Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை: கௌசல்யாவின் தந்தை விடுதலை, 5 பேரின் தண்டனை குறைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடுமலை சங்கர் ஆணவக் கொலை: கௌசல்யாவின் தந்தை விடுதலை, 5 பேரின் தண்டனை குறைப்பு

சங்கர் கௌசல்யாFacebook சங்கர் - கௌசல்யா

ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் உடுமலைப்பேட்டை குமாரமங்கலத்தில் உள்ள சங்கர் வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று கௌசல்யாவும் அவரது கணவர் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இருவரையும் கத்திகளால் வெட்டினர். 

இதில் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் வெட்டுக்காயமடைந்த கௌசல்யா சிகிச்சைபெற்று குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, கௌசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. 1500 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய மூவரும் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கில் யு சங்கரநாராயணன் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மேலும் மூன்று அரசு வழக்கறிஞர்களும் இவருக்கு உதவியாக நியமிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். 

மீதமிருந்த 9 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 9-வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

உடுமலை கௌசல்யாFacebook/Gowsi shankar கௌசல்யா

இதில் சின்னச்சாமிக்கு தூக்குதண்டனையோடு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 3 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் 2 லட்ச ரூபாயை கௌசல்யாவுக்கு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. ஜெகதீசனுக்கு தூக்கு தண்டனையோடு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மணிகண்டன், செல்வக்குமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனையோடு தலா 1,65,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேல் முறையீட்டில் தந்தை விடுவிப்பு

இந்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பும் மேல் முறையீடு செய்தது. தூக்குத் தண்டனையை உறுதிசெய்யும்படியும் அரசுத் தரப்பு கோரியது.
 

இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணா, நிர்மல் குமார் அமர்வு விசாரித்து வந்தது. பிப்ரவரி 12ஆம் தேதி வாதங்கள் நிறைவடைந்தன. பிப்ரவரி 27ஆம் தேதி எழுத்து பூர்வமான வாதங்கள் அளிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

கௌசல்யா காயங்களுடன் உயிர் தப்பிய கௌசல்யா.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் முதல் குற்றவாளியான சின்னச்சாமியின் தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். மற்ற ஐந்து குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்களுக்கு எந்த தளர்வும் அளிக்கக்கூடாது என்றும் இவர்கள் குறைந்தது 25ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தன்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்துசெய்யப்பட்டது. மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டுகால சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டது செல்லும் எனவும் நீதிமன்றம் கூறியது. 

விடுவிக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படாததாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பின் கூடுதல் வழக்கறிஞர் எமிலியாஸ், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார். 


 

https://www.bbc.com/tamil/india-53133190

  • கருத்துக்கள உறவுகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கு: 6 பேரின் தூக்கு தண்டனை ரத்து - சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

 

 

உடுமலை சங்கர் கொலை வழக்கு: 6 பேரின் தூக்கு தண்டனை ரத்து - சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கலப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. இவர்களில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பதிவு: ஜூன் 23,  2020 05:45 AM
சென்னை, 

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் கவுசல்யா.

இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்துக் கொண்டார். இந்த காதலுக்கு கவுசல்யா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி கணவர் சங்கருடன், கவுசல்யா உடுமலைப்பேட்டை கடைவீதிக்கு சென்றார். அப்போது மர்ம கும்பல் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா வெட்டுக் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கொலை, கொலை முயற்சி, கூட்டுச்சதி, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை உள்பட பல சட்டப்பிரிவுளின் கீழ் உடுமலைப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இந்த வழக்குகளில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார், ஜெகதீசன், எம்.மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன், ஸ்டீபன் தன்ராஜ், மற்றொரு மணிகண்டன் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் செசன்சு கோர்ட்டு கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி தீர்ப்பு அளித்தது. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், எம்.மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது.

குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி, 6 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ய இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டுக்கு திருப்பூர் செசன்சு கோர்ட்டு அனுப்பி வைத்தது.

இதேபோல், தண்டனை பெற்ற அனைவரும், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

அத்துடன் இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அன்னலட்சுமி உள்பட 3 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் உடுமலைப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர்.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமலியாஸ், அரசு குற்றவியல் வக்கீல் பிரதாப்குமார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வி.கார்த்திக், வக்கீல்கள் ஆர்.கார்த்திகேயன், என்.மனோகரன், சி.டி.முருகப்பன், ஏ.எல்.காந்திமதி, நாகசுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள்.

பல மாதங்கள் நடந்த இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.

பரபரப்பு தீர்ப்பு

இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால், கீழ்க் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த தீர்ப்பை எதிர்த்து துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

கவுசல்யாவின் தந்தை விடுதலை

கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி மீது இந்த வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இதனால், அவருக்கு கீழ்க் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்கிறோம். அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறோம்.

ஸ்டீபன் தன்ராஜ், மணிகண்டன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. இதனால் ஸ்டீபன் தன்ராஜூக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள்தண்டனையையும், மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையையும் ரத்து செய்கிறோம்.

ஆயுள் தண்டனையாக குறைப்பு

அதேநேரம், ஜெகதீசன், எம்.மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கின்றோம். இவர்கள் குறைந்தது 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு

அதாவது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 11 பேரில், 6 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். 5 பேருக்கு

விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசு தரப்பு

கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமலியாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/23022353/Udumalai-Shankar-murder-case-6-others-Sentenced-to.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
 
உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.
 
 
அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு 2017 டிசம்பரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை எதித்து அவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டனர். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
 
இதன்படி கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுவிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.