Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர இலங்கையின் நான்காவது அரசியலமைப்பு - நா.யோகேந்திரநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர இலங்கையின் நான்காவது அரசியலமைப்பு - நா.யோகேந்திரநாதன்

Screenshot-2021-01-21-11-35-36-739-org-m

இலங்கை சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளே ஆகி விட்டநிலையிலும் இந்த நாடு மூன்று அரசியலமைப்புக்களைச் சந்தித்து விட்டது. சோல்பேரி அரசியலமைப்பின் அடிப்படையில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு 24 ஆண்டுகளின் பின்பு இரண்டாவது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து 6 வருடங்களின் பின்பு அடுத்த அரசியலமைப்பு அமுலுக்கு வந்தது. ஒவ்வொரு புதிய அரசியலமைப்புகளும் அமுலுக்கு வரும் போது நாட்டின் பொதுவான அரசியல் திசை மார்க்கத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை மறுக்கமுடியாது. நாட்டின் தேசிய அரசியல், பொருளாதாரம், சமூக உறவுகள், சர்வதேச உறவுகள் போன்ற முக்கிய விடயங்களில் ஏற்கனவே கையாண்ட கொள்கைகளிலிருந்து வெளியேறி புதிய கொள்கைகளுடன் பயணித்தமையை அவதானிக்க முடியும்.

அதேவேளையும் ஒவ்வொரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போதும் சிறுபான்மை மக்களுக்குக் குறிப்பாக தமிழ் மக்களுக்குப் பாதகமான அம்சங்கள் புதிது புதிதாக சேர்க்கப்பட்டன என்ற அம்சம் இரண்டு அரசியலமைப்புகளிலுமே காணப்படுகின்றது.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பிரித்தானிய அரசின் ஆதிக்கத்தில் இருந்தபோதே கோல்புறூக் அரசியலமைப்பு, மக்லம் சீர்திருத்தம், மனிங் சீர்திருத்தம், டொனமூர் அரசமைப்புச் சீர்திருத்தம், சோல்பேரி அரசியலமைப்பு என்பன அமுலுக்குக் கொண்டு வரப்பட்டன.

சோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் மூலம் கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என தனித்தனி அரசுகளாக ஐரோப்பியர் வருகையின் முன் விளங்கிய ஆட்சிப் பிரதேசங்கள் 1833ல் ஒரே நாடாக்கப்பட்டன. அதில் தமிழ் மக்கள் தங்கள் சுயாட்சிக்கான நிலப்பகுதியின் தனித்துவத்தை இழந்தனர். அதுமட்டுமின்றி இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டபோது தமிழர் பிரதேசம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அதன் காரணமாகத் தமிழ் மக்கள் தங்கள் ஆட்புல ஒருமையை இழந்தனர். அதாவது சோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் தமிழர்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியமையைக் கண்டு கொள்ள முடியும். அதே வேளையில் சட்டநிர்வாக சபைக்கு இனவாரியான பிரதிநிதித்துவம் என வரையறுக்கப்பட்டிருந்தது.

1910ல் கொண்டு வரப்பட்ட மக்லம் சீர்திருத்தம் மூலமோ, 1920ல் கொண்டுவரப்பட்ட மனிங் சீர்திருத்தம் மூலமோ இனவாரியான பிரதிநிதித்துவத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

1924ல் முன்வைக்கப்பட்ட டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் சிங்கள அரசியல் தலைவர்களின் அழுத்தங்களின் பேரில் இனவாரியான பிரதிநித்துவம் ஒழிக்கப்பட்டு பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் முன்வைக்கப்பட்டது. அத்துடன் இதுகாலவரை கல்விகற்ற, செல்வாக்கு உள்ள மேல் மட்டத்தினருக்கே வாக்குரிமை என்ற நிலையும் மாற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு அமுலுக்கு வந்தது. பிரதேச வாரியான பிரதிநிதித்துவத்தையும், சர்வஜன வாக்கெடுப்பையும் தமிழர் தரப்புப் பலமாக எதிர்த்தபோதிலும் அது பலனளிக்கவில்லை. சேர்.பொன்.இராமநாதன் லண்டன் வரைச் சென்று வாதாடியும் எவ்வித பலனும் கிட்டவில்லை.

