Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதிக்கு அமெரிக்கா வைத்த குறியில் குழந்தைகள் பலியான சோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தாலிபன் அறிவித்துள்ளது.தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

கொல்லப்பட்டவர்களில் சிலர் சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியவர்கள். சிலரிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா இருந்திருக்கிறது.

அமெரிக்காவின் "மிகப் பெரிய தவறு"

கொல்லப்பட்டவர்களில் மிகவும் இளம் வயதுடைய குழந்தை இரண்டு வயது சுமையா. அதிக வயதுடைய குழந்தை 12 வயதான ஃபர்சாத்.

"இது தவறு. கொடுரமான தாக்குதல். தவறான தகவலின் அடிப்படையில் இது நடத்தப்பட்டுள்ளது" என்றார் உயிரிழந்தவர்களின் உறவினரான ரமீன் யூசுஃபி.

கொல்லப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை சுமையா, தனது மகள் என்று இமால் அகமதி பிபிசியிடம் தெரிவித்தார்.

காபூல்

அமெரிக்காவுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருப்பதாகவும், விமான நிலையத்துக்குச் செல்வதற்கான தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கப் படைகளுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய நாசர் என்ற மற்றொரு உறவினரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அகமதி கூறினார்.

"அமெரிக்கா மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது" என்றார்

அமெரிக்காவின் மத்திய படைப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. எனினும் 10 பேர் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்த சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு அளித்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட வாகனத்தில் அதிக அளவில் வெடிபொருள்கள் இருந்திருக்கலாம், அது அடுத்தடுத்த வெடிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்துக்கு ஐஎஸ்-கே பயங்கரவாத இயக்கத்தால் ஏற்பட்டிருந்த ஆபத்தை ஒழிப்பதில் தங்களது ஆளில்லா விமானத் தாக்குதல் வெற்றிகரமாக இருந்ததாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு முன்னர் கூறியிருந்தது.

கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தற்கொலை குண்டுதாரியால் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்கா தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ்-கே இயக்கம் பொறுப்பேற்றது.

காபூல்

விமானத்தில் ஏறி நாட்டைவிட்டு வெளியேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பலரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

படைகள் வெளியேறுவதற்கான ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலக்கெடு நெருங்குவதால் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

விமான நிலையத்தை நோக்கி ராக்கெட் தாக்குதல்

திங்கள்கிழமையன்று விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த ராக்கெட்டுகளை அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

காபூலில் வீடுகளுக்கு மேல் புகை பரவியிருப்பதையும் தெருக்களில் கார்கள் எரிவதையும் உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் விளக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காபூல்

பட மூலாதாரம்,REUTERS

"காபூல் விமான நிலையத்தில் அமெரிக்காவின் பணிகளில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அதிபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. படைகளைக் காப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை இரண்டு மடங்காக்க வேண்டும் என்று உத்தரவும் உறுதி செய்யப்பட்டது" என்றார் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி.

இந்தத் தாக்குதில் அமெரிக்கப் படைகள் அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இறந்ததாக இதுவரை எந்தத் தகவலும் ில்லை.

விமான நிலையத்தைப் பாதுகாப்பதற்காக ஏவுகணை தடுப்பு அமைப்பை அமெரிக்கா நிறுவியுள்ளது.

இதனிடையே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நடக்க இருக்கும் கூட்டத்தில் காபூலிலில் இருந்து வெளியேற விரும்பும் மக்களைக் காக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட பகுதியை அறிவிக்க பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிக்கு அமெரிக்கா வைத்த குறியில் குழந்தைகள் பலியான சோகம் - BBC News தமிழ்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கடைசி ட்ரோன் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் ஐயம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
காபூலில் அமெரிக்க ட்ரோன் தாக்குல் நடந்த இடம்
 
படக்குறிப்பு,

காபூலில் அமெரிக்க ட்ரோன் தாக்குல் நடந்த இடம்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா, கடைசி சில நாட்களில் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய செய்தித்தாள்கள் இந்தத் தாக்குதலில் ஒரு ஐஎஸ் செயல்பாட்டாளர் கொல்லப்பட்டார் என்ற செய்தி தவறானது என்று கூறியுள்ளன.

காபூலில் மனிதாபிமான உதவிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று செய்தித் தாளில் செய்தி வெளியானது. வாகனத்தில் வெடிபொருட்கள் இருந்ததாகவும் இது இரண்டாவது குண்டுவெடிப்புக்கு வழிவகுத்தது என்றும் அமெரிக்க ராணுவம் கூறுவதை ஊடகங்கள் மறுக்கின்றன,

இருப்பினும், பென்டகன், தாங்கள் ஒரு "பெரிய அச்சுறுத்தலை" தவிர்த்ததாகவே கூறுகிறது.

ஆகஸ்ட் 29 அன்று, காபூலில் ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஆறு குழந்தைகள் இருந்ததாக மற்ற குடும்ப உறுப்பினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதால் அந்த நேரத்தில் அமெரிக்க ராணுவம் உஷார் நிலையில் இருந்தது.

