Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை

spacer.png

பட மூலம், PageTamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை.

ஏன் என்பது வருமாறு:

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்குத் தொடுனர் (chief prosecutor) என்றொருவர் இருக்கிறார். அவருக்கு சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கொள்ளப்படக் கூடிய – இனப்படுகொலை (genocide), போர்க்குற்றங்கள் (war crimes), மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் (crimes against humanity) மற்றும் வலியத் தீங்கு செய்தல் (crimes of aggression) என்பனவற்றின் மீது விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான அதிகாரம் இருக்கிறது.

முதலில் வழக்குத்தொடுனர் அலுவலகம் மேற்சொன்ன பாரதூரமான குற்றங்கள் நிகழ்ந்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதையும், அவற்றை விசாரிக்கும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு விசாரணையொன்றை ஆரம்பிக்க:

குறித்த நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்றிருக்க வேண்டும்.

அல்லது,

ஐ.நா. பாதுகாப்புச் சபையால் குறித்த நாடு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரதீனப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை, ரோம் சட்டத்தை தன்  நாட்டுச் சட்டத்தில் இணைக்காத நாடு. அதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) அதிகாரத்தை ஏற்காத நாடு. ஆகவே, இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க பாதுகாப்பு சபையூடாக இலங்கையைப் பாரதீனப்படுத்துவதே இதுவரை காலமும் ஒரே வழியாக இருந்தது. அமெரிக்கா முதலில் இலங்கையை ICC இல் பாரதீனப்படுத்த இணங்கி இருக்க வேண்டும். அமெரிக்கா அதைச் செய்தாலும் சீனாவும், ரஷ்யாவும் அதற்கெதிராகத் தம் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாதிருக்க வேண்டும். பாதுகாப்புச் சபையூடாக இலங்கையை ICC இல் பாரதீனப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியை ஆதரிக்கும் சட்டவறிஞர்களும் பொது வெளியில் சொல்லியிருக்கிறார்கள்.

சென்ற வருடம் நவம்பர் மாதம் தன் இருபது வருடகால வரலாற்றில் முதற்தடவையாக ICC மேற்சொன்ன நிபந்தனைகள் இரண்டில் ஒன்றையேனும் பூர்த்திசெய்யாதவொரு நாட்டின் மீது விசாரணையை ஆரம்பித்தது. அந்த நாடு மியன்மார்.

மியன்மார் ICC இன் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதொரு நாடல்ல. ஆனால், மியன்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலட்சக் கணக்கில் பங்களாதேஷில் அகதிகளாகக் குடியிருக்கிறார்கள். பங்களாதேஷ் ரோம் சட்டத்தை தன் நாட்டுச் சட்டத்தில் இணைத்த நாடு. ரோஹிங்கியாக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களில் ஒன்றான நாடுகடத்தல் அல்லது நாட்டிலிருந்து விரட்டப்படல் என்ற குற்றத்துடன் பங்களாதேஷ் சம்பந்தப்பட்டிருப்பதால், அந்த அடிப்படையில் மியன்மார் மீது விசாரணையைத் தொடங்கலாம் என்ற புதிய சட்ட வியாக்கியானத்தின் கீழ்  ICC இன் பிரதான வழக்குத்தொடுனர் மியன்மார் மீது விசாரணைகளை ஆரம்பிக்க முடிவெடுத்திருந்தார்.

மியன்மாரை விசாரிக்கவென எடுக்கப்பட்ட முடிவு தானாய் உதித்ததல்ல. இதுவரை காலமும் ICC இல் ஆபிரிக்க நாடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களே விசாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. அண்மைக் காலமாக ICC மீது கறுப்பின மக்களை மாத்திரம் கூண்டில் நிறுத்தும் இனவாதக் கட்டமைப்பு என்கிற தீவிரமான குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதைச் சமாளிக்க வேண்டிய தேவை ICC க்கு உதித்திருந்தது. மேலும், வல்லமையான இஸ்லாமிய நாடுகள் ஒருமித்து மியன்மார் மீது சர்வதேச சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றியிருந்தன. ஆகவே, மியன்மார் மீது ICC ஆரம்பித்திருக்கும் விசாரணை ஒரு அதி விசேடமான சம்பவம் (exception not the rule).

