Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் சக்தி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் சக்தி?

  — கருணாகரன் — 

இலங்கையில் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அரசியல் தீர்வுக்குமாக வேலை செய்வது மிக மிகக் கடினமானது. இனவாதத்தைத் தொடருவது இலகுவானது. இதை விளங்கிக் கொள்வதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை. அதிகமாகப் படித்திருக்க வேண்டியதுமில்லை. மிகச் சாதாரணமாகக் கவனித்தாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். 

முதலில் நீங்கள் படிக்கின்ற பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைக் கவனியுங்கள். இதில் 99 வீதமானவையும் சமாதானத்தைக் குறித்து – அதை வலியுறுத்திச் செய்திகளை வெளியிடுவது குறைவு என்பதைக் கண்டு பிடித்து விடலாம். அத்தனையும் இனவாத அடிப்படையிலேயே செய்திகளை எழுதுகின்றன – தயாரிக்கின்றன. இதற்குக் காரணம், பெரும்பாலான ஊடகவியலாளர்கள் இனத்துவ அடிப்படையிலேயே இயங்குகிறார்கள். இவற்றில் அரசியல் ஆய்வுகளை எழுதுவோரில் 99 வீதமானவர்களும் இன நிலைப்பட்டே தங்கள் கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் முன்வைக்கின்றனர் என்பதே. மறந்தும் சமாதானத்துக்கான வலியுறுத்தலையும் அதற்கான வழிப்படத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும் இவர்கள் முன்வைப்பதில்லை. வேண்டுமென்றால் மாறுதலாக சமாதானத்துக்கும் தீர்வுக்குமாக முன்வைக்கும் ஊடகங்களையும் ஆய்வாளர்களையும் அரசியல் கருத்துரைஞர்களையும் ஒரு சிறிய பட்டியிட்டுப் பாருங்கள். சமாதானத்துக்கான முயற்சிகள் எவ்வளவு பலவீனமானவை என்று தெரியும். 

இது ஒரு பக்கமென்றால் அடுத்த பக்கத்தில் நீங்கள். அதாவது, உங்களைப் பற்றியது. அமைதிக்கும் அரசியல் தீர்வுக்கும் சமாதானத்துக்குமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு வேலைகளைச் செய்கிறீர்கள்? இதற்காகக் கொஞ்ச வேலையாவது நாம் செய்ய வேண்டும் என்ற  சிந்தனையாவது உங்களிடம் உள்ளதா? குறைந்த பட்சம் இனவாத சக்திகளை விட்டு உங்களைத் தூர வைக்க வேணும் என்ற எண்ணமாவது உங்களிடம் உள்ளதா? மெய்யாகவே அமைதிக்கும் சமாதானத்துக்கும் அரசியல் தீர்வுக்குமாகச் சிந்திக்கின்ற –இனவாதமற்ற சக்திகளை ஆதரிக்க வேண்டும் என்று சிந்தித்துள்ளீர்களா? அவ்வாறான சக்திகளை இனங்கண்டுள்ளீர்களா? அவை சிறிய சக்திகளாக இருந்தாலும் அவற்றின் மீது நம்பிக்கை வைத்து அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் வீட்டில் ஒரு தென்னையை வளர்க்கும்போது அது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பயன் தரும் என்று தெரிந்துதானே நம்பிக்கையோடு அதைச் செய்கிறீர்கள். பிறகு அந்தத் தென்னை உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுறைகளுக்கும் அது பயன் தருகிறது. அப்படியென்றால் சமாதானத்துக்கான – மக்கள் அரசியலுக்கான சக்திகள் – கட்சிகள் – சிறியவை என்றாலும் அவற்றை ஒரு தென்னையைப்போல, பனையைப் போல நீடித்துப் பயன்தரக் கூடியவையாகக் கருதி அவற்றை நாம் ஆதரிக்க வேண்டும். அப்படிச் செய்கின்றவர்கள் எத்தனை பேர்? 

இவற்றுக்கான பதிலைக் கண்டாலே நாம் அரசியல் தீர்வுக்காகவும் மெய்யான சமாதானத்துக்குமாக வேலை செய்கிறோம், அதை நோக்கி நகர்கிறோம் என்று அர்த்தமாகும். 