1931ல் டொனமூர் அரசியலமைப்பில் இடம்பெற்ற சட்ட சபைத் தேர்தலில் 38 சிங்களவரும், 3 தமிழரும், 2 பிரித்தானியரும் இந்தியர்கள் 2 பேரும், 1 முஸ்லிமும் தெரிவு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அமைச்சரவை தனிச் சிங்கள அமைச்சரவையாக அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சுதந்திரம் பெறுமுன்னர் அமுலுக்கு வந்த அரசியலமைப்புகள் தமிழருக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திய நிலையில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கும் பொருட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கவென ஆங்கில அரசால் சோல்பேரி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்விசாரணைகளின் போது தமிழர் தரப்பின் சார்பில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களால் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதாவது அரசாங்க சபையில் சிங்களவர்களுக்கு 50 வீதமும் தமிழர் உட்பட ஏனைய சிறுபான்மையினருக்கு 50 வீதமும் பிரதிநிதித்துவம் கோரப்பட்டது.

சோல்பேரி அவர்கள் மீண்டும் இனவாரியான பிரதிநிதித்துவம் கொண்டு வரப்படுவதை விரும்பவில்லை. அவர் பிரித்தானிய வெஸ்ற் மினிஸ்ரர் வகையிலான ஒரு அரசியலமைப்பையே எதிர்பார்த்தார்.

அவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் ஐவன் ஜெனிஸ் அவர்களால் தயாரிக்கப்பட்டு டி.எஸ்.சேனாயக்கவால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு நகலை அவர் சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டார். அதில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கென 29(2) சரத்து உட்பட நாலு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. டி.எஸ்.சேனநாயக்க பலவித தந்திரங்களையும் மேற்கொண்டு ஜீ.ஜீ.பொன்னம்பலம் லண்டனில் இருந்த வேளையில் அரசாங்க சபையில் 90 வீதமான ஆதரவைப் பெற்று அதை 1945ல் நிறைவேற்றினார்.

1948ல் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது இலங்கையின் அரசியலமைப்பாக சோல்பேரி அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது.

சோல்பேரி அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கென நாலு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் சுதந்திர இலங்கையில் அவற்றால் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க முடியவில்லை.

இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டிலேயே 18வது இலக்கச் சட்டத்தி;ன் மூலம் மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1949ல் இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தின் மூலமும், 1952ல் மேற்கொள்ளப்பட்ட நேரு – கொத்தலாவலை ஒப்பந்தம் மூலமும் 6 இலட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக 1952ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழர்களின் பலம் 13ல் இருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டது. 1948 தொடக்கம் 1956 வரை ஆட்சியில் இருந்த ஐ.தே.கட்சி அரசாங்கம் ஒரு ஏகாதிபத்திய சார்பு ஆட்சியாகவும் தங்கு நிலை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டும் அமைந்திருந்தது. பிரித்தானிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தேயிலை, இறப்பர் தோட்டங்களின் உற்பத்திகளின் ஏற்றுமதி நாட்டின் பிரதான வருவாயாக அமைந்திருந்தது. விவசாய உற்பத்திப் பெருக்கம் என்ற பேரில் பல விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டு ஏராளமானோர் குடியேற்றப்பட்டனர்.

அதன் காரணமாக விவசாயிகள் தங்கள் பாரம்பரிய விவசாய முறைகளையும் கைவிட்டு இறக்குமதி செய்யப்படும் பசளை வகைகள், கிருமி நாசினிகள் என்பவற்றில் தங்கியிருக்க வேண்டிய நிலையே உருவானது.

அதுமட்டுமின்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேறும் எந்தவொரு சட்டமும் பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியான மகாதேசாதிபதியால் ஒப்புக்கொள்ளப்பட்டாலே அது செல்லுபடியாகும் நிலையேயிருந்தது. அது மட்டுமின்றி முப்படைகளின் தளபதியாகவும் மகாதேசாதிபதியே விளங்கினார். நீதித்துறையிலும் இலங்கை நீதி மன்றங்களின் தீர்ப்பை லண்டன் பிரிவு கவுன்ஸில் நிராகரிக்கும் அதிகாரங்களைக் கொண்டிருந்தது.

