Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: '100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா?'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: '100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா?'

பாலியல் தாக்குதல்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட பெண்ணின் தங்கை, ஒரே கேள்வியை 100 ஊடகங்கள் தங்களிடம் கேட்டு, ஏற்கனவே மனவருத்தத்தில் உள்ள தங்களை மேலும் காயப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

27 வயதான பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர் அருகில் போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர்.

உயிரிழந்த பெண் தாம் இன்னலுக்கு ஆளாக்கப்போவதை உணர்ந்து கடைசியாக தனது தங்கையிடம்தான் அலைபேசி மூலம் உரையாடினார். பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து:

உயிரிழந்த கால்நடை மருத்துவர் Image captionஉயிரிழந்த கால்நடை மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம்

உங்கள் சகோதரியின் இழப்பு பற்றி?

இந்த நிகழ்வு துரதிர்ஷ்டமானது. போன உயிர் திரும்ப கிடைக்க போவதில்லை. இதுபோல யாருக்கும் நிகழக் கூடாது. எனது அக்காவுக்கு இவ்வாறு நடந்ததை நினைக்கும்போது தாங்கிகொள்ள முடியவில்லை. அவளை கொடூரமாக கொலை செய்துள்ளனர். வேறு யாருக்கும் இவ்வாறு நிகழக்கூடாது. எல்லோரும் எப்போதும் விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்..

எனது அக்கா பயமாக இருக்கிறது என்று என்னிடம் பயமாக சொன்னபோதும் நான் அதன் தீவிரத்தை புரிந்துகொள்ளவில்லை. இதுபோன்ற நிலைமையை சாதாரணமாக எடுத்துகொள்ள வேண்டாம். என்னை போல லேசாக, எடுத்து கொண்டு, நிலைமையின் தீவிரத்தை புறந்தள்ளிவிட வேண்டாம். வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என ஊகித்து கூறிவிட முடியாது.

நிலைமையை தீவிரமாக நான் எடுத்திருந்தால் எனது அக்காவை நான் காப்பாற்றியிருக்கலாம். யாரையும், உங்களுக்கு தெரிந்தவரையும் நம்ப வேண்டாம். இவ்வாறு நான் கூறக் கூடாது என எனக்கு தெரியும். பிறந்த நாள் விருந்துக்கு சென்ற பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு நான் இவ்வாறு கூறுகிறேன்.

உங்களுக்கு தெரிந்தவர்களோடு இருக்கும்போதும் மிகவும் கவனமாக இருங்கள். அடுத்த கணம் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இரவு எங்காவது சென்றால் உங்களுக்கு தெரிந்த யாரிடமாவது கூறிவிட்டு செல்லுங்கள்.

உயிரிழந்த கால்நடை மருத்துவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

அவசர போலீஸை கூப்பிட்டிருக்கலாமே?

அவசர போலீஸூக்கு 100ல் அழைத்திருக்கலாமே என்று அனைவரும் கூறுகிறார்கள். பயந்த சூழ்நிலையில் எனது அக்கா 100-யை அழைத்திருக்க வேண்டும் என்று நான் கூற முடியும். அவர் இருந்த நிலைமை நமக்கு தெரியாது. நாம் அத்தகைய நிலைமையில் இருக்கவில்லை. அத்தகைய நேரத்தில் 100-யை அழைத்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை.

ஆனால், ஏதோ தவறு நடக்க போகிறது என உணர்ந்தால் காவல்துறையினரை அழையுங்கள். இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்திருந்தால் நான் கூட காவல்துறையை அழைத்திருப்பேன்.

குறிப்பாக பெண்கள் வெளியே போகிறபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுங்கள். நமக்கு ஏதாவது ஒன்று நடக்கும் வரை என்னதான் நடக்க போகிறது என்று நினைக்கிறோம். இப்போது பல அலைபேசி செயலிகள் இருக்கின்றன. செல்லும் இடம் பற்றி உறவினர்களுக்கு தெரிவியுங்கள். தனிமையான எந்தவொரு இடத்திற்கும் செல்லாதீர்கள்.

அரசு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி?

இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாத வண்ணம் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். இந்த உலகம் இவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இன்றைய நாட்களில் மனிதாபிமானம் இல்லை. கல்வி அமைப்பில் அறநெறிகளை இணைக்க வேண்டும்; அறிவு உள்ளது. ஆனால் ஒழுக்கம் இல்லை. கல்வி ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும். எது சரி, தவறு என்பதை சீர்தூக்கி பார்க்க அறிவு வேண்டும். எனவே கல்வியில் அறநெறி இணைக்கப்பட வேண்டும். ஏதாவது படித்து, வேலையில் அமர்ந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கல்வி இல்லாமலேயே அதிக பணம் சம்பாதிக்க முடியும்.

ஊடகங்கள் எவ்வாறு செயல்பட்டன?

ஊடகங்களை குறை சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் என்னால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. அக்காவும், நானும் இறுதியாக பேசிய ஒலிப்பதிவு வெளியாகிய பின்னர், அவரோடு என்ன பேசினீர்கள் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம். அதுதான் வெளிப்படையாக உள்ளதே. எல்லோருக்கும் தெரிகிறதே.

உணர்வுகளைத் தூண்டுவதற்காக இவ்வாறு செய்கிறார்கள். ஒரு குடும்பத்தில் இத்தகைய ஓர் இழப்பு ஏற்படுகிறது என்றால், அது ஈடுசெய்ய முடியாத இழப்பு.

