Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலப்பரீட்சை களமாகும் வட போர்முனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலப்பரீட்சை களமாகும் வட போர்முனை

-அருஸ் (வேல்ஸ்)-

ஈழப்போர் வரலாற்றில் வடபோர்முனை எப்போதும் பல அதிர்ச்சிகளை கொடுத்து வருவது உண்மை. அது விடுதலைப் புலிகளின் பலமான பின்தளத்தை கொண்ட பகுதி என்பதுடன், அதன் பூகோள அமைப்பும், அங்கு வாழும் மக்களும் அதற்கு வலுச்சேர்க்கும் ஏனைய காரணிகளாகும்.

கிழக்கில் அடர்ந்த காட்டுப்பகுதிகளை தவிர்த்து கரையோர மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சூழ உள்ள பகுதிகள் என பல பகுதிகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து படையினரின் கவனம் வடபோர் முனை நோக்கிச் செறிந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலையில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தமது போர் உத்திகளை மறுபரிசீலனை செய்த படையினர் வலிமை மிக்க களங்களில் உள்ள விடுதலைப் புலிகளின் படையணிகளின் கவனத்தை திசை திருப்புவது அல்லது வலிமை அற்ற களமுனையை தேடுவது என்ற இரு உத்திகளுடன் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நோக்கங்களை மையப்படுத்தியே 57 ஆவது படையணி புதிதாக அமைக்கப்பட்டதுடன், வடமேற்கு களமுனையும் திறக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வவுனியா மன்னார் எல்லைப்புறத்தில் நடைபெற்று வரும் மோதல்களின் எண்ணிக்கையை நோக்கினால் இது புரியும்.

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் நடைபெற்ற முள்ளிக்குளம் நோக்கிய நகர்வில் இருந்து மே மாதம் 12 ஆம் நாள் மன்னார் விளாத்திக்குளம் ஊடான பரிசம்குளம் நோக்கிய முன்நகர்வு வரையிலான படை நடைவடிக்கைகளை நோக்கினால் ஏறத்தாள 60 நாட்களான காலப்பகுதியில் படையினர் 10 படை நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

- 15.03.07: பாலமோட்டைக்கு மேற்கு பகுதியான முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரிய பண்டிவிரிச்சான் நோக்கிய முன்நகர்வு.

- 16.03.07: வவுனியாவின் வடமேற்கு பகுதியான பாலமோட்டை நோக்கிய முன்நகர்வு.

- 23.03.07: வவுனியா மன்னார் எல்லைப்புறத்தில் இருந்து தம்பனை, சின்ன பண்டிவிரிச்சான் பகுதிகளை நோக்கிய படையினரின் முன்நகர்வு முயற்சி.

- 11.04.07: வவுனியாவின் வடமேற்கு பகுதியான பாலமோட்டை நோக்கிய முன்நகர்வு.

- 25.04.07: மன்னார் இரணை இலுப்பங்குளம் முகாமில் இருந்து மடுப்பகுதியில் உள்ள பரிசங்குளம் நோக்கிய சிறப்பு படையின் முன்நகர்வு.

- 03.05.07: வவுனியா மன்னார் எல்லையில் உள்ள பாலம்பிட்டி நோக்கிய முன்நகர்வு.

- 06.05.07: வவுனியா மன்னார் எல்லையில் உள்ள தம்பனை நோக்கிய முன்நகர்வு.

- 06.05.07: வவுனியா மன்னார் எல்லையில் உள்ள நாவற்குளம் நோக்கிய முன்நகர்வு.

- 08.05.07: வவுனியா மன்னார் எல்லையில் உள்ள தம்பனைக்கு மேற்கே உள்ள குறிசுட்டகுளம் நோக்கிய முன்நகர்வு.

- 12.05.07: அதிகாலை 1 மணியளவில் செறிவான சூட்டாதரவுடன் மன்னார் விளாத்திக்குளம் ஊடாக பரிசம்குளம் நோக்கி முன்நகர்வு.

இவை தவிர மன்னார் வவுனியா எல்லைப்புறத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீதான எறிகணை மற்றும் பல்குழல் உந்துகணை வீச்சுக்களும் அண்மைக்காலமாக மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் இந்த நகர்வுகளில் ஏறத்தாள 300 முதல் 500 வரையிலான படையினரே நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நகர்வில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது இராணுவத்தின் புதிய சிறப்பு தாக்குதல் படையணியான 57 ஆவது படையணியாகும்.

