Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பு சந்தையில் ‘மஞ்சள்’; இறக்குமதிக்கான அரசின் தடை ஏற்படுத்திய பாதகமான விளைவுகள்

Featured Replies

கறுப்பு சந்தையில் ‘மஞ்சள்’; இறக்குமதிக்கான அரசின் தடை ஏற்படுத்திய பாதகமான விளைவுகள்

  • ”மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்க முன்னர், மஞ்சள் உற்பத்தியை அரசு ஊக்குவித்திருக்க வேண்டும். அதனை செய்யாது திடீரென அதன் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நன்மையளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் கறுப்புச்சந்தை வர்த்தகர்களும் மஞ்சள் மாபியாக்களும் மஞ்சள் கடத்தல்காரர்களுமே பெரும் நன்மையடைந்துள்ளனரே தவிர உள்ளூர் மஞ்சள் உற்பத்தியாளர்களுக்கு தற்போதைக்கு எந்த வித இலாபமும் கிடையாது.  400 ரூபாவுக்கு விற்ற மஞ்சளை 7000 ரூபாவுக்கு வாங்க வேண்டிய நிலைமை மக்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது”

JANIE.jpg

  • எச்.ஹுஸ்னா

லங்கையில் கொரோனா வைரஸ் காலடி வைத்த கடந்த பெப்ரவரி மாதம் முதல் இலங்கையும் இலங்கையர்களும் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்புக்கள், வருமானமின்மை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு என ஒருபக்கமும் கொரோனா வைரஸின் வீரியம் குறையாத அச்சுறுத்தல் ஒருபக்கமும் அரசின் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஒழிப்பு, புதிய அரசியலமைப்பு என இன்னொரு பக்கமும் மக்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கையர்களின் பாரம்பரிய உணவுப்பொருளான ”மஞ்சள்”கட்டி, தூளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடும் கட்டுக்கடங்காத விலையேற்றமும் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ”மஞ்சள்”கட்டி, தூளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு கடந்த வருட இறுதியில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் என்ற வகையில் மஞ்சள் இறக்குமதிக்கு அரசு விதித்த தடை முதலாவது காரணமாகவும் இந்த வருட முற்பகுதியில் இலங்கையரை தாக்கத்தொடங்கிய கொரோனா வைரஸு க்கு எதிரான பொருள் என்பதனால் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி இலங்கையில் என்றுமில்லாதவாறு அதிகரித்த மஞ்சளுக்கான நுகர்வும் அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடும் இரண்டாவது காரணமாகவும் இந்த இந்த இரு காரணங்களினாலும் இலங்கையில் மஞ்சளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை நிவர்த்திக்கக்கூடிய மஞ்சள் உற்பத்தி இலங்கையில் இல்லாதமை மூன்றாவது காரணமாகவும் உள்ளதுமே இன ,மத வேறுபாடின்றி ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

001.pngஇலங்கையில் கடந்த வருட இறுதி வரையில் ஒரு கிலோ மஞ்சள் 400 ரூபா வுக்கு விற்கப்பட்ட நிலையில் மேற்கூறப்பட்ட மூன்று காரணங்களினால் தான் தற்போது ஒரு கிலோ மஞ்சள் 7000 ரூபாவையும் தாண்டிச் சென்றுள்ளது. இந்த விலையில் கூட மஞ்சளைப் பெறமுடியாத நிலை உள்ளதாலேயே இலங்கையில் இப்போது ”மஞ்சள் மாபியா ” உருவாகியுள்ளது. இலங்கையில் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் மாபியா, மணல் கடத்தல் மாபியா ,அரிசி மாபியா,மின்சார மாபியா என பல மாபியாக்கள் கடத்தல்களிலும் பதுக்கல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டுள்ள நிலையில்தான் தற்போது இந்த ”மஞ்சள் மாபியா’வும் தலைதூக்கி கடத்தல்களிலும் பதுக்கல்களிலும் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் மஞ்சள் ஒரு தனிப்பயிராகவும் மற்றும் தென்னையுடன் இடைநிலைப் பயிராகவும் ஈரவலயத்திலும் இடைவெப்ப வலயத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. குருநாகல் , கம்பஹா , களுத்துறை , கண்டி, மாத்தளை, மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மஞ்சள் பிரதானமாக வளர்க்கப்படும் பயிராக உள்ளது. கறி, கலவைகள் தயாரிப்பின் போது மஞ்சள் ஒரு உள்ளீடாக பயன்படுகின்றது . மஞ்சளில் இருந்து ஒலியோரசின் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றது. இது முக்கியமாக உணவு கைத்தொழில் சுவையூட்டுவதற்காகவும் நிற மூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. அது மாத்திரமன்றி மஞ்சள் ஆடைக் கைத்தொழிலின் நிறமூட்டுவதற்காகவும் மற்றும் குறிப்பிட்ட நிறப்பூச்சுக்கள் உற்பத்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சீன மருத்துவத்திலும் மஞ்சள் ஒரு பொதுவான உள்ளீடாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் மஞ்சள் மக்களின் அன்றாட வாழ்வில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் சமய வழிபாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இதனால் மஞ்சள் இலங்கையர்களுக்கு அத்தியாவசியப் பொருளாகவே உள்ளது.

