Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பி நாராயணன்: ராக்கெட் விஞ்ஞானியின் வாழ்க்கையை சிதைத்த போலி உளவுப் புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி

அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் காரணமாக உங்கள் வாழ்க்கையே மாறிப் போவதைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் அவருடைய வீட்டுக் கதவை காவல் துறை அதிகாரிகள் தட்டியபோது, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் மிக உயர்ந்த நிலையில் இருந்த ஒரு விஞ்ஞானிக்கு இதுதான் நடந்தது.

தேச துரோகி பட்டம்

கால் நூற்றாண்டுக்கு முன்பு குளிர்காலத்தின் பகல் நேரத்தில் காவல் துறையினர் 3 பேர், கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் நகரில் குறுகலான ஒரு சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றனர்.

அவர்கள் பணிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொண்டனர் என்று நம்பி நாராயணன் நினைவுகூர்கிறார்.

டி.ஐ.ஜி. அவருடன் பேச விரும்புவதாக நம்பி நாராயணனிடம் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

''என்னை கைது செய்திருக்கிறீர்களா?'' என்று நம்பி நாராயணன் கேட்டுள்ளார்.

''அப்படி இல்லை சார்'' என்று அதிகாரி கூறியுள்ளார்.

அது 1994 நவம்பர் 30 ஆம் தேதி. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கிரையோஜினிக் என்ஜின் திட்டத்தை தலைமையேற்று செயல்படுத்திக் கொண்டிருந்த 53 வயதான அந்த விஞ்ஞானி, ரஷ்யாவில் இருந்து அந்தத் தொழில்நுட்பத்தை பெற்று வருவதற்கான பொறுப்பில் இருந்தவர்.

 

காத்திருந்த காவல் துறை வாகனத்துக்கு நாராயணன் நடந்து சென்றார். வாகனத்தில் முன்புறம் அமர வேண்டுமா, பின்புறம் அமர வேண்டுமா என்று அவர் கேட்டிருக்கிறார். கைது செய்யப்படுபவர்கள் சாதாரணமாக பின் இருக்கைகளில் அமர வைக்கப்படுவார்கள் என்பதால் அப்படி கேட்டிருக்கிறார்.

முன் இருக்கையில் அமரும்படி காவல் துறையினர் கூறியுள்ளனர். அங்கிருந்து ஜீப் புறப்பட்டுச் சென்றது.

வாகனம் காவல் நிலையத்துக்குச் சென்ற போது டிஐஜி அங்கே இல்லை. எனவே நாராயணன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து காத்திருக்க வேண்டியதாயிற்று. காவலர்கள் அவரைக் கடந்து சென்றபோது விநோதமாகப் பார்த்துக் கொண்டு சென்றனர்.

''ஏதோ குற்றச் செயல் செய்த ஒருவரைப் பார்ப்பது போல அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டு சென்றனர்'' என்று நாராயணன் கூறுகிறார்.

அவர் காத்திருந்தார், காத்திருந்தார். டிஐஜி வரவே இல்லை.

இரவு வந்துவிட்டது. பெஞ்ச் மீதே அவர் தூங்கிவிட்டார். மறுநாள் காலை அவர் எழுந்தபோது, அவரைக் கைது செய்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்கள் கூட்டமாக கூடிவிட்டனர். அவரை தேச துரோகி என்று கூறி பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின - பாகிஸ்தானுக்கு ராக்கெட் தொழில் நுட்ப ரகசியத்தை விற்றுவிட்டார் என்று அந்தச் செய்திகள் கூறின. மாலத்தீவுகளில் இருந்து வந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பில் மயங்கி இவ்வாறு செய்துவிட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தன.

அதன் பிறகு அவருடைய வாழ்க்கை, பழையபடி இல்லாமல் போய்விட்டது.

இஸ்ரோவில் பணி

நடுத்தரக் குடும்பத்தில் ஐந்து பெண் குழந்தைகளுக்கு அடுத்து பிறந்த முதலாவது ஆண் குழந்தை நம்பி நாராயணன். அவருடைய தந்தை கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் நார் வியாபாரம் செய்து வந்தார். அவருடைய தாய் இல்லத்தரசியாக இருந்தார்.

