Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ். ராமகிருஷ்ணனுக்கு 'சஞ்சாரம்' நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
சஞ்சாரம்படத்தின் காப்புரிமை எஸ்.ராமகிருஷ்ணன் /Facebook

இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2015ல் வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது.

"நாதஸ்வர இசைக் கலைஞ்களில் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படும் அளவுக்கு கோவில்பட்டி போன்ற கரிசல் பகுதியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படவில்லை. இந்தக் கலைஞர்களின் துயரத்தை, வாழ்க்கையை, வாழ்க்கை இவர்களை அடிக்கும் அடியை இந்த நாவல் சொல்கிறது" என தனது சஞ்சாரம் நாவல் குறித்து பிபிசியிடம் பேசினார் எஸ். ராமகிருஷ்ணன்.

"தஞ்சாவூரில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்களுக்கு கிடைத்த வாழ்க்கைபோல இவர்களுக்கு அங்கீகாரமோ, ஊதியமோ கிடைக்கவில்லை. இவர்கள் தங்கள் ஊர்களில் விவசாயம் சார்ந்து வாழ்ந்தார்கள். விவசாயம் அழிந்தவுடன் இவர்களும் அழிந்தார்கள். இவர்களுக்கு படிப்பு இல்லை. நாதஸ்வரக் கலையைக் கற்றுக்கொள்ள 7 - 8 வருடம் பயிற்சி தேவை. அதைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு வசதியில்லை. ஆகவே மெல்ல மெல்ல அந்தக் கலையிலிருந்து இந்தக் கலைஞர்கள் வெளியேறிவருகிறார்கள்" என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சுப நிகழ்வுகளில் நாதஸ்வர இசையை பயன்படுத்துகிறார்கள். இப்படியாக மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இந்தக் கலைஞர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார் ராமகிருஷ்ணன்.

"தமிழ் இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் மிக முக்கியமான இரண்டு பேர் ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும். இருவருமே எழுத்தின் மூலமாகவே பிரபலமடைந்தவர்கள். குறிப்பாக எஸ். ராமகிருஷ்ணன், பதின் வயதிலிருந்து எழுத்தாளராக வேண்டுமென நினைத்து புறப்பட்டவர். தொடர்ந்து பயணம் செய்தவர். பல மக்களின் வாழ்வைப் பார்த்தவர். இந்தப் பயணங்கள்தான் அவரது எழுத்தின் அடிப்படையாக இருந்தன" என்கிறார் கவிஞர் ரவி சுப்ரமணியன்.

சஞ்சாரம்படத்தின் காப்புரிமை எஸ்.ராமகிருஷ்ணன்/Facebook

இந்த சஞ்சாரம் நாவலுக்காக இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்கள் புழங்கும் சொற்களை எஸ். ராமகிருஷ்ணன் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் ரவி சுப்ரமணியன்.

1966ல் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்த எஸ். ராமகிருஷ்ணன், ஒரு முழுநேர எழுத்தாளர். 18 சிறுகதைத் தொகுப்புகள், சஞ்சாரம், உபபாண்டவம் உள்பட 9 நாவல்கள், 36 கட்டுரைத் தொகுப்புகள், 8 திரைப்பட நூல்கள், குழந்தைகளுக்கென 15 புத்தகங்கள், இரண்டு வரலாற்று நூல்கள், 3 நாடகத் தொகுப்புகள், 2 நேர்காணல் தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

விகடனில் மாணவப் பத்திரிகையாளராக தன் எழுத்துப் பணியைத் துவங்கிய எஸ். ராமகிருஷ்ணன், அவ்வப்போது பல இதழ்களுக்காக பணியாற்றியிருக்கிறார். "ஆனால், ஒரு நிறுவனத்தில் என பணியாற்றியதில்லை. ஒரு கட்டத்தில் முழு நேர எழுத்தாளராக இருப்பதென முடிவுசெய்துவிட்டேன்" என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

சண்டைக்கோழி உட்பட பல படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.

"கரிசல்காட்டிலிருந்து பல எழுத்தாளர்கள் இந்த சாகித்ய அகாதெமி விருதை வாங்கியிருக்கிறார்கள். இடைசெவல் கிராமத்திலிருந்து கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், ராஜவள்ளிபுரத்திலிருந்து ரா.பி. சேதுப்பிள்ளை, வல்லிக்கண்ணன் என ஒரு கிராமத்திலிருந்தே இருவர் விருதுகளை வாங்கியிருப்பதெல்லாம் இந்தியாவிலேயே நடக்காத ஒன்று. விருதுநகரும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்ததுதான். ஆகவே நெல்லை மாவட்டத்தில் இருந்து சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றவர்களின் எண்ணிக்கை மேலும் ஒன்று அதிகரித்திருக்கிறது" என்கிறார் கதைசொல்லி இதழின் ஆசிரியரும் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளருமான கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

விருது வழங்கப்பட்ட சஞ்சாரம் நாவலை 2015ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. தற்போது தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-46457317

