Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னதான் செய்ய...? - புத்தகக் காட்சி ரத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் செய்ய...? - புத்தகக் காட்சி ரத்து!

spacer.png

தலைநகர் சென்னையில் இன்னும் நான்கு நாள்களில் 45ஆவது புத்தகக்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைப்பதாக இருந்தது. ஒமிக்ரான் கட்டுப்பாடுகளில் புத்தகக்காட்சிகளுக்கு 10ஆம் தேதிவரை அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பதால், அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள், புத்தகப் பதிப்பாளர்கள். என்னதான் டிஜிட்டல் உலகம் என்றாலும் தாளைக் கைவைத்துப் புரட்டிப் படிக்கும் மனநிலை கொண்ட தீராத புத்தக ஆர்வலர்களும் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 23ஆம் தேதிவரை இந்தப் புத்தகக் காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்று கூறலாம்.

spacer.png

மொத்தம் 800 புத்தகக் கடைகள் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, அதற்கான பாதைகள், இடைவெளி விடப்பட்டு, ஸ்டால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. ஒரே அரங்கு-நான்கு கடை எனும் பெரிய கடைகள் அமைக்கப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு 52 நான்குகடை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக, ஒற்றைக்கடை அரங்கு, இருகடை அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது. அதுவும் தொடர்ந்து நடைபெற்று விரைவில் முடிவடைய இருந்தது.

இவை தவிர, அரசின் பல அரங்குகளும் இந்தப் புத்தகக் காட்சியில் பெரிய அளவில் அமைக்கப்பட்டன.

இதுவரை இல்லாதபடி, தமிழ்நாட்டு அரசின் 5 அரங்குகள் இந்த ஆண்டு புத்தககக் காட்சியில் இடம்பெற முடிவுசெய்யப்பட்டது. அவற்றை அமைப்பதற்கான பணியும் தொடங்கப்பட்டு, ஏறத்தாழ நிறைவுக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

கீழடி தொல்லியல் அகழாய்வை கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு எளிதில் புரியவைத்த தொல்லியல் துறையின் அரங்குக்கு, இந்த ஆண்டு 5 ஆயிரம் சதுர அடி ஒதுக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அவசியமான சுகாதாரத் துறையின் அரங்குக்கும் இடமளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசிக்கென ஓர் அரங்கு, நடுவண் அரசின் ’இயல்பான தொடுதல், கெட்டநோக்கில் தொடுதல்‘ பற்றிய விழிப்பூட்டல் அரங்கு, பொது சுகாதார விழிப்பூட்டல் அரங்குகளுக்கும் விசாலமாக இடமளிக்கப்பட்டது.

spacer.png

பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், முக்கியமாக பேரிடர் மேலாண்மைத் துறையின் ஒப்புதலுக்காக புத்தகக்காட்சி ஏற்பாட்டாளர்கள் அளித்த விண்ணப்பம் மட்டும் நிலுவையில் இருந்தது. வழக்கமான தீயணைப்பு, மின்சாரம் போன்ற அத்தியாவசிய அனுமதிகளை அடுத்து, இதுவும் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் சங்க - பபாசி பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், அரசின் புதிய கொரோனா கட்டுப்பாடானது, சென்னைப் புத்தகக் காட்சி பற்றிய மொத்தக் கனவையும் கலைத்துப்போட்டுவிட்டது.

spacer.png

கடைசி நேரத்தில் அமைச்சகத்தைத் தாண்டி மேலிடத்துக்கு அனுமதிக் கோப்பு அனுப்பப்பட்டபோது, தடங்கல் ஏற்பட்டது.

இதனால், வாசகர்கள், எழுத்தாளர்கள் ஒருபுறமும் பதிப்பாளர்கள், அச்சகத்தார், விற்பனையாளர்கள் மறுபுறமுமாக பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

பபாசியின் சார்பில் புத்தகக்காட்சி குறித்து திட்டவட்டமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. உறுப்பினர்களுக்கு உள்வட்ட அளவில் பூடகமாக நிலவரத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

” நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கும் தகவல் நமது பதிப்புத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இருந்தும் அதை ஏற்றுதான் நடந்துகொள்ளவேண்டும். புத்தககாட்சி அனுமதி சிறிது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசும் பப்பாசியும் சேர்ந்து கண்டிப்பாக நமது பதிப்புத் தொழிலின் வாழ்வாதாரம் மேம்பட இந்த மாதம் புத்தகக் காட்சி நடைபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.” என்று பபாசி சங்க உறுப்பினர்களிடம் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டை எல்லாரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது என்பதை புத்தகத் தொழில்துறையினர் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றனர்.

