Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஐஐடி பேராசிரியர்கள் பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மானுடவியல் முதுகலை படிப்பில் முதலாமாண்டு மாணவியான பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் விசாரணை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து கொள்ளும் அளவுக்கு தன் மகள் கோழையாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.மதரீதியான பாரபட்சத்தை ஒரு பேராசிரியர் தரப்பில் பாத்திமா எதிர்கொண்டார் என்றும் ஒவ்வொரு தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றாலும், தான் மோசமாக நடத்தப்படுவதாக முன்னர் சொல்லியிருக்கிறார் என்றார். தன்னை தரக்குறைவாக நடத்திய பேராசிரியர் ஒருவரின் பெயரை அலைபேசியில் பாத்திமா எழுதிவைத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளதாக தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.

மானுடவியல் துறை தலைவர் உமாகாந்த்தாஸ் இடம் பாத்திமா குறித்துக் கேட்டபோது தனது துறையில் உள்ள பலரும் பாத்திமாவின் தற்கொலை ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை எனத் தெரிவித்தார்.

ஐஐடி

''பாத்திமா எல்லோரிடமும் நன்றாகப் பழகும் மாணவி. துடிப்பானவர். வகுப்பில் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வார். அவருக்கு எல்லோரிடமும் நல்ல நட்பு இருந்தது. ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் என எங்களுக்குத் தெரியவில்லை. மனஉளச்சல் ஏற்படும் அளவுக்கு ஏதாவது பிரச்சனை நடந்திருந்தால், முதலில் எங்கள் துறையில் புகார் கொடுத்திருக்கலாம். அதற்கான வழிமுறைகளை நாங்கள் பின்பற்றி நடவடிக்கை எடுத்துவருகிறோம். எங்களிடம் ஏன் எதையும் சொல்லவில்லை என அதிர்ச்சியாக உள்ளது,'' என்றார் உமாகாந்த்தாஸ்.

கோட்டூர்புரம் துணை ஆணையர் சுதர்ஷனிடம் பாத்திமாவின் தற்கொலை தொடர்பான விசாரணை குறித்து கேட்டபோது, ''தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்துள்ளோம். உடற்கூறு பரிசோதனை செய்து பெற்றோரிடம் மாணவியின் உடலை ஒப்படைத்துள்ளோம். பாத்திமாவின் உடன் பயிலும் சகமாணவர்கள் மட்டுமின்றி அந்த துறையில் உள்ள பேராசிரியர்களும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம். மாணவியின் அலைபேசி எங்களிடம் உள்ளது. அவரது இறப்புக்கு முன்னர் பேசிய விவரங்கள், தகவல்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்,''என்றார்.

பாத்திமாவின் தந்தை தனது மகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது பற்றிக் கேட்டபோது, ''விசாரணையை முழுவதுமாக முடித்தால்தான் எங்களால் பதில் சொல்லமுடியும். பேராசிரியர்கள் பலர் பல அலுவல்களில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் நேரத்தை பொறுத்து அவர்களிடம் விசாரணை நடைபெறும்,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் #justiceforfathimalatheef என்ற ஹாஷ்டேகும் டிரண்டாகி வருகிறது.

பலர் அவர் அலைப்பேசியிலிருந்தாக ஒரு செய்தியையும் பகிர்கின்றனர்.

அதில் அவர் தனது பெயர்தான் பிரச்சனைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-50408178

  • கருத்துக்கள உறவுகள்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: விசாரணை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்

ஃபாதிமாபடத்தின் காப்புரிமைTWITTER

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்துவந்த மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, சந்தேக மரணமாக அவரது இறப்பை வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .

கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு மாற்றி, விசாரணையை தொடங்கியுள்ளதாக ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். விசாரணை குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட, சிபிஐ-யில் பணிபுரிந்த இரண்டு உயரதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார் விஸ்வநாதன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் கூடுதல் துணை ஆணையர் மேகாலினா இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். புலன் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கு தொடர்பான பிற விவரங்களை தற்போது தெரிவிக்கமுடியாது என்றார்.

மாணவி பாத்திமா லத்தீப் இறப்புக்கு நீதிவேண்டும் எனக் கோரி இந்திய மாணவர் சங்கம், தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஐஐடி வளாகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.