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது

ஜெயமோகன்

sr

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கோயில்பட்டியில் எண்பதுகளில் தேவதச்சனின் நகைக்கடைச் சபையில் இருந்து கிளம்பிய எழுத்தாளர்களின் சிறுகுழு ஒன்று உண்டு. அன்றிருந்த இலக்கியத்தின் எல்லைகளை விரிவாக்கியவர்கள். மொழிபிலும் அமைப்பிலும் புதியவற்றை நிகழ்த்தியவர்கள். கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகிய மூவரும் அதில் முதன்மையானவர்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ்ச்சிறுகதையில் கூரிய யதார்த்தக் கதைகள் வழியாக நுழைந்தார்.பின்னர் மாயயதார்த்தப் புனைவுகளை எழுதினார். மீண்டும் யதார்த்தபாணிக் கதைகளுக்குள் சென்றார். அவருடைய புகழ்மிக்க முன்னோடிகளான கி.ராஜநாராயணன், பூமணி ஆகியோர் எழுதிய அதே நிலத்தையும் மக்களையுமே அவர் எழுதினார். ஆனால் அவர்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தார். அவர்களை அந்த மண்ணில் நிகழ்ந்த நீண்ட தொல்மரபின் ஒரு பகுதியென நிறுத்தி ஆராய்ந்தார். அதனூடாக தமிழ் இலக்கியமரபில் புதிய சாதனைகளைச் செய்தார்

பெரும்பாலான  முதன்மைப் படைப்பாளிகளைப்போலவே எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் சிக்கலான ஊடுபாவுகள் கொண்ட அமைப்புக்களுடன் இருந்து பின்னர் மெல்லமெல்ல எளியநேரடி கதைகூறல்கொண்டவையாக மாறி அந்த அனைத்து அகச்சிக்கல்களையும் ஆழத்தில் கொண்டவையாக உருப்பெற்றிருக்கின்றன. அவருடைய நாவல்களும் அவ்வாறே. அவருடைய நாவல்களில் முதன்மையானது நெடுங்குருதி. யாமம் அழகியலொருமை கொண்ட பிறிதொரு படைப்பு

saa

சஞ்சாரம்’ விரிந்த பொட்டல்நிலத்தில் இசையுடன் அலைந்து திரியும் கலைஞர்களைப்பற்றிய நாவல். இந்நிலம் நாதஸ்தவரத்திற்கு மிக உகந்தது. தொலைவிலிருந்து காற்றில் மிதந்து எழும் நாதஸ்வரம் அளிக்கும் உணர்வுகள் முற்றிலும் வேறு. ஆலயக் கல்மண்டபங்களில் ஒலிக்கையில் அதற்கு இருக்கும் மங்கலத்திற்குப் பதிலாக பொட்டலில் அதில் துயரம் ஒன்று குடியேறியிருக்கும். அங்குள்ள வெறுமையின் ஒலியாக அது மாறியிருக்கும்.

நாதஸ்வரத்தின்மேல் பொட்டல்நிலத்து மக்களுக்குப் பெரும் பற்று ஒன்று இருந்திருக்கிறது. காருக்குறிச்சி அருணாச்சலம் இந்நிலத்தின் நாதஸ்வர மரபின் அடையாளமாக இன்று கருதப்படுகிறார். கி.ராஜநாராயணன் நிறையவே எழுதியிருக்கிறார். நினைவுகளாகவும் கதைகளாகவும். கோணங்கி புலிக்குகைநாயனம் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். சஞ்சாரம் அந்த வரிசையில் வரும் படைப்பு.

இசை இதன் மையச்சரடு. ஆனால் அந்நிலத்தின் சொல்லப்படாத உணர்வுகள் அனைத்துக்கும் அடையாளமாக நாவல் விரிய விரிய அது உருமாறுகிறது. இசையைக்கொண்டு அந்நிலத்தின் வரண்டவாழ்க்கையின் உள்மோதல்களையும் தனிமையையும் சொல்லிச்செல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழில் ஓர் அறிவியக்கம் என்றவகையில் செயல்படுபவர் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழகத்தின் தலைசிறந்த மேடைப்பேச்சாளர்களில் ஒருவர். பயணக்கட்டுரை எழுத்தாளர். திரைப்படங்களை அறிமுகம் செய்பவர். நூலறிமுகங்களை விரிவாக நிகழ்த்துபவர். அவருடைய அறிவுலகில் நுழையும் ஒரு வாசகர் சமகால உலகஅறிவுச்செயல்பாட்டின் பல தளங்களை நோக்கி ஆளுமை விரியப்பெறுவார். அவ்வகையில் ஒரு நல்லாசானாக இன்று திகழ்கிறார்

எஸ்.ராமகிருஷ்ணன் அனைத்துவகையிலும் இன்றைய தமிழர்கள் எண்ணிப் பெருமைகொள்ளவேண்டிய ஆளுமை. இந்தக் காலகட்டத்தின்  தமிழ் இலக்கிய அழகியலின் முகம்  இந்த விருது அவருக்கு தமிழ்வாசகர்கள் அளிப்பதும்கூட.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்

 

https://www.jeyamohan.in/115892#.XAhFEC-nxR4

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.