வீடியோ, புகைப்பட ஆதாரங்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் 20 ஆண்டு காலப் பணி ஆகஸ்ட் 30 அன்று முடிவடைந்தது.

இரண்டு செய்தித்தாள்களும் ஆதாரத்திற்காக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்து, நிபுணர்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளுடன் அதைப் பற்றிச் செய்தி வெளியிட்டன. இதற்குப் பிறகு, வாகனத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கிடைத்த ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்ற முடிவுக்கு அவை வந்தன.

விமான நிலையத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கப் படையினர் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தனர்.

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

விமான நிலையத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கப் படையினர் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தனர்.

தாக்குதலுக்கு முன்னர் கொல்லப்பட்ட நபரின் அடையாளம் தெரிந்திருக்கவில்லை என்றும் ஆனால் பின்னர் அந்த நபர், ஐ எஸ்-ன் ஆப்கானிஸ்தான் பிரிவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுவதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மிலே, இது ஒரு "சரியான தாக்குதல்" என்று கூறினார்.

நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட், அந்த நபர் 43 வயதான இஸ்மராய் அஹ்மதி என்றும் அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த நியூட்ரிஷன் அண்ட் எஜுகேஷன் இன்டர்நேஷனல் என்ற அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் கூறுகிறது. அஹ்மதி அமெரிக்காவிற்குக் குடிபெயர விண்ணப்பித்திருந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

வாகனத்தில் தேவையான பொருட்கள் இருந்தன

ஐஎஸ் அமைப்பின் வசம் இருந்த ஒரு வீட்டை விட்டு வெளியேறிய ஒரு வெள்ளை செடான் வாகனத்தை துரத்தியதை அமெரிக்க இராணுவம் ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் கூறியது. அவர்கள் பல உரையாடல்களை இடைமறித்து ஒட்டுக் கேட்டதாகவும் அந்த வாகனம், பல இடங்களில் நின்று பொருட்களை டெலிவரி செய்ய வேண்டியிருந்ததாகவும் கூறப்பட்டது.

ஒரு பாக்கெட் மிகப் பெரியதாக இருந்ததாகவும், அதில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கருதப்பட்டது என்றும் ஓர் அமெரிக்க அதிகாரி கூறினார்.

பாதுகாப்பு தொடர்பான வீடியோக்களை அவர்கள் ஆய்வு செய்ததில், அஹமதி மடிக்கணினியுடன் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாகப் பெரிய தண்ணீர் கேன்களையும் எடுத்துச் செல்வது தெரிந்ததாகவும் செய்திதாளில் செய்தி வெளியானது.

பின்னர் அஹ்மதி வீட்டிற்கு சென்றார். அமெரிக்க ட்ரோன் ஆபரேட்டர்கள் அவர் மற்றொரு நபருடன் பேசுவதைப் பார்த்து தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அஹ்மதி தாக்கப்பட்டபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்தனர். இரண்டு வயது இளம் குழந்தையும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கப் படையினர்

பட மூலாதாரம்,REUTERS

என்ஈஐ தலைவர் ஸ்டீவன் குவான் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தனது தொண்டு நிறுவனம் வெள்ளை டொயோட்டா செடான் வைத்திருப்பதாக கூறினார்.

இந்த அமைப்பிற்கும் ஐ எஸ்-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்தார். அவர், "நாங்கள் மக்களுக்கு உதவ முயற்சி செய்கிறோம். மக்களைக் கொல்ல நாங்கள் ஏன் வெடிபொருட்களை வைத்திருக்க வேண்டும்?" என்கிறார்.

அடுத்த நாள் ஒரு வெள்ளை டொயோட்டா காரில் இருந்து ராக்கெட் ஒன்று ஏவப்பட்டு தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஐ எஸ் ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது. அது அஹமதி பயன்படுத்தியதைப் போன்ற ஒரு கார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிப்பொருள் இருந்ததற்கான வலுவான ஆதாரம் இல்லை

ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு, வாகனத்தில் வெடிபொருட்கள் இருப்பதைக் குறிப்பதாகப் பென்டகன் கூறியது.

ஆனால் இதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று இரண்டு செய்தித்தாள்களும் கூறுகின்றன.

வாஷிங்டன் போஸ்ட், அந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தின் புகைப்படங்களை நிபுணர்களுக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பியது. ஒரு நிபுணர், ஃபெரென்க் டால்னோகி-வெரெஸ், காரில் கணிசமான அளவு வெடிபொருட்கள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறினார். வாகனத்தின் எரிபொருளில் இருந்து புகை வெளியேறியதால் இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

நிபுணர் பிரையன் காஸ்ட்னர், இரண்டாவது வெடிப்பு அநேகமாக "கார் தீப்பிடித்ததாலோ அல்லது எரிவாயு அல்லது எண்ணெயாலோ ஏற்பட்டிருக்க வேண்டும்" என்று கூறினார்.