அதாவது இலங்கை சுதந்திரம் பெற்றதாகக் கூறப்பட்டாலும்கூட அது அரசியல், பாதுகாப்பு, பொருளாதார ரீதியாக பிரித்தானிய அதிகார வட்டத்துக்குள்ளேயே கட்டுப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 1951ல் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 1951ல் ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தொழிலாளி, விவசாயிகளின் உரிமைகளை முதன்மைப்படுத்திய இடசாரிகளுக்கும் இடைப்பட்ட கொள்கைகளைக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை 1951ல் உருவாக்கினார். இலங்கையின் தேசிய அபிலாஷைகளை முன்வைத்து உருவான இக்கட்சி சிங்கள மக்கள் மத்தியில் வேகமாக வளர்ச்சி பெற்றது. அவர் 1956ல் சிங்களத்தை 24 மணி நேரத்தில் அரச கரும மொழியாக்குவது என்ற கோஷத்தை முன்வைத்துப் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார்.

அவர் ஆட்சிக்கு வந்ததுமே சிங்களத்தை அரச கரும மொழியாக்கும் சட்டத்தைத் தமிழர் தரப்பினரும் இடதுசாரிகளினதும் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் நிறைவேற்றினார்.

சோல்பேரி அரசமைப்பு விதிகளால் ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் மக்களுக்குமே இழைக்கப்பட்ட இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எனினும் அவர் பஸ் தேசிய மயம், அந்நிய எரிபொருள் நிறுவனங்களின் தேசிய மயம், திருமலை, கட்டுநாயக்க ஆகிய இடங்களில் அமைந்திருந்த பிரித்தானிய படைத்தளங்களை வெளியேற்றியமை போன்ற பல தேசிய நலன் சார்ந்த விடயங்களைத் துணிச்சலுடன் நிறைவேற்றினார். அத்துடன் இவர் காலத்தில் சிங்கள, பௌத்த கலாசார வளர்ச்சி துரிதமாக முன்னெடுக்கப்பட்டது. எனினும் இவர் 1959ல் சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு தேசிய மறுமலர்ச்சியில் ஒரு தொய்வு ஏற்பட்டது.

ஸ்ரீமாவோ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 1972ன் புதிய அரசியலமைப்பைப் பிரபல இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி.சில்வாவே தயாரித்தபோதும், இது தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வலுப்படுத்த வகை செய்தது.

இந்த அரசியலமைப்பு மூலம் பௌத்த மதத்துக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டதன் மூலம் பௌத்தம் ஏனைய மதங்கள் மீது மேலாதிக்கம் செலுத்தச் சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும் சோல்பேரி அரசியலமைப்பு மூலம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கென ஏற்படுத்தப்பட்ட 29(2) சரத்து செனற் சபை, சிறுபான்மை இனப் பிரதிநிதிகளை, நியமன உறுப்பினர்களாக நியமித்தல் போன்ற விடயங்கள் நீக்கப்பட்டன.

எவ்வாறு முன்னைய அரசியலமைப்புகள் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள இடமளித்தனவோ அவ்வாறே இந்த அரசியலமைப்பு தமிழ் மக்களுக்குப் பாதகமான பல அம்சங்களைக் கொண்டிருந்தது.

1972ம் ஆண்டு அரசியலமைப்பு இலங்கையை ஒரு சுயதேவைப்பூர்த்தியுள்ள ஒரு சுதந்திரமான தேசமாக சர்வதேச மட்டத்தில் தலைநிமிர்ந்து நிற்குமளவுக்கு சிறப்பான தேசிய அம்சங்களைக் கொண்டிருந்தபோதும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் இடமளித்தது என்பதை மறுக்கமுடியாது.

