Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா, பிகார்: தேர்தல்களை காப்பாற்றுவது எப்படி? - ராஜன் குறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: அமெரிக்கா, பிகார்: தேர்தல்களை காப்பாற்றுவது எப்படி?

spacer.png

 

ராஜன் குறை 

உண்மையான சமூக மாற்றத்தில் அக்கறைகொண்ட பலர் தேர்தல்களை அதற்கு போதுமான வழிமுறை என்று நம்பியதில்லை. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் சமூக நீதி காவலர், மாபெரும் புரட்சிகர சிந்தையாளர் பெரியார் தேர்தலில் போட்டியிட்டதில்லை. அவருடைய கட்சி அமைப்பான திராவிடர் கழகமும் போட்டியிட்டதில்லை. தேர்தலில் ஈடுபடும் கட்சிகளை, வேட்பாளர்களை ஆதரித்து பேசியுள்ளாரே தவிர அவராக போட்டியிட நினைத்ததில்லை. காரணம் அவர் சமூக மனோவியலை மாற்றுவதற்கே முன்னுரிமை கொடுத்தார் என்பதுதான்.

அதேபோல சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை புரட்சியின் மூலம் முற்றாக அகற்ற விரும்பிய மார்க்சீய லெனினீய அமைப்புகளும் தேர்தலை வெறுத்தன. எண்பதுகளில் “தேர்தல் பாதை திருடர் பாதை” “பாராளுமன்றம் பன்றிகள் தொழுவம்” என்றெல்லாம் மா-லெ அமைப்புகள் சுவர்களில் எழுதிவைப்பார்கள்.

ஆனால் சமீபத்தில் நடந்த பிகார் தேர்தலில் மா-லெ கட்சி ஒன்று தேஜஸ்வி தலைமையிலான கூட்டணியில் , பத்தொன்பது தொகுதிகளில் போட்டியிட்டு பன்னிரெண்டு தொகுதிகளில் வென்றுள்ளது. பல கட்சிகளும் துவக்கத்தில் நாங்கள் தேர்தலில் ஈடுபடமாட்டோம், சமூக மாற்றமே இலட்சியம் என்பதும் பின்னர் தேர்தலில் ஈடுபடுவதும் காணக்கூடியது. பாட்டாளி மக்கள் கட்சி ஒரு விபரீதமான உதாரணம். தேர்தலில் ஈடுபடும் கட்சிகளை “ஓட்டுப் பொறுக்கி கட்சிகள்” என்று வர்ணித்தவர் மருத்துவர் ராமதாஸ். ஆனால் பின்னாளில் தேர்தல் கூட்டணி பேரங்களுக்கு பேர்போன கட்சியாக மாறியது அந்த கட்சி; கிட்டத்தட்ட ஏலம் போடுவதுபோல கூட்டணி சேர்வதை மாற்றியது அந்த கட்சி. இதனால் வன்னியர் நலன் சார்ந்த கட்சி என்பதைவிட, தலித் விரோத கட்சியாகவே தன்னை தக்கவைத்துக்கொள்ளும் நிலையில் உள்ளது.

தேர்தலின் பிரச்சினைகள் என்ன? 

அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி தேர்தலின் முக்கிய பிரச்சினை ஓட்டுப்போட உரிமையுள்ள அனைத்து மக்களும் அரசியல் பிரச்சினைகளை குறித்து படித்தறிய, சிந்தித்து புரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்பதுதான். மேலும் எளிய மனிதர்கள் பழக்க, வழக்கங்களை மாற்றிக்கொள்ள அஞ்சுபவர்களாக இருப்பதும் நடைமுறை. இது சமூக மாற்றத்தை விரும்புபவர்களுக்கு பெரும் சவாலாக மாறும். உதாரணமாக பாமர மக்கள், வறியவர்கள் பெரும்பாலும் இறை நம்பிக்கை உள்ளவர்களாகவும், தங்கள் சமூக அடையாளம் சார்ந்த பிற்போக்கு பார்வைகளை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு எளிய வெள்ளையரான அமெரிக்க தொழிலாளி தம்மை வஞ்சிப்பது பெருந்தனவந்தர்களும், கார்ப்பரேட்களும்தான் என்று புரிந்துகொள்வதைவிட கறுப்பர்களும், புலம்பெயர் தொழிலாளர்களுமே தமக்கு எதிரிகள் என்று நம்பத் தலைபடுகிறார்.

அதேபோல இந்திய ஜாதி அமைப்பில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான தொழிலாளிகள், விவசாயிகள் ஆகியோரை சுரண்டும் சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைப்பதைவிட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அவர்களைவிட ஜாதிபடிநிலையில் கீழே இருப்பவர்களுக்கு எதிராக ஒருங்கிணைப்பது சாத்தியமாகிறது (இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயணம் காட்டுகிறது). இதுவே எதிர்புரட்சி மனோபாவம்.

