முஸ்லிம் நாடுகளுக்கு நடுவே யூத தேசமான இஸ்ரேல் உருவான சிக்கலான வரலாறு
பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
அனகா பதக்
பிபிசி மராத்தி
5 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தின. அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார்.
இரான், இஸ்ரேல் இடையிலான மோதல், இஸ்ரேலின் வரலாற்றை மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளது.
ஒரு முஸ்லிம் மண்ணில், இந்த யூத தேசம் உருவானது எப்படி? இஸ்ரேல் உருவான வரலாறு மிகவும் சிக்கலானது. அந்தச் சிக்கலான வரலாற்றை எளிய சொற்களில் விளக்குவதற்கு இந்தக் கட்டுரை முயல்கிறது.
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனும் அதன் நேச நாடுகளும் வெற்றி பெற்றிருந்தாலும், பிரிட்டன் பெரும் இழப்புகளைச் சந்தித்தது. தனது காலனி நாடுகளை நிர்வகிப்பது அதற்குச் சிரமமாக மாறியது. எனவே படிப்படியாக தனது காலனி நாடுகளில் இருந்து விலகத் தொடங்கியது.
கடந்த 1948ஆம் ஆண்டு மே மாதம், பாலத்தீன பகுதிகளில் இருந்து பிரிட்டன் விலகிக்கொண்டது. அதைத் தொடர்ந்து, தங்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கப் பல ஆண்டுகளாகப் போராடி வந்த அரபு மக்களுக்கும் யூத மக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது.
அந்த நிலப்பகுதி யாருக்குச் சொந்தமாகும் என்பதே அதில் எழுந்த முக்கியக் கேள்வியாக இருந்தது. அந்தப் போர் இரு தரப்பினருக்கும் சமமானதாக அமையவில்லை. அரபு மக்களுடன் ஒப்பிடுகையில் யூதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், இஸ்ரேல் என்னும் கனவை நனவாக்குவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வந்த ஒவ்வொரு யூதரும், இத்தகைய ஒரு நாளுக்காகத்தான் பல வருடங்களாகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டே வந்திருந்தனர்.
கடந்த 1948ஆம் ஆண்டு மே மாதம் 14 அன்று, இஸ்ரேல் தனது சுதந்திரத்தை அறிவித்தது. கடந்த 2000 ஆண்டுகளில் முதன்முறையாக, ஒரு யூத தேசம் உருவானது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பிராந்தியத்தின் நடுவில், ஒரு யூத நாடு உருவாக்கப்பட்டது.
ஜெருசலேம்
இஸ்ரேலின் கதை ஜெருசலேமில் தொடங்குகிறது. அது 1095ஆம் ஆண்டு. ஒரு குளிர் நிறைந்த நவம்பர் காலைப் பொழுதில், பிரான்சின் கிளெர்மான்ட் நகரில் போப் இரண்டாம் அர்பன் ஆற்றிய ஒரு பிரசங்கம், ஐரோப்பாவின் முகத்தையே மாற்றியது.
அந்தப் பிரசங்கம் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே 200 ஆண்டுகால போரைத் தூண்டிவிட்டது. இந்தப் போர்கள் பின்னர் கிறிஸ்தவர்களால் சிலுவைப் போர்கள் என்றும், முஸ்லிம்களால் ஜிஹாத் என்றும் அழைக்கப்பட்டன.
லத்தீன் திருச்சபை, முஸ்லிம் ஆட்சியிடம் இருந்து புனித பூமி மற்றும் புனித நகரின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்காக 1095 முதல் 1271 வரை போர் புரிந்தது. புனித பூமி என்பதில் இன்றைய இஸ்ரேல், பாலத்தீனம், ஜோர்டான், சிரியா, லெபனானின் சில பகுதிகள் ஆகியவை அடங்கும். புனித நகரம் என்பது ஜெருசலேம்.