1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு இலங்கையின் சுதந்திர, சுயாதீன பொருளாதாரக் கொள்கை, ஜனநாயகத்தை செழுமைப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்துக்கு இருந்த அதிகாரங்கள் என அனைத்தையுமே சிதைத்துவிட்டது. திறந்த பொருளாதாரக் கொள்கை மூலம் நாடு ஒரு தங்குநிலைப் பொருளாதாரத்துக்குள் தள்ளப்பட்டது. மேலும் நடுநிலைக் கொள்கை தளர்வுற்று மேற்குலக ஏகாதிபத்திய சார்பு வலுப்பெற ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி 6வது திருத்தச் சட்டம் உட்படப் பல விதங்களில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை கொடிய முறையில் விரிவுபடுத்தப்பட்டு உள்நாட்டுப் போர் இடம்பெறும் நிலையும் தோற்றம் பெற்றது. அதுமட்டுமின்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்டு வரப்பட்டதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்டது. 42 வருடங்களை எட்டிப் பிடித்துள்ள இந்த அரசியலமைப்புச் சட்டம் 6 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளையும் 20 திருத்தங்களையும் கண்டு விட்டது. பொருளாதாரத் துறையில், ஆடை உற்பத்தி, சுற்றுலாத்துறை, மீன் ஏற்றுமதி போன்ற அந்நிய நாடுகளை நம்பியுள்ள தங்கு நிலைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. இவற்றின் காரணமாக பொருளாதார நெருக்கடி கடன்சுமை என்பன பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அது மட்டுமின்றி நாடு வல்லரசுகளின் உலக மேலாதிக்கப் போட்டியின் ஆடுகளமாக மாறிவிட்டது. 20வது சட்டத்தின் மூலம் தனி நபர் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கப்பட்டதுடன் இராணுவ மயப்பட்ட ஆட்சியாக மாறி வருகின்றது.

இந்த நிலையில்தான் சுதந்திர இலங்கையின் நான்காவது அரசியலமைப்பு பற்றிய முன்னெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுமுதல் ஒரு தனிநபர் சர்வாதிகாரத்தை வலுப்படுத்தும் வகையிலும், நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்துவதிலும் படிப்படியான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த முயற்சியில் 20வது திருத்தச் சட்டமும் கணிசமான சாதக அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் சிங்களக் கடும் போக்குவாதிகளும் இனவாத பிரசாரங்களும் பிரதான பங்கை வகித்தன.

எனவே பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத ஒழிப்பு என்ற பேரில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. மாகாண சபை முறை ஒழிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றது. சர்வதேச அரசியலில் அமெரிக்காவையோ இந்தியாவையோ பகைக்காமல் அணிசேராக் கொள்கை என்ற பேரில் சீனாவுடனான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும்.

எனவே சுதந்திர இலங்கையின் நான்காவது அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் உரிமைகள், தொழிலாளர்கள் உரிமைகள் போன்ற ஜனநாயக விழுமியங்களுக்கெதிரான கட்டுப்பாடற்ற ஒடுக்குமுறைகளை மேற்;கொள்ளும் வகையில் ஒரு இராணுவ மயப்பட்ட ஆட்சியதிகாரத்தை நிறுவும் வகையிலேயே அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருபுறம் சீன சார்பு நிலைப்பாட்டை எடுத்தபோதும் இன்னொருபுறம் அந்நிய முதலீகளைக் கவர்வது என்ற பெயரில் மேற்குலகின் பொருளாதார வலைக்குள் சிக்குப்படும் சாத்தியமும் உண்டு. அதன் காரணமாக இலங்கை வல்லரசுகள் மோதும் களமாகவும் மாறலாம்.

எனினும் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழு பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனைகளைக் கோரிவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆலோசனைகளைச் சமர்ப்பித்துள்ளது. அதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அது நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச் செல்வதால் அது நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய தரப்பினரின் ஆலோசனைகளுக்கும் இப்படியான பதிலே கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே அரசியலமைப்பு வரைவு எப்படி அமையவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் கண்துடைப்புக்காக தமிழர் தரப்பின் ஆலோசனைகள் கோரப்பட்டன என்றே கருதப்படுகின்றது.

எப்படியிருப்பினும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்களைப் போலவே நான்காவது அரசியலமைப்பும் தமிழ், முஸ்லிம் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கி ஒடுக்குமுறைகளைத் தொடரும் வகையிலேயே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வொடுக்குமறைகளைத் தங்குதடையின்றி தொடரும் வகையில் ஆட்சி அதிகாரம் இராணுவ மயப்படுத்தப்படும் என்பதன் அறிகுறிகளும் இப்போதே தென்பட ஆரம்பித்துவிட்டன.

எனவே நான்காவது அரசியலமைப்பு தொடர்பாக தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதற்கு எதுவுமே இருக்காது என்றதொரு தோற்றப்பாடே தென்படுகின்றது.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

http://aruvi.com/article/tam/2021/01/19/21746/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.