Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தலைகாட்டும் மதவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் தலைகாட்டும் மதவாதம்

கே. சஞ்சயன்   / 2020 மார்ச் 06

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பும் சூடுபிடித்திருக்கிறது.  

வடக்கில் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற கோசத்தை முன்னிறுத்தியும், கிழக்கில் தமிழர் ஒற்றுமை என்ற கோசத்தைப் பயன்படுத்தியும், புதிய அரசியல் அணிகள் தோற்றம் பெற்று, இம்முறை தேர்தல் களத்தில் தீவிரமான உள்ளகப் போட்டியை உருவாக்கியிருக்கின்றது.  

வடக்கில், பேரினவாதக் கட்சிகள், அவற்றின் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஆசனங்களைக் குறிவைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடு, அவற்றுக்குச் சாதகமாக மாறும் சூழல் உள்ளது.  

கிழக்கில் தமிழ்த் தரப்புகளின் பிளவுகளைப் பயன்படுத்தி, கூடுதல் ஆசனங்களைப் பெற்று விடும் முனைப்பில், பேரினவாதக் கட்சிகளும் அவற்றுக்குத் துணைபோகும் கட்சிகளும் மாத்திரமன்றி, முஸ்லிம் கட்சிகளும் செயற்படுகின்ற நிலையில், கிழக்கில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிரதிநிதித்துவம் பறிபோய் விடுமோ என்ற அச்சமும் தலைதூக்கியுள்ளது.  

பொதுவாக கடந்த தேர்தல்களில் வடக்கு, கிழக்குக்கு என்று தனியான போட்டிச் சூழல் இருந்ததில்லை. ஆனால், தமிழர் தரப்பில் அரசியல் செய்யும் கட்சிகள், மாற்றுத் தலைமை என வடக்கிலும், தமிழரின் அரசியல் பலத்தை பாதுகாக்க வேண்டும் என்று கிழக்கிலும் உருவாக்கியுள்ள புதிய சூழலினால், இரண்டு அரசியல் பரப்புகளும் வெவ்வேறு திசைகளில் நகரத் தொடங்கியிருக்கின்றன.  

இவ்வாறான பிளவுகளுக்கு மத்தியில், வடக்கில் மதவாதம் என்ற விஷக் காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது; அல்லது பரப்பப்படுகிறது.  

தேர்தல் அறிவிப்பு வெளியாகிய பின்னர், யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி, வடமராட்சி பகுதிகளில், சிவசேனை அமைப்பால், சைவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று கோரும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.  

image_07929cc925.jpg
 

சில ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியா, மன்னாரில் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதற்குப் பின்னர், உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் இவ்வாறான சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டன.  

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில், சைவர் ஒருவரையே முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் வகையிலான சுவரொட்டிகளும், துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.  

அதன் தொடர்ச்சியாகத் தான், இந்தமுறை பொதுத் தேர்தலில் சைவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற கோசத்தை முன்னிறுத்தி பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறது சிவசேனை.  

மறவன்புலவு சச்சிதானந்தன் வவுனியாவில் ஆரம்பித்த சிவசேனை அமைப்பு, வடக்கில் இந்துக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பது என்ற பெயரில், மதவாதத்தை ஊக்கவிக்கின்ற ஒன்றாக மாறியிருக்கிறது.  

சிவசேனை அமைப்பு, வடக்கில் அரசியலில் ஈடுபடும் நோக்கத்தைக் கொண்டிராவிடினும், தமிழர் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முனைகிறது.  

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் மதத்தைக் கொண்டு பிளவுகளை ஏற்படுத்த முனைந்த அந்த அமைப்பு, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராகவும், மேயராகவும் சைவர் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்று தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தது.  

இப்போது, நாடாளுமன்றத் தேர்தலிலும் சைவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற சுவரொட்டிப் பிரசாரங்களால், மத ரீதியாகத் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளைத் தோற்றுவிக்க முனைந்து கொண்டிருக்கிறது.  

தமிழர்கள் காலம்காலமாக மத ரீதியாக ஒன்றுமையுடனேயே செயற்பட்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, வடக்கு, கிழக்கில் கிறிஸ்தவம், இந்து சமயங்களைப் பின்பற்றும் மக்கள் மத்தியில் வேற்றுமைகளோ, முரண்பாடுகளோ இருந்ததில்லை.  

அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் பின்பற்றுகின்ற மதங்களைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல் வாக்களித்து, அவர்களுக்கு அங்கிகாரம் அளித்து வந்தவர்கள் தமிழ் மக்கள்.  

‘தந்தை செல்வா’ எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படும், எஸ்.ஜே.வி செல்வநாயகம் தொடக்கம், எம்.ஏ. சுமந்திரன் வரைக்கும் அது பொருந்தும்.   

அவ்வாறானதொரு பாரம்பரியத்தைத் தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சூழலில், மதவாதப் பிரசாரங்களும் மத ரீதியான பிளவுகளும் தமிழ் மக்களின் பாரம்பரிய ஒற்றுமையையும் அரசியல் பலத்தையும் சிதைத்து விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.  

சிவசேனை போன்ற மதவாத அமைப்புகளின் காலூன்றல், தமிழ் மக்கள் மத்தியில் மத ரீதியான பிளவுகளை இன்னும் தீவிரமாக்கி இருக்கிறது.  

சிவசேனை அமைப்பு, இதுவரையில் அரசியலில் ஈடுபடாவிடினும், அதன் தோற்றுவாயும் இலக்கும், அரசியலில் மய்யம் கொள்வதாகவே இருக்கக் கூடும். 

இந்தியாவின் மகாராஷ்ரா மாநிலத்தில் சிவசேனா அமைப்பு அதிகாரத்தில் இருக்கிறது. இந்தியாவை ஆளும் பா.ஜ.க கூட்டணியிலும் அது இடம்பெற்றிருக்கிறது.  

தீவிர வலதுசாரி இந்து அமைப்பான, அரசியல் கட்சியான சிவசேனா, இந்து மதவாதத்தை மாத்திரமன்றி, மராட்டியர்களுக்கு மாத்திரமே மகாராஷ்டிரா என்ற கோசத்தையும் முன்னிறுத்திச் செயற்படுகிறது.  

சில காலங்களுக்கு முன்னர், மும்பையில் இருந்தும் மகாராஷ்டிராவில் இருந்தும் பிற மாநிலத்தவர்கள் வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தலையும் அந்த அமைப்பு எற்படுத்தி இருந்தது.  

அதன் நிறுவுநரான மறைந்த பால் தாக்கரேவுடன் தொடர்புகளை வைத்திருந்தவர் தான் இலங்கையில் சிவசேனை அமைப்பை உருவாக்கியுள்ள மறவன்புலவு சச்சிதானந்தன்.  

சிவசேனாவின் தாக்கம் அவர், இங்கு உருவாக்கியுள்ள சிவசேனையில் இருக்கிறது‘ அதனை அவரால் மறுதலிக்க முடியாது.  

சில மாதங்களுக்கு முன்னர், இலங்கை வந்திருந்த இந்தியாவின் பா.ஜ.க முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில், இலங்கையில் இந்துக்களின் நலன்களைப் பேணுவதற்காக, அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.  

சுப்ரமணியன் சுவாமி, இந்திய அரசியலில் ‘கோமாளி’யாக வர்ணிக்கப்படுபவர். இலங்கையில் ராஜபக்சவினரின் நெருங்கிய நண்பரான அவருக்கு, அரசாங்க ரீதியாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  

அவ்வாறான ஒருவர், இலங்கையில் இந்துக்களின் நலன்களுக்கான அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிப்படையாகவே கூறியிருந்தமை ஆச்சரியத்தைக் கொடுத்தது.  

மேற்கு நாடு ஒன்றைச் சேர்ந்த அரசியல்வாதியோ, மத்திய கிழக்கைச் சேர்ந்த தலைவரோ இதேபோன்று கூறியிருந்தால், எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருக்கும், எதிர்வினை ஆற்றப்பட்டிருக்கும்?  

ஆனால், இந்திய அரசியல்வாதி ஒருவர், இந்துக்களுக்கான அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதன் பின்னணியில் இருப்பதாகக் கூறியதை, எவரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.  

