Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாத்திகமும், அரசியலும் - ராஜன் குறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: நாத்திகமும், அரசியலும்

spacer.png

 

ராஜன் குறை

அரசியல் கட்சித் தலைவர்கள் இறை நம்பிக்கையுடன் இருக்கலாமா? அவர்களுக்குத் தனிப்பட்ட நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறர் நம்பிக்கையை முன்னிட்டு பண்டிகை தினங்களில் வாழ்த்து சொல்வது, வழிபாட்டு செயல்பாடுகளில் பங்கேற்பது ஆகியவற்றை செய்யலாமா? தனிப்பட்ட முறையில் ஒருவர் கோயிலுக்குச் செல்வதும், ஒரு கோயில் கட்டும் பணியை ஒரு பாலம் கட்டுவது போல, அணைகளைக் கட்டுவது போல ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைப்பதும் ஒன்றா? அரசுக்கும், மத அமைப்புகளுக்கும் இருக்க வேண்டிய இடைவெளி என்ன? இது போன்ற கேள்விகளை கவனமாக நாம் பரிசீலிக்க கற்க வேண்டும்.

சிலர் முற்போக்கு சிந்தனை என்பது கடவுள் மறுப்புடன் பிணைக்கப்பட்டது என நம்புகிறார்கள். சிலர் மதச்சார்பின்மையைப் பின்பற்றும் கட்சியின் தலைவர்கள் பகிரங்கமாகக் கோயிலுக்குச் செல்வதோ, கடவுள் வழிபாட்டுடன் தொடர்பு படுத்திக்கொள்வதோ தவறு என நினைக்கிறார்கள். கடந்த தேர்தலின் போது ராகுல் காந்தி கோயில்களுக்குப் போனதையும், தன்னை சிவபக்தன் என்று கூறிக்கொண்டதையும் பலர் இந்துத்துவத்துடன் செய்து கொண்ட சமரசம் என்று கருதினார்கள். திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி, பிள்ளையார் பொம்மையொன்றை ஏந்தியபடி படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டது சர்ச்சைக்குரியதாக மாறியது. இவற்றையெல்லாம் எப்படி அணுகுவது என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இவற்றை புரிந்துகொள்ள சில முக்கிய வரலாற்றுச் செய்திகளை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். ஆத்திகம், நாத்திகம் ஆகிய கடவுள் கோட்பாடுகளை நாம் நேரடியாகப் பிற்போக்கு, முற்போக்கு எனப் பிரித்துக்கொள்ள முடியாது.

சாவர்க்கர் என்ற நாத்திகர்

இந்துத்துவம் என்ற நூலை எழுதியவரும், இந்து மகா சபை தலைவருமான விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஒரு நாத்திகர் என்பது கருதத்தக்க செய்தியாகும். அவரைப் பொறுத்தவரை இந்து அடையாளம் என்பது ஓர் அரசியல் அடையாளமாகும். அதற்கு இறை நம்பிக்கை என்பது முக்கியமானதல்ல. ஆனால், இந்த அரசியல் அடையாளத்தைக் கட்டியெழுப்ப மக்களின் இறை நம்பிக்கையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதனால்தான் காந்தி கொலை வழக்கிலிருந்து சாவர்க்கர் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்தினுள் ஒரு நாள் நள்ளிரவு குழந்தை ராமர் சிலையைக் கொண்டுபோய் வைத்துவிட்டு அந்த வளாகத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற பிரச்சினையை ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை அமைப்புகள் தொடங்கின. பாபர் மசூதி இருந்த இட த்தில் ராமர் கோயில் இருந்தது; அதை பாபரின் தளபதி இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் என்று ஒரு பிரச்சாரத்தை அவர்கள் செய்யத் தொடங்கினர். அதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக இந்து அடையாள அரசியலை அவர்கள் வளர்த்து எடுத்தார்கள்.

சாவர்க்கருக்கு நேர் முரணாக இயங்கியவர் காந்தி. அவர் இறை நம்பிக்கை, பக்தி மனிதர்களுக்கு அவசியம் என்று கருதினார். தினசரி பிரார்த்தனைகளில் ஈடுபட்டார். தனிப்பட்ட முறையில் இறைவனை நம்பினார். ஆனால் இந்து மத அடையாளத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய அவர் விரும்பவில்லை. அவர் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். “ஈஸ்வர அல்லா தேரோ நாம்” என்று பாடினார். அவர் ஒருமுறை ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அழைப்பின் பேரில் சென்றபோது அங்கே கடவுளர் படங்களே இல்லாததைச் சுட்டிக்காட்டினார். அதாவது காந்தி கடவுளை நம்பினார், மத அடையாள அரசியலை மறுத்து இயங்கினார். மக்கள் மத்தியில் அவருக்கு மாபெரும் செல்வாக்கு இருந்தது. அதனால்தான் காந்தியை முதல் பெரும் எதிரியாகக் கருதி, அவரது முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல், இந்துத்துவ செயல் வீரரும், சாவர்க்கரின் அத்யந்த சீடரும், நண்பருமான விநாயக் நாதுராம் கோட்சே கொலை செய்தார்.