ஆனால் அப்படியல்ல அல்லவா! 

ஏனென்றால் ஒவ்வொரு தேர்தலின்போதும் வெற்றியடைவது இனவாதச் சக்திகளே. அதனால்தான் இனவாதமும் தீர்வுக்கு எதிரான போக்கும் வளர்கிறது. இனவாதிகள் கொழுக்கிறார்கள். இனவாதத்தை வளர்க்கும் ஊடகங்கள் செழிக்கின்றன. இதில் ருசிப்படப்பட ஒவ்வொரு கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை வளர்க்கும் விதமாகவே பேசுகின்றன. அந்தப் போக்கிலேயே செயற்படுகின்றன. இனவாதத்தில் உள்ளோடியிருக்கும் ஏட்டிக்குப் போட்டித்தன்மை என்பது கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கும். ஏனென்றால் அதிலே உள்ள எதிரும் புதிருமான தன்மை என்பது நம்முடைய ரத்தத்தைச் சூடாக்குவது. இரத்தம் சூடாகுவது என்பதே ஒரு போதைதான். மதுவை நாம் பருகும்போது உண்டாகும் கிளர்ச்சியைப் போலத்தான் இதுவும். 

இல்லையென்றால் இலங்கைத்தீவிலே இனவாதத்தை வளர்த்து போர் வரை அதைக் கொண்டு வந்து பெரும் அழிவில் இந்த நாட்டை விட்டதற்கு மூன்று பெருங்கட்சிகள் பொறுப்பெடுக்க வேண்டும். ஒன்று ஐ.தே.க. மற்றது சிறிலங்கா சுதந்திரக்கட்சி. மூன்றாவது தமிழரசுக்கட்சி. இவை மூன்றும்தான் ஏதோ வகையில் மறுபடியும் இப்பொழுது அரசியல் அரங்கில் தலைமைச் சக்திகளாக உள்ளன. அப்படியென்றால் எப்படி நாடு உருப்படும்? 

இப்பொழுது உங்களுடைய இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள், இலங்கையில் இனவாதமல்லாத, மெய்யாகவே அரசியல் தீர்வுக்காக உழைக்கின்ற கட்சிகள் எவை என்று? எந்தத் தலைவர்கள் அமைதிக்கும் சமாதானத்துக்குமாகத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் என்று. எது வந்தாலும் இனவாதத்தைக் கடந்து ஒரு நீதியான தீர்வை, சமாதானத்தை எட்டுவோம், இந்த நாடு ஒரு பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடு,பன்மைத்துவமே இங்கே பொருத்தமான –சரியான தீர்வு என்று நம்புகின்ற – அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்ற தலைவர்கள் யார்? கட்சிகள் எவை? இந்த நோக்கில் இவை இதுவரையில் ஒரு வார்த்தையேனும் பேசியிருக்கின்றனவா? இப்போது கூடப் பேசத் தயாரா? இன்னும் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்று சொல்லிக் கொண்டே சிங்களத்தரப்பிலுள்ள அநேக கட்சிகளும் இயங்குகின்றன. சிங்கள இடதுசாரிகள் கூட இதைக் கடந்து சிந்திக்கத் தயாரில்லை. இது தவறு. இப்படி ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதென்பது நாட்டை அழிக்குமே தவிர, பாதுகாக்காது என்று சொல்வதற்கு எந்தக் கட்சியும் தயாரில்லை. எந்தத் தலைவரும் தயாரில்லை. இளைஞர்களை அதிகமாகக் கொண்ட ஜே.வி.பியினால் கூட இதற்கு முடியவில்லை. 

தமிழ்த்தரப்பிலும் இதுதான் நிலை. சமஸ்டி, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று வெளியே சொன்னாலும் நடைமுறையில் செயற்பட்டுக் கொண்டிருப்பது அதற்கு மாறாகவே. தனி இலக்கை நோக்கியே. இந்தத்தனி இலக்கு எதுவும் இனிச் சாத்தியமில்லை என்று உங்களுக்கும் தெரியும். இந்தத் தலைவர்களுக்கும் தெரியும். துயரம் என்னவென்றால் இவ்வளவு பேரழிவைச் சந்தித்த அனுபவங்களுக்குப் பிறகும் பழியுணர்ச்சியே மேலோங்கியுள்ளது. பகை மறப்பல்ல. சமாதானம் அல்ல. இளைய தலைமுறையும் புத்தியைத் தீட்டுவதற்குப் பதிலாகக் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்து கொண்டும் ஒரு பொய் நாடகத்தை ஒவ்வொருவரும் ஆடிக் கொண்டேயிருக்கிறோம். 

