Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா?

Featured Replies

இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா?

  • கேணல் ஆர் ஹரிஹரன்

hariharan.jpgபிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகிய இருவரும், நவம்பர் 17ந் தேதி ரஷ்யாவின் தலைமையில் நடக்கவிருக்கும் ப்ரிக்ஸ் என்ற நான்கு நாடுகள் (பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தெற்கு ஆப்ரிக்கா) கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பின் போது நேரடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

அந்த சந்திப்பு, விடியோவில் நிகழும் மெய்நிகர் (virtual) பேச்சுவார்த்தையானாலும், லடாக்கில் ஜூன் 15-ந் தேதி கல்வான் தாக்குதலுக்கு பிறகு, முதன் முதலாக இரு தலைவர்களும் நடத்தும் நேரடி பேச்சு வார்த்தையாகும். இருவரும் ஏற்கனவே, கடந்த ஆறு ஆண்டுகளில் 18 முறை சந்தித்துள்ளார்கள். ஆகவே இருவரும் மற்றவர் மனநிலையை ஓரளவு புரிந்து கொண்டு அதற்கேற்ற உத்தியுடன் செயல்படுவார்கள் என நம்பலாம்.

ஆகவே, இந்தப் பேச்சு வார்த்தை எந்த மட்டில் வெற்றி பெரும் என்பதை, சந்திப்புக்கு முன்னால் இரு நாடுகளும் முன்னெடுக்கும் நல்லிணக்கத்துக்கான அறிகுறிகளைக் கொண்டு கணிக்கலாம்.

அப்படிப் பார்த்தால், கடந்த மாதம் ரஷ்யாவின் தலைமையில் “ப்ரிக்ஸ்” நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திப்பில் இந்திய-சீன பதட்ட நிலையை குறைக்க ஐந்து அம்ச அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டது, ஒரு நல்ல முயற்சி என்று கருதலாம். அதற்கு இரு நாடுகளும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்ட என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுவரை அதை செயலாக்க அறிகுறிகள் கண்ணுக்கு எட்டவில்லை என்பது யதார்த்தம்.

1-3-4.jpgஆகவே, நடக்கப் போகும் சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புகைச்சலைத் தீர்த்து, உறவின் வருங்காலத்தை நிர்ணயிக்க கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுமா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுவது எளிதல்ல. ஏனெனில், இரு நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சினை எல்லையைக் கடந்து தேசிய மானப் பிரச்சினையாக கருதுகின்றனர். இந்தியா ஜனநாயக நாடு ஆகவே மக்களின் உணர்ச்சிகளையே அதன் வெளியுறவு பிரதிபலிக்கிறது. அதை மனதில் கொண்டே, பிரதமர் மோடி செயல்பட முடியும்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைவராக கருதப்படும் ஷீ ஜின்பிங் தனது இச்சைப் படி முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர். அதற்கு ஆதரவாக செயல்பட, கட்சியின் மத்தியத் தலைமையில் பல மாற்றங்களை ஏற்கனவே மேற்கொண்டவர். ஆகவே அவருக்கு, பிரதமர் மோடியை விட, முடிவெடுக்கும் சுதந்திரம் அதிகமாக உள்ளது. இருந்தாலும், உலக அளவில் அவர் எடுத்த பல நிலைப்பாடுகள், முக்கியமாக கோவிட் வைரஸ் காய்ச்சல் பிரச்சினை, மற்றும் பெரும் பொருளாதார பின்னடைவு, தென் சீனக் கடலில் சீனப்படைகள் காட்டிவரும் அழுத்தம், ஹாங்காங் மற்றும் தைவான் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பதட்டமான சூழ்நிலை ஆகியவை, சீனாவுக்கும், ஷீயின் தலைமைக்கும் உலக அளவில் பெரும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அவர் பொதுமக்களின் தேசிய உணர்வுக்கு எதிரான முடிவை ஏன் எடுக்க வேண்டும்?