பட மூலாதாரம்,Getty Images
திருச்சபைக்கும் முடியாட்சிக்கும் இடையிலான மோதல்கள் மற்றும் திருச்சபையின் பிளவு காரணமாக மத அதிகாரத்தின் மையம் தள்ளாடத் தொடங்கியதும் இதே காலகட்டத்தில்தான்.
போப் இரண்டாம் அர்பன் இதிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியைக் கண்டார். அது, அந்நிய, பாவமான, மத நம்பிக்கையற்ற எதிரியின் மீது போர் தொடுத்து கிறிஸ்தவர்களை ஒன்றிணைப்பதாகும். ஒரு லட்சம் கிறிஸ்தவ ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், படைவீரர்களாகி, 4,500 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செல்வதற்கான ஜெருசலேமை நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். அனைவரும் ஒரே நேரத்தில் செல்லாமல், சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து சென்றனர்.
'புனித பூமி' என்ற பிபிசி ஆவணப்படத்தில், இடைக்கால வரலாற்று ஆசிரியர் முனைவர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ், "அவர்கள் ஐரோப்பாவை கடந்து சென்றபோது, இந்தக் குழுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் யூத மக்களைத் தாக்கிப் படுகொலை செய்தன" என்று கூறியுள்ளார்.
அதற்குள், ஜெருசலேம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கைகளில் வீழ்ந்து 400 ஆண்டுகள் கடந்திருந்தன. அந்தப் பகுதியில் யூதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தபோதிலும் அவர்களின் இருப்பு தொடர்ந்தது.
முதல் சிலுவைப் போரில், புறப்பட்டுச் சென்று சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து வீரர்கள் ஜெருசலேமை கைப்பற்றினர். ஜெருசலேமையும் அதன் சுற்றுப்புறப் பகுதியையும் சுமார் 100 ஆண்டுகள் (1099 முதல் 1187 வரை) ஆட்சி புரிந்தனர். சலாடினின் முஸ்லிம் வீரர்கள் அவர்களைத் தோற்கடித்தனர். அதன் பிறகு, புனித பூமி மீண்டும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தது.
ஜெருசலேம் உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. நாம் வரலாற்றுப் பக்கங்களைப் பார்த்தால், ஜெருசலேம் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
கி.மு.1700களில், கானானியர்கள் அதை ஆட்சி செய்தனர். பின்னர் எகிப்தின் பார்வோன்கள் கைகளில் இருந்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரவேலர்கள் ஆட்சி செய்தனர். இன்றைய யூதர்கள் இவர்களிடம் இருந்துதான் தோன்றியதாக நம்பப்படுகிறது.
கி.மு.1000களின் முதல் பாதியில், தற்போதைய இஸ்ரேல், பாலத்தீனம், ஜோர்டான், லெபனான், சிரியாவின் ஒரு பகுதியாக ஜெருசலேம், இஸ்ரேலிய மக்களின் இரண்டு ராஜ்ஜியங்களின் தாயகமாக இருந்தது. அந்த ராஜ்ஜியங்கள், பண்டைய இஸ்ரேல் மற்றும் யூதா ராஜ்ஜியம். ஜெருசலேம் யூதா ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது.
பண்டைய இஸ்ரேல் ராஜ்ஜியம் எபிரேய வேதாகமத்திலும் சில மத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வரலாற்றுச் சான்றுகள் குறைவாகவே உள்ளன.
காலப்போக்கில், இந்தப் பகுதி பாபிலோனிய, பாரசீக, கிரேக்க (அலெக்சாண்டர் படையெடுத்தபோது), ரோமானிய, பைசாந்திய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கடைசியாக முஸ்லிம் ஆட்சியாளர்களின் கைகளுக்கு வந்தது. அதன் பிறகும்கூட, தொடர்ச்சியான அதிகார மாற்றங்கள் நிகழ்ந்தன. இங்கு கடைசியாக ஆட்சி செய்தவர்கள் ஓட்டோமான்கள்.