இலங்கை மக்களின் ஒரு வருடத் தேவைக்கு சுமார் 7 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுகின்றது. ஆனால் இலங்கையில் வருடமொன்றுக்கு ஆகக்கூடிய தொகையாக 1500 மெட்ரிக் தொன் மஞ்சள் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றது. மிகுதி 5 400 மெட்ரிக் தொன்னுக்கு மேற்பட்ட மஞ்சள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் தான் கடந்த வருட இறுதியில், உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் இறக்குமதிக்கு அரசு தடை விதித்ததாலேயே மஞ்சள் கட்டிக்கு,தூளுக்கு இலங்கை சந்தைகளில் தட்டுப்பாடு ஏற்படத்தொடங்கியதுடன் இந்த தட்டுப்பாட்டை கொரோன வைரஸ் தாக்கம் மேலும் தீவிரப்படுத்தியது.

TURMERIC-1-1024x639.jpgஇலங்கையில் உளுந்து, பருப்பு, பயறு, கடலை, சோளம்,மஞ்சள் போன்ற சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றின் விலைகள் குறைவாக இருப்பதனாலும் கால நிலை மாற்றத்தினால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் காரணமாகவும் பலர் இந்த சிறுதானிய செய்கையில் ஆர்வம் காட்டாத நிலையிலேயே அயல் நாடான இந்தியாவிலிருந்து உளுந்து, பருப்பு, பயறு, கடலை, சோளம்,மஞ்சள் போன்ற சிறுதானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே தேசிய உற்பத்தி விவசாயிகளைப் பாதுகாப்பதன் நோக்கமாக மஞ்சள் உள்ளிட்ட சிறுதானியங்கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்த நிலையில் 400 ரூபாவுக்கு விற்ற மஞ்சள் 7000 ரூபாவுக்கும் ஒரு கிலோ உளுந்து 1400 ரூபாவுக்கும் அதேபோன்று ஏனைய சிறு தானியங்கள் ஏற்கனவே இருந்த விலைகளை விட பன்மடங்கு அதிகரித்த விலையிலும் விற்கப்படுகின்றன.

இதில் மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாட்டையும் அதற்கான மிகப்பெரிய விலையையும் கருத்தில் கொண்டே தற்போது மஞ்சள் கடத்தல்கள், கலப்படங்கள், பதுக்கல்கள் அதிகரித்துள்ளன. எமது அயல் நாடான இந்தியாவிலிருந்து படகுகள்மூலம் ஏற்கனவே கேரளா கஞ்சா,பீடி இலைகள் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களே கடத்தி வரப்பட்ட நிலையில் தற்போது அது குறைவடைந்து கஞ்சாவின் இடத்தை மஞ்சள் பிடித்துக்கொண்டுள்ளது. ஊடகங்களில் தினமும் வெளிவரும் மஞ்சள் கடத்தல், கைதுகள் தொடர்பான செய்திகளைப் பார்த்தால் ,படித்தால் மஞ்சள் மாபியாவின் வீரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இக்கடத்தல்கள் பெரும்பாலும் வடக்கு மாகாண கடல்வழி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மன்னர் மாவட்டத்திலுள்ள தலைமன்னார் கடல் வழியே மஞ்சள் கடத்தலுக்கான கேந்திர கடல் பாதையாக பயன்படுத்தப்படுகின்றது. அதேபோன்று புத்தளம்,சிலாபம் கடல்வழி ஊடாகவும் மஞ்சள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு கடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான கிலோ மஞ்சள் இதுவரை கடற் படையினராலும் பொலிஸாரினாலும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கொழும்பு துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக மூன்று கொள்கலன் களில் கடத்த முயற்சித்த 33,000 கிலோகிராம் மஞ்சள் தொகையுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. கண்ணாடி இறக்குமதி செய்யும் போர்வையில், சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இந்த மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