இந்துக்களுக்கான கட்சி உருவாக்கம், சிங்கள, பௌத்த அரசியல் தலைமைகளுக்கு அச்சுறுத்தலானது அல்ல; ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அச்சுறுத்தலானது அல்ல.  

ஆனால், தமிழ் மக்களுக்கும் அவர்களின் இருப்புக்குமே ஆபத்தானது; தமிழ்த் தேசிய அரசியலுக்கு சவாலானது. தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் இலக்கைக் கொண்டது.  

இந்தியாவில், தமிழ்நாட்டில் பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி போன்ற தீவிர இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளும் கட்சிகளும், மத ரீதியாகத் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தவதற்குக் கடுமையாக முயன்று கொண்டிருக்கின்றன.  

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர்களையும் திராவிடக் கொள்கையை பின்பற்றுபவர்களையும் வீழ்த்தும் நோக்கிலேயே இந்த இந்துத்துவ அமைப்புகள் செயற்படுகின்றன.  

இதனால் தமிழ்நாட்டில் மாத்திரமன்றி, இந்தியா முழுவதிலுமே, இந்து அடிப்படைவாதம் ஒரு வித பதற்றத்தை தோற்றுவித்திருக்கிறது.  

அதன் நீட்சியாகத் தான், இலங்கையிலும் இந்துத்துவ அமைப்புகள், கட்சிகள் காலூன்ற முனைகின்றன.  

தமிழ்த் தேசியம், தமிழ் அரசியல் ஆகியவற்றைப் பிளவுபடுத்தி, மதரீதியான தலைமைத்துவத்தை உருவாக்குதலே இவ்வாறான அமைப்புகளின் இலக்காகும்.  

சிவசேனை போன்ற அமைப்புகள், மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் போது, அது தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளைப் பலவீனப்படுத்தும். தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான அரசியல் சக்திகளையும் பேரினவாதக் கட்சிகளையும் அவற்றின் அடிவருடிகளாகச் செயற்படும் கட்சிகளையும் வலுப்படுத்தும்.  

விடுதலைப் புலிகளின் காலத்தில் அருகிக் காணப்பட்ட பிரதேசவாதம், சாதியவாதம், மதவாதம் என்பன, போர் முடிவுக்கு வந்த பின்னர், தளைத் தோங்கத் தொடங்கி இருக்கின்றன.  

பிரதேசவாதத்தையோ, சாதியவாதத்தையோ வெளிப்படையாகப் பேசுவதற்கு தயக்கம் இருந்தாலும், மதவாதத்தை வெளிப்படையாக முன்வைப்பதற்கு, சிவசேனை போன்ற தரப்புகள் கூச்சப்படவில்லை.  

மன்னாரில் இந்துக்களின் நலனுக்காக சுயேட்சைக் குழு ஒன்று போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பதும், சைவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற சுவரொட்டிகளும் தமிழர்கள் மத்தியில் மதவாதம் தீவிரம் பெறுவதற்கான அறிகுறியே.  

சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும், அதனை எதிர்க்கின்ற, அதற்கு எதிராக போராடுகின்ற தமிழ் மக்களே, இந்து மதவாதத்தை முன்னிறுத்துவதும், அதன்வழி அரசியல் செய்ய முனைவதும் அபத்தமானது.  

இந்துக்கள் அல்லது சைவர்களின் நலன்கள் என்ற பெயரில், தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் வேரறுக்க முனைகிறது இந்த மதவாதம்.  

தமிழ் மக்கள் மத்தியில் வேரோடும் இந்து மதவாதம், ஆரம்பத்திலேயே தோற்கடிக்கப்படாவிடின், இனத்தின் இருப்பும் நலனும் கேள்விக்குள்ளாவது தவிர்க்க முடியாததாகி விடும்.    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கில்-தலைகாட்டும்-மதவாதம்/91-246461

10 hours ago, கிருபன் said:

இந்துக்களுக்கான கட்சி உருவாக்கம், சிங்கள, பௌத்த அரசியல் தலைமைகளுக்கு அச்சுறுத்தலானது அல்ல; ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அச்சுறுத்தலானது அல்ல.  