முதல் உலகப் போரின்போது, 1918இல் பிரிட்டிஷாரால் இந்தப் பேரரசு அழிக்கப்பட்டது. மேலே விவரிக்கப்பட்ட பகுதி, இஸ்ரேல் தேசம் அல்லது புனித பூமி என்றும் அழைக்கப்படுகிறது. இது முறையே எபிரேய வேதாகமத்திலும், விவிலியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. யூத மதம் இங்குதான் தோன்றியதாகவும், அந்த மதத்தின் சட்டங்கள் இங்குதான் உருவாக்கப்பட்டதாகவும், கடவுள் யூதர்களுக்கு மரபுரிமையாகக் கொடுத்த நிலம் இதுதான் எனவும் யூதர்களால் நம்பப்படுகிறது. அவர்களின் மத நம்பிக்கை, எபிரேய வேதாகமத்தில் உள்ள ஆதியாகமம், யாத்திராகமம் ஆகிய அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்டது.
யூத மக்கள் ஒரு நாள் தங்கள் நிலத்திற்கு (இஸ்ரேல் தேசத்திற்கு) திரும்புவார்கள் என்று விவிலியம் தீர்க்கதரிசனம் கூறுகிறது. யூத அரசின் அரசியல் கருத்தும் இந்த தீர்க்கதரிசனத்தை அடிப்படையாகக் கொண்டது.
யூத மக்கள் ஏன் தங்கள் சொந்த நாட்டை உருவாக்க இந்த நிலத்தை விரும்பினார்கள் என்பதை நினைவுகூர்வதற்காகவே இந்தக் கதைகள் அனைத்தும் கூறப்படுகின்றன.
இந்தப் பகுதியில் வசிக்கும் அரபு முஸ்லிம்கள் இன்று பாலத்தீனர்கள் என்று உலகளவில் அறியப்பட்டாலும், இந்த நிலம் ஆரம்ப காலத்திலேயே பண்டைய கிரேக்க எழுத்தாளர்களாலும், பின்னர் ரோமானிய ஆட்சியாளர்களாலும் பாலத்தீனம் என்றே அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் ஓட்டோமான் பேரரசு காலம் வரை நீடித்தது.
பட மூலாதாரம்,Getty Images
முதல் உலகப் போரும் மாறிய உலக வரைபடமும்
நவீன உலக உறவுகளின் வரலாற்றில் பாலத்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வியத்தகு மாற்றம் முதல் உலகப் போருக்குப் பிறகு நிகழ்ந்தது. இங்கு ஓட்டோமான் பேரரசு ஆட்சியில் இருந்தது. அண்டை நாடுகளான எகிப்து, சிரியாவில் இருந்து அடிக்கடி தாக்குதல்கள் நடந்தன.
கடந்த 1840இல் இந்தத் தாக்குதல்களை நிறுத்த மத்தியஸ்தம் செய்யுமாறு ஓட்டோமான் பேரரசர்கள் பிரிட்டிஷாரை கேட்டுக்கொண்டனர். சில ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளுக்கு ஈடாக பிரிட்டிஷார் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
அதன் பிறகு, அப்பகுதியில் ஓரளவு அமைதி ஏற்பட்டது. மேலும் பாலத்தீனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செழிக்கத் தொடங்கியது. ஓட்டோமான் பேரரசு ஏற்கெனவே ஐரோப்பாவுடன் வர்த்தகம் செய்துகொண்டிருந்தது. ஐரோப்பியர்களுடனான தொடர்பு அதிகரித்ததால், அங்கும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அதுவரை அங்கு யூதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது.
இந்தக் காலகட்டத்தில், ஐரோப்பாவில் சியோனிச இயக்கம் தோன்றியது. அது யூத அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கமாகும். எபிரேய வேதாகமத்தில் 'சியோன்' என்ற சொல் ஜெருசலேமுக்கு பயன்படுத்தப்படுகிறது.