சிக்கல் என்னவென்றால், சென்னைப் புத்தகக்காட்சிதான் மாநிலம் முழுவதும் உள்ள எழுத்தாளர், பதிப்பாளர், அச்சாளர், விற்பனையாளர் அடங்கிய புத்தகத் துறையினருக்கு முதன்மையான வருவாய் ஆதாரம். இதில் கிடைக்கக்கூடிய தொகையை வைத்து ஆறு மாதங்களுக்காவது சுழற்சி முதலீடாக வைத்துக்கொண்டு, கொரோனா காலத்தில் கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொண்டு, வண்டியை ஓட்டமுடியும் என்பது பெரும்பாலான சிறு பதிப்பாளர்களின் அழுத்தமான கருத்து.

spacer.png

வரக்கூடிய வருமானம், அதன் பயன் ஒருபக்கம் இருக்க, இப்போது அச்சடித்துமுடித்த புத்தகங்களுக்கு நூல்விற்பனைத் தொகைதான் எப்போதும் கைகொடுக்கும். காட்சி நடக்குமா நடக்காதா என அந்தரத்தில் விடப்பட்டுள்ளதால், அச்சாளர்களுக்கு எதைவைத்து அச்சுப்பணத்தைக் கொடுப்பது என திணறிப்போய் இருக்கிறார்கள், பதிப்பாளர்கள்.

அச்சாளர்களும் பதிப்புத்துறையைப் போலத்தான் பெரும்பாலும் சிறுதொழில் பட்டறைகளாகவே நடத்தப்படுகின்றன; இதை நம்பி ஆயிரக்கணக்கிலான அச்சக ஊழியர்களின் வாழ்வாதாரமும் கொரோனா நெருக்கடியில் கேள்வியாகியுள்ளது.

புத்தகக்காட்சியில் 800 அரங்குகள் இடம்பெறுகின்றன எனும்போது, 500 பதிப்பகங்களாவது கடை வைக்கும்; சராசரியாக 2- 5 இலட்சம் ரூபாய் சென்னைக் காட்சி வருவாய் என்று கணக்கிட்டால், அதில் பாதிப்பு என்றால், ஒட்டுமொத்தமாக 10 கோடி ரூபாய் அளவுக்கான ஒரு பெரும் தொழில் விழா முடங்கும் என்பதும் கசப்பான உண்மை. இவ்வளவு தொகை என்பதைவிட, இதன் மூலம் எத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதே கருதப்படவேண்டும் என்கிறார்கள், புத்தகத் துறையினர்.

முந்தைய கொரோனா அலைகளில் சமூகத்தொற்றுக்குக் காரணமான குளிரூட்டப்பட்ட அரங்க நிகழ்வுகள், திறந்தவெளி அரசியல் கூட்டங்கள், அரசு விழாக்கள் இப்போது கட்டுப்பாட்டுடன் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், புத்தகக் காட்சிக்கு வரக்கூடியவர்களை ஓரளவு கட்டுப்பாடுகள் மூலம் நோய்ப்பரவல் அச்சமின்றி பாதுகாப்பாகவும் நடத்திமுடிக்கலாம் என்பது அவர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

இதைத்தாண்டி, சென்னைப் புத்தகக் காட்சிக்காகவே வெளிநாடுகளிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள், பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் என பெரும் திரளான புத்தக ஆர்வலர்களுக்கு, இரண்டு ஆண்டு கொரோனா வெறுமை விலக இந்த ஆண்டு ஆற்றுப்படுத்தலுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அது நடக்குமா?