இரு தலைவர்களும் கடைசியாக மார்ச் 26ந் தேதி சவுதி அரேபியா தலைமையில் நடந்த ஜி-20 என்ற 20 நாடுகளின் கூட்டமைப்பின் மெய்நிகர்(virtual) சந்திப்பில் பங்கேற்றனர். இரு தலைவர்களும் இதே கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நவம்பர் 21-22, நடக்கும் போது மீண்டும் சந்திப்பார்கள். ஆனால், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அவர்கள் உயர் மட்ட சந்திப்பு நடந்து முடிந்திருக்கும்.

இந்திய சீன உறவில் ஏற்பட்டுள்ள மாபெரும் திருப்பத்தை, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் செப்டம்பர் 15 அன்று நிகழ்த்திய தனது பேச்சில் தெளிவாக எடுத்துக் கூறினார். அதன்படி, சீனா லடாக் எல்லையில் எடுத்துள்ள ஆக்கிரமிப்பு முயற்சிகளை கைவிடும் வரை, இந்தியா அவற்றை நீக்க எடுத்துள்ள ராணுவ முயற்சிகளில் மாற்றம் இருக்காது என்று கூறினார்.

அவர் அண்மையில் மாஸ்கோவில் எஸ். சீ. ஓ என்று அழைக்கப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகள் சந்திப்பின் போதும் இதே நிலைப்பாட்டை சீன பாதுகாப்பு மந்திரியிடம் எடுத்துச் சொன்னார்.

அதன் பிறகு, எஸ். சி. ஓ தொடர்பான வெளியுறவு மந்திரிகள் சந்திப்பின்போது, இந்தியாவின் ஜெய்சங்கர் சீனாவின் வாங்-யீ இருவரும் செப்டம்பர் 10ம் தேதியன்று நேரடி பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து வெளியிட்டிருந்த அறிக்கையில் இரு நாடுகளும் நேருக்கு நேராக நிற்கும் படைகளை விலக்கி, பதட்ட நிலையை குறைக்க வேண்டும் என்பதை ஒப்புக் கண்டதாக கூறியுள்ளனர். ஆனால், அதற்கான கால அட்டவணையோ, அல்லது அடுத்த கட்ட நடவடிக்கையோ அவர்கள் குறிப்பிடவில்லை.

இந்தியாவின் சீன உறவின் அணுகு முறையில், இந்தியா முன்னெப்போதும் இல்லாத மனோதிடத்தோடு செயல்படுவதை இந்த நிலைப்பாடு காட்டுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், லடாக் பகுதியில் நமது ராணுவம் ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் பங்காங்ட்ஸோ ஏரியின் வடக்கு, மற்றும் தெற்கே, உள்ள மலைப் பகுதிகளில் உள்ள சிகரங்களை கைப்பற்றி கைலாஷ் மலைத்தொடர் தமது ஆளுமையில் கொண்டு வந்துள்ளதே ஆகும். இன்னமும் டெப்ஸாங் பள்ளத்தாக்கில் சீனப் படை நடமாட்டம் இருந்தாலும், அவர்கள் மீது தேவையான போது எதிர்மறைத் தாக்குதல் நடத்தும் திறன் நம் கையில் மட்டுமே உள்ளது.

ஆகவேதான், மோடி-ஷீ பேச்சுவார்த்தை நவம்பர் மாத்தில் நடக்கப் போகும் செய்தி வெளியாவதற்கு முன்பே, சீன வெளியுறவுத் துறை சீன மொழியில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “முதலாவதாக, சீன-இந்திய ஆதிக்க எல்லைக் கோடு (Line of Actual Control) நவம்பர் 7, 1959 இருந்ததே என்பதில் (நாங்கள்) தெளிவாக இருக்கிறோம். இதை 1950ம் ஆண்டே சீனா உலக நாடுகளுக்கு அறிவித்தது, இந்தியாவுக்கும் தெரியும்” என்று கூறியுள்ளது. மேலும், இந்தியா இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து, இந்த எல்லைக் கோட்டைத் தாண்டி சீனாவுக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், படைகளைக் குவித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை விலக்கி படைகளை பின்வாங்கினால் மட்டுமே சுமுக நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளது.