ஐஐடி

பாத்திமாவின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

பாத்திமா லத்தீப்பின் பெற்றோரிடம் பேசியதாக கூறிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மாணவி பாரபட்சமாக நடத்தப்பட்டதாக பெற்றோரிடம் ஏற்கனவே கூறியுள்ளதாக தெரிவித்தார். ''பாத்திமாவுக்கு மத ரீதியான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அவர் சிறப்பாக படிக்கும் மாணவியாக எல்லா பாடங்களிலும் நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் திடிரென தற்கொலை செய்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அவரது மரணத்திற்கு நீதிவேண்டும்,'' என அவர் தெரிவித்துள்ளார்.

ஐஐடி மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவர் உமாகாந்த் தாஸ் மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் பாத்திமா வகுப்பில் எல்லோரிடமும் நன்றாக பழகக்கூடியவராக இருந்தார் என்கிறார்.

மாணவியின் மரணத்தால் அவரது வகுப்பைச் சேர்ந்த சகமாணவர்களும் கவலையில் இருப்பதாக தெரிவித்தார் உமாகாந்த் தாஸ் வழக்கு மீதான விசாரணை நடந்து வருவதால், வேறு தகவல்களை தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-50418548

ஐஐடி சென்னையின் ஆசிரியர் ?

எதற்கும் விசாரணை முடியட்டும்.

ஐஐடி மாணவி தற்கொலைக்கு முன் பதிவுசெய்த செல்போன் குறுந்தகவல்கள், டைரி, ஆடியோ போலீசில் ஒப்படைப்பு : பேராசிரியர்கள் வெளியூர் செல்ல தடை

ஐஐடியில் மாணவி தற்கொலை விவகாரத்தில், அவர் தகவல்களை பதிவு செய்து வைத்திருந்த செல்போன் ஆதாரம், டைரி, தற்கொலையை பார்த்து முதலில் கூறிய நபரின் ஆடியோவை அவரது தந்தை போலீசில் நேற்று ஒப்படைத்தார். மேலும் விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் வெளியூர் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கிளிகொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (18). இவர், சென்னை தரமணியில் உள்ள ஐஐடியில் எம்ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த வாரம் மாணவி திடீரென்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவி வைத்திருந்த செல்போனும் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின் சொந்த ஊருக்குச் சென்ற பிறகு, பாத்திமா லத்தீப்பின் செல்போனை பெற்றோர் சார்ச் போட்ட பிறகு பார்த்தனர். அப்போது, அதில், மாணவிக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2 பேராசிரியர்களும் தொல்லை கொடுத்துள்ளதையும் எழுதி வைத்திருந்தார். இதை பார்த்ததும், எனது மகள் தற்கொலை செய்யவில்லை. தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார். அல்லது கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறி, அவரது தந்தை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் செய்தார். அவர், தமிழக முதல்வர் எடப்பாடியிடம் புகார் செய்தார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீவிரமாக விசாரணை நடத்தும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஐஐடி வளாகத்துக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு கோட்டூர்புரம் போலீசில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை கமிஷனர் மெஹலானி ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் காலையில், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் 2 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி திரிபாதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து, தனது மகள் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, ஆயிரம்விளக்கு பகுதியில் தங்கியுள்ள அப்துல் லத்தீப்பிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை கமிஷனர் மெஹலானி ஆகியோர் நேற்று காலையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி, செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த குறுந்தகவல்களையும், செல்போனையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். மேலும், தற்கொலைக்கு முதல்நாள், மாணவி உணவு அருந்தும் அறையில் அழுது கொண்டிருந்தார். அப்போது கண்ணாடி அணிந்த ஒரு மாணவி, அவரை தேற்றியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தினால் உண்மை தெரியும் என்றும் அப்துல் லத்தீப் தெரிவித்தார். இந்த விசாரணை முடிந்ததை தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் 3 பேரும் வெளியூர் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். மேலும் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவி தற்கொலை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது ஐஐடி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை முடியும் வரை சென்னையில் இருப்போம்