இவ்வாறான கைதுகள் தொடர்ந்தாலும் கடத்தல்களும் தொடர்கின்றன. இதேவேளை கைப்பற்றப்படும் மஞ்சள் தொகையே பல்லாயிரக்கணக்கான கிலோவைத்தாண்டுகின்றது என்றால் கடற்படையினர்,பொலிஸாரின் கண்களில் சிக்காது எத்தனை இலட்சம் கிலோ மஞ்சள் இலங்கையை வந்தடைந்திருக்கும்?இவ்வாறு கடத்திவரப்பட்டபோது கைப்பற்றப்பட்ட மஞ்சளை அரசு சந்தைக்கு விட்டிருந்தால் கூட மஞ்சள் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு நீக்கியிருக்க முடியும்.

இதேவேளை மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி மஞ்சளில் கலப்படம் செய்யும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. மஞ்சளுக்கு பதிலாக, கோதுமை மா மற்றும் மஞ்சள் நிற நிறப்பூச்சுகளை பயன்படுத்தி போலி மஞ்சள் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் இது தொடர்பில் சில நடவடிக்கைகளை எடுத்தாலும் போலி மஞ்சள் விற்பனை சந்தைகளில் தொடர்ந்தும் காணப்படுவதுடன் அத்தனையும் பெரும் விலை கொடுத்தே வாங்கும் நுகர்வோர் அதனைப்பயன்படுத்தி விட்டு நோய்களுக்கும் ஆளாக வேண்டிய நிலைமையே உள்ளது.

அரசிடம் நுகர்வோரைப் பாதுகாக்கும் கட்டமைப்புகள் பல இருக்கின்றன. விலைகளைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைகளும் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு கிலோ மஞ்சளுக்கான கட்டுப்பாட்டு விலையாக 750 ரூபாவை அரசு வர்த்தமானியில் பிரசுரித்துள்ளபோதும் ஒரு கிலோ மஞ்சள் 7000 ரூபா வரையில் கறுப்பு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் மஞ்சளை தொகையாக விற்காது ஹெரோயின் பொதிகளைப்போல் 20 கிராம்,50 கிராம் 100கிராம் என சிறு சிறு பொதிகளாக விற்பனை செய்யும் தந்திரம் வர்த்தகர்களினால் கடைப்பிடிக்கப்படுகின்றது. அதேவேளை பெரிய வர்த்தக நிலையங்கள் தங்களிடம் குறிப்பிட்ட பெறுமதிக்கு மேல் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு மட்டும் சிறிதளவு மஞ்சளை அதுவும் அதிக விலைக்கே வழங்கும் முறையைப் பின்பற்றுகின்றன.

அரசு மஞ்சளுக்கான கட்டுப்பாட்டு விலையாக 750 ரூபாவை நிர்ணயித்துள்ள நிலையில் இந்த கட்டுப்பாட்டு விலைக்கு மஞ்சளை தட்டுபாடின்றிப் பெற்றுக்கொடுப்பதே அரசின் பொறுப்பு. ஆனால் அரசு அந்தப்பொறுப்பிலிருந்து தவறியுள்ளமையே தற்போது மஞ்சளுக்கான தடுப்பாட்டையும் விலை உயர்வையும் கறுப்புச் சந்தையையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே நுகர்வோரின் குற்றச்சாட்டாகவுள்ளது. அத்துடன் மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்க முன்னர் இலங்கையில் மஞ்சள் உற்பத்தியை அரசு ஊக்குவித்திருக்க வேண்டும்.இலங்கை மக்களின் ஒரு வருட தேவைக்கு சுமார் 7 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படும் போது 1500 மெட்ரிக் தொன் மஞ்சள் மட்டுமே இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நிலையில் மஞ்சள் இறக்குமதியை அரசு தடை செய்தமை மிகப்பெரும் தவறு என்பது சில பொருளாதார நிபுணர்களின் கருத்தாகவுள்ளது.

