Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலவீனமடையும் சிறுபான்மைக் கட்சிகள்.! - நா.யோகேந்திரநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலவீனமடையும் சிறுபான்மைக் கட்சிகள்.! - நா.யோகேந்திரநாதன்

Screenshot-2020-11-04-11-05-21-462-org-m

கடந்த சில வாரங்களாகக் கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டதுடன் உயர் நீதிமன்றம் வரைச்சென்று திருத்தங்களுடன் நிறைவேற்ற அனுமதியும் பெற்ற 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. காரசாரமான விவாதங்களின் பின் ஆதரவாக 156 வாக்குகளையும் எதிராக 65 வாக்குகளையும் பெற்று தேவைப்பட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமான வாக்குகளையும் பெற்று நிறைவேற்றப்பட்டது.

இத்திருத்தச் சட்டம் நிறைவேறுமென்பது ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் கூட இவ்வளவு அதிகப்படியான வாக்குகளைப் பெறும் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அதாவது இச்சட்டம் நிறைவேற எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இச்சட்டத்திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டற்ற விதத்தில் அதிகரிக்கப்படுமெனவும் ஏற்கனவே இராணுவ மயப்படுத்தப்பட்டுவரும் அரசியல் அதிகாரம் இதன் மூலம் இராணுவ சர்வாதிகாரமாக உருவாக்கப்பட்டு விடுமெனவும் பல தரப்பினராலும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட விதமும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைமைகளை மீறி அச்சட்டத்துக்கு ஆதரவளித்தமையும் இன்னுமொரு பேராபத்துக்கும் வாய்ப்புகளை உருவாக்கி விட்டதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீன், தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் இச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்த நிலையிலும் அவற்றின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் ஆதரவாக வாக்களித்து இச்சட்டம் நிறைவேறத் தோள் கொடுத்துள்ளனர்.

20வது திருத்தச் சட்டம் நிறைவேறி ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் சிறுபான்மை மக்களின் கட்சிகளுக்குள் சில குழப்பங்கள் ஆரம்பமாகியுள்ளன. அதன் அறிகுறியாக மலையக மக்கள் முன்னணி பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குள் ஒரு அப்படியான நிலைமைகள் உருவாகும் வாய்ப்புக்கள் உண்டு. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசியதுடன் அவர்களிடம் விளக்கம் கோரப்படுமெனவும், அவ்விளக்கங்களின் அடிப்படையில் அவர்கள் மீது கட்சியின் தலைமைப்பீடம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமெனவும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் தற்சமயம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் உள்ள நிலையில் அக்கட்சி சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

அதேவேளையில் கடந்த பல மாதங்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ரிசாட்டின் சகோதரர் திடீரென விடுவிக்கப்பட்டமைக்கு அரச தரப்புக்கும் ரிசாட் பதியுதீனுக்குமிடையே ஏற்பட்ட இரகசிய உடன்பாடே காரணமெனச் சிங்களக் கடும் போக்குவாதிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வந்தனர்.

எனினும் ரிசாட் பதியுதீன் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் ஆறு சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மூலமாக ஒரு கொடிய பயங்கரவாதியைத் தேடுவது போன்ற பரபரப்புடன் தேடப்பட்ட முறையும் அவர் கைது செய்யப்பட்ட விதமும் சிங்களக் கடும் போக்குவாதிகளை அமைதிப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

எனினும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பிணையில் வெளிவர முடியாதது அல்ல என்பதால் அவர் விரைவில் சிறையில் விடுவிக்கப்படவும் கூடும். அப்படி அவர் வெளியே வந்த பின்பு சட்டத்துக்கு ஆதரவளித்த அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது அவரும் அவர்களின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளும் நிலை தோன்றுமா? என்ற கேள்விக்கான விடையை இப்போது ஊகிப்பது சாத்தியமில்லை.

எப்படியிருந்த போதிலும் இந்த மூன்று கட்சிகளும் 20வது திருத்தச் சட்ட நிறைவேற்றத்தின் மூலம் புதிய நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சியான மலையக மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஆரம்பப் பணிகளைத் தொடங்கிவிட்டது. அக்கட்சி தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவும் நிலை நிறுத்தவும் இப்படியான நடவடிக்கை தவிர்க்கமுடியாததாகும்.

மலையகக் கட்சிகள் தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்டே கட்டியமைக்கப்பட்டவை. அவ்வகையில் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர்கள் பணியாற்றும் தொழிங்சங்கக் கிளைகள் மத்தியில் செல்வாக்கு உண்டு. அவ்வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னாலும் சில கிளைகள் இருக்கும்.