விசாரணைக்கு பிறகு அப்துல் லத்தீப் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர், டிஜிபி உள்பட இதுவரை நான் சந்தித்த அனைவருமே என்னுடைய கைகளை பற்றிக்கொண்டு உங்களுக்கான நீதி கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். என் மகள் நன்கு படிக்கக்கூடியவள். அவளுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கேட்ட தகவல்களை கொடுத்துள்ளேன். கணினி உள்ளிட்ட பொருட்களை விசாரணைக்கு எடுத்து வர சொன்னார்கள், விசாரணை முடியும் வரை இங்கு தான் இருக்க உள்ளோம். தற்கொலை செய்து கொள்ளும் முன் 28 நாட்களுக்கான டைரி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்கொலையை முதலில் பார்த்த நபர் எங்களிடம்  பேசிய ஆடியோவையும் கொடுத்துள்ளோம் என்றார்.

இதை தொடர்ந்து வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனை சந்தித்த பிறகு கூறுகையில், ‘‘போலீஸ் கமிஷனரை சந்தித்தோம், முக்கிய வழக்காக விசாரிப்பதாகவும், கேரள டிஜிபி அவரிடம் பேசியதாகவும் கூறினார். என்னுடைய சொந்த மகளுக்கு ஏற்பட்டால் எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ அதேபோல் விசாரணை செய்து குற்றவாளிகள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541437

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் செல்போனில் இருந்த தகவல் உண்மை - தடயவியல் ஆய்வறிக்கை

ஃபாத்திமாபடத்தின் காப்புரிமைTWITTER

சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீஃபின் மொபைல் போனில் செய்யப்பட்ட தடயவியல் ஆய்வின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டியில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பிறகு அந்த மாணவியின் செல்போனில், தன்னுடைய தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து எழுதப்பட்டது போன்ற குறிப்புகள் ஊடகங்களில் வெளியாகின.

ஃபாத்திமாவின் செல்போனில் இரண்டு குறிப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் ஐஐடி பேராசிரியர்கள் சிலரும் காரணம் எனச் சுட்டிக்காட்டும் ஸ்க்ரீன் ஷாட்டுகளும் ஊடகங்களுக்குக் கிடைத்தன.

ஃபாத்திமா லத்தீஃப் இறந்த பிறகு அந்த வழக்கை விசாரித்துவந்த கோட்டூர்புரம் காவல் நிலையத்தில்தான் இந்த செல்போன் இருந்தது. செல்போன் கைப்பற்றப்பட்டபோது, அந்த போன் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. ஃபாத்திமாவின் உடலைப் பெறுவதற்காக வந்த உறவினர்களிடம் இருந்து சார்ஜர் பெறப்பட்டு, அந்த ஃபோன் சார்ஜ் செய்யப்பட்டது.

இந்த நிலையில், காவல் நிலையத்திலிருந்து அந்த செல்போனை உறவினர்கள் எடுத்துச் சென்றுவிட்டனார். ஃபாத்திமா மரண வழக்கில் இந்த செல்போன் முக்கிய ஆதாரம் என்பதால், அந்த செல்போனை திருப்பி அளிக்கும்படி காவல்துறை பெற்றோரிடம் கூறியது.

இதற்கிடையில், அந்த செல்போனில் இருந்த குறிப்புகளை குடும்பத்தினர் வெளியிட்டனர். செல்போன் குடும்பத்தினரிடம் சென்ற பிறகுதான் இதுபோல வெளியானது என்பதால், இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டா அல்லது உண்மையான தகவலா என ஆராய வேண்டியிருந்தது.

ஐஐடி

கடந்த வாரம் சென்னை வந்த ஃபாத்திமாவின் பெற்றோர் அந்த போனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த ஃபோன் சென்னை மையலாப்பூரில் இருந்த தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.

அந்த ஆய்வறிக்கை தற்போது நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், சென்னை ஐ.ஐ.டியில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்பான வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2006ஆம் ஆண்டில் இருந்து சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிலையில், இந்த மரணங்கள் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

கேரளாவின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரான சலீம் மடவூர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதுதான் ஃபாத்திமாவின் செல்போன் ஆய்வுசெய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.

ஃபாத்திமாவின் வழக்கை தற்போது சென்னை குற்றப் பிரிவு (சிசிபி) விசாரித்துவருகிறது. இந்நிலையில், "இந்த வழக்கை ஏன் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிடக்கூடாது?" என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பின் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-50642720

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.