இவ்விடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுவது பொருத்தம். வழக்குத்தொடுனர் முடிவெடுத்தால் மட்டும் போதாது. அதை ICC இன்  நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவும் ICC சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத நாடு. ஆனால், ICC இன் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் இழைத்த குற்றங்களை விசாரிக்க வேண்டுமென வழக்குத்தொடுனர் எடுத்த முடிவை ICC நீதிபதிகள் (Pre-Trial Chamber II) ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், சில காலம் ICC இன் அமெரிக்காவிற்கெதிரான முயற்சி கிடப்பிலிருந்தது. மீண்டும் வழக்குத்தொடுனர் அந்த முடிவுக்கு எதிராக மேன்முறையிட்டு இந்த வருடம் மார்ச் மாதம் முன்னைய முடிவு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு வருவோம். எந்த நாடுகள் எல்லாம் ஒன்று கூடி விடுதலைப் புலிகளை அழித்தனவோ; எந்தெந்த நாடுகள் அப்பாவித் தமிழர் கொல்லப்பட்டதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தனவோ, அந்த நாடுகள் எல்லாம் பத்தாண்டு கழித்து, ஏதோவொரு அசிரீரி ஒலிக்கக் கேட்டு மொத்தமாக மனம் மாறிவிட்டதாக வைத்துக் கொள்வோம். இந்த நாடுகள் இப்போது இலங்கை மீதான ICC விசாரணைக்குப் பாரிய அழுத்தத்தைக் கொடுக்கின்றன. வழக்குத்தொடுனருக்கு விசாரணையை ஆரம்பிக்க சட்ட அடிப்படையொன்று அவசியம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த இடத்தில் எவ்வாறு மியன்மாரிலிருந்து, ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷிற்கு விரட்டப்பட்டார்களோ, அதுபோன்றே ICC அங்கத்துவ நாடில்லாத இலங்கையிலிருந்து, ICC அங்கத்துவ நாடுகள் பலவற்றிற்கு எம்மவர்கள் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு வழக்குத்தொடுனர் விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என்கிறார். இரண்டும் ஒன்றுக்கொன்று சட்டரீதியில் ஒப்பான சூழ்நிலைகள் அல்ல. இருந்தாலும் இதுவொரு பொருட்டில்லை எனக் கொள்வோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லும் சட்ட அடிப்படையில் வழக்குத்தொடுனர் விசாரணைகளை ஆரம்பிக்கிறார் என்போம். அடுத்த கட்டம் என்ன?

ICC இன் விசாரணையாளர்கள் முதலில் விசாரணைகளில் ஈடுபட்டு இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்களைத் திரட்டி, சந்தேகநபர்களை இனங்காண வேண்டும். இரண்டு விடயங்கள் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும். ICC தனி நபர்கள் மீது தான் வழக்குத் தொடுக்கலாம், ஒரு அரசின் மீது அல்ல. பொதுவாக ஒரு நாட்டில் ஒருவரையோ அல்லது அதிகபட்சம் இருவரையோதான் இதுவரை காலம் ICC குற்றவாளியாக இனங்கண்டிருக்கிறது. மேலும், ICC தன் விசாரணைகளை நடத்த குறித்த நாட்டின் இணக்கத்தில் தங்கியிருக்கிறது; இது தெளிவாகவே ICC இன் பொது ஆவணங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஆதாரங்களைத் திரட்டவென ICC விசாரணையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி அளிக்காவிட்டால் அவர்களால் வலிந்து இலங்கைக்குள் வந்துவிட முடியாது.

நாம் விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் இருக்கும் பாரிய இடைவெளியையும் புரிந்துகொள்ள வேண்டும். ICCயால் தற்போது மொத்தம் 13 நாடுகள் மீதான விசாரணைகள் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை மனதிற் கொள்க. கொங்கோ, உகண்டா, சூடான் போன்ற நாடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் 15 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

எமது பிரச்சினையைப் பொறுத்தளவில் வெளிநாடுகளில் அகதிகளாய் வாழும் தமிழரை மட்டும் வைத்துக் கொண்டு இனப்படுகொலை என்ற குற்றத்தை நிறுவப் போதுமான ஆதாரங்களைத் திரட்ட முடியுமா என்பது சந்தேகத்திற்கிடமானது. ஆனால், இதுவும் நடக்கிறதென்றே வைத்துக் கொள்வோம்.

ஆதாரங்களைத் திரட்டிய பின் பொருத்தமான சந்தேகநபர் யார் என்பதை ICC இனங்கண்டு அவருக்கு அழைப்பாணை விடுக்கும். சந்தேகநபர் தானாக முன்வந்து வழக்கில் தன்னைச் சமர்ப்பிக்கலாம். சந்தேகநபர் அதைச் செய்யாத பட்சத்தில் ICC அந்த நபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவொன்றைப் பிறப்பிக்கும். சந்தேகநபரது நாடோ அல்லது அவர் பயணிக்கும் நாடொன்றோ அவரைப் பிடித்து ICC யிடம் ஒப்படைத்தால் மாத்திரமே வழக்குத் தொடரப்படலாம். குறித்த நபர் நீதிமன்றில் இல்லாது வழக்கைக்  கொண்டு செல்ல முடியாது.

