Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்துடைப்பு நாடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்துடைப்பு நாடகம்

[12 - July - 2007]

எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு தனது அமைச்சு அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும பணிப்புரைகளை வழங்கியிருப்பதாக நேற்றைய தினம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் செய்தியொன்றைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளும் போது விமானங்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டும்; கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், கூட்டங்கள் மற்றும் சந்திப்புகள் போன்ற உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களில் அவற்றை நடத்த வேண்டும் என்று அமைச்சர் அழகப்பெரும அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு போரைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் போது அரசாங்க நிதியை அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் வரம்புமீறிச் செலவு செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தச் சிக்கன நடவடிக்கையின் நோக்கம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அமைச்சர் அழகப்பெருமவின் அறிவுறுத்தலில் குறை காண்பதற்கு எதுவுமில்லை. அது வரவேற்கப்பட வேணடியதே. ஆனால், அது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாகும் என்பதை நோக்கும் போதே சந்தேகம் பிறக்கிறது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைகின்ற வேளைகளிலெல்லாம் அமைச்சர் பெருமக்களிடமிருந்து இத்தகைய உன்னதமான அறிவுறுத்தல்கள் வந்திருப்பதை காலங்காலமாக நாம் கண்டு வந்திருக்கின்றோம். ஆனால், அவையெல்லாம் பேச்சளவில்தான் இருக்கும். அதற்கு அப்பால் நகர்ந்ததேயில்லை. அரசாங்கம் எதிர் நோக்குகிற பொருளாதார நெருக்குதல்களைத் தணிக்கும் ஒரு முயற்சியாக அமைச்சர்களின் சம்பளங்களை 10 சதவீதத்தால் குறைப்பதற்கான யோசனையொன்றை பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க சில தினங்களுக்கு முன்னர் முன்வைத்திருந்தார். அடுத்து நடைபெறவிருக்கும் அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலும் அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த யோசனை ஆராயப்பட்டு தீர்மானமொன்று எடுக்கப்படுமென்றும் செய்தியாளர்கள் மகாநாட்டில் பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால், அரசாங்கத் தரப்பினரின் எந்தவொரு கூட்டத்திலும் பிரதமரின் யோசனை ஆராயப்பட்டதாகவோ அல்லது தீர்மானமெதுவும் எடுக்கப்பட்டதாகவோ பின்னர் தகவல் எதுவுமில்லை.

இத்தகைய விசித்திரமான சிக்கன நடவடிக்கை அறிவித்தல்களை கருத்தில் எடுப்பதற்கு இன்று மக்கள் தயாராயில்லை. உண்மையிலேயே அமைச்சர் அழகப் பெருமவின் சிக்கனத் திட்டத்தின் மூலமோ அல்லது அமைச்சர்களின் சம்பளங்களை குறைப்பதன் மூலமோ இன்றைய பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எந்தளவுக்கு தணிக்கமுடியும்? அமைச்சர்களின் சம்பளங்களை 10 சதவீதத்தினால் குறைப்பதால் வெறுமனே சில இலட்சம் ரூபாவையே மீதப்படுத்த முடியும். அவர்கள் பெறுகின்ற அலவுன்ஸ்கள் மற்றும் அனுபவிக்கின்ற வரப்பிரசாதங்களுக்கு செலவாகின்ற பெருந்தொகைப் பணத்துடன் ஒப்பிடும் போது இந்த சில இலட்சம் ரூபா எந்தமூலைக்கு? கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்து சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவை ஒரு சிறு அளவிலேனும் கட்டுப்படுத்துவதற்கு அர்த்தமுடைய எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கத்தினால் எடுக்க முடியவில்லை. இதுவிடயத்தில் அரசாங்கத்தின் இயலாமை படுபரிதாபகரமாக அம்பலப்பட்டு நிற்கிறது. பால்மா விலைகள் உயர்த்தப்பட்டமையால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த அது உதவும் என்பதால், பால்மா கம்பனிகளுக்கு மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமென்று கூறுவதற்கு இன்று எமக்கு ஒரு வர்த்தக, பாவனையாளர் விவகார அமைச்சர் தேவைப்படுகிறது.