இப்படி எல்லோரும் சமாதானத்துக்கும் தீர்வுக்கும் எதிரான திசையில் நின்று கொண்டு அமைதியே வா. சமாதானமே மலர். தீர்வே கனிந்து விடு என்றால்…எப்படி அது கிடைக்கும்? 

சிலர் சொல்கிறார்கள் வெளிச்சக்திகளின் தலையீட்டினால் நிச்சயமாக இலங்கைத்தீவில் சமாதானம் எட்டும் என்று. இதைக் கூடுதலாக நம்புவது தமிழர்கள். ஆனால் இந்த வெளிச்சக்திகள் எது? இந்தியாவா? இந்தியா என்றால் அது கொண்டு வந்த மாகாணசபையே 34 வருசங்களாகியும் அதிகாரங்களைச் சரியாகப் பெற முடியாத நிலையில் உள்ளது. அப்படியென்றலால் மேற்குலகமா?பலஸ்தீனத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலே புரியும். மேற்குலகின் கரிசனைகள் எப்படி எப்படியானவை என்று. பெரிதாக நம்பப்பட்ட ஐ.நா வோ இலங்கையின் இனப்படுகொலை நடந்தது என்று கூற்றை ஏற்றுக்கொள்ளாமல் அது போர்க்குற்றமே என்று சாதுரியமாகத் தவிர்த்துக் கொண்டிருக்கிறது. இது மீள நிகழாமல் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறதே தவிர அதை உறுதிப்படுத்தும் பொறிமுறைகள் எதையும் அழுத்தமாகப் பிரயோகிக்கவில்லை. அதற்குத் தயாருமில்லை. அப்படியென்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வும் சமாதானமும் எப்படி வரும்? எங்கிருந்து வரும்? 

எனவேதான் துணிந்து சொல்கிறோம், இலங்கையில் சமாதானம் இப்போதைக்கு இல்லை என்று. சமாதானம் இல்லை என்றால் தீர்வும் இல்லை. தீர்வு இல்லை என்றால் அமைதி இல்லை. இந்த அமைதியற்ற நிலையையே நாம் எல்லோருமாக வளர்த்துக் கொண்டிருக்கிறோம். 

போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளாகி விட்டன. இது ஒரு தசாப்தத்துக்கும் மேலான காலம். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளிலும் அமைதியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் தீர்வை நோக்கியும் ஒரு படியில் கூட ஏற முடியவில்லை. அதற்காக ஒரு தலைவர் கூடத்தன்னைத் தியாகம் செய்யவில்லை. ஒரு பத்திரிகை கூட இயங்கவில்லை. இப்படியொரு நிலை உலகில் வேறு எங்கும் நடக்காது. இப்படியொரு வாய்ப்பை இழந்த நாடு வேறொன்றுமில்லை. 

இதனால்தான் இலங்கை வல்லரசுகளின் விளையாட்டுத்திடலாகவும் போட்டிக்களமாகவும் மாறியுள்ளது. நாடு பொருளாதாரத்தில் அடிமை நிலையில் நீடிக்கிறது. நமக்குள் ஐக்கியப்படவும் அமைதி கொள்ளவும் தயாரில்லாமல் ஒரு சாரார் இந்தியாவின் பக்கமாகவும் ஒரு சாரார் சீனா சார்பாகவும் நிற்கிறார்கள். இது மாதிரிச் சிரிப்புக்கும் முட்டாள் தனத்துக்குமான சங்கதி அன்றி  வேறென்ன?  

 

https://arangamnews.com/?p=5219

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரன் போகாத ஊருக்கு வழி தேடுகின்றார்!