பெரியாரும், நாத்திகத்தின் அரசியல் பயன்பாடும்

காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸில் சமூக நிர்மாண, சீர்திருத்த பணியாற்றி வந்த பெரியார், வகுப்புவாரி உரிமையை காங்கிரஸ் ஏற்காததால் விலகினார். காங்கிரசினுள் பார்ப்பனீயத்தின் செல்வாக்கு அதிகம் இருப்பதை அவர் கண்டார். அவருடைய சமத்துவ நோக்குக்கும், பார்ப்பனீய சனாதன பார்வைக்கும் இருந்த முரண் அவரது அரசியலை வடிவமைத்தது. பெரியார் தனிப்பட்ட முறையில் இறை நம்பிக்கை அற்றவர். அவர் “பிரகிருதி வாதம் அல்லது மெட்டீரியலிசம்” என்ற ஒரு சிறிய தத்துவ கோட்பாட்டு நூலையும் 1932ஆம் ஆண்டு எழுதினார். பார்ப்பனர்களின் பூசாரி வர்க்கத்தினராக இருந்ததும், கடவுள்கள், புராணக்கதைகள், சடங்குகள் ஆகியவற்றில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டதையும் கண்டார். அதனால் தன் பார்ப்பனீய கருத்தியல் எதிர்ப்பின் முக்கிய அம்சமாக கடவுள் மறுப்பையும் மேற்கொண்டார். இதில் பார்ப்பனீய எதிர்ப்புதான் முக்கியமே தவிர, கடவுள் மறுப்பு அல்ல. பார்ப்பனீய எதிர்ப்பில் ஒரு முக்கிய ஆயுதம்தான் கடவுள் மறுப்பு.

பெரியாரின் சிந்தனையில் எதற்கு முக்கியத்துவம் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள அவர் காந்தி கொலையுண்டதை எப்படி விளக்கினார் என்பதை காண வேண்டும். அவர் காந்தி வாழ்நாளெல்லாம் பார்ப்பனர்களை அனுசரித்து நடந்தாலும், அவர் பார்ப்பனராலேயே கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டும் என்றார். இந்து அடையாள அரசியல் என்பது பார்ப்பனீய மீட்புவாத அரசியலாகத்தான் இருக்கும் என்பதை பெரியார் அறிந்திருந்தார். எனவேதான் காந்தியின் இறை நம்பிக்கை பெரியாருக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக காந்தி இந்து அடையாள அரசியல் செய்ய மறுத்தது, இஸ்லாமியர்களை ஆதரிக்க முனைந்தது ஆகியவற்றையே பெரியார் பொருட்படுத்தினார்.

வெகுஜன மனோபாவமும், அரசியலும்

 

தேர்தல் அரசியல் என்பது வெகுஜன மனோபாவத்தைப் புறக்கணிக்க முடியாது. மக்களைப் பொறுத்தவரை, குறிப்பாக அடித்தள மக்களைப் பொறுத்தவரை அவர்கள் கடவுள் நம்பிக்கை ஆழமானது. அதை எளிதில் மாற்ற முடியாது. வாழ்வில் ஏராளமான இன்னல்களைச் சந்திக்கும் மக்கள், இறைவனை வழிபடுவதன் மூலமே மனம் அமைதி கொள்கிறார்கள். நாத்திகம் பேசிய பெரியாரையோ அல்லது கம்யூனிஸத் தலைவர்களையோ மக்கள் நிராகரிப்பதில்லை. அவர்களது சீர்திருத்த நோக்கங்கள், சமத்துவ லட்சியம் ஆகியவற்றை புரிந்துகொள்கிறார்கள். ஆனாலும் கடவுள் நம்பிக்கை என்பதும் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

கடந்த ஆண்டு காஞ்சியில் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை காட்சிப்படும் அத்திவரதர் என்ற கடவுளை தரிசிக்க பெரும் கூட்டம் திரண்டபோது பலர் பெரியாரின் தாக்கம் மக்களிடையே மறைந்துவிட்டது என்று கூறினார்கள். இது ஒரு வேடிக்கையான வாதம். பெரியார் வாழ்ந்த காலத்திலேயே கூட அனைத்து கோயில் திருவிழாக்களிலும் பெரும் கூட்டம் கூடத்தான் செய்தது. மக்கள் பெரியாரின் சமத்துவ சிந்தனையை, சீர்திருத்த நோக்கை புரிந்துகொண்டார்கள். அவரை அதற்காக மதித்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் நாத்திகத்தை ஏற்க வேண்டும் என்பது அவசியமில்லை.

