Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாட்டில் ஒரு முள்வேலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஒரு முள்வேலி

201826374_117968613832496_6544070446931181163_n.jpg?w=654&h=299&crop=1

திருச்சி சிறப்பு முகாம்

அ.சி. விஜிதரன்

 

“என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”   தனது வயிற்றைக் கிழித்து இரத்தம்  வழிய, வழிய கத்தும் குரல் மட்டும் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. உலகமே ஆப்கனிஸ்தானில் ஓடும் விமானத்தில் இருந்து விழுந்த மனித உயிர்களுக்கு இரங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதற்கு எந்தவித குறைவும் இல்லாமல் இருக்கும், தனது வயிற்றைக் கிழித்துக் கதறும் இந்த வீடியோ அதிக கவனம் ஈர்க்காமல்  சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆப்கானிஸ்தானிலோ, ஆப்பிரிக்காவிலோ இல்லை. தமிழ்நாட்டில்தான். கதறும் குரல்களும் தமிழ்தான். கதறிக் கொண்டிருப்பது, அந்தக் குரல் மட்டும் அல்ல. கிட்டத்தட்ட 80 பேர். இதில் 21 பேர் அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது எல்லாம் என்ன என்று கேட்போருக்கு பதில், இவை அனைத்தும் கொடூரமான முறையில் தமிழ்நாட்டில்  திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அகதிகள், தங்களை விடுதலை செய்யக் கோரி நடத்தும் போராட்டங்கள் ஆகும்.

தற்கொலைப் போராட்டம் ஈழத்தில் மட்டும் அல்ல, சிறப்பு முகாம்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதற்கு விடையான விடுதலை மட்டும் எங்கும் எட்டாக் கனியாகவே போய்விடுகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத எதார்த்தமாக இருக்கின்றது. அதேபோது தமிழ்நாடு நேர்கொண்டு பார்க்காத எதார்த்தமாகவும் உள்ளது.

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கைகளை வெட்டிக் கொள்வது, தூக்க மாத்திரைகளை போட்டுக் கொள்வது, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது, முடிவில்லா நிலையில் தற்கொலை செய்துகொள்வது என அவர்கள் வேறு வழியின்றி முன்னெடுக்கும் ஆபத்தான இந்தப் போராட்டங்கள் சில முகநூல் பதிவுகளோடும், செய்தித்தாள் பெட்டிச் செய்திகளோடும் முடிந்துவிடுகின்றது.  அவர்கள் எதிர்பார்க்கும் விடுதலை இன்னும் அவர்களுக்கு கிடைக்கவே இல்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் சிறப்பு முகாம்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பல காலங்களாய் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. கிட்டத்தட்ட 7-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் 1990 முதல் இருந்துவந்திருக்கின்றன. இந்திய வெளிநாட்டவர் சட்டம் 1946-ல் வெளிநாட்டவரைக் குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துக் கண்காணிக்கலாம் என்ற பிரிவு 3(2)E கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் படிப்படியாக மூடப்பட்டு, தற்போது திருச்சி மத்திய சிறையின் ஒரு பகுதியில் திருச்சி சிறப்பு முகாம் மட்டும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இங்கு கிட்டத்தட்ட 80 தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளர். இவர்களில் அதிகபட்சமாகப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னிருந்து சமீபமாக வந்தவர்கள் வரை அடக்கம்.

தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் உருவாக்கதிற்கு இந்திய அரசு, தமிழ்நாட்டு அரசு கையாளும் சட்ட மூலங்கள் பற்றி “தமிழகத்தில் தமிழ் அகதிகள் (https://utattam.wordpress.com/2021/08/03/202107/)” என்ற கட்டுரையில் காண்க. இந்தக் கட்டுரை சிறப்பு முகாமின் கொடுமையான நிலை என்ன, அது ஏன் மூடப்பட வேண்டும் என்பதில் கவனம் கொள்கின்றது.