நியூயார்க் டைம்ஸ் மூன்று ஆயுத நிபுணர்களை மேற்கோள் காட்டி ஆதாரங்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டுகிறது. அருகிலுள்ள வாசற்கதவில் ஒரே ஒரு கீறல் இருந்தது, சுவர் இடிக்கப்படவில்லை மற்றும் வேறு எந்த வாகனம் கவிழ்ந்ததாகவோ மரங்கள் முறிந்ததாகவோ சேதப்படுத்தப்பட்டதாகவோ தகவல் இல்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா என்ன கூறியது?

ட்ரோன் தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இன்னும் முழுமையான இறுதி அறிக்கையை வெளியிடவில்லை.

ड्रोन

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஊடக செய்திகளுக்கு பதிலளித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கர்பி, அமெரிக்கா "தாக்குதலை மதிப்பீடு செய்து வருகிறது" என்றார். "பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேறு எந்த ராணுவமும் இவ்வளவு கடினமாக உழைக்கவில்லை" என்றும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைவர் மிலே, "இந்த தாக்குதல் வலுவான நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டது, நாங்கள் ஒரு பெரிய அச்சுறுத்தலைத் தடுத்து விமான நிலையத்தில் எங்கள் மக்களை பாதுகாத்தோம் என்று தான் நாங்கள் இன்னும் உறுதியாக நம்புகிறோம்" என்று விளக்குகிறார்.

https://www.bbc.com/tamil/global-58536990

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கன் ட்ரோன் தாக்குதல்: "அது ஒரு சோகமான தவறு" 10 அப்பாவி மக்கள்கொல்லப்பட்டது உண்மை தான், ஒப்புக்கொண்ட அமெரிக்கா

18 செப்டெம்பர் 2021
ட்ரோன் தாக்குதலுக்கு பிறகு எடுக்கப்பட்ட படம்
 
படக்குறிப்பு,

ட்ரோன் தாக்குதலுக்கு பிறகு எடுக்கப்பட்ட படம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரு மனிதாபிமான சேவை உதவியாளர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் இறந்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய கமாண்ட் விசாரணை கண்டுபிடித்துள்ளது.

தாக்குதலில் பலியானவர்களில் ஏழு பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களில் இரண்டு வயதான குழந்தை சுமையா தான் மிகவும் இளையவர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. திடீரென தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால், அப்போது மக்களை மீட்கும் பணிகளும் அதிதீவிரமாக நடந்து கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய 20 ஆண்டு கால ராணுவ செயல்பாடுகளில், கடைசி நடவடிக்கை அது.

ட்ரோன் தாக்குதல் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ட்ரோன் தாக்குதல் - கோப்புப் படம்

அமெரிக்க உளவுத் துறை, அந்த மனிதாபிமான சேவை உதவியாளரின் காரை எட்டு மணி நேரத்துக்கு மேல் பின் தொடர்ந்ததாகவும், அந்த காருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கடும்போக்குவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கமாண்டின் ஜெனரல் கென்னெத் மெக்கென்ஸி கூறினார்.

அந்த கார், இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் கடும்போக்குவாத அமைப்புகளோடு தொடர்புடைய வளாகம் ஒன்றில் காணப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அக்காரின் நகர்வுகள் அக்கடும்போக்கு அமைப்பு காபூல் விமான நிலையத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பான உளவுத் துறை செய்திகளோடு ஒத்துப்போயின.

அக்காரில் வெடிபொருட்களை நிரப்புவது போன்ற காட்சிகள் ஒரு கண்காணிப்பு ட்ரோன் மூலம் கிடைத்தது, ஆனால் உண்மையில் தண்ணீர் பாட்டில்களே நிரப்பப்பட்டன.

ஜெனரல் மெகென்ஸி அந்த ட்ரோன் தாக்குதலை ஒரு "சோகமான தவறு" என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதல் தொடர்பான உளவுத் துறை விவகாரங்களில் தாலிபன்கள் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் கூறினார்.

காபூல் விமான நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த சமைரி அக்மாதி, தன் வீட்டிலிருந்து காரை வெளியே எடுக்கும் போது, காரின் பாதையில் வைத்து அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் நடந்தது.

ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, கார் இரண்டாவது முறை வெடித்தது. அதுவே காரில் வெடிமருந்து இருந்ததற்கான சாட்சி என அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டது, சமைரியின் வீட்டில் காரின் பாதையில் இருந்த ப்ரொபேன் டேங்க் வெடித்ததால் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அஹ்மத் நாசர் என்பவர் அமெரிக்க படைகளில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர். கொல்லப்பட்ட மற்றவர்கள் இதற்கு முன் சர்வதேச அமைப்புகளிடம் பணியாற்றியவர்கள். அவர்கள் அமெரிக்காவில் நுழையத் தேவையான விசாக்கள் வைத்திருந்தனர்.

அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அமெரிக்கா

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, பலரும் அந்நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் கூடினர்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளும் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் என்கிற கடும்போக்குவாத அமைப்பு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. அதில் 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கத்தான் அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபடியே ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒட்டுமொத்த அமெரிக்க ராணுவமும் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியது.

https://www.bbc.com/tamil/global-58606890

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.