ஆனால், தமிழ் மக்களுக்கும் அவர்களின் இருப்புக்குமே ஆபத்தானது; தமிழ்த் தேசிய அரசியலுக்கு சவாலானது. தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் இலக்கைக் கொண்டது.  

கே. சஞ்சயன் அவர்கள் வழமை போன்று பல நல்ல விடயங்களை கூறியுள்ளார். இருந்தாலும், மேலே உள்ள கூற்றை மேலதிகமாக தெளிவு படுத்தி இருக்கலாம். 

இந்துக்களுக்கான கட்சி உருவாக்கம் எவ்வாறு  தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ?

1 hour ago, ampanai said:

கே. சஞ்சயன் அவர்கள் வழமை போன்று பல நல்ல விடயங்களை கூறியுள்ளார். இருந்தாலும், மேலே உள்ள கூற்றை மேலதிகமாக தெளிவு படுத்தி இருக்கலாம். 

இந்துக்களுக்கான கட்சி உருவாக்கம் எவ்வாறு  தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ?

தமிழ் மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக ஓரணியில் இருக்க வைப்பதற்கு தமிழ் தேசிய உணர்வால் மட்டுமே முடியும். எம் மக்களை ஒன்று திரட்ட ஏதுவான ஒரே சாத்தியமான காரணி தமிழ் தேசியம். அதனைத் தான் புலிகளின் காலத்தில் நாம் கண்ணுற்றது. அவர்களின் காலத்தில் சாதிப் பிரச்சனைகளாலோ அல்லது மத வேறுபாடுகளாலோ பிரிந்து நிற்கவில்லை

இப்படி மதங்களின் அடிப்படையில் கட்சிகள் உருவாகி, தம் அரசியல் பிரதிநிதிகளை மதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தெரிந்தெடுக்கும் போக்கு உருவாகுமாயின் அது தமிழ் தேசியத்துக்கு விழும் மரண அடியாகவே அமையும். தமிழ் மக்களின் ஒற்றுமையை அடியோடு அழித்து விடும். அதைத் தான் சிங்களமும் இந்தியமும் சச்சி மூலம் வடக்கு கிழக்கில் ஏற்படுத்த முனைகின்றது.

பெளத்த பேரினவாதத்தை எதிர்த்து நிற்க வேண்டியது தமிழ் தேசியமே ஒழிய இந்து மதவாதம் அல்ல.!

11 minutes ago, நிழலி said:

பெளத்த பேரினவாதத்தை எதிர்த்து நிற்க வேண்டியது தமிழ் தேசியமே ஒழிய இந்து மதவாதம் அல்ல.!

சிங்கள பேரினவாதத்தை நாம் எதிர்க்கவேண்டும் என நான் எண்ணி வந்தேன் 🙂 

1 hour ago, ampanai said:

கே. சஞ்சயன் அவர்கள் வழமை போன்று பல நல்ல விடயங்களை கூறியுள்ளார். இருந்தாலும், மேலே உள்ள கூற்றை மேலதிகமாக தெளிவு படுத்தி இருக்கலாம். 

இந்துக்களுக்கான கட்சி உருவாக்கம் எவ்வாறு  தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ?

உலகில் எல்லா நாடுகளிலும் பொதுவாக மதம் அரசியலில் ஒரு முக்கிய பங்கை இன்றும் வகுத்து வருகின்றது. பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளில் மதத்தின் அரசியல் தாக்கமானது வளர்ந்த நாடுகளை விட அதிகம் என அறியலாம்.

அமெரிக்காவில் கூட, அதாவது உலகின் பணக்கார, தொழில்நுட்பரீதியாக வளர்ந்த ஓர் நாட்டில் கூட மதம் அது சார்ந்த வாக்குகள் ஒரு ஜனாதிபதியை, உலகின் பலம் வாய்ந்த மனிதரை தெரியவும் கூடிய சக்தி கொண்டது.

சரி, சிங்கள நாட்டில் கூட புத்த சமயமும் அதுசார்ந்த வாக்கு வங்கியும் பலமாக உள்ளன. அவர்களுக்கு ஒரு நாடு உள்ளதால் அவர்களை யாரும் எதுவும் இலகுவில் செய்துவிட முடியாது. இலங்கையில் உள்ள முஸ்லீம்களின் கட்சிகள்  அனைத்துமே அவர்களின் மதத்தை முன்வைத்தே செயல்படுகினறனர். 