நம்பி நன்கு படிப்பவராக இருந்தார். பள்ளி இறுதி வகுப்பில் முதல் மாணவராகத் தேறினார். பொறியியல் கல்வி பயின்று, சர்க்கரை ஆலை ஒன்றில் சில காலம் பணியாற்றிய பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) பணியில் சேர்ந்தார். ``விமானங்கள் மற்றும் பறக்கும் இயந்திரங்கள் மீது எனக்கு எப்போதும் ஓர் அபிமானம் இருந்தது'' என்று அவர் கூறினார்.

நம்பி நாராயணன்: ராக்கெட் விஞ்ஞானியின் வாழ்க்கையை சிதைத்துப் போட்ட போலி உளவு புகார் ஊழல்

இஸ்ரோவில் பல நிலைகளில் உயர்ந்த அவருக்கு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ராக்கெட் உந்து சக்தி முறைமைகள் பற்றி பயில்வதற்கு உதவித் தொகையும் கிடைத்தது. ஓராண்டு கழித்து தாயகம் திரும்பி, மீண்டும் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் முன்னோடிகளான இஸ்ரோவை நிறுவிய விஞ்ஞானி விக்ரம் சாராபாய், அவரை அடுத்து தலைவராக இருந்த சதீஷ் தவான் ஆகியோருடனும், விஞ்ஞானியாக இருந்து நாட்டின் 11வது குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாம் உள்ளிட்டோருடனும் அவர் பணியாற்றியுள்ளார்.

தலைகீழாக புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கை

``நான் இஸ்ரோவில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் இஸ்ரோ தொடக்க நிலையில் இருந்தது. ராக்கெட் முறைமைகளை உருவாக்குவது பற்றி உண்மையில் அப்போது எங்களுக்கு எந்த சிந்தனையும் கிடையாது. நமது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ராக்கெட்களைப் பயன்படுத்தும் திட்டத்தில்தான் இருந்தோம்,'' என்கிறார் நாராயணன்.

ஆனால் திட்டம் மாறிவிட்டது. உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிக்கும் திட்டத்தில் முக்கிய பொறுப்பு நாராயணனிடம் அளிக்கப்பட்டது.

1990களின் ஆரம்பத்தில் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் திரு. நாராயணன் (வலது) Image caption 1990களின் ஆரம்பத்தில் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் நாராயணன் (வலது)

ஒரு விஞ்ஞானியாக அவர் அக்கறையுடன் செயல்பட்டார். 1994 நவம்பர் 30ம் தேதி அவருடைய வாழ்க்கை தலைகீழாக புரட்டிப் போடப்பட்ட வரை அதே அக்கறையுடன் செயல்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதற்கு ஒரு மாதம் முன்னதாக, விசா அனுமதி காலத்தைக் கடந்தும் இந்தியாவில் தங்கியிருந்ததாக மாலத்தீவுகளைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்ற பெண்ணை கேரள காவல் துறையினர் கைது செய்திருந்தனர். சில வாரங்கள் கழித்து அவருடைய நண்பர், மாலத்தீவுகளின் தலைநகர் மாலே-யில் இருந்து வந்திருந்த பௌஜிய்யா ஹஸ்ஸன் என்ற பெண்ணை கைது செய்தனர். பெரிய மோசடி புகார் அப்போது உருவானது.

மாலத்தீவுகளைச் சேர்ந்த அந்தப் பெண்கள், இந்திய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, இந்தியாவின் ராக்கெட் ''ரகசியங்களை'' திருடி பாகிஸ்தானுக்கு விற்றார்கள் என்று, காவல் துறையினர் அளித்த தகவல்களைக் கொண்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

பெண்களிடம் மயங்கிவிட்ட விஞ்ஞானிகளில் ஒருவராக நாராயணன் இருந்துவிட்டார் என்று அப்போது கூறப்பட்டது.