இந்த நிலையில் மாற்றத்தை விரும்பாத, status-quoist என்று சொல்லக்கூடிய பிற்போக்கு சக்திகள் ஒருபுறமும், மாற்றத்தை விரும்பும், சமூக நீதியில் அக்கறையுள்ள முற்போக்கு சக்திகள் ஒருபுறமும் தேர்தல் களங்களில் எதிர்நிற்கின்றன. ஆனால் வாக்காளர்கள் முன்னால் அவர்கள் வைக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கின்றன. பிற்போக்கு சக்திகள் இனவாத, மதவாத, அடையாளவாத தேசியத்தை முன்வைக்கின்றன. முற்போக்கு சக்திகள் சமூக நீதி கோரிக்கைகளை முன்வைக்கின்றன. பழக்க வழக்கங்களில் சிக்கிய மக்களை தங்களை நோக்கி ஈர்க்க முற்போக்கு சக்திகளும் பல சமரசங்களை செய்து கொள்ள வேண்டியதாகத்தான் தேர்தல் களத்தில் நடக்கும். இந்த சமரச பிரச்சினையால் முற்போக்கு சக்திகளிடம் இருந்து விலக்கம் கொள்ளும் சிறிய கட்சிகள், அமைப்புகள் மூன்றாவது அணியாக மாறுவது பல சமயங்களில் பிற்போக்காளர்களுக்கே உதவுவதாக கருதப்படுகிறது.

உதாரணமாக 2000 ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரால்ஃப் நாடெர் என்ற செயல்பாட்டாளர் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லி மூன்றாவது வேட்பாளராக போட்டியிட்டார். அவர் முற்போக்கு ஓட்டுக்களை பிரித்ததால் சொற்ப எண்ணிக்கையில் ஜனநாயகக் கட்சி அல்-கோர் தோற்று ஜார்ஜ் புஷ் அதிபரானார். ஆஃப்கன் போர், இராக் போர் என்று அடுத்த எட்டாண்டுகளில் நடந்த பல பிரச்சினைகள் அல்-கோர் அதிபராயிருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ரால்ஃப் நாடார் செய்தது சரியா என்ற கேள்வி இன்றும் அமெரிக்காவில் விவாதிக்கப்படுகிறது.

அதுபோலவே தமிழகத்தில் சென்ற 2016 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் முன்முயற்சியில் மூன்றாவது அணி அமைந்தது ஓட்டுக்களை பிரித்ததால் தி.மு.க வெற்றிக்கோட்டை கடக்க முடியாமல் போனதாக கருதப்படுகிறது. அதனால் கடந்த நான்காண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியின் பினாமி ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி மூலமாக தமிழகத்தில் நடக்கிறது எனலாம். இப்போது நடந்த பிகார் தேர்தலில் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி இஸ்லாமியர் ஓட்டுக்களை பிரித்ததால் தேஜஸ்வி வெற்றி வாய்ப்பை இழந்து, பாஜக முன்னிலை பெற்றதாக விமர்சிக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் தொகுத்துக்கொண்டால் நாம் புரிந்துகொள்ளக்கூடியது: பொருளாதார வளர்ச்சியே வரலாற்றின், அரசியலின் நோக்கம் என்று சுருங்கிவிட்டதால் கருத்தியல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அதனால் பிற்போக்கு அடையாளவாத அணிக்கும், முற்போக்கு சமூக நீதி அணிக்குமான வாக்குவித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கிறது. எந்த மூன்றாவது அணியும் மாற்றத்திற்கான வாக்குகளை பிரிப்பதால் பிற்போக்கு அணிக்குதான் வாய்ப்பு அதிகரிக்கிறது.

 

தேர்தல்களின் விளைவுகள் என்ன?

இப்படி மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அமையும் ஆட்சிகள் தங்களிடம் குவிந்துள்ள அதிகாரத்தினால் மிக மோசமான ,வெளிப்படையான மற்றும் மறைமுகமான, விளைவுகளை தோற்றுவித்துவிடுகின்றன. அமெரிக்காவில் அமையும் ஆட்சி சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் அமையும் ஆட்சிகள் பல்வேறு ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியாத தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தங்களை பாதிக்கும் விஷயங்களுக்கான காரணங்கள் என்ன, அதற்கும் ஆட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை கூட எல்லா நேரங்களிலும் மக்கள் அறிந்திருப்பதில்லை. சிந்தனையாளர்களோ இலட்சியவாத நோக்கில் எல்லா கட்சியும் ஒன்றுதான், எல்லா ஆட்சியும் ஒன்றுதான் என்று பொறுப்பில்லாமல் பேசி விடுகிறார்கள்.

ஓவைசி முஸ்லிம்களுக்கான கட்சி நடத்தலாமா, தேர்தலில் தனித்து போட்டியிடலாமா என்பதல்ல கேள்வி. அப்படி போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்து பிகாரில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியமைத்துவிட்டது. நாளை பிகாரில் பாதிக்கப்படப் போகும் முஸ்லீம் மக்களை ஓவைசி எப்படி பாதுகாப்பார் என்பதுதான் கேள்வி. குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி, குடிமக்கள் கணக்கெடுப்பை நடத்தி பல இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்ற முயற்சிக்கும் பாஜகவின் செயல்திட்டத்தை எப்படி முறியடிப்பது என்பதுதானே பிரச்சினை?