இந்த 1959 நவம்பர் எல்லை நிலைப்பாட்டை, இந்தியா அப்போது பிரதமராயிருந்த நேருவின் காலத்திலிருந்து தொடர்ந்து இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி இருந்தும், 61 ஆண்டுகளுக்கு பின்பு, ஏன் நவம்பர் 1959 எல்லைக் கோட்டை சீனா உயிர்ப்பித்துள்ளது என்பதே கேள்வி. இந்த வரைபடத்தை, சீனப் பிரதமராக இருந்த சூ என்-லே பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் இணைத்து, அமைதி நிலவ இரு நாடுகளும் இந்த எல்லைக் கோட்டிலிருந்து 20 கி. மீ. பின் வாங்கி நிறுத்தப்படலாம் என்று யோசனை கூறினார். அந்தக் கருத்தை பிரதமர் நேரு முழுமையாக நிராகரித்தார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பிரசுரித்துள்ள கருத்தின் படி, இந்த எல்லைக் கோட்டில் அடங்கியுள்ள 12 வேறுபாடுள்ள இடங்களில், சமர் லுங்பா, டெம்சோக், சூமார் உள்ளிட்ட ஆறு இடங்களை சீனா ஆக்கிரமிக்க முயற்சிக்கலாம் என்று ராணுவம் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது. இந்தப் பிரச்சினை லடாக் எல்லையில் தீரவேண்டுமானால், இரு தரப்பு நிபுணர்கள் லடாக் எல்லை பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொண்டபடி சீனா சீரான வரைபடங்களை அளிக்க வேண்டும். அதன்படி இரு தரப்பும் முடிவெடுக்க அது உதவும்.

ஆனால் சீனாவின் மீது மோடி அரசு வைத்திருந்த நம்பிக்கையை, தற்போது இழந்துவிட்டது. இதற்கு, கடந்த ஜூலை மாதம் லடாக்கில் கல்வான் பகுதியில் எதிர்பாராத விதமாக சீனப்படைகளுடன் நடந்த கைகலப்பில் கர்னல் பாபு உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட சம்பவம், ஒரு பெரிய காரணம் என்று கூறலாம். ஏனெனில், 1962-ல் நடந்த இந்திய சீனப் போருக்குப் பின்பு, இந்திய-சீன உறவில் சீனாவின் கைதான் ஓங்கி இருந்தது. அதனால் அவ்வப்போது சீனா காட்டிய உதாசீனங்களையும், அத்து மீறல்களையும் இந்தியா பொறுமையுடன் சுமூகமான உறவுக்காக ஜீரணித்து வந்தது. ஆனால், சீனா பேச்சுவார்த்தையில் படைகளைப் பின்னெடுக்க ஒப்புக்கொண்ட பின்பும், கல்வான் பகுதியில் உயிர் சேதம் ஏற்படுத்திய செயல், இந்தியாவின் தன்மான உணர்ச்சியை தட்டி எழுப்பியுள்ளது.

ஆகவே இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை மீட்டெடுக்க, சீனா என்ன முயற்சிகளை எதிர் கொள்கிறது என்பதே பேச்சுவார்த்தைகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். ஏனெனில், ஜனநாயக நாடான இந்தியாவில் தலைவர்கள் முடிவுகள் மட்டுமே வெளியுற நிர்ணயிப்பதில்லை. ஆகவே, மோடி-ஷீ நவம்பர் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தால் போதாது. ஆக்கப் பூர்வமான என்ன முடிவுகளை சீனா எடுக்க தயாரா, இல்லையா, என்பதை மட்டுமே காட்டும் என நம்புகிறேன்.

https://thinakkural.lk/article/80306

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.