கடந்த காலங்களில் சிறப்பு முகாம்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். சிறப்பு முகாம் வரலாறு மிகுந்த கொடூரங்களைக் கொண்டதாகவே உள்ளது. வேலூரில் சிறப்பு முகாம் இருந்த போது விடுதலை வேண்டி போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில்  பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது அவர்கள் மீது பாலியல் ரீதியான சுரண்டல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சிறப்பு முகாம்களில் விடுதலை வேண்டி போராடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்தல் அல்லது போராட்டங்களைத் தடுக்க காவல்துறை வன்முறையைப் பயன்படுத்துதல், அவர்களின் குடும்பங்களை மிரட்டுதல், தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்திக்க தடை விதித்தல், நாடு கடத்துவதாக மிரட்டுதல், நாடு கடத்துதல் என பல வகையில் அவர்கள் மீது கொடூரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவை பல வகையில் இன்றும் தொடருவதாகவே சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் கூறுகின்றனர். 

திருச்சி சிறப்பு முகாமில் தடுக்கப்பட்டவர்கள்

தமிழ்நாட்டிற்கு வந்த தமிழ் அகதிகளில் ஏதாவது வகையில் வழக்கில் சிக்கி வழக்கில் இருந்து விடுதலை பெற்றவர்கள், பிணை கிடைத்தவர்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவர்கள் என இருப்பவர்கள்,  மேலே குறிப்பிட்ட வெளிநாட்டவர் சட்ட பிரிவின் கீழ் வெளிநாட்டவரின் நடவடிக்கைகளை கண்காணிக்கின்றோம் என்ற பெயரில் பலரை 10 ஆண்டுக்கும் மேலாகத் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

அதேபோல் இலங்கையில் இருந்து கடவுச்சீட்டு மூலம் தமிழகம் வந்து விசா காலாவதியானவர்கள், கடவுச்சீட்டு மூலம் வெளிநாட்டு செல்ல முயன்றவர்கள், திசை மாறிய இலங்கை மீனவர்கள் , மேலும் நேபாளம், சீனா, பல்கேரியா , பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடவுச் சீட்டுக்காக வழக்குகளுக்காக இங்கு அடைக்கப்பட்டு உள்ளனர். 

கடந்த மாதம் இங்கிருந்து இலங்கை மீனவர்கள் 10 பேர் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாம்

தற்போது இருக்கும் திருச்சி சிறப்பு முகாம் திருச்சி மத்திய சிறையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இங்கு இருப்பவர்கள் சுற்றி வர மின்சார வேலி அமைப்பப்பட்டு,  8X9 என்ற அளவில் தனி சிறைகளில்  250க்கும் மேற்பட்ட காவலர்களின் 24 மணிநேரக் கண்காணிப்பில், 35க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராவின் பார்வையில் இருக்கிறார்கள்.

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் எந்த சொந்த வேலைகளும் செய்ய முடியாது. அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லை.

இங்கு இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.175 பணத் தொகை வழங்கப்படுகின்றது. இந்த தொகையில் இருந்தே உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகள் செய்ய வேண்டியது உள்ளது.

வெளியில் விற்கப்படும் காய்கறி, மளிகை, பிற பொருட்கள் இரட்டிப்பு விலையில் சிறப்பு முகாம்களில்  இருப்பவர்களுக்கு கொடுக்கப்படுவதாலும், குடிநீர் உட்பட அனைத்தும் விலைக்கு வாங்குவதால், வழங்கப்படும் தொகை பத்தாமல் அன்றாட வாழ்விற்கே மிகுந்த சிரமப்படும் நிலையில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரு நாளைக்கு இரு வேளை உணவே அவர்கள் உண்பதாகக் கூறுகின்றனர். 

பணக் கொடுப்பனவைத் தவிர வேறு எந்த உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளடக்கிய யாரும் அவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் வர அனுமதி உண்டு, வேறு யாருக்கும் அனுமதி இல்லை. தடுத்து வைக்கப்பட்டவர்களில் குடும்பம் இல்லாதவர்கள் யாரையும் பார்க்க அனுமதி இல்லை. குடும்பத்தினரால் வழங்கப்படும் பொருட்கள் மிகுந்த தனிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றது.

சிறப்பு முகாமில் இருப்பவர்கள் வழக்கு அல்லது மருத்துவமனைக்காக வெளியே செல்லும் போது 6க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீசார், 2க்கும் மேற்பட்ட வாகன பாதுகாப்பு உடன் தீவிரவாதி போல் சித்தரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இப்படி பயங்கரவாதிகள் போல் அவர்கள் நடத்தபடுவது அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. 