 

இலங்கையின் தேவை போரைவிட இலகுவானது, பாதுகாப்பானது

இலங்கையின் தேவை போரைவிட இலகுவானது, பாதுகாப்பானது

— கருணாகரன் — 

இன முரண்களை வளர்ப்பதிலும் போரை நடத்துவதிலும் அல்லது போருக்கு ஆதரவளிப்பதிலும் உள்ள ஆர்வம் சமாதானத்தின் மீது மக்களுக்கும் இல்லை. அரசியற் கட்சிகளுக்கும் இல்லை. தலைவர்களுக்கும் இல்லை. ஊடகங்கள், மத பீடங்கள் போன்றவற்றுக்கும் இல்லை. புத்திஜீவிகளுக்கும் இல்லை. 

ஆகவே இலங்கையை சமாதானத்தின் மீது நாட்டமில்லாத நாடு என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் இலங்கைத்தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்ட பிறகு – 1948க்குப் பிறகு –உள்நாட்டு யுத்தத்தினால் லட்சக்கணக்கானோரை இழந்திருக்கிறது. இந்த இழப்பைச் சரியாகச் சொன்னால் அரசியற் கொலைகள் என்றே கூற வேண்டும். அரசுக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான இரண்டு கட்ட மோதல்கள், தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் அரசுக்கும் இடையிலான போர், இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள், அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர், அரசின் ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட கொலைகள் என பல வகையான அரசியற் கொலைகள் கடந்த அறுபது ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் இந்தக் கொலைப்பட்டியலில்தான் அடங்குவர். இதை விட லட்சம் வரையானோர் உடல் உறுப்புகளை இழந்தோராக உள்ளனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம்பேர் உளச் சிதைவுக்குள்ளாகியுள்ளனர். அவ்வளவும் இலங்கையர்கள் தங்களுக்குள் தாங்கள் அடித்துக் கொண்டதும் கொன்றதுமாகும். 

சுதந்திர இலங்கையின் அபிவிருத்தியும் சுயாதிபத்தியமும் எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? இவ்வளவுக்குக்கும் மிகச் சிறிய நாடும் மிகக் குறைந்த மக்களும் மிகக் குறைந்த இனங்களும் வாழ்கின்ற நாடு இது. 

இந்த இடைப்பட்ட 60 ஆண்டு காலத்தில் (முரண்கள் உச்சமடைந்த சூழலில்) மேற்குலத்திற்கும் இந்தியாவுக்கும் இப்பொழுது சீனாவுக்கும் பணிந்தே இலங்கை செயற்பட்டு வருகிறது. அதாவது வெளிச்சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து, விட்டுக் கொடுத்தே நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இதை விட போர்க்குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்ற விவகாரங்கள், மனித உரிமை மீறல்கள் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இலங்கைக்கு மேலதிக வெளி நெருக்கடிகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. 

இதனால்தான் 1948க்குப் பின்னர் அமைதிச் சூழலும் பொருளாதாரமும் சுயாதீனமும் நெருக்கடிக்குள்ளாகி மிக மோசமாகச் சிதைந்த நாடாக இலங்கை உள்ளது. இதற்குப் பிரதானமான காரணம் இலங்கையில் பன்மைத்துவம் மறுக்கப்பட்டதேயாகும். பல்லின சமூகங்கள் வாழும் நாட்டின் பாதுகாப்பும் முன்னேற்றமும் பன்மைத்துவத்தைப் பேணுவதிலேயே அடங்கியுள்ளது. பன்மைத்துவமும் ஜனநாயகமும் சமத்துவமும் சரியாகப் பேணப்பட்டிருந்தால் இத்தனை பெரிய உயிரிழப்புகளும் வள அழிவுகளும் ஏற்பட்டிருக்கதல்லவா! இதை இவ்வளவு அழிவுகளையும் பாதிப்புகளையும் நேரடியாகச் சந்தித்த பிறகும் இலங்கையர்களுக்குப் புத்தி வந்திருக்கிறதா? இல்லையே. அல்லது பன்மைத்துவமும் ஜனநாயகமும் செழித்துள்ள நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் கூட அறிவு வந்திருக்கிறதா? 

இன்னும் வரவர இனவாதமும் இன முரணும்தானே கூடிக் கொண்டிருக்கிறது. இன அடையாளக் கட்சிகள் வரவரப் பெருகுகின்றன. இனவாத ஊடகங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு ஊட்டமூட்டும் காரியங்கள் தாராளமாக நடக்கிறது. இளைய தலைமுறை கூட அறிவு பூர்வமாகச் சிந்திப்பதற்குப் பதிலாக இனவாத அலையின் பின்னேதானே இழுபடுகிறது. 

