Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்
   
திரைப்படம் நேர்கொண்ட பார்வை
   
நடிகர்கள் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ்
   
இசை யுவன் சங்கர் ராஜா
   
ஒளிப்பதிவு நீரவ் ஷா
   
இயக்கம் எச். வினோத்
   
   

2016ல் இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் அஜித் குமார் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியானதிலிருந்தே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது.

மீரா கிருஷ்ணன் (ஷரத்தா), ஃபமிலா (அபிராமி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா)ஆகிய மூவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டிற்கு அருகில் புதிதாகக் குடிவருகிறார் வழக்கறிஞரான பரத் சுந்தரம் (அஜித்).

ஒரு நாள் நண்பர்களுடனான பார்ட்டியின்போது, புதிதாக அறிமுகமான இளைஞன் ஒருவன் மீராவை பலாத்காரம் செய்ய முயற்சிக்க, அவனை பாட்டிலால் அடித்துவிட்டு மூவரும் வெளியேறுகிறார்கள்.

நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்

அடிவாங்கிய இளைஞன் அரசியல் தொடர்பும் பணமும் உள்ளவன் என்பதால், அவன் கொடுத்த கொலை முயற்சி புகாரில் மீராவைக் கைதுசெய்கிறது காவல்துறை.

அப்போது அவர்களுக்காக வாதாட முன்வருகிறார் கர்ப்பிணி மனைவியை (வித்யா பாலன்) இழந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துவரும் பரத் சுந்தரம்.

இந்த வழக்கின் முடிவில் யார் தண்டிக்கப்படுகிறார்கள் பிங்க் படத்தைப் பார்த்தவர்களுக்கும் கதையைப் படித்தவர்களும் முடிவு தெரிந்ததுதான்.

இந்தியில் பெரும் வெற்றிபெற்ற ஒரு படத்தை அதன் ஜீவன் மாறாமல் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் எச். வினோத். இந்திப் படமே சிறப்பான திரைக்கதையைக் கொண்ட படம் என்பதால், இந்தப் படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.

நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்

ஆனால், அஜித் ரசிகர்களை மனதில் வைத்து ஒரு பெரிய சண்டைக் காட்சியையும் படத்தில் இணைத்திருக்கிறார்.

ஒரிஜினலில் அமிதாப்பின் மனைவி, நோயில் இறந்துவிடுவார். இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, கருத்தரிக்கும் மனைவி, வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கீழே விழுந்து இறந்துவிடுகிறார். இந்த வித்தியாசங்களைத் தவிர, அதே காட்சிகள்தான்.

ஆனால், தமிழுக்காக இணைக்கப்பட்டிருக்கும் இந்த இரு காட்சிகளுமே அஜித் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை அளிக்கக்கூடும்.

குறிப்பாக, ஒரு ஐம்பது - ஐம்பத்தைந்து அடியாட்களை ஒற்றை ஆளாக அஜித் அடித்துத் துவம்சம் செய்யும் காட்சி.

நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்

பிரபல கதாநாயகர்கள் பெரும்பாலும் பெண்கள் குறித்து பழமைவாத அறிவுரைகளையே சொல்லிவரும் நிலையில், இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு நவீனமான பார்வையை முன்வைக்கிறது. "குடிப்பது தப்பு என்றால், ஆண் - பெண் இருவர் குடிப்பது தப்பு", "ஒரு பொண்ணு 'நோ'ன்னு சொன்னா, அது காதலியாக, தோழியாக, பாலியல் தொழிலாளியாக ஏன் மனைவியாக இருந்தாலுமே 'நோ'ன்னுதான் அர்த்தம்" என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களிடம் ஒரு திறப்பை ஏற்படுத்தக்கூடும்.

அமிதாப் பச்சன் 74 வயதில் நடித்த பாத்திரத்தை அஜித் குமார் நாற்பதுகளின் பிற்பகுதியில் ஏற்று நடித்திருக்கிறார். அந்த சண்டைக் காட்சியை மறந்துவிட்டால், படத்தில் நடித்திருப்பது அஜித் என்பது மறந்தேபோய்விடும் அளவுக்கு துருத்திக்கொள்ளாமல், பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் அஜித். அவரது திரைவாழ்க்கையில் காதல் கோட்டை, வாலி படங்களைப் போல இதுவும் ஒரு முக்கியமான, திருப்புமுனை படம்.

நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்

இந்தியில் டாப்ஸி பன்னு நடித்த பாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவரும் சரி, அபிராமி, ஆண்ட்ரியா ஆகியோரும் சரி, சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு பாடல்களே தேவையில்லாதான். இருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உமா தேவி எழுதியிரும் 'வானில் இருள்' ஒரு சிறப்பான மெலடி.

'சிறுத்தை சிவா' படத்தொடர்களை விட்டு வெளியில் வந்திருக்கும் அஜித்தின் இந்தப் படம், அவரது ரசிகர்களை மட்டுமல்ல, பொதுவான சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்க்கும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-49249624

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: நேர்கொண்ட பார்வை

இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் 3 ஆண்கள், 3 பெண்கள் ஹோட்டலில் சந்திக்கிறார்கள். அதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஒருவரைப் பாட்டிலால் அடித்துவிடுகிறார். இதனால் மூன்று ஆண்களும், மூன்று பெண்கள் மீது புகார் அளிக்கிறார்கள். இதில் பெண்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார் அஜித். ஏன் அந்தப் பெண் அடித்தார், என்ன நடந்தது, சமூகத்தில் பெண்கள் மீதான பார்வை எப்படியிருக்கிறது என்ற பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது 'நேர்கொண்ட பார்வை'

இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக். ஆனால், அந்தக் கதையை அப்படியே பண்ணாமல், தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். அந்தக் களத்தோடு இங்கு பெண்களை எப்படி பார்க்கிறோம் உள்ளிட்ட பல அம்சங்களை வசனங்களாக திரைக்கதையில் புகுத்தி அப்ளாஸ் பெறுகிறார்.