 

https://minnambalam.com/politics/2022/01/02/20/chennai-45th-book-exhibition-cancelled-book-publishers-shocking

  • கருத்துக்கள உறவுகள்

sddefault.jpg

இங்கெல்லாம் ஒன்றுமில்ல.. 👍என்னப்பா படைப்பாளிகள் வயிற்றில் அடிக்கினம் ..😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழாத புத்தகத் திருவிழா: தமிழின் உயிர்மூச்சான பதிப்புத் துறையை பாதுகாப்பது எப்படி?

spacer.png

ராஜன் குறை 

மீண்டும் துவங்கிவிட்ட கொரோனா தொற்று அலையால் சென்னை புத்தக சந்தை என்று அழைக்கப்படும் புத்தகத் திருவிழா, ஜனவரி 6-ஆம் தேதி துவங்க இருந்தது, தமிழக முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட இருந்தது, அவ்விதம் துவங்கப்பெறாது என்று தெரிகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளில் பணத்தை முதலீடு செய்துவிட்ட பதிப்பகங்கள் பல கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. ஏற்கனவே இரண்டாண்டுகளாக தொற்று பரவலால் பல இன்னல்களை அனுபவித்துவிட்ட பதிப்புத்துறை மீண்டெழ எத்தனிக்கும் போது மீண்டும் புத்தாண்டு தினத்தன்று ஒரு அதிர்ச்சி செய்தியாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை புத்தக திருவிழா அல்லது சந்தை, புக் ஃபேர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது, எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் தமிழகத்தின் மிக முக்கியமான கலாசார நிகழ்வு என்றால் மிகையாகாது. இங்கே புத்தக விற்பனை மட்டும் நிகழ்வதில்லை. ஏராளமான பொதுமக்கள் புத்தகங்களின் இருப்பை, அளப்பரிய பன்மைத்துவம் கொண்ட எழுத்துச் செயல்பாட்டினை, அவற்றின் வெளிப்பாட்டினை அறிந்துகொள்கிறார்கள். நேரில் வரமுடியாதவர்களும்கூட தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொள்கிறார்கள். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் எல்லாம் சந்தித்துக் கொள்கிறார்கள். உரையாடுகிறார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளும் விழா அரங்கத்தில் நடக்கின்றன. இப்படியாக எழுத்துலகம் உயிர்பெற்று எழுந்து அனைத்து மக்களுக்கும் காட்சி தரும் அருமையான நிகழ்வாக இது விளங்குகிறது. உரிய எச்சரிக்கையுடன், பாதுகாப்பு விதிகளுடன் இந்த விழா கூடியவிரைவில் நடக்குமென்றால் பதிப்பகங்கள் இழப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும். இந்த நேரத்தில் தமிழ் பதிப்புத்துறையை குறித்தும், அது சந்திக்கும் சவால்களை குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும்.

spacer.png

பதிப்புத்துறையின் முக்கியத்துவம் என்ன? 

பதிப்புத்துறை என்பதை வர்த்தகம், தொழில் என்று மட்டும் காண முடியாது. அதில் வர்த்தகமும், தொழிலும் கலந்திருந்தாலும் அடிப்படையில் அது ஒரு சமூகத்தின் கலாசார வாழ்வின் உயிர்மூச்சு. தமிழ் சமூகம் நவீனமடைய துவங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது. தமிழ் சமூகத்தை ஒருங்கிணைக்கும் கலானுபவத்தை தருவதாக இசை நாடக மரபு தோன்றியது. இத்தாலிய ஓபரா போல தொடர்ந்து பாடல்களாலேயே கதையை நகர்த்திச்செல்லும் இந்த மரபு பெரும்பாலும் வள்ளி திருமணம் போன்ற புராண கதைகளையே அரங்கேற்றினாலும் அதில் சமகால செய்திகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம்பெற்றன. அச்சில் வெளிவந்த சிந்து முதலிய பாடல் வடிவங்களில் கதைகளை, செய்திகளை கூறும் முறையும் ஒருவர் வாசித்துப் பாட, பலர் கேட்பதை மனதில் கொண்டே உருவானதாகக் கூறலாம். இசை நாடகம் பாய்ஸ் கம்பெனி நாடகமாக, பின்னர் வசனம் பேசும் சமூக நாடகங்களும் தோன்ற, அதற்கிடையே ஊமையாக இருந்த திரைப்படம் பேசும் படமாக மாறியது. எழுத்தறிவு பரவலாகாத சமூகத்திற்கு நவீனத்தின் நுழைவாயில்களாக திரைப்படங்களே அமைந்தன. அதனூடாகவே உரைநடையும், சமூக அரசியல் சிந்தனைகளும் தமிழ் சமூகத்தில் பரவின.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, கிராமப்புறங்களில் ஆரம்பக் கல்விக்கூடங்கள் பரவலாக உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியிலே துவங்கிய இந்த கல்விப் பரவலாக்கம், திராவிட இயக்க ஆட்சியிலே வேகம் கொண்டு, உயர் நிலைப்பள்ளிகளில் இரண்டாம் நிலைக் கல்வி, கல்லூரிகளில் மூன்றாம் நிலைக் கல்வி ஆகியவையும் பரவலாகத் துவங்கின. சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரமடைந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் கல்விப்பரவலில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. பொருளாதார வளர்ச்சியில் மட்டுமன்றி, அதன்மூலம் மனித வள மேம்பாட்டினை சாதிப்பதிலும் தமிழகம் இந்திய மாநிலங்களில் முன்னணி வகிக்கிறது. இது நிகழக் காரணங்களில் ஒன்று, பதிப்புத்துறை என்றால் மிகையாகாது. பதிப்பக செயல்பாடுகளே மக்கள் மனங்களை விகசிக்கச்செய்யும் கவிதை நூல்களையும், உரை நடை ஆக்கங்களையும், பொது அறிவு புகட்டும் அருமையான பல நூல்களையும் மக்களிடையே கொண்டு சேர்த்தன. ஒன்பது வயதில் நான் “அருங்கலைச் செல்வர் நால்வர்” என்ற பெயரில் தாமஸ் ஆல்வா எடிசன், ஜகதீஷ் சந்திர போஸ் உள்ளிட்ட நான்கு அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்கங்களை படித்தது என் மீது செலுத்திய தாக்கம் நினைவில் இருக்கிறது. யார் எழுதியது, எந்த பதிப்பகம் என்பது மறந்துவிட்டது. என் உறவினர் ஒருவர் கொடுத்தார். அதேபோல ஆல்பர்ட் ஷ்வைட்சரின் வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சிறு நூலாக தமிழில் படித்தேன். இவை உதாரணங்கள் மட்டுமே.