இதில் எந்த இனமும் குறைந்ததுமில்லை. வேறு பட்டதுமில்லை. சிலர் சொல்கிறார்கள், சிங்களத் தரப்பிடம்தான் சகிப்புத்தன்மையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் இல்லை. அவர்களே பன்மைத்துவத்தை மறுதலிக்கின்றனர். அவர்கள் ஆதிபத்தியத்தில் உள்ளனர். ஆகவே அவர்கள்தான் நீதியாக – விட்டுக் கொடுப்புகளோடு நடக்க வேண்டும் என. 

ஆனால் இதே அதிகாரத் தன்மை தமிழ்த்தரப்பிடத்திலும் உண்டு. தமிழர்கள் முஸ்லிம் மக்களை மறுதலிக்கின்றனர். அவர்களுக்கான பன்மைத்துவ அடிப்படைகளை உறுதி செய்யத் தயங்குகின்றனர். வடக்குக் கிழக்கு என்பது தமிழரின் தாயகம் என்று கூறும்போது அங்கே உள்ள ஏனையோரின் ஜனநாய உரிமைகளும் அவர்களுக்கான பன்மைத்துவ அடிப்படைகளும் கேள்விக்குள்ளாகின்றன. 

இப்படி ஒரு தரப்பை மறுதரப்பு மறுதலிக்கும்போது ஒரு தரப்பை மறுதரப்பு ஒடுக்க முனையும்போது எப்படி அமைதியைப் பேண முடியும்? 

அரசியல் என்பதும் அதிகாரம் என்பதும் வரலாற்றின் அபூர்வ தருணங்களில் மட்டும்தான் நீதியோடும் அறத்தோடும் செயற்பட்டிருக்கிறது. அது அபூர்வமான மகான்களின் காலத்தில் மட்டுமே. மற்றும்படி ஒருவரை ஒருவர் ஒடுக்குவதும் ஒரு தரப்பை மறுதரப்பு சுரண்டுவதும் ஒன்றை ஒன்று நிராகரிப்பதும் ஒன்றினால் ஒன்று தோற்கடிக்கப்படுவதாகவே உள்ளது. இதற்குள் எப்படி நுட்பமாகவும் தந்திரோபாயமாகவும் வெற்றிகளைக் காண்பது? எப்படி தீர்வை எட்டுவது என்றே பார்க்க வேணும். இல்லையென்றால் தலையில் நெருப்புச்சட்டிதான். 

எனவேதான் கொந்தளிக்கும் நாடாக இந்தச் சின்னஞ்சிறிய தீவுத்தேசம் கிடந்து அல்லாடுகிறது. 

இதற்குப் பரிகாரம் காண வேண்டும் என்றால் ஒரே வழி சமாதானத்தை நிலை நாட்டுவதே. சமாதானத்தை நிலை நாட்ட வேண்டும் என்றால் அதற்கான வழி பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பேண வேண்டும். பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பேண வேண்டும் என்றால் பல்லினத்தன்மையை அங்கீகரிக்க வேண்டும். பல்லினத்தன்மையை அங்கீகரிக்க வேண்டுமென்றால் இதையெல்லாம் கவனத்திற் கொண்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 

இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று உங்களுக்குள்ளே கேள்வி எழுகிறது அல்லவா! அப்படியென்றால் சமாதானமும் இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டியதுதான். சமாதானமும் அமைதியும் இல்லையென்றால் அழிவுதான். பேரழிவு. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

இலங்கைக்கு நெருக்கடி என்றால் அது ஒட்டு மொத்தமாக அனைவருக்குமானதே. இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை என்றால் அதனால் அனைத்துச் சமூகத்தினரும் பாதிக்கப்படுவர். அப்படித்தான் அனைவரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தப் பாதிப்புக்குக் காரணமான சக்திகள் எவை? அவை எப்படி எங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்று ஒவ்வொருவரும் சிந்தித்தால் நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் குறைந்திருக்கும். அப்படி பொது மக்களாகிய நாம் சிந்திக்க முடியாதவாறு இந்தச் சக்திகள் மிக நுட்பமாகவும் தந்திரோபாயமாகவும் செயற்படுகின்றன. நாமும் நம்மை அறியாமலும் அறிந்தும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணிக் கொண்டும் இந்தப் பிழையான – சமாதான விரோத – இனவாதச் சக்திகளை ஆதரிக்கிறோம். இது மாபெரும் தவறாகும். குற்றமாகும். 