''எனக்கு எதுவும் புரியவில்லை''

கைது செய்திருப்பதாகச் சொல்லப்பட்ட நாளில், நாராயணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

''நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேனா என்று நீதிபதி என்னிடம் கேட்டார். ''என்ன குற்றம்'' என்று நான் கேட்டேன். ''தொழில்நுட்பத்தை முறைகேடாக அளித்ததாக கூறப்படும் குற்றம்'' என்று அவர்கள் கூறினார்கள். ''எனக்கு எதுவும் புரியவில்லை'' என்று அவர் நினைவுகூர்கிறார்.

அவரை 11 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். காவல் துறையினர் சூழ அடர்நிற சட்டையும், சாம்பல் நிற பேண்ட்டும் அணிந்தபடி அவர் படியிறங்கி வந்ததை படம் காட்டுகிறது.

''நான் அதிர்ச்சியானேன். சலனமற்றுப் போனேன். ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பது போலவும் - அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நானே இருப்பது போலவும் ஒரு சமயம் எனக்குத் தோன்றியது'' என்று தனது நினைவுக் குறிப்புகளில் நாராயணன் எழுதியுள்ளார்.

   

அடுத்த சில மாதங்களில், அவருடைய கண்ணியம், புகழ் எல்லாமே தரைமட்டமாகிவிட்டன. அவர் இந்தியாவின் ரகசியம் காக்கும் சட்ட விதிகளை மீறிவிட்டார், ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்றெல்லாம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவரை விசாரித்தவர்கள் அவரைத் தாக்கியதுடன், படுக்கையுடன் சேர்த்து கைவிலங்கு போட்டும் வைத்திருந்தனர். 30 மணி நேரத்துக்கும் மேலாக அவரை நிற்க வைத்து கேள்விகள் கேட்டனர். உட்கார அனுமதிக்கவில்லை. உண்மை கண்டறியும் கருவி மூலமும் அவரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தக் கருவியின் முடிவுகளை ஆதாரங்களாக இந்திய நீதிமன்றங்கள் ஏற்பதில்லை என்றாலும் அந்தச் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர், உயர் பாதுகாப்பான சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த சிறைவாசிகளில், ''தொடர் கொலைகள்'' செய்த ஒருவரும் இருந்தார். தன் எதிரிகளை உருட்டுக் கட்டைகளால் அடித்துக் கொலைகள் செய்தவர் அவர் (அந்த வழக்கு பற்றி தாம் படித்து வருவதாகவும், விஞ்ஞானிகள் அப்பாவிகள் என்று தன்னால் சொல்ல முடியும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்).

ராக்கெட் ரகசியங்களை ''காகிதங்கள் மூலம் கடத்திவிட முடியாது'' என்றும், இந்த வழக்கு புனையப்பட்டிருக்கிறது என்றும் காவல் துறையினரிடம் நாராயணன் கூறியுள்ளார். கிரையோஜினிக் தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியா இன்னும் பெரிதும் போராடி வருகிறது என்று கூறியதும் விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்புடையதாக அமையவில்லை.

போலீஸ் காவலில் நாராயணன் 50 நாட்கள் இருந்தார் - ஒரு மாத காலம் சிறையில் இருந்ததும் அதில் அடங்கும். அவர் எப்போது நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், மக்கள் அங்கே கூடி அவரை உளவாளி, தேச துரோகி என்று கோஷமிடுவது வழக்கமாகிவிட்டது.

ஆனால் அவர் கைது செய்யப்பட்ட ஒரு மாதம் கழித்து, கேரள புலனாய்வுத் துறையிடம் இருந்து மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) இந்த விசாரணையை எடுத்துக் கொண்டது. தாம் கையாளும் விஷயங்கள் எதுவுமே ரகசியத்தன்மை வாய்ந்தவை அல்ல என்று சிபிஐ அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். ``இந்தப் புகார்கள் எல்லாம் எப்படி எழுந்தன என்று எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் வருந்துகிறேன்'' என்று விசாரணை அதிகாரி ஒருவர் அவரிடம் கூறியுள்ளார்.