எளிமையான அறிமுகம், மனைவியின் திடீர் மரணத்தால் தனக்குள் இருக்கும் நோய், பெண்களைக் காப்பாற்ற வாதாடுவது, அவ்வப்போது அமைதியாய் இருப்பது, க்ளைமாக்ஸ் காட்சி வசனம் என வழக்கறிஞர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாய் பொருந்தியுள்ளார் அஜித். மருத்துவரிடம் வில்லன் ஆட்கள் பேசும் போது 'அவன் முன் நிற்காதீர்கள். நீங்கள் பத்திரமாக இருங்கள்' என்று அஜித்துக்கான ஹீரோயிஸக் காட்சியை சரியான இடத்தில் பொருத்தியிருக்கிறார் ஹெச்.வினோத்.

1565090783.JPG
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பு பிரமாதம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். தோழிகளுடன் நட்பாக இருப்பது, பாலியல் துன்புறுத்தலின் போது போராடுவது, கெத்தாக வசனம் பேசிவிட்டு பயந்து ஓடுவது, R U A VIRGIN என்று அஜித் கேட்கும் போது, இப்போது ஏன் இந்தக் கேள்வி என குழம்புவது என தனது நடிப்பின் மூலம் திறமையான நடிகை என நிரூபித்திருக்கிறார்.

அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்குப் பிறகு கவனிக்க வைப்பவர் ரங்கராஜ் பாண்டே தான். தன் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு, கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார். ஆனால், ஒரு சில இடங்களில் கொஞ்சம் செயற்கைத்தனம் எட்டிப் பார்த்துவிடுகிறது. 3 பெண்களையும் கேள்விகளால் துளைத்தெடுக்கும் காட்சி அற்புதம். ரங்கராஜ் பாண்டேவுக்கு இன்னும் பல வாய்ப்புகள் வரக்கூடும்.

அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகியோர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தோழிகளாக நடித்துள்ளனர். இருவருமே தங்களுடைய கதாபாத்திரங்களை உணர்த்து சரியான நடிப்பை வழங்கியுள்ளனர். ஆண்ட்ரியா மட்டும் 'பிங்க்' படத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் இங்கும் நடித்துள்ளார்.

பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் ஆண்களாக அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ் மற்றும் சுஜித் சங்கர் நடித்திருக்கிறார்கள். இதில் அர்ஜுன் சிதம்பரத்துக்கு தான் முக்கியக் கதாபாத்திரம். பாட்டிலில் அடிவாங்கிவிட்டு கோபப்படுவதில் தொடங்கி க்ளைமாக்ஸ் காட்சியில் அஜித்திடம் நீதிமன்றத்தில் பேசுவது வரை சிறப்பாக தன் பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் மூவருக்குமே சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும், கவனிக்க வைக்கிறார்கள்.

1565090856.JPG

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம். பெண்கள் தங்கியிருக்கும் வீடு, நீதிமன்றக் காட்சிகள் என ஒரே அறைக்குள்ளேயே வித்தியாசமான கோணங்கள் வைத்து காட்சிப்படுத்தியிருக்கிறார். யுவனின் பின்னணி இசையில் கொடுத்த கவனத்தை, கொஞ்சம் பாடல்களிலும் செலுத்தியிருக்கலாம். அஜித் - வித்யாபாலன் பாடலை தவிர்த்துப் படத்தோடு பார்க்கும் போது பாடல்கள் எதுவும் மனதோடு ஒன்றவில்லை. ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமாவும் படத்தின் கதைக்களத்துக்கு ஏற்றார் போல் உடைகளைத் தேர்வு செய்துள்ளார். கோகுல் சந்திரனின் எடிட்டிங் மாஸ் காட்சிகளையும், நீதிமன்றக் காட்சிகளையும் அதன் தன்மைக்கு ஏற்றார் போல் கையாண்டிருக்கும் விதம் சிறப்பு.

படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள் தான். பெண்களுக்காக வாதாடும் போது அஜித் பேசும் வசனங்கள் அனைத்துமே மிக எளிமையான வகையில், உடனே பொருந்திப் போகும் வகையில் எழுதியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். 'ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க', ’ஊசிக்குள் நூலை நுழைக்க முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கோம். ஆனால் அந்த ஊசி சரியா என்று நம்ம நினைக்கிறதே இல்ல’ என பல வசனங்கள் இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் 'No' என்பது ஒரு சொல் அல்ல, ஒரு வார்த்தை என்று அஜித் கொடுக்கும் விளக்கம் படத்தின் கதைக்களத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

1565090875.JPG

இந்தியிலிருந்து ரீமேக் செய்யும் போது, அஜித்தின் இமேஜுக்காக ஒரு சண்டைக்காட்சியும், வித்யா பாலன் காட்சியையும் சேர்த்திருக்கிறார்கள். இவ்விரண்டுமே படத்தின் கதையோட்டத்துக்குத் தேவையில்லை.

'நேர்கொண்ட பார்வை' இந்தச் சமூகத்தில் பெண்கள் மீதிருக்கும் பார்வையை கண்டிப்பாக மாற்றும். இம்மாதிரியான கதையை அஜித் தேர்வு செய்து நடித்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். மாஸ் காட்சிகள் குறைவு என்றாலும், இந்தப் படம் தற்போதைய காலகட்டத்தில் உள்ள பெண்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது.

- ஸ்கிரீனன்

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/510327-nerkonda-paarvai-review-1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.