உயிரிழந்த கால்நடை மருத்துவர் Image captionஉயிரிழந்த கால்நடை மருத்துரின் இருசக்கர வாகனம்.

இத்தகைய நிகழ்வு நடைபெறுகிறது என்றால், இதற்கான காரணத்தை வெளிகொணர முயலுங்கள். பின்னணிகளை அலசுங்கள். என்ன செய்யலாம் என சொல்லுங்கள்.

இத்தகைய சம்பவத்தில் இருந்து சமூகம் என்ன கற்று கொள்ள வேண்டும். உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் அல்லாமல், பக்குவபட்ட முறையில் அதனை சொல்ல வேண்டும். ஒரே கேள்வியை, ஒரே விஷயங்களை செய்தியாளர்கள் கேட்கிறார்கள். இவ்வாறு கேட்டு அனைவரையும் அசௌகரியமாக உணர செய்கிறீர்கள்.

100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா? நான் அழுது புலம்புவதை படம் பிடித்து அதனை தொலைக்காட்சியில் போடுவதற்கு விரும்புகிறீர்கள். உணர்வுகளைத் தூண்ட எண்ணுகிறீர்கள்.

ஏற்கெனவே நொந்து போயுள்ளோம். மீண்டும் மீண்டும் இந்த இழப்பை உணர செய்து, அதிக வலியை தருகிறீர்கள். விழிப்புணர்வை வழங்கி சமூகத்தை மேலும் பாதுகாப்பாக மாற்ற முயலுங்கள்.

https://www.bbc.com/tamil/india-50614851

Edited by ஏராளன்
bold

  • கருத்துக்கள உறவுகள்

hyderabad-veterinary-doctor-murder.jpg

பெண் மருத்துவர் இறந்த பின்னரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மகளைக் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு கொடுத்ததன் அடிப்படையில் பொலிஸார் பிரியங்காவை தேடி வந்துள்ளனர். பெண் ஒருவரின் உடல் எரிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த தகவலின்படி பொலிஸார் உடலைக் கண்டறிந்துள்ளனர்.

ஹைதராபாத் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சி.சி.ரி.வி. பதிவுகளை வைத்து குற்றவாளிகளை பொலிஸார் தேடி வந்தனர். அதன்படி, லொறி சாரதி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலமாக இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பிரியங்காவின் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதால் அவ்விடத்தில் நிற்கவே, முகமது என்ற அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்ன கேஷவலு ஆகிய 4 பேர் அவருக்கு உதவி செய்வது போல வந்துள்ளனர்.

பின்னர், போதை கலந்த ஒரு குளிர்பானத்தை அவரைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, பிரியங்காவை தலையில் அடித்து மயக்கமுறச் செய்துள்ளனர்.

பின்னர் லொறியினுள் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கொலை செய்த பிறகும், நால்வரும் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். லொறியின் அறைக்குள் வைத்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேறியுள்ளனர்.

இதன்பின்னர் பிரியங்காவின் உடலை அப்புறப்படுத்த லொறியிலேயே சென்று இடம் தேடியுள்ளனர். அப்போது சத்நகர் அருகே உள்ள பாலத்தின் கீழே உடலை ஒரு போர்வையில் போர்த்தி, அவ்விடத்தில் இறக்கினர்.

சடலத்தை எரித்து விட்டால் அடையாளம் காண முடியாது என்று எண்ணி அதன்படியே செய்தும் முடித்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மஹ்புப்நகர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சார்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பிலும் அவ்வாறே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவரின் கொலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் மக்களிடையே, முக்கியமாக பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களை நடுநடுங்க வைத்துள்ளது.

http://athavannews.com/பெண்-மருத்துவர்-இறந்த-பி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: “குற்றவாளிகளை கும்பல்கொலை செய்ய வேண்டும்” - ஜெயா பச்சன்

பாலியல் வன்கொடுமைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஹைதராபாத்தில் 27 வயது பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது.

"இது கடுமையான ஒன்று என்பதை நான் அறிவேன். ஆனால், இதுபோன்ற குற்றவாளிகளை கும்பல் கொலை செய்ய வேண்டும்" என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் வலியுறுத்தியுள்ளார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தோடு தொடர்புடைய நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஜெயா பச்சன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள் தங்களது கோப அலைகளை வெளிப்படுத்தினர். அப்போது, இதுபோன்ற சம்பவங்களை தடுத்து, பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு மத்திய அரசு வைத்துள்ள திட்டங்கள் குறித்து அறிய விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாலிவுட்டின் முன்னாள் நடிகையும், பெண்களுக்கெதிரான குற்றங்களை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான ஜெயா பச்சன், இன்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, "இந்த தருணத்தில், அரசு தகுந்த, திட்டவட்டமான பதிலை அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த், "நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். தாமதமாக கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்" என்று அவர் கூறினார்.

ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: “குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை” - ஜெயா பச்சன்படத்தின் காப்புரிமைREUTERS

அதைத்தொடர்ந்து, உறுப்பினர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடிய சம்பவத்தை கண்டிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை" என்று கூறினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் என்ற நம்பிக்கையில், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

எனினும், எதிர்பார்த்ததை போன்று அவை பலனளிக்காததால், "பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து, தக்க நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது" என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-50630300

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.