இதுவரை ICC ஒரேயொரு ஆட்சியிலிருக்கும் அரச தலைவர் மீதுதான் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. சூடானின் அதிபரான அல் பஷீர் என்பவரே அவர். அல் பஷீருக்கெதிரான முதலாவது பிடியாணை 2009 இல் பிறப்பிக்கப்பட்டது. அல் பஷீர் வெகு இலகுவாகவே ஐ.நா. மற்றும் ICC இன் அங்கத்துவ நாடுகள் பலவற்றிற்கு சென்று வந்து கொண்டிருந்தார்.  எந்த நாடும் அவரைக் கைதுசெய்து ஒப்படைப்பதாய் இருக்கவில்லை. இவரைக் கைதுசெய்து ஒப்படைக்காத நாடுகள் மீது ICC ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முறைப்பாடுகளைச் செய்தபோதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அல் பஷீரோடு சேர்த்து மொத்தம் 12 பேர் மீது  ICC இன் சர்வதேச பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட படி இருக்கின்றன. மீதி எவரையும் எவரும் கைதுசெய்து நாடு கடத்துவதாய் இல்லை. பிடியாணை விடுக்கப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேர் செத்தும் போய் விட்டார்கள்.

எம் பிரச்சினைக்கு மீண்டும் வருவோம். (1) முதலாவதாக, எம்மை அழித்த அதே உலக நாடுகள் திடீரென மனம் மாறி இலங்கை மீதான விசாரணையொன்றிற்குப் பாரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். (2) இருக்கும் சட்டச்சிக்கல்களை மேற்கொண்டு வழக்குத்தொடுனர் எப்படியோ விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டும். (3) பல்லாண்டு காலமெடுத்து ICC விசாரணையாளர்கள், இலங்கையின் ஒத்துழைப்பின்றி இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டி முடிக்க வேண்டும். (4) அடுத்து, ஓரிரு நபர்களை ICC சந்தேகநபர்களாக இனங்கண்டு, அழைப்பாணையோ, பிடியாணையோ விடுக்க வேண்டும். (5) பின்னர், குறித்த சந்தேகநபர் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் அவராக ஹேகில் தன்னைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது இலங்கை அரசோ, குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபர் பயணமாகும் நாடொன்றோ அந்த நபரைப் பிடித்து ICCயிடம் ஒப்படைக்க வேண்டும். (6) இதற்குப் பின்னரே வழக்கு தொடங்கப்படலாம். வழக்கின் முடிவில் ஆதாரங்களுடன் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக சொகுசான ஐரோப்பிய சிறையொன்றில் குற்றவாளி சிறை வைக்கப்படுவார்.

தன் இருபது வருட கால வரலாற்றில் ICC மூன்றே நபர்களைத்தான் இத்தனை படிமுறைகளையும் கடந்து சர்வதேசக் குற்றங்களின் கீழ் குற்றவாளியாகத் தீர்ப்பிட்டிருக்கிறது. ஆட்சியிலிருக்கும் அரச தலைவர் ஒருவருக்கு எதிராக 20 வருடத்தில் ஒரேயொரு முறைதான் படிநிலை (3) எட்டப்பட்டிருக்கிறது. அந்த விசாரணை அந்த இடத்தைத் தாண்டி நகராது பத்து வருடமாகத் தரித்து நிற்கிறது.

இலங்கையிலும் அவ்வாறே. முதலில் முதல் நான்கு படிமுறைகளையும் நாம் கடக்க வேண்டும். இவை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு. நடந்தாலும் இலகுவில் 20 ஆண்டுகள் எடுத்துவிடக்கூடும். இவற்றின் முடிவில்  ICC பிடியாணை விடுத்த ஒரே காரணத்திற்காக இலங்கை அரசு குறித்த குற்றவாளியைப் பிடித்து ICCயிடம் கொடுப்பதற்கான எந்தவிதக் கடப்பாடும் அதற்கில்லை. எந்தக் கட்சியைச் சார்ந்த இலங்கை அரசாங்கமும் அதைச் செய்யப்போவதுமில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ வெகு இலகுவாக பிடியாணையை நிராகரித்து விட்டு வேலையைப் பார்ப்பதை விடுத்து அன்றைய இலங்கை அரசு தமிழருக்குத் தனித் தமிழ்த் தேசம் கொடுக்கும் பேரம் பேசலுக்குத் தன்னை அழைக்குமெனக் கதை அளக்கிறார். மேற்சொன்னவை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும், அவருக்கு ஆதரவளிக்கும் சட்டப் புலமை கொண்டவர்களுக்கும் தெரியாத விடயங்கள் அல்ல. தெரிந்துகொண்டே சுய இலாப அரசியலுக்காகப் போராற் பாதிக்கப்பட்ட மக்களிடம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற மாயையை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் கண்டிக்கப்பட வேண்டிய செயலை வெட்கமின்றிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Elijah-e1594981725684.png?resize=95%2C11இலைஜா ஹூல்

 

https://maatram.org/?p=8642

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.