சிறப்பு முகாமைப் பொருத்த வரை முதலுதவி, மருத்துவ சிகிச்சை எதுவும் இல்லை, உடல்நிலை சரியில்லை எனில் மனு அளித்த பின் அனுமதி பெற்ற பிறகு செல்ல வேண்டும், உடனடியாக செல்ல முடியாததால் மரணங்கள் அண்மையில் கூட நிகழ்ந்து உள்ளது. இதனால் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கக்கப்பட்டுள்ளவர்கள் கடுமையான சூழ்நிலையில் இருகின்றார்கள்.

குடும்பங்களைப் பிரிந்தும், என்று முடியும் என்று தெரியாமலும் தொடரும் சிறப்பு முகாம் வாழ்வால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் ஆனால் அதற்கான சிகிச்சைகள், மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தபடுவதில்லை.

அமைதி வழியில் முகாமில் தங்களை வருத்தி உரிமைக்காக போராடும் போது; போலீசார் அவர்களை கலைப்பது, மிரட்டுவது , வழக்குகள் போடுவது என பல்வாறு காவல்துறை மற்றும் க்யூ பிரிவால் இன்னலுக்கு ஆளாகிறார்கள்.  

கடந்த ஜூன் மாதம் விடுதலை வேண்டி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 24 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு போட்டு உள்ளனர். இப்படி தொடர்ச்சியாக அவர்கள் மீது வன்மம் கொண்டு பல மிரட்டல்கள், வழக்குகளை தொடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இப்படிப் போராடியவர்கள் மீது தேச துரோக வழக்குகள் எல்லாம் போடப்பட்டுள்ளது.

201826374_117968613832496_65440704469311

சிறப்பு முகாம் மூடப்பட வேண்டும்

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 20(1)ல் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், ஒருவர் ஒரு குற்றத்திற்காக ஒரு முறைக்கு மேல் வழக்கு போடப்படுவதும், தண்டனை அளிப்பதும் கூடாது என்கிறது. ஆனால் சிறப்பு முகாம் வெளிநாட்டவர் சட்டத்தின் படி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது இன்னொரு சிறைச்சாலையாகவே இருக்கின்றது.  வழக்கில் வழங்கப்படும் தண்டனையோடு சேராமல் இதுவும் தனியான ஒரு சிறைத்தண்டனையாக உள்ளது. 

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தண்டனை கால வரையறையை கொண்டது. சிறப்பு முகாம் தடுப்பு எந்தவித கால வரையறையையும் கொண்டது அல்ல. க்யூ பிரிவின் கட்டுப்பாட்டுள்ளது.  நீதிமன்றத்திற்கு வெளியே தண்டனை வழங்கும் முறை இந்த சிறப்பு முகாம். எனவே சிறப்பு முகாம் அமைப்பு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான வகையில் அமைந்துள்ளது. இது அப்பட்டமான அரசியலமைப்பு சட்ட மீறல். அதாவது ஒரு குற்றத்திற்கு இரு தண்டனை வழங்கப்படுகின்றது.

அகதிகளாக வந்த ஒரு காரணத்திற்காக, குறைந்த பட்ச மனித உரிமைகள் கூட இல்லாமல், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகச் சட்டங்களை உருவாக்கி அவர்களை சித்தரவதை செய்வது எந்த விதத்தில் நியாயம்?

சிறப்பு முகாம்கள் தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில்(WP 15044/91) உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம் மற்றும் பிரதாப் சிங் வழங்கிய தீர்ப்பைப் பார்க்க வேண்டும். அதாவது,