spacer.png

திராவிட இயக்கம் 

தமிழகத்தின் கல்விப் பரவலுக்கும், மனித வள மேம்பாட்டிற்கும் முக்கிய காரணம் வெகுஜன அரசியல் இயக்கமாக இருந்த திராவிட இயக்கம் அறிவியக்கமாகவும் இருந்ததுதான். சுயமரியாதை இயக்கமாகவும், திராவிடர் கழகமாகவும், திராவிட முன்னேற்ற கழகமாகவும் வடிவங்கள் கண்ட இயக்கம் ஏராளமான எழுத்தாளர்களையும், ஏடுகளையும், நூல்களையும் உருவாக்கியது. நவீன சிந்தனைகளின் அடிப்படைகளை புனைவின் மூலமாகவும், உரை நடை எழுத்து வடிவங்கள் மூலமாகவும் மக்களிடையே கொண்டு சேர்த்தன இந்த இயக்கங்கள். திராவிட இயக்கத்தவர்கள் பிள்ளைகளுக்கு சாக்ரடீஸ் என்றும், ரூஸோ என்றும் பெயர்களை வைத்தார்கள். வெகுஜன தளத்தில் சிந்தனையாளர்கள் மீதும், அறிவியக்கத்தின் மீதும் திராவிட இயக்கம் மக்களை ஈர்த்ததன் சான்றுகள்தாம் இந்தப் பெயர்கள். அதற்குக் காரணமாக பதிப்புச் செயல்பாடே விளங்கியது. எண்ணற்ற சிறு நூல்கள் எழுதப்பட்டன, அச்சிடப்பட்டன. பயிர்களுக்கு இட்ட உரம் போல நவீன தமிழகத்திற்கு உரமிட்டவையாக அந்த நூல்கள் இருந்தன. விளைந்த பயிரில் உரத்தினை நாம் காண முடியாதது போல, தங்கள் அரும் உழைப்பை நல்கிய அந்த ஏராளமான எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் சமூக நினைவில் இடம்பெறாதவர்களாக உள்ளார்கள். திராவிட இயக்க தலைவர்களாக உருவானவர்களை அறிவோம். தலமட்டத்தில் இயங்கியவர்கள் எத்தனையோ பேர். அத்தனை குரல்களை, சிந்தனைகளை அச்சிட்டு மக்களிடையே கொண்டு சென்றது பதிப்புத்துறை.