கடந்த 72 ஆண்டுகளாக சிறுபான்மை சைவர்களும் மதத்தை முன்னிலை படுத்தாமலேயே தமது தமிழின அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனாலும், தமிழர்கள் என்பதால் அவர்களின் மதங்களும் பெருமைப்பான்மை மற்றும் முஸ்லீம் சமூகங்களால் குறிவைக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே, அரசியலில் சைவ மதமோ இல்லை இந்துத்துவாவோ புகுத்தப்பட்டக்கூடாது  என்பதை நானும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும் சைவ மதத்தை தமது மத உரிமையை பேண விரும்புவர்களுக்கு பதில் சொல்லாமல் தப்பிக்கவும் முடியவில்லை. கே. சஞ்சயன் அவர்கள் அதற்கான பதிலையும் இந்த ஆய்வில் இணைத்திருந்தால், கட்டுரை முழுமை பெற்றிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் முழுவதும் மிகவும்  அதிக அளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்லதாக அறிகிறேன். ஒட்டியவர்கள் அனைவரும் திருக் கேதீச்சரத்தை சூழவும் உள்ள பிரதேசத்திலிருந்து அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். திருக் கேதீச்சரத்தின் தர்மகர்த்தாவிலிருந்து அக் கோவிலின் அனைத்து முக்கிய பொறுப்புக்களிலிருப்பவர்கள் யாழ்ப்பாணத்தோரே. 

மன்னாரிலுள்ள கிறீத்துவர்களின் மனனிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். 

இந்தியன் வெட்டிய குழியில் நாமாகப் போய் விழுவோமாகில் பிறரை நாம் குறை சொல்வதற்கில்லை.

 

4 minutes ago, ampanai said:

உலகில் எல்லா நாடுகளிலும் பொதுவாக மதம் அரசியலில் ஒரு முக்கிய பங்கை இன்றும் வகுத்து வருகின்றது. பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளில் மதத்தின் அரசியல் தாக்கமானது வளர்ந்த நாடுகளை விட அதிகம் என அறியலாம்.

அமெரிக்காவில் கூட, அதாவது உலகின் பணக்கார, தொழில்நுட்பரீதியாக வளர்ந்த ஓர் நாட்டில் கூட மதம் அது சார்ந்த வாக்குகள் ஒரு ஜனாதிபதியை, உலகின் பலம் வாய்ந்த மனிதரை தெரியவும் கூடிய சக்தி கொண்டது.

சரி, சிங்கள நாட்டில் கூட புத்த சமயமும் அதுசார்ந்த வாக்கு வங்கியும் பலமாக உள்ளன. அவர்களுக்கு ஒரு நாடு உள்ளதால் அவர்களை யாரும் எதுவும் இலகுவில் செய்துவிட முடியாது. இலங்கையில் உள்ள முஸ்லீம்களின் கட்சிகள்  அனைத்துமே அவர்களின் மதத்தை முன்வைத்தே செயல்படுகினறனர். 

கடந்த 72 ஆண்டுகளாக சிறுபான்மை சைவர்களும் மதத்தை முன்னிலை படுத்தாமலேயே தமது தமிழின அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனாலும், தமிழர்கள் என்பதால் அவர்களின் மதங்களும் பெருமைப்பான்மை மற்றும் முஸ்லீம் சமூகங்களால் குறிவைக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே, அரசியலில் சைவ மதமோ இல்லை இந்துத்துவாவோ புகுத்தப்பட்டக்கூடாது  என்பதை நானும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும் சைவ மதத்தை தமது மத உரிமையை பேண விரும்புவர்களுக்கு பதில் சொல்லாமல் தப்பிக்கவும் முடியவில்லை. கே. சஞ்சயன் அவர்கள் அதற்கான பதிலையும் இந்த ஆய்வில் இணைத்திருந்தால், கட்டுரை முழுமை பெற்றிருக்கும். 

தமிழர் எனும்போது அதற்குள் சைவ சமயத்தோர் மட்டுமே அடக்கமா அல்லது கிறீத்துவர்களும் உள்ளடங்குகின்றனரா ?