முதல் உலகப் போர் இப்பகுதியில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அப்போது உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பேரரசாக இருந்த ஓட்டோமான்கள், போரில் நுழைந்து, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டனுக்கு எதிராக 'ராணுவ ஜிஹாத்' ஒன்றை அறிவித்தனர். ஜெர்மனியர்களுடன் கூட்டணி அமைத்து, சூயஸ் கால்வாயைக் கைப்பற்றுவதற்காக ஓட்டோமான்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த எகிப்தை தாக்கினர்.
ஆனால், ஓட்டோமான்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது. ஓட்டோமான் பேரரசு துண்டாடப்பட்டது. பாலத்தீனம் ஒரு பிரிட்டிஷ் காலனியாகவும் சிரியாவும் லெபனானும் பிரெஞ்சு காலனிகளாகவும் மாறின.
பாலத்தீனப் பகுதி நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்ததால், அப்பகுதியில் ஒரு சுதந்திர யூத அரசை உருவாக்கக் கோரி ஐரோப்பாவில் குரல்கள் வலுக்கத் தொடங்கின.
பட மூலாதாரம்,Getty Images
பால்ஃபோர் பிரகடனம்
முதல் உலகப் போரில் ஓட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்டபோது, பிரிட்டன் பால்ஃபோர் பிரகடனத்தை வெளியிட்டது. இது ஐரோப்பாவில் சியோனிச இயக்கத்தின் விளைவாக உருவானது. ஒரு யூத அரசுக்கான கோரிக்கைக்கு இதுவே முதல் அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக இருந்தது.
பால்ஃபோர் பிரகடனம் சரியாகக் கூறியது என்ன?
"பிரிட்டிஷ் முடியாட்சி, பாலத்தீனத்தில் யூத மக்களுக்கென ஒரு தேசத்தை நிறுவுவதை ஆதரிக்கிறது. யூத மக்கள் தங்களுக்கான ஒரு தேசத்தைப் பெறுவதற்கு உதவுவதற்குத் தனது சிறந்த முயற்சிகளை எடுக்கும். ஆனால் இது பாலத்தீனத்தில் வசிக்கும் யூதரல்லாத மக்களின் குடியுரிமைக்கோ மத உரிமைகளுக்கோ அல்லது பிற நாடுகளில் வசிக்கும் யூதர்களின் உரிமைகள் மற்றும் அரசியல் அந்தஸ்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்."
இந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து, இந்தப் பிராந்தியத்தில் யூத மக்களுக்கான ஒரு தாயகத்தை உருவாக்கும் பொறுப்பையும், அதன் விளைவாக, பிராந்தியத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் சர்வதேச சங்கம் பிரிட்டனிடம் ஒப்படைத்தது.
அங்கு வரும் யூதர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 1920களுக்கும் 1940களுக்கும் இடையில், யூதர்கள் பெருமளவில் அங்கு வரத் தொடங்கினர்.
குறிப்பாக இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களைப் படுகொலை செய்யத் தொடங்கிய பிறகு, ஐரோப்பாவில் இருந்து ஆயிரக்கணக்கான யூதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தப் பகுதிக்குத் தப்பி வந்தனர்.
பால்ஃபோர் பிரகடனம், யூதர்களுக்கென இங்கு ஒரு தனி 'தேசம்' நிறுவப்படும் என்று கூறியது. இந்தப் பகுதி அப்போதும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தததால், இங்கு வந்த யூதர்கள் ஒரு நாள் இஸ்ரேல் உருவாக்கப்படும் என்று கருதினர். அதேபோல நடக்கவும் செய்தது.
பிரிட்டிஷார் பால்ஃபோர் பிரகடனத்தை முன்வைத்து, யூத மக்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது ஏன்?