  • சிறப்பு முகாம்களில் வைக்கப்படுபவர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தபட்டுள்ளதே அன்றி அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
  • சிறப்பு முகாமில் இருப்பவர்கள் தங்கள் குடும்பங்களை வைத்துக்கொள்ள விரும்பினால் அவர்களை அழைத்துக் கொள்ளலாம். அவர்களின் செலவீனங்களையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் சிறைகளில் இருப்பது போல் அடைத்து வைக்கப்படக் கூடாது. சிறை வளாகத்திற்குள் நடமாட அனுமதி இருக்க வேண்டும்.
  • பார்வையாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர். எந்தவித நேரக் கட்டுப்பாடுமின்றி விரும்பிய நேரம் பேசுவதற்கும், பொருட்கள் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்படும்.
  • காவல்துறையினர் வெளிபுறத்தில் மட்டுமே காவலுக்கு இருக்க வேண்டும், தாசில்தார் நிர்வாகத்தில் தான் சிறப்பு முகாம் நிர்வகிக்கப்படும்.
  • நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் சொந்த செலவிலோ அல்லது அரசின் செலவிலோ அனுப்பிவகைக்கப்படும்.(சிறப்பு முகாம் சித்திரவதை முகாம் நூல் பக்கம் 16)

இது தமிழ்நாட்டு அரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு. இது நடை முறைப்படுத்தப்படும் என தமிழ்நாட்டு அரசு நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்றுவரை இவை வெற்று வாக்குறுதிகளாகவே இருக்கின்றன. சிறப்பு முகாம் சிறைச்சாலையை விட மிக மோசமாக உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பின் படி இல்லாமல் மேற்குறிப்பிட்ட வகையில் சிறப்பு முகாம் செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். 

குடும்பங்களில் இருந்து ஆட்களைப் பிரிந்து சிறப்பு முகாம் என்ற கொடுமையில் வைத்திருக்கும் போது அந்தக் குடும்பங்களின் நிலை என்ன ஆகிறது என்ற அக்கறை கூட யாருக்கும் இருப்பதில்லை. குடும்பங்கள் சிதைவை பார்த்தும் எதுவும் செய்யமுடியாத நிலை சிறப்பு முகாம் தடுப்பு வாசிகளை மிக ஆபத்தான முடிவுகளை எடுக்க வைக்கின்றது.

ஈழத்தின் முள்ளிவாய்க்கால், அமெரிக்காவின் குவாண்டமோ சிறைகளின் நிலைக்கும், தமிழ்நாட்டில் தமிழ் அகதிகளுக்கு நடத்தப்படும் அநீதியான சிறப்பு முகாம்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.

உலகம் கண்ணீர்விடும் எந்த மனித உரிமை மீறல்களுக்கும், தமிழ் நிலத்தில் தமிழ் அகதிகள் இப்படிக் கொடுமைப் படுத்தப்படுவது எந்த விதத்திலும்  சளைத்தது இல்லை. இது மிக மோசமான மனித உரிமை மீறல். இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.

சிறப்பு முகாம் பற்றிய பதிவுகள் என்பது மிக அரிதானவை. அதில் ”சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்ற, தோழர் பாலன் எழுதிய நூல் முக்கியமானது.

இறுதியாக,

இலங்கை சிங்கள பெளத்த பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், ஒரே மொழி பேசும் மக்கள் உள்ள நிலம் என்று நம்பி வந்தது தமிழ்நாட்டிற்கு. ஆனால் அவர்கள் இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் இருக்கும், அவ்வளவு ஏன் அடிப்படை மனித உரிமைக்கு எதிராக உள்ள சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்களில் வதைக்கப்பட்டுக்கொண்டுள்ளனர்.

பிள்ளை இல்லா தாய்-தந்தை; தாய்-தந்தை இல்லா பிள்ளைகள், கணவன் இல்லா மனைவி, சகோதரர் இல்லா குடும்பம் என கை தொடும் தூரத்தில் உறவுகள் பிரிக்கப்பட்டு கொடும் சிறையில் கால எல்லை இன்றி தடுக்கப்பட்டு இருப்பதை இன்னும் எத்தனைகாலம் தமிழ்ச் சமூகம் அமைதியாக கடந்து போகப்போகிறது என்று தெரியவில்லை.

உயிரைக் கொடுத்து போராடும் சிறப்பு முகாம் தடுப்பு வாசிகளின் விடுதலைக்கு குரல்கள் கொடுக்க வேண்டும்.

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

சிறப்பு முகாம் என்ற கொடுமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
 

https://utattam.wordpress.com/2021/08/20/201809/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.