உள்ளடங்குகின்றனர் என்றால் அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமயத்தை முன்னிலைப் படுத்திய அரசியலைச் செய்யவில்லையே ? .

அவர்களும் சமயத்தால் அரசியலை செய்ய வேண்டும் என்கிறீரா ?🤔

11 minutes ago, ampanai said:

சரி, சிங்கள நாட்டில் கூட புத்த சமயமும் அதுசார்ந்த வாக்கு வங்கியும் பலமாக உள்ளன. அவர்களுக்கு ஒரு நாடு உள்ளதால் அவர்களை யாரும் எதுவும் இலகுவில் செய்துவிட முடியாது. இலங்கையில் உள்ள முஸ்லீம்களின் கட்சிகள்  அனைத்துமே அவர்களின் மதத்தை முன்வைத்தே செயல்படுகினறனர். 

கடந்த வருடம் சித்திரை மாதம் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு படுகொலை பற்றிய உண்மைகள் முழுமையாக வெளிவரவில்லை. அவை, நிச்சயம் வெளிவரப்போவதும் இல்லை.

ஆனால், பலரும் அறிந்த உண்மை ஒன்று. இதில் கொல்லப்பட்டவர்களில் அநேகமானவர்கள் தமிழர்களே.  

ஆக, ஒரு கேள்வி எழுகின்றது. தமிழர்கள் புத்த மதத்தை தழுவினாலும் கொல்லப்படுவார்களா?, என்பதே.

16 minutes ago, ampanai said:

கடந்த 72 ஆண்டுகளாக சிறுபான்மை சைவர்களும் மதத்தை முன்னிலை படுத்தாமலேயே தமது தமிழின அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனாலும், தமிழர்கள் என்பதால் அவர்களின் மதங்களும் பெருமைப்பான்மை மற்றும் முஸ்லீம் சமூகங்களால் குறிவைக்கப்பட்டு வருகின்றன.

 

55 minutes ago, ampanai said:

சிங்கள பேரினவாதத்தை நாம் எதிர்க்கவேண்டும் என நான் எண்ணி வந்தேன் 🙂 

நான் எழுதும் போது ஒரு சொல்லை பயன்படுத்த தவறி விட்டேன்

சிங்கள பெளத்த பேரினவாதம் என்று வந்திருக்க வேண்டும்.

இந்த திரியில் நான் விவாதிக்க விரும்புவது தனிப்பட்ட ஒருவரின் கருத்தோ இல்லை ஒரு ஊரின் மத பிரச்சனையோ இல்லை. ஒரு பல்லின, பல மத சமூகத்தில் எவ்வாறு மதங்கள் அரசியல் செய்கின்றன என்பது பற்றி.

அத்துடன், பல வேறு திரிகளில் இந்துத்துவா, இந்தியா பற்றி விவாதங்கள் நடந்தன. ஆனால், யாரும் அவற்றிற்கான ஆதாரத்தை முன்வைத்ததில்லை. அப்படியானால், ஏன் சிங்களம் இதை ஆதரித்து செய்யலாம் என்ற கோணத்திலும் ஆராயவேண்டும். இல்லை வேறு ஒரு சக்தியாக கூட இருக்கலாம்.

அடுத்து, நாம் விரும்பியோ இல்லையோ, இந்தியாவில் மோடி அலை மற்றும் சார்ந்த ஆதவாளர்கள் தான் பெரும்பான்மை. அந்த அலை தொடரும் பொழுது அதன் தாக்கம் எமது தாயகத்தில் அலை மோதுவதை பின் போடலாம், ஆனால், தவிர்க்க முடியாது.

இந்த யதார்த்தத்தை புரிந்து எமது அரசியல் ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும், மக்களை வழிப்படுத்தல் வேண்டும்.
 

10 minutes ago, நிழலி said:

நான் எழுதும் போது ஒரு சொல்லை பயன்படுத்த தவறி விட்டேன்

சிங்கள பெளத்த பேரினவாதம் என்று வந்திருக்க வேண்டும்.

தெரியும் அதனால் தான் ஒரு 'ஸ்மாலியை' இணைத்திருந்தேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.