   

கடைசியாக 1995 ஜனவரி 19ஆம் தேதி ஜாமீன் பெற்ற பிறகு, நள்ளிரவுக்கு சற்று முன்னதாக அவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

தகவலை மனைவியிடம் கூறுவதற்காக மாடிக்கு அவர் சென்றார். இருட்டு அறையில் அவர் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இரண்டு முறை பெயரை சொல்லி கூப்பிட்ட பிறகுதான் எழுந்தார்.

"அவர் மெல்ல திரும்பிப் பார்த்து, தலையைத் தூக்கினார். அப்படியே என் கண்களை வெறித்துப் பார்த்தார். நான் ஏதோ விநோதமாக செய்வதை பார்ப்பது போல அவரிடம் விநோதமான முகபாவனை தெரிந்தது'' என்று அந்தத் தருணத்தை நாராயணன் நினைவுகூர்ந்தார்.

"மனிதர்களோ அல்லது விலங்குகளோ எழுப்பாத அளவுக்கு அவர் ஒரு கூக்குரலை எழுப்பினார்.''

வீடெங்கும் அந்த கூக்குரல் ஒலித்தது. அதன் பிறகு அவர் அமைதியாகிவிட்டார்.

கணவர் தன்னுடன் இல்லாதது, அவருடைய சிறைவாசம் எல்லாமே மீனாட்சி அம்மாளின் மன ஆரோக்கியத்தை மிகவும் பாதித்துவிட்டது. அவர்களுக்குத் திருமணமாகி சுமார் முப்பதாண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி கோவில்களுக்குச் சென்று வந்து கொண்டிருந்த அவர், நாராயணனின் கைதுக்குப் பிறகு மன அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டார், பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

தேசதுரோகம் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக நாராயணனுடன் மேலும் ஐந்து பேர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. அவருடன் இஸ்ரோவில் பணிபுரிந்த டி. சசிக்குமரம் என்பவரும் அதில் ஒருவர். ரஷிதாவும் அவருடைய நண்பரும் கூட (அந்த இருவரையும் கைதுக்கு முன்னதாக ஒரு போதும் நம்பி நாராயணன் சந்தித்தது இல்லை) அதில் இருந்தனர். வேறு இரு இந்திய ஆண்கள், ரஷிய விண்வெளி நிறுவனத்தின் அலுவலர் ஒருவர், ஒரு ஒப்பந்ததாரர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இருந்தனர்.

Presentational grey line

முக்கிய தேதிகள்

1994 - நாராயணன் கைது செய்து காவலில் வைக்கப்பட்டார், பின்னர் 1995 ஜனவரியில் ஜாமீன் அளிக்கப்பட்டது.

1996 - குற்றவாளி அல்ல என்று மத்தியப் புலனாய்வுக் குழு கூறியது

1998 - கேரள அரசின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் இறுதியாகத் தள்ளுபடி செய்தது

2001 - நஷ்டஈடு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவு

2018- வழக்கு புனையப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Presentational grey line

1996ல் மத்தியப் புலனாய்வுத் துறை அளித்த 104 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையில், இவர்கள் அனைவரும் நிரபராதிகள் என கூறப்பட்டிருந்தது. விண்வெளி நிலையத்தில் இருந்து ரகசிய ஆவணங்கள் எதுவும் திருடப்பட்டு விற்கப்பட்டதற்கோ அல்லது என்ஜின்களை வாங்கியதில் பணப் பரிமாற்றம் நடந்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று மத்தியப் புலனாய்வுத் துறை கூறியிருந்தது. இஸ்ரோ நடத்திய துறைசார் விசாரணையில், பெறப்பட்ட கிரையோஜினிக் என்ஜின்கள் எதுவும் காணாமல் போகவில்லை என்று தெரிய வந்தது.