காட்டுப்புறச் சண்டைக்கு என சிறப்பு பயிற்சி பெற்ற இந்த அணியினரைக் கொண்டு வவுனியா மன்னார் எல்லைப்புறம் என்ற பரந்த களமுனையை நோக்கி விடுதலைப்புலிகளின் படையணிகளை வலிந்து இழுப்பதே இதன் பிரதான நோக்கமாக இருக்கலாம்.

எனினும் இது பல மேலதிகமான குறிக்கோள்களையும் கொண்டதாக உள்ளது. அதாவது விடுதலைப் புலிகளுக்கு அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஒரு நெருக்கடியை எற்படுத்துதல், அவர்களின் படையணிகளின் கவனத்தை சிதறடித்தல், முகமாலை, ஓமந்தை, மணலாறு, போன்ற வலிமை மிக்க களமுனைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் படை பலத்தை திசை திருப்புதல் என்பன தான் இந்த நடவடிக்கையின் ஏனைய நோக்கங்களாக இருக்கலாம்.

சுருக்கமாக கூறின் இது ஒரு உளவியல் இராணுவ நடவடிக்கை. மேற்குலகின் நவீன இராணுவ மூலோபாயத்தை பொறுத்தவரையில் முதலில் சிறப்புப்பைடயினரை ஒரு முனையில் களம் இறக்குவதும், பின்னர் மரபுவழிப் படையினரை பெருமெடுப்பில் மறுபுறத்தால் அல்லது அதே முனையால் நகர்த்துவதும் தான் தற்போது பெருமளவில் பயன்படுத்தப்படும் உத்தி. அதே மூலோபாயம் தான் இங்கும் பயன்படுத்தப்படுகின்றது.

வடபோர் முன்னரங்கான கிளாலி, முகமாலை, நாகர்கோவில் அச்சையும், ஓமந்தையையும் பலப்படுத்தி, ஒரு பெரும் இராணுவ நகர்விற்கு அடித்தளம் அமைக்கும் அதே சமயம் அதன் தென்மேற்கு திசையில் சிறு சிறு தாக்குதல்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சிறந்த படை வீரர்களை கொண்டு அமைக்கப்பட்ட 57 ஆவது படையணி ஒரு வலிந்த தாக்குதல் படையணியாகும். காட்டுப்புற சமர்களுக்கு என உருவாக்கப்பட்ட சிறப்பு படையினரும் இந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், மற்றும் உபகரணங்களும் காட்டுப்புறச் சமருக்கென விசேடமாக தருவிக்கப்பட்டவையாகும்.

உதாரணமாக இந்த அணி தனது காட்டுப்புற நடவடிக்கைகளின் போது சமையல்களுக்கான நெருப்பை உருவாக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருள் கூட சுவாலையையோ அல்லது புகையையோ தராது வெப்பத்தை மட்டும் கொடுக்கும் பொருளாகும். இவை தவிர இரவுப் பார்வைச்சாதனங்கள், உயர் அலைவரிசை தொலைதொடர்புச் சாதனங்கள் என்பனவும் இந்த அணியினரால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படிப்பட்ட படையினரைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் அரசுக்கு பலவழிகளில் அனுகூலமானவை. ஏனெனில் பெருமெடுப்பில் அல்லாது சிறியளவில் நகரும் இந்த படையினரின் நடவடிக்கைகள் அதிகளவில் ஊடகங்களை கவரமாட்டா.

எனினும் இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 10 படை நடவடிக்கைகளும் எதிர்பார்த்த வெற்றியை படையினருக்கு கொடுக்கத்தவறியது. படையினரின் உத்தியை உணர்ந்தே விடுதலைப் புலிகளும் தமது மூலோபாயத்தை வகுத்து வருகின்றனரா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.

இந்த மோதல்களில் படையினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளின் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதாவது களமுனைகளில் இருந்து தமது சகாக்களின் சடலங்களை மீட்டுச்செல்லவோ அல்லது அவர்களின் ஆயுதங்களை எடுத்துச் செல்லவோ படையினருக்கு கால அவகாசம் இல்லாதவாறு சமர் உக்கிரமாக நடந்துள்ளது என்பதையே இது காட்டுகின்றது.

மிகவும் பரந்துபட்ட தமது களமுனைகளை விடுதலைப்புலிகள் இறுக்கமாக பாதுகாப்பது எப்படி? என்ற கேள்விகள் தான் இன்று இராணுவ மட்டத்தில் பரவலாக எழுந்துள்ளன.

மண்டையை குடைந்து விடையை தேடும் அளவிற்கு இவை ஒன்றும் விடைகாண முடியாத கேள்விகள் அல்ல.

இன்றைய உலகில் மரபுவழிப் படையணிகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் வெற்றிகளுக்கு உந்து சக்தியாகவும் விளங்குவது சிறப்பு படையணிகளும் அவற்றின் நடவடிக்கைகளும் தான்.