இதனால் தேர்தல்கள் எவ்வளவுதான் சமரசமாக இருந்தாலும், எவ்வளவுதான் இலட்சியங்களுக்கு பொருந்தாமல் இருந்தாலும் மிகவும் முக்கியமானவையாக மாறுகின்றன. அரசியல் கட்சிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை சிந்தனையாளர்கள் முறையாக பரிசீலிக்க கற்கவேண்டும். மக்கள் சரியான தேர்வை மேற்கொள்ள உதவ வேண்டும். அந்த நேரத்தில் நாம் சந்திக்கும் மற்றொரு பெரும் சிக்கல் தேர்தல் நிர்வாகம் சந்திக்க துவங்கியுள்ள பிரச்சினைகள்.

தேர்தல் முடிவுகள் மீதான நம்பிக்கை

மிக குறைந்த வாக்குகள் எண்ணிக்கையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது பலவிதமான ஐயப்பாடுகள் தோன்றுகின்றன. வாக்கு பதிவும், வாக்கு எண்ணிக்கையும் சரியாக நிகழ்ந்தனவா என்பது சந்தேகத்திற்கு உள்ளாகிறது. பிகாரில் தபால் ஓட்டுகளை எண்ணுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் தங்கள் கட்சி பல தொகுதிகளை இழந்திருப்பதாக தேஜஸ்வி கூறுகிறார். வாக்கு எண்ணிக்கை மிகவும் தாமதம் ஆனதே பல ஐயங்களை உருவாக்கியது. ஆனாலும் கூட தேஜஸ்வி தேர்தல் முடிவை எதிர்க்கவில்லை. கிட்டத்தட்ட சரிபாதி ஓட்டுக்களை இரண்டு அணிகளும் பெற்றுள்ளன.

அமெரிக்காவிலோ நிலைமை படு மோசமாக உள்ளது. தோல்வியடைந்த தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுக்கிறார். தேர்தல் நிர்வாகமும், ஊடகங்களும் சேர்ந்து மோசடி செய்துவிட்டன, அதனால்தான் ஜோ பைடன் வெற்றி பெற்றார் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார். அவருடைய ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. பைடன் ஆதரவாளர்களுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் வீதிகளில் மோதல்கள் நடக்கின்றன. ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள். அமைதியாகவும், நாகரீகமாகவும் நடக்கும் அதிபர் மாற்றம் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க மக்களாட்சி புதிய நெருக்கடியை சந்திக்கிறது.

ஏற்கனவே தேர்தல்கள் பொருளற்றவை, அவற்றால் சமூக மாற்றத்தை கொண்டுவர முடியாது என்பன போன்ற பார்வைகளுடன் தேர்தல் முடிவுகள் மீதானஐயமும் சேர்ந்துகொண்டால் மக்களாட்சி மேலும் பொருள் இழந்து போகும். இந்தியாவில் தல மட்டத்திலும் வலுவான சிவில் சமூக அமைப்புகள் தோன்றி நிர்வாகத்தை கண்காணிக்கும் நிலை உருவாக இன்னம் ஐம்பதாண்டுகள் ஆகும் எனலாம். அதுவரை தேர்தல்கள் மூலமாகத்தான் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்த முடியும். அந்த தேர்தலிலும் மோசடி நடக்கிறது என்று மக்கள் என்னத் துவங்கினால் மக்களாட்சியில் நம்பிக்கை இழப்பார்கள். வன்முறை பெருகும்.

 

இதனால் தேர்தலை எந்த ஐயத்திற்கும் இடமளிக்காத வகையில் நடத்துவது மிக அவசியமானது. இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது பலத்த ஐயப்பாடுகள் உள்ளன . விவிபாட் என்ற சரிபார்க்கும் சீட்டுகள் தொகுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் எண்ணப்படுவதில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னால் விவிபாட்டால் வெளியான பல வாக்கு எண்ணிக்கை முரண்பாடுகள் விசாரிக்கப் பட்டனவா, என்ன முடிவுகள் எட்டப்பட்டன என்று தெரியவில்லை.

இந்தியாவை பொருத்தவரை பழைய அச்சடிக்கப்பட்ட வாக்கு சீட்டு முறைக்கே செல்வது பொருத்தமாக இருக்கும். மின்னணு வாக்கு இயந்திரம் வேலையை சுலபமாக்கலாம்; ஆனால் மக்கள் நம்பிக்கைக்கு உலை வைத்துவிடக் கூடாது. தேர்தல் கமிஷன் தான் சொல்வதை அனைவரும் கேள்வி முறையின்றி ஏற்க வேண்டும் என நினைக்காமல், எல்லாவகையிலும் ஐயங்களுக்கு அப்பாற்பட்ட தேர்தலை நடத்த முன்வரவேண்டும். தேர்தலை காப்பதென்பது மக்களாட்சியை காப்பது. மக்கள் நலனை காப்பது.

கட்டுரையாளர் குறிப்பு:

 

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.

 

https://minnambalam.com/politics/2020/11/16/26/elections-usa-bihar-fair-and-transparent-demoratic

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.