நாராயணன் இப்போது இஸ்ரோவுக்கு மீண்டும் பணிக்குச் சென்றுவிட்டார் - இப்போது பெங்களூருவில் நிர்வாக அந்தஸ்தில் சென்றிருக்கிறார் - ஆனால் கடின உழைப்பு முடிவுக்கு வந்துவிட்டது. மத்திய புலனாய்வுத் துறை அந்த வழக்கை முடித்துவிட்டது என்றாலும், அதை மீண்டும் திறப்பதற்கு கேரள அரசு முயற்சி செய்து, உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றது. அங்கு இறுதியாக 1998ல் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

''ஓர் அத்தியாயம் முடிந்துவிட்டது''

தன் மீது பொய் வழக்கு புனைந்ததற்காக நஷ்ட ஈடு கேட்டு கேரள அரசு மீது நாராயணன் வழக்கு தொடர்ந்த போது அவருக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோதமாக கைது செய்து, துன்புறுத்தப்பட்டதற்கு நஷ்டஈடாக கூடுதலாக ரூ.1.3 கோடி வழங்குவதாக கடந்த மாதம் அரசு அறிவித்தது.

தனது மகள் ஆசிரியை கீதாவுடன் நம்பி நாராயணன்படத்தின் காப்புரிமை VIVEK NAIR Image caption தனது மகள் ஆசிரியை கீதாவுடன் நம்பி நாராயணன்

ஆனால் இந்த வழக்கு முடிந்துவிடவில்லை என்று 78 வயதான அந்த விஞ்ஞானி கூறுகிறார். தனக்கு எதிராக வழக்கு புனைந்ததில் கேரள காவல் துறையினரின் பங்கு குறித்து விசாரணை நடத்துமாறு 2018ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் வரும் முடிவைக் காண நாராயணன் விரும்புகிறார். ''எனக்கு எதிராக இந்த வழக்கைப் புனைந்தவர்கள் தண்டிக்கப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன்'' என்று அவர் கூறுகிறார். ''ஓர் அத்தியாயம் முடிந்துவிட்டது. ஆனால், அடுத்த அத்தியாயம் அப்படியே இருக்கிறது'' என்கிறார் அவர்.

அவருக்கும், வேறு ஐந்து பேருக்கும் எதிராக வழக்கு புனைந்ததன் உள்நோக்கம் என்ன என்பது இன்னும் புதிராகவே உள்ளது.

இந்தியாவின் கிரையோஜினிக் ராக்கெட் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் போட்டி நாடுகளின் விண்வெளி நிறுவனங்களின் சதிச் செயலாக இது இருக்கலாம் என நாராயணன் சந்தேகிக்கிறார்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வெற்றிக்கு கிரையோஜினிக் தொழில்நுட்பம் தான் முதுகெலும்பாக உள்ளது. குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வகையில் வணிக ரீதியில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறிச் செல்வதால் அச்சப்பட்ட வெளிநாடுகளின் சதிச் செயலா அல்லது இந்தியாவில் பரவலாக இருக்கும் ஊழலின் ஒரு பாதிப்பா என்று தெரியவில்லை.

''இது ஒரு சதிச் செயலின் விளைவால் ஏற்பட்டது தான். ஆனால், சதியாளர்கள் வேறுபட்டவர்கள், அவர்களின் நோக்கம் வேறு மாதிரியானது. குற்றவாளிகள் அதே அந்தஸ்தில் உள்ளவர்கள் தான்'' என்கிறார் நாராயணன்

''எப்படி இருந்தாலும், என்னுடைய விஞ்ஞானி வாழ்க்கை, கௌரவம், கண்ணியம், மகிழ்ச்சி எல்லாமே தொலைந்துவிட்டன. இதற்குக் காரணமானவர்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள்,'' என்றார் அவர்.

https://www.bbc.com/tamil/india-51355685

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பிறகும் அந்த மனிசன் தைரியமாய் 2இஸ்ரோவில்" வேலை பார்த்திருக்கார் ...இந்தியா முன்னேறாததற்கு இந்தியா தான் காரணம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.