"யார்தான் அவர்களிடம் சொல்லாமல் இருந்திருப்பார்கள்? அவர்கள் மீது அவ்வளவு அழுத்தம் இருந்தது" என்று எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நிலு தம்லே கூறினார். அவர் இஸ்ரேல்-அரபு மோதலை உன்னிப்பாக ஆய்வு செய்துள்ளார். அதுகுறித்து ஜெருசலேம் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
"சியோனிச இயக்கம் 1890ஆம் ஆண்டு வாக்கில் பிரிட்டனில் உருவானது. யூதர்கள் பிரிட்டிஷாரின் கடன் வழங்குபவர்களாக இருந்தனர். அந்த இயக்கத்தின் தலைவரான ரோத்ஸ்சைல்ட், மிகுந்த செல்வந்தராக இருந்தார். ஐரோப்பாவின் பல செல்வந்த குடும்பங்கள் இதில் ஈடுபட்டிருந்தன. எனவே, பிரிட்டிஷாரால் அவர்களைப் பகைத்துக்கொள்ள முடியவில்லை. குறிப்பாகப் போர்க் காலத்தில் அரசுக்குப் பணம் தேவைப்பட்டபோது," என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம்,AFP
படக்குறிப்பு,இஸ்ரேல் நிறுவப்பட்டதாக மே 14, 1948 அன்று அறிவிக்கப்பட்டது
இஸ்ரேல் உதயமும் அரபு நாடுகளின் தாக்குதலும்
அதிகரித்து வந்த நாஜி கொடுமைகளின் விளைவாக ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் தப்பி ஓடினர். ஆனால் பல நாடுகள் அவர்களை வரவேற்கவில்லை, கதவுகளை மூடிக்கொண்டன. அதிகரித்து வந்த யூத குடியேற்றம் பாலத்தீன பகுதிகளில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனவே பிரிட்டிஷாரும் யூதர்களின் வருகையைத் தடுக்க முடிவு செய்தனர். யூதர்கள் இப்போது சட்டவிரோதமாக அந்தப் பகுதிக்குள் நுழையத் தொடங்கினர்.
கடந்த 1920 மற்றும் 1940க்கு இடைப்பட்ட காலத்தில், இப்பகுதியில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் ஏற்பட்டன. அவை அடிக்கடி கலவரங்களில் முடிந்தன.
இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது, பாலத்தீனத்தால் தனித்து இருக்க முடியவில்லை. அப்போதைய பிரதமர் சர்ச்சில், பிரிட்டிஷாருக்காக போராடுவதற்கு ஒரு யூத படையை உருவாக்க முன்மொழிந்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமும் ராணுவமும் அதை நிராகரித்தன. ராணுவத்தில் யூதர்கள் மற்றும் அரேபியர்களின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். ஆனால் அரேபியர்கள் பிரிட்டிஷாருக்காக போராடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களின் தலைவரான ஜெருசலேமின் முஃப்தி, நாஜி ஜெர்மனியுடன் சேர்ந்துகொண்டார்.
இந்த நேரத்தில், ஹகானா (பாதுகாப்புப் படை) என்று அழைக்கப்படும் ஓர் உள்ளூர் யூத ராணுவம் உருவாக்கப்பட்டது. அரேபியர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். ஜாஃபாவில் தாக்குதல்கள் தொடங்கின. பிரிட்டிஷார் ராணுவத்தை வரவழைத்தனர். இந்தப் போரில் 5,000க்கும் மேற்பட்ட அரேபியர்கள் உயிரிழந்தனர். ஜெருசலேமின் முஃப்தி அல்-ஹுசைனி, பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் இருந்த சிரியாவுக்கு தப்பிச் சென்றார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு, 1947இல் பிரிட்டன் பாலத்தீன பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைத்தது. ஒரு சுதந்திர யூத அரசு, ஒரு சுதந்திர அரபு அரசு, ஜெருசலேமின் மீது சர்வதேச கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தீர்வை ஐ.நா சபை முன்மொழிந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்ததுடன், யூதர்கள் பாலத்தீனத்திற்குள் நுழைவதைத் தடுக்க முடியாது என்றும் கூறியது.