நூலக வலைப்பின்னல் 

என்னுடைய வளரும் பள்ளி பருவத்தில் எழுபதுகளில் அரசு நூலகங்களின் வலைப்பின்னல் சிறப்பாக விளங்கியது. திராவிட ஆட்சி அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தது. நூலக வசதியில்லாத அரசு மானியம் பெறும் தனியார் பள்ளி ஒன்றில் படித்த எனக்கு கிளை நூலகங்களே உலகின் சாளரமாக இருந்தன. புனைவிலக்கியத்தை, நாவல்களை அதிகம் படித்தாலும், கூடவே கலைக்களஞ்சியங்களையும், வரலாற்று நூல்களையும், பொது அறிவு நூல்களையும் கிளை நூலகங்களில் படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் கா.அப்பாதுரையார் எழுதிய “தென்னாட்டு போர்க்களங்கள்” என்ற நூலை முழுமையாக ஒருமுறைக்கு இருமுறை படித்தேன். தமிழ் மன்னர்களிடையே நிகழ்ந்த போர்களை குறித்த செய்திகள் என்னுள் தீவிர சிந்தனையை உருவாக்கியது. போர்களை வெறும் வீரம், சாகசம் என்று பார்க்கமல் அதற்கான அரசியல் தேவை என்ன என்று யோசிக்க வைப்பதாக அந்த நூல் விளங்கியது.

பிற்காலத்தில் 2010-ஆம் ஆண்டு நான் கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டபோது கலைஞர் ஆட்சியின் முன்னெடுப்பால் கிராமங்களில் சமூக நூலகங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டேன். விழுப்புரம் மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் காலச்சுவடு வெளியிட்ட சுந்தரராமசாமியின் “புளியமரத்தின் கதை” நூலை நான்கைந்து பேர் எடுத்துப் படித்திருப்பதை பதிவேட்டில் கண்டேன். மனம் பெரிதும் உவகை கொண்டது. என்றாவது ஒரு நாள் அவர்களில் ஒருவர் அந்த நூல் குறித்த என் விமர்சனத்தையும் வாசிக்கக் கூடும். திராவிட முன்னேற்ற கழகம் தன் பெயரிற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வித்திட்டு வந்துள்ளது என்பதற்கு இந்த கிராமப்புற நூலகங்கள் என்ற முன்னெடுப்பு ஒரு உதாரணம்.

பதிப்புத்துறை இன்று சந்திக்கும் சவால்கள் 

தமிழ் சமூகம் பொருளாதார ரீதியில் வளர்ந்ததன், அதனுடன் இணைந்த மனித வள மேம்பாட்டின் பலன் அந்த வளர்ச்சிக்கு ஒரு பக்கபலமாக இருந்த, காரணமாக இருந்த, பதிப்புத்துறைக்கு இன்னம் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு கோடி குடும்பங்கள், இல்லங்கள் உள்ள தமிழகத்தில் சராசரியாக ஒரு புத்தகம் ஐநூறு பிரதிகள் விற்குமா என்பதே கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. இன்று அனேகமாக சமூகத்தின் முழுமைக்கும் எழுத்தறிவு உண்டு. மூன்றாம் நிலையான கல்லூரிக்கல்வியே கணிசமானவர்களுக்கு கிடைக்கிறது. ஆனாலும் வாசிப்புப் பழக்கம் வேரூன்றாதது, புத்தகங்களுக்கு விலை கொடுத்து வாங்குமளவு பொருளாதார தன்னிறைவை பெரும்பாலான குடும்பங்கள் அடையாமலிருப்பது போன்ற காரணங்களால் மக்கள் தொகையும், கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும் பெருகிய அளவு நூல்கள் விற்பனை பெருகவில்லை. இதனால் கணிசமான இலாபத்தில் இயங்கும் பதிப்பகம் என்று ஒன்று இருக்குமா என்று தெரியவில்லை. நட்டத்தில் இயங்காமல், தங்கள் இருப்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் அளவு ஒரு சில பதிப்பகங்களால் இயங்க முடிகிறது. ஆனால் பெரும்பாலான பதிப்பகங்கள் ஆர்வத்திற்காகவும், அர்ப்பணிப்பினாலும் நடத்தப் படுகின்றனவே அல்லாமல் பொருளீட்டுவதற்காக நடத்தப்படுவதில்லை.