அமைச்சர் அழகப்பெருமனவின் அறிவுறுத்தல்கள் பற்றிய செய்தியை வாசித்தபோது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 2004 ஏப்ரலில் பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. திருமதி குமாரதுங்க தலைமையிலான அந்த அமைச்சரவையில் பெருந்தோட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சி.பி. இரத்நாயக்க கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது அமைச்சு அலுவலகத்திற்கு கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு வாடகைக்கு அமர்த்திய ஆட்டோ ஒன்றிலேயே வந்திறங்கினார். அவர் ஆட்டோவில் இருந்து இறங்கும்போது எடுக்கப்பட்ட படம் மறுநாள் சகல பத்திரிகைகளிலும் வெளியாகியது. எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கு அரசியல் வாதிகள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் என்பதற்காகவே தான் ஆட்டோவில் அமைச்சு அலுவலகத்துக்கு வருகை தந்ததாக இரத்நாயக்க அன்று கூறியிருந்தார். இன்று அவரின் அந்த எளிமை வாழ்வுக்கு என்ன நடந்தது? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கத்திலும் இரத்நாயக்க அமைச்சராக பதவி வகித்துக் கொண்டேயிருக்கிறார். அவர் ஆட்டோவிலா அமைச்சு அலுவலகத்துக்கு வந்துபோகிறார்?

இன்று உலகிலேயே மிகப்பெரிய அமைச்சரவை இலங்கையிலேயே இருக்கிறது. இந்த அமைச்சரவையைப் பராமரிப்பதற்கு செலவாகின்ற நிதியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு அமைச்சரும் வீட்டு வாடகைக்கான ஒரு இலட்சம் ரூபா அலவன்ஸ் உட்பட பலவகையான வரப்பிரசாதக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். தங்களது வாகனங்களுக்கான வாடகையாக அரசாங்கம் மாதாந்தம் 2 இலட்சம் ரூபாவைச் செலவிடுவதாக எந்தவிதமான நாக்கூச்சமும் இல்லாமல் அமைச்சர்கள் பலர் பகிரங்கமாகவே கூறுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதையடுத்து அமைச்சு அலுவலகங்களுக்காக இப்போது பெரும் எண்ணிக்கையான தனியார் கட்டிடங்களையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு திணைக்களத்தையும் ஒரு சபையையும் மாத்திரம் தனது பொறுப்பில் கொண்ட பல அமைச்சர்கள் இன்று இருக்கிறார்கள். அது மாத்திரமல்ல, அமைச்சுப் பொறுப்புகளே இன்னும் வழங்கப்படாத அமைச்சர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கூட அமைச்சு அலுவலகங்களுக்கு அரசாங்கம் மாதாந்தம் கோடிக்கணக்கில் தனியார் கட்டிடங்களுக்கு வாடகை செலுத்திக் கொண்டிருக்கிறது.

இதுதவிர, வெளிநாட்டுப் பயணங்களுக்கு அமைச்சர்களும் அவர்களது பரிவாரங்களும் கோடிக் கணக்கில் பணத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் இவர்களுக்கு ஒரு களியாட்ட விழாதான். ஜனாதிபதி மாத்திரம் இதுவரை தன்னுடன் கூட்டிச் சென்ற 600க்கும் அதிகமான பரிவாரங்களுக்கும் சேர்த்து வெளிநாட்டுப் பயணங்களுக்காக இதுவரை 400 மில்லியன் ரூபாவை செலவு செய்திருப்பதாக அண்மையில் விபரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக அரசாங்கப் பணம் மட்டுமீறி விரயம் செய்யப்படுகின்ற முறைகளை விபரித்துக்கொண்டே போகலாம். இவற்றைப் பற்றியெல்லாம் கூறுகின்றபோது, ஊடகங்களில் விமர்சிக்கின்றபோது அந்த விமர்சனங்கள் எத்தகைய உணர்வின் அடிப்படையில் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல், பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் சிலர் `நாமும் உண்ணவும் குடிக்கவும் வேண்டும். எமக்கும் ஆசைகள் உண்டு. நாமும் சொகுசு வாகனங்களில் பயணம் செய்யத்தான் வேண்டும்' என்று ஆத்திரத்துடன் பேசுகிறார்கள். உண்மையிலேயே சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு மானசீகமாக அக்கறை இருக்குமானால், தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பதன் மூலம் அதை வெளிக்காட்ட வேண்டும். மற்றும்படி சிக்கன அறிவுறுத்தல்களும் யோசனைகளும் வெறும் கண்துடைப்பு நாடகமே!

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.