இலங்கையின் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற அரசின் கருத்தும் அது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகளும் நியாயமானவை. ஏனெனில் உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டால் தான் நாட்டின் தேசிய உற்பத்தி அதிகரிக்கும்.அத்துடன் உள்ளூர் உற்பத்தியாளர்களும் நன்மை அடைவார்கள் . ஆனால், இவ்வாறான அத்தியாவசியப்பொருட்களுக்கான இறக்குமதிகளைத் தடை செய்யும் போது அதற்கு ஈடுகொடுக்கும்வகையில் உள்ளூர் உற்பத்திகள் உள்ளனவா என்ற நடைமுறைச் சாத்தியங்களை ஆராய வேண்டும் .

இலங்கையில் மஞ்சள் மார்ச்- ஏப்ரல் மாதங்களிலேயே பயிரிடப்படும். அதனை அறுவடை செய்ய 8 தொடக்கம் 10 மாதங்கள் தேவை ,ஆக கடந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களில் பயிரிடப்பட்ட மஞ்சள் எதிர்வரும் டிசம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் தான் அறுவடை செய்யப்படும். அத்துடன் தற்போது பயிரிடப்பட்ட மஞ்சள் டிசம்பருக்குப் பின்னர் சந்தைக்கு வந்தாலும் கூட மஞ்சளுக்கான தட்டுப்பாடு இல்லாது போகாது. ஏனெனில் இலங்கையர்களின் வருடமொன்றுக்கான மஞ்சள்தேவை 7 900 மெட்ரிக் தொன்னாகவுள்ள நிலையில் அறுவடைசெய்யப்படுவது 1500 மெட்ரிக் தொன்தான். இது எப்படி இலங்கையில் மஞ்சளுக்கான தட்டுப்பாட்டை நீக்கும்?

எனவே இலங்கையிலுள்ள சிறு தொகை மஞ்சள் உற்பத்தியாளர்களின் நன்மைக்காக அரசினால் எந்தவித முன் யோசனையுமின்றி,ஆய்வுகளுமின்றி மஞ்சள் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் இலங்கையில் இந்த மஞ்சள் உற்பத்தியாளர்கள் நன்மையடையப்போவதில்லை. மாறாக மஞ்சள் இறக்குமதி செய்யும் பெருமுதலாளிகளும் அவ்வாறு இறக்குமதி செய்த மஞ்சளை பதுக்கி வைத்திருக்கும் கறுப்புச்சந்தை வர்த்தகர்களும் மஞ்சள் மாபியாக்களும் மஞ்சள் கடத்தல்காரர்களுமே பெரும் நன்மையடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் மஞ்சளுக்கான இந்த இறக்குமதித் தடையை 2 ஆண்டுகளுக்கு நீக்கப் போவதில்லை என்று பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறியிருக்கிறார்.அதேவேளை 2021ஆம் ஆண்டிற்குள் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என்று விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சுப ஹீன்கெந்த தெரிவித்துள்ளார். எனினும் இலங்கையில் மஞ்சள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பெரிதாக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுத்ததைக் காண முடியவில்லை

ஆகவே இலங்கையில் மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் அதன் அதிகரித்த விலையும் மஞ்சள் கடத்தல்களும் மஞ்சள் பதுக்கல்களும் மஞ்சள் கறுப்புச் சந்தைகளும் தற்போதைக்கு குறைவடையும் சாத்தியமில்லை என்பதனையே பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவினதும் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினதும் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

 

https://thinakkural.lk/article/77218

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.