிறந்த அருந்ததி தவிர ஏனைய ஆறு பெண்களும் அயின்று சூலுற்றுக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர் என்றும் மேற்கண்ட கதை விரிகிறது.

இங்குக் கருவிற்கு உரிமையுடைய ஆணாகச் சிவனும், பெண்ணாகப் பார்வதியும் சுட்டப்படுகின்றனர். கருவைச் சுமக்கும் வாடகைத் தாயாராக ஆறு பெண்கள் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் ஒருவரது கருவைப் பிறர் வயிற்றில் கருவுற்றுக் குழந்தையைப் பெற்றடுத்தலாகிய செயலும், ஒரு கருவைப் பல பெண்கள் சுமந்து பல குழந்தைகளாகப் பெற்றெடுத்தலும் சொல்லப்படுகின்றன. இவை மட்டுமன்றிக் கருவிற்கு உரிமையுடைய பெண்ணான உமைதான் குழந்தையின் தாயா அல்லது கருவைச் சுமந்து ஈன்ற பெண்கள்தான் அக்குழந்தைகளின் தாயாரா என்ற சர்ச்சையும் இடம் பெறுகிறது. இத்துடன் ஒரு ஆணின் கருவை, அந்த ஆணின் மனைவியல்லாத பிற பெண்கள் தமது வயிற்றில் சுமப்பது சமுதாயத்தில் பண்பாட்டுக் குறைபாடுடைய ஒரு செயலாகவும் குறிக்கப் பெறுகிறது. இக்கருத்துக்கள் அனைத்தும் இன்றைய அறிவியல் வளர்ச்சியுடனும் (செயற்கைமுறைக் கருத்தரித்தலுடன்) இன்றைய சமூகப் பண்பாட்டுச் சூழலுடனும் ஒப்பிட்டு ஆராயத்தக்கன.

ஆறறிவுயிர்

இதனை அடுத்து ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் ஈறாக உள்ள உயிரினங்கள் குறித்து இலக்கியங்கள் கொண்டிருந்த கருத்துக்களையும் காணலாம்.

உற்றறியும் அறிவை மட்டும் உடைய புல், மரம் போன்ற உயிர்கள் ஓரறிவு உடைய உயிர்களாகவும், உற்றறியும் உணர்வுடன் நாவின் உணர்வும் உடைய நத்தை, கிளிஞ்சல் முதலாகிய கடல் வாழ் உயிரினங்கள் ஈரறிவுடைய உயிர்களாகவும், இவ்விரு அறிவுடன் மூக்கின் உணர்வும் பெற்ற கறையான், எறும்பு போன்ற உயிர்கள் மூவறிவுடைய உயிர்களாகவும் (இவற்றுள் ஈசல் ஒரே ஒரு நாள் மட்டும் உயிர் வாழும் உயிரினமாகக் குறிக்கப்படுகின்றது), மேற்கண்ட மூவறிவுடன் கண்ணின் உணர்வும் பெற்ற நண்டு, வண்டு, தும்பி, தேனி, குழவி முதலாகிய உயிர்கள் நான்கறிவுயிர்களாகவும், இந்த நான்கறிவுடன் செவியுணர்வும் கொண்ட கிளி, குரங்கு, மன வளர்ச்சியற்ற மக்கள் ஆகியன ஐயறிவு கொண்ட உயிர்களாகவும், முப்பத்து இரண்டு உறுப்புக்கள் ஒழுங்காக அமையப் பெற்று அறிவோடு சார்ந்த மன உணர்வினையுடைய மக்கள் (ஆண்-பெண்) ஆறறிவுடைய உயிர்களாகவும் இலக்கண இலக்கியங்களில் விளக்கப்பெறுகின்றன. இதில் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மனவுணர்வுடையன உளவாயின் அவையும் இங்கு ஆறறிவுயிராய் அடங்கும்' என்ற கருத்து குறிப்பிடத்தக்கது (தொல். பொருள். பேரா நூல். 582-588).

'குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்' என்ற கோட்பாடு அறிவியல் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில் நிறுவப்பட்டது. இன்றைக்கு மூவாயிரம் ஆண்களுக்கு முந்தியதாகக் கருதப்படக்கூடிய தொல்காப்பியத்தில் இக்கோட்பாடு விளக்கம் பெற்றிருப்பது சிந்தித்தற்குரியது.

மேற்காட்டியவாறு ஒருறிவுயிர் தொடங்கி ஆறறிவுயிர் ஈறான உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும், விலங்கிலிருந்து - குரங்கிலிருந்து மனிதன் தோன்றியமையும் போன்று விலங்குகளின் வித்தியாசமான சில தன்மைகளும் இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றன.

நண்டும், சிப்பியும் தாம் கொண்ட சூல் முற்றிக் கருவுயிர்த்த பின் மாண்டொழியும் (கம்பராமாயணம், நீலகேசி உரை மேற்கோள் பாடல், பக்.489, 490); தன் குட்டிகளைத் தின்னும் இயல்புடையது முதலை (ஐங்குறு, பாடல் 41); தாய் சாகுமாறு பிறக்கும் தன்மையுடையது புள்ளிக் களவன் (ஐங்குறு, பாடல் 24) என்ற செய்திகளும் இங்குச் சுட்டிக் காட்டுதற்குரியன.

நன்றி முத்தமிழ்

  • 4 weeks later...

தமிழ் இலக்கியத்தில் இப்படி நிறைய விடையங்கள் உண்டு இதனை யாரும்

கண்டுகொள்வதில்லை இதனைபோன்ற தகவல்கள் நிறைய வரவேண்டும்

இன்றைய விஞ்ஞானம் அன்றைய தகவல் இலக்கியத்தில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.