இது பதிப்பாளர்கள், புத்தக கடை உரிமையாளர்கள் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இவ்வாறு நட்டத்திலோ, குறைந்த இலாபத்திலோ இயங்கும் பதிப்பகங்களால் எழுத்தாளர்களுக்கு உரிய சன்மானம் தரமுடிவது இல்லை. அதனால் தமிழில் எவ்வளவு ஆற்றல் மிகு எழுத்தாளரானாலும் அதை மட்டும் நம்பி வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான். மிக, மிக எளிமையாக சன்னியாசி போல வேண்டுமானால் வாழலாமே தவிர, ஒரு குடும்பத்தை நல்லபடி நடத்தி பிள்ளைகளை வளர்க்குமளவு எழுத்தின் மூலம் பொருளீட்ட முடியாது. ஆனால் பொருளாதார ரீதியாக வளர்ந்த மேலை நாடுகளில் இது சாத்தியம். ஓரு நூல் பத்தாயிரம் பிரதிகள், இருபதாயிரம் பிரதிகள் விற்குமென்றால் அதிலிருந்து கிடைக்கும் சன்மானத்தில் எழுத்தாளர்கள் வாழ முடியும். ஒரு இலட்சம் பிரதிகள் விற்றால் பதிப்பகங்கள் முன்பணம் கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். ஆனால் அத்தகைய நிலை ஒரு கனவாகத்தான் தமிழகத்தில் இருக்கிறது.

spacer.png

அரசே பதிப்புத்துறையின் புரவலர்! 

ஒரு புறம் அறிவுத்தாகமிக்க, கல்வி கற்ற இளைஞர்களும், குடும்பங்களும் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விலை கொடுத்து நூல்களை வாங்க முடியாமல் இருக்கிறார்கள். சென்னை புத்தக சந்தையில் ஏக்கத்துடன் நூல்களை எடுத்து புரட்டிப் பார்த்துவிட்டு வைப்பவர்களின் பெருமூச்சினால் அரங்கில் வெப்பம் கடுமையாக அதிகரிப்பதை காணலாம்.

மற்றொருபுறம் ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் முழு நேரமாக தங்கள் ஆற்றலை அதற்கு தர முடியாமல் வருமானத்திற்காக பல தொழில்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. புத்தகங்களை அச்சிடுவதற்கு பதிலாக மின்னூலாக வெளியிடுவதன் மூலம் பிரச்சினை தீராது. ஏனெனில் ஒரு நூலின் விலையில் எழுத்தாளரின் வாழ்வாதாரமும் அடங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. புனைவெழுத்தாளர் மட்டுமல்ல. என்னைப் போல ஆய்வாளர்களும் கூட பேராசிரியராக பணியாற்றாமல் எழுத்தில் ஈடுபட முடியாது. இதில் என்ன முரண்பாடு என்றால், அந்த ஆசிரியப் பணியினால் எழுத போதுமான அவகாசம் கிடைக்காது. என்னால் அறிவுத்துறைகள் சார்ந்த பயனுள்ள ஒரு நூலை ஒவ்வொரு மாதமும் தமிழில் எழுத முடியும் என்றாலும் கூட, எந்த பதிப்பதிகத்தாலும் அதை விற்று எனக்கு போதுமான மாதாந்திர வருவாயை தரமுடியாது.

இந்த நிலையில் பொது நூலக இயக்கத்தை, நூலக வலைப்பின்னலை அரசு மேலும் வலுப்படுத்தாமல், கிராமப்புற நூலக திட்டத்தை விரிவாக்காமல், பதிப்பகங்களிடமிருந்து நூல்களை பெற்று அந்த நூலகங்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கப்பெற செய்யாமல், பதிப்புத்துறையினை பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை. தொலைக்காட்சி பெட்டிகள் தரும் கேளிக்கையில் மூழ்கிவிடும் குடும்பங்களையும் வாசிப்பின் பெரும்பரப்பினை எட்டச் செய்ய முடியாது. இது கலாசாரம் சார்ந்த பிரச்சினை அல்ல. உலகின் பிற சமூகங்கள் எவற்றையும் விட தமிழர்கள் நன்றாக அறிந்த உண்மை ஒன்று உண்டு. அது என்னவென்றால் கலாசாரம் என்பதன் மறுபெயர்தான் அரசியல் என்பது. எனவே மக்களாட்சியினை வலுப்படுத்த விரும்பும் அரசு அதன் உயிர்மூச்சான பதிப்புத்துறையை பாதுகாக்க முனைவது இன்றியமையாதது.
 

 

https://minnambalam.com/politics/2022/01/04/16/postponed-book-fair-and-damages-to-publishers

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.