தேர்தலில் போட்டியிடத் தொடங்கிய திமுக நாத்திகக் கட்சி என்ற அடையாளத்தை ஒரு சுமையாகவே சுமந்து வந்துள்ளது. அதன் பொருட்டே தங்களுக்கு இறை மறுப்பு என்பது முக்கிய லட்சியமல்ல என்பதைக் கூறிவந்துள்ளது. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்பதை தன் பார்வையாக அண்ணா கூறியதன் மூலம் மதங்களை கடந்த ஒரு பார்வையை, இறைமறுப்பையும் வலியுறுத்தாத ஒரு பார்வையைச் சாத்தியமாக்கினார்.

இந்துத்துவ ஆட்சி

பாகிஸ்தான் என்ற அண்டை நாட்டுடனான பகைமை, சர்வதேச அளவில் வளர்ந்த இஸ்லாமிய தீவிரவாதம் ஆகியவற்றின் துணையுடன் தன் இந்து அடையாள வாத அரசியலை வளர்த்தெடுத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி. பெரும்பான்மை மத அடையாளத்தை ஒரு பாசிச மனப்போக்காக நாடெங்கும் உருவாக்குவதற்கு அது கடந்த முப்பதாண்டுகளாக தீவிர முயற்சி செய்து வருகிறது. கணிசமான தேர்தல் வெற்றிகளை ஈட்டியுள்ளது. இந்தியாவின் பிரதமராக தானே ராமர் கோயில் கட்ட பூமி பூஜை போடும் சடங்கில் பங்கேற்று இந்திய அரசின் மதச்சார்பின்மையை குழி தோண்டி புதைத்து உள்ளார் மோடி.

வெகுஜன மனோவியலில் உள்ள இறை நம்பிக்கையைப் பயன்படுத்தி இறை மறுப்பாளர்களை இந்து மத விரோதிகளாகச் சித்திரித்து விடலாம் என முயற்சி செய்கிறது பாஜக. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், திமுக ஆகிய கட்சிகளை இந்து விரோத மனோபாவம் உள்ள கட்சிகள் என தொடர்ந்து பிரசாரம் செய்கிறது.

இதை எதிர்கொள்ள இறை நம்பிக்கை என்பது வேறு, இந்து மத அடையாள அரசியல், பார்ப்பனீய மீட்புவாத அரசியல் ஆகியவை வேறு வேறானவை என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நேரத்தில் இந்து கடவுள்களை பாரதீய ஜனதா கட்சியின் ஏகபோக உரிமையாக, செட் பிராப்பர்டிகளாக விட்டுவிட முடியாது. அளப்பரிய பன்மை கொண்ட “இந்துக்களின்” வெகுஜன வழிபாட்டு முறைகளை அவ்வளவு சுலபமாக பாரதீய ஜனதா கட்சி தன் அடையாள அரசியலுக்குத் தொகுத்து விட முடியாது என்றாலும், அதன் குற்றச்சாட்டுகளை பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம் பார்ப்பனீய சனாதன நோக்கை எதிர்த்தும், சமூக நீதி சமத்துவ கோட்பாடுகளை வலியுறுத்தியும் அரசியல் செய்ய வேண்டும்.

தேவை ஓர் அறிவியக்கம்

முற்போக்கு சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் சமூகத்தில் பகுத்தறிவை, இறை கோட்பாடு குறித்த வளமான சிந்தனையை சமூகத்தில் உருவாக்க தீவிரமாக செயல்பட வேண்டும். அரசியல் தலைவர்கள் எல்லாம் வெகுஜன மனோவியலை எதிர்த்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் மீதே பொறுப்பைச் சுமத்தாமல், தங்கள் செயல்பாட்டின் மூலம் சமூகத்தில் விழிப்புணர்ச்சியை உருவாக்க வேண்டும். இந்து அடையாள வாத பாசிசத்தையும், இறை நம்பிக்கை, வழிபாட்டையும் ஒன்றாகப் பார்த்து, இரண்டையும் சேர்த்து குழப்பி அரசியலை பாழடித்துவிடக் கூடாது. காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர், அண்ணா எனப் பல்வேறு தலைவர்களும் எந்த லட்சியத்துக்காகச் செயல்பட்டார்கள், அவர்கள் இந்து அடையாளவாத, பெரும்பான்மை நோக்கை எவ்வாறு கையாண்டார்கள் என்பதை கவனமாகப் பரிசீலிப்பதன் மூலமே நாம் சரியான அணுகுமுறைகளை இனம் காண முடியும். இவர்களையெல்லாம் ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தாமல் எப்படி இவர்கள் அனைவருமே இன்று உருவாகியுள்ள இந்து பெரும்பான்மைவாத அடையாள அரசியலுக்கு எதிரானவர்கள் என்பதைப் புரிந்துகொள்வதே முக்கியம். அப்போதுதான் பன்முகப்பட்ட அணுகுமுறைகளின் அரசியல் அவசியத்தை உணர முடியும்.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.
 

https://minnambalam.com/k/2020/08/31/7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.