தவறுக்கும் குற்றத்துக்கும் தண்டனை கிடைக்கும் அல்லவா! அந்தத் தண்டனையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

அப்படியென்றால் இப்பொழுது என்ன செய்யலாம்? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தாடும். 

நாமே சமாதானத்துக்கான அழைப்புடன் களத்தில் இறங்க வேண்டியதுதான். என்ன நாமா? என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். உங்களுடைய பிரச்சினைக்கு – உங்களுடைய வலிக்கு நீங்கள்தான் தீர்வைத் தேட வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். இதுவும் உங்களுடைய சொந்த வாழ்க்கைக்கான பணியைப் போன்றதே. அந்தளவுக்கு அவசியமானது. முக்கியமாக நீங்கள் உங்களுடைய பிள்ளைக்கு தகுதியான ஒன்றைப் பரிசளிக்க வேண்டாமா? உங்கள் பிள்ளைகளுக்காக சொத்துச் சேகரிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கென அமைதியையும் சமாதானத்தையும் சுயாதீனத்தையும் கட்டியெழுப்புங்கள். அது போதும். அதுதான் அவர்களுக்கான மகிழ்ச்சி. அவர்களுக்கான ஆறுதல். அவர்களுக்கான நம்பிக்கை. அவர்களுக்கான வாழ்க்கை. அதுவே அவர்களுக்கான பாதுகாப்பு. 

கடந்த காலத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் நாம் காடு மேடெல்லாம் அலைந்தோமே. துயரத்தைச் சுமந்தோமே. அப்படியொரு வாழ்க்கையை நாம் விரும்புகின்றோமா? 

எனவேதான் இது சமாதானத்தைப் பற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டிய சூழல் என்கிறேன். அது கள்ளத்தனமானதாக –கயமை உடையதாக –தந்திரோபாயமானதாக – சூதானதாக இருக்கக் கூடாது. அல்லது கோர்த்த கைகளில் இரத்தக்கறை படிந்ததாக இருத்தல் பொருத்தமானதல்ல. பதிலாக வெளிப்படையானதாகவும் நேர்மையானதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். 

இதற்கான பயிற்சி முக்கியம். அது போருக்கான பயிற்சியை விடவும் வலுவானதாக – சிறப்பானதாக இருக்கும். இதையெல்லாம் கருத்திலும் கவனத்திலும் கொண்டு முன்னகர்ந்தால் சமாதானத்துக்கான ஒரு படையணி உருவாகி விடும். அது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் வீரியம் கொள்ளும். இதைத் தவிர இலங்கைக்கு வேறு தெரிவுகளில்லை. 

தீர்வுக்கு ஒரே வழி உண்மையை ஏற்றுக்கொள்ளுவதும் அதைப் பேசுவதும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிப்பதுமாகும். நீண்ட துயரங்களோடு போராடிக் கொண்டிருந்த நாடுகள் அந்தத் துயரங்களிலிருந்து மீண்டது சமாதானத்தின் மீது கொண்ட பற்றுறுதியினால்தான். இதை யார் செய்வது? யார் இதற்குப் பொறுப்பு என்று ஆளையாள் பார்த்துக் கொண்டிருக்காமல் அவரவர் பாத்திரங்களைச் செய்யத் தொடங்கினால் கனி கைகளில் கிட்டிவிடும். 

இதொன்றும் கடினமானதல்ல. அதாவது போரை விடவும் சுலபமானது. பாதுகாப்பானது. எங்கே உங்கள் முதற்காலடியை வையுங்கள் பார்க்கலாம். இது ஒரு கனவுதான் இப்பொழுது. ஆனால் அது உண்மையான யதார்த்தம். இந்த யதார்த்தம் வெற்றியளிக்கும்போது நாம் மகிழ்வோம். அந்த மகிழ்ச்சிக்கு ஈடில்லை. 

 

https://arangamnews.com/?p=5257

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.