உலகிலேயே அதிகளவில் சிறப்பு படையணிகளைக் கொண்ட நாடான அமெரிக்கா அதன் சமர் களங்களில் வெற்றி பெறுவதற்கான காரணமும் அதுவே. சிறப்பு படையணிகளும் மரபுவழிப் படையணிகளும் இணைந்த நடவடிக்கைகள் தான் இன்றைய போர்களின் சூத்திரம். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் கைதேர்ந்தவர்கள். அவர்களிடம் உள்ள வேறுபட்ட சிறப்புப் படையணிகளின் எண்ணிக்கையானது படை யினரிடம் உள்ள படையணிகளைவிட அதிகம் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக கரும்புலிகள், நீரடி நீச்சல் பிரிவு, சிறுத்தை படையணி, சாள்ஸ் அன்ரனி, ஜெயந்தன் படைப்பிரிவுகள், ஈரூடக படையணி, உந்துருளிப் படையணி மற்றும் சிறு சிறு ஊடுருவும் விசேட அணிகள் என, பல தரப்பட்ட மற்றும் பல நோக்கங்களை கொண்ட சிறப்பு படையணிகளை அவர்கள் கொண்டுள் ளதுடன், காலத்திற்கு காலம் சமர்களின் தேவை அறிந்து புதிய சிறப்பு படையணிகளை உரு வாக்கியும் வருகின்றனர்.

இது மட்டுமல்லாது மக்கள் படை என்னும் துணைப்படையணியினரின் உருவாக்கமும், அவர்களின் பங்களிப்புக்களும் அதிகம். இந்தப் படையணியின் உருவாக்கமே ஆழ ஊடுருவும் படையணியின் நடவடிக்கைகளை புலிகள் பெருமளவில் கட்டுப்படுத்த உதவி புரிந்துள்ளது.

மேலும் படையினரால் அடிக்கடி பல முனைகளில் திறக்கப்படும் களமுனைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகளும் விரைவாக நகரும் தமது சிறப்பு படையினரைக் கொண்டு தான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனரா என்ற கேள்வியும் படைத்தரப்பில் தற்போது எழுந்துள்ளது.

மடுப்பகுதியை நோக்கிய பல தாக்குதல்களும், விடுதலைப்புலிகளின் பலவீனமான பகுதிகளாக இருக்கலாம் என கருதப்பட்ட சில பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட படை நடைவடிக்கைகளும் எதிர்பார்த்த பலனைத்தராமல் போனமை வடபோர்முனை தொடர்பான கருத்துக்களில் மேலும் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

கிழக்குப் பகுதியில் அகலக் கால்வைத்த படையினருக்கு தமது நிலையை தக்கவைப்பதற்கு தற்போது மேல திகமான படையினரை புதிதாக சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10,000 படையினரை இலக்குவைத்து நாடு முழுவதும் ஆட்சேர்ப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதாவது ஏறத்தாள ஒரு டிவிசன் படையணி மேலதிகமாக தேவைப்படுகின்றது.

இதன் மூலம் தொப்பிக்கல காட்டுக்குள் உள்ள விடுதலைப் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளை கொடுத்தபடி கிழக்கில் ஒரு மாகாணசபை தேர்தலை நடத்துவதன் மூலம் தமது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்தலாம் என்பது அரசின் கணிப்பு.

ஆனால் அதேசமயத்தில் வடபோர் முனையையும் தொய்வின்றி வைத்திருப்பதற்கும், விடுதலைப் புலிகளின் கவனத்தை வேறு நடவடிக்கைகளில் ஒன்று குவியவிடாது தடுப்பதற்குமாகவே தனது 57 ஆவது சிறப்பு படையணியின் மூலம் பரந்துபட்ட வவுனியா மன்னார் களமுனையில் வலிந்த தாக்குதல்களில் படையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரக்கூடும்.

எனினும் படையினரின் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் எதிர்கொள்ளும் விதம் அதனால் படையினருக்கு ஏற்படும் இழப்புக்கள் என்பன வடபோர்முனையில் கடைப்பிடிக்கப்படும் உத்திகள் எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்பது குறித்து பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இராணுவத்தினரை பொறுத்த வரையில் அவர்களின் பெருமளவான பலம் வட போர்முனையில் தான் குவிந்து கிடக்கின்றது. ஆகவே போரின் வெற்றி தோல்விகளில் பெரும் பங்கு வகிக்கப்போவதும் இந்தக் களமுனை தான்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (20.05.07

http://www.tamilnaatham.com/articles/2007/may/arush/20.htm

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வு!

இயைத்தமைக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.