பட மூலாதாரம்,Getty Images
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் இருந்தது. 1948இல் பாலத்தீனத்தில் இருந்த யூத மக்கள் சுதந்திரத்தை அறிவித்தனர். இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு யூத மக்களுக்குத் தங்களுக்கென ஒரு நாடு கிடைத்தது. இஸ்ரேல் நிறுவப்பட்டவுடன், அது அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இரு சக்திவாய்ந்த நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டது.
பிரிட்டன் பாலத்தீனத்தில் இருந்து வெளியேறியது. யூத மற்றும் அரபுப் படைகள் நாட்டிற்குள் மோதிக்கொண்டன. பாலத்தீன அரேபியர்களுக்கு ஜோர்டான், சிரியா, இராக், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளின் படைகள் உதவின. இந்த ஐந்து நாடுகளும் இணைந்து இஸ்ரேலை தாக்கின.
இஸ்ரேல் நிறுவப்பட்டு ஒரு நாள்கூட ஆகியிருக்கவில்லை. அந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் எட்டு லட்சமாக இருந்தது. அரபு நாடுகளின் படைகள் இஸ்ரேலிய படையைவிடப் பல மடங்கு பெரிதாக இருந்தன.
ஆனால், இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் பக்கம் நின்று, சில முக்கிய போர்களில் வியூகம் வகுப்பதில் பங்கு வகித்த ராணுவ அதிகாரிகள் யூதர்களாக இருந்தனர். இப்போது அவர்கள் இஸ்ரேலுக்காக போரிட்டுக் கொண்டிருந்தனர்.
ஜூன் மாதம், ஐ.நா சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்ரேலும் அரபு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இஸ்ரேலுக்கு தனது விநியோகங்களை மீண்டும் நிரப்பிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. சோவியத் ஒன்றியம் போன்ற ஒரு பெரிய நாடும், பின்வாசல் வழியாக அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தது.
அரபுப் படைகள் சரியாக ஒருங்கிணைக்கப்படவில்லை. ஐந்து நாடுகளின் ஒருங்கிணைந்த படைகளைக் கொண்டுகூட, அவர்களால் இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து அகற்ற முடியவில்லை. ஆனால், அவர்கள் இஸ்ரேலின் சில பகுதிகளைக் கைப்பற்றினர். ஜோர்டான் மேற்குக் கரையையும், எகிப்து காஸா பகுதியையும் கைப்பற்றின. கிழக்கு ஜெருசலேமும் இஸ்ரேலின் கைகளில் இருந்து நழுவியது.
இஸ்ரேல் மேற்கு ஜெருசலேமையும் பாலத்தீனத்தின் பிற பகுதிகளையும் தக்க வைத்துக்கொண்டது. இதுவே முதல் அரபு-இஸ்ரேலிய போர்.
கடந்த 1949இல் ஜோர்டான், எகிப்து, லெபனான், சிரியாவுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தங்களின் எளிய பொருள், யார் தங்கள் விருப்பப்படி செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு அந்த நிலம் கிடைக்கும் என்பதுதான். ஆனால், இந்தப் போருக்காக அவர்கள் ஒரு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. பெரியளவிலான உயிரிழப்புகள் இந்தப் போரில் ஏற்பட்டன.
பட மூலாதாரம்,Getty Images
நக்பா
காஸா பகுதியில் நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, மே 14, 1948 உங்களுக்கு மகிழ்ச்சி அல்லது துயரம் நிறைந்த நாளாக இருந்திருக்கும். பாலத்தீனர்கள் இந்த நாளை நக்பா என்று அழைக்கிறார்கள். அவர்கள் மே 14க்கு பதிலாக மே 15ஐ அனுசரிக்கிறார்கள். இதை பாலத்தீன வரலாற்றின் இருண்ட நாளாகக் கருதுகிறார்கள்.
வரலாற்றாசிரியர் பென்னி மோரிஸ் தனது 'திருத்தப்பட