எனவே மலையக மக்கள் முன்னணி அரவிந்தகுமார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அதாவது அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டால் அல்லது தானாக வெளியேறினால் அவரின் செல்வாக்குக்கு உட்பட்ட கிளைகள் அவருடன் சேர்ந்து வெளியேற வேண்டிவரும். அவர் அப்படி வெளியேறும்போது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மூலம் அவருக்கு வலை போட்டு நிரந்தரமாகவே அவரைத் தமது ஆதரவு சக்தியாக்கிக் கொள்ளமுடியும். அதனால் மலையக மக்கள் முன்னணி பலவீனமடையும். அப்படியான ஒரு நிலைமையில் தமிழ் முற்போக்கு முன்னணியின் பலத்திலும் பாதிப்பு ஏற்படவே செய்யும்.

அதேவேளையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அதன் தலைவர்கள் 20வது திருத்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்த போதிலும் அக்கட்சிகளின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைத் ஆதரித்தே வாக்களித்தனர். அதாவது அக்கட்சிகளின் தலைவர்கள் அவற்றின் நாடாளுமன்றக் குழுக்களில் தனிமைப் படுத்தப்படடுள்ளனர். இந்த நிலையில் அவர்களால் அந்தக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை எடுக்கமுடியுமா என்ற ஒரு கேள்வியும் உண்டு.

தற்சமயம் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கும் முன்னால் இரு வழிகள் உண்டு. ஒன்றில் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது அவர்களின் பாதையில் தலைவர்களும் செல்லவேண்டும். இந்த இரண்டில் ஒன்றை அவர்கள் தெரிவு செய்தேயாக வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அரச தரப்பினர் இனவாதத்தை ஆயுதமாகக் கொண்டே பெரும் வெற்றியை ஈட்டினர். ஜனாதிபதித் தேர்தலில் கடும்போக்குவாதிகள் ரிசாட் பதியுதீனை இலக்கு வைத்தே பெரும் இயங்கங்களை நடத்தினர். அவர்கள் ரவூப் ஹக்கீமையும் விட்டு வைக்கவில்லை.

எனவே அவர்கள் இருவரையும் அரசு தரப்பு இணைக்குமானால் சிங்களக் கடும் போக்காளர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிவரும். அதேவேளையில் இவ்விரு கட்சிகளும் ராஜபக்ஷ தரப்பை எதிர்த்தே கடந்த தேர்தல்களின் போது கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். பொதுசன பெரமுனவுக்கு எதிரானவர்களே இவர்களுக்கு வாக்களித்தனர்.

எனவே இவ்விரு தலைவர்களும் அரசாங்கத்துடன் இணையும் சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது. இன்னொருபுறம் 20வது சட்டத்துக்கு ஆதரவளித்த தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதுவும் கூட பாதகமான விளைவையே ஏற்படுத்தும். அக்கட்சி நியமன உறுப்பினராக அல்சப்ரி நியமிக்கப்பட்டுப் பின் நிதி அமைச்சராக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு நீண்ட கால நோக்குடைய ஒரு நிகழ்ச்சித்திட்டம் நிச்சயமாக வகுக்கப்பட்டிருக்கும்.

அதாவது முஸ்லிம்கள் மத்தியில் ராஜபக்ஷக்களுக்கு விசுவாசமான ஒரு முஸ்லிம் மாற்று அணியை உருவாக்குவதே அதுவாகும். அந்த நிலையில் நிலையில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அப்படியான ஒரு அணியை உருவாக்குவதில் பங்காளிகளாக அமையலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் எப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கட்சிகள் சிதைவடையும் அல்லது பலவீனமடையும் நிலை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகும்.

எப்படியிருந்த போதிலும் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ராஜபக்ஷக்களின் குடும்ப சர்வாதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டதுடன் சிறுபான்மை மக்களுக்குத் தலைமை தாங்கும் கட்சிகள் பலவீனமடையும் நிலையும் உருவாகி விட்டது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இவற்றின் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தின் கட்டற்ற சர்வாதிகாரமும் சிறுபான்மை இனங்கள் மீதான வரையறையற்ற ஒடுக்கு முறைகளும் தங்குதடையின்றி தொடரப்படுவதற்கான ஒரு புறச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதை புரிந்து கொள்ளமுடிகிறது.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

http://aruvi.com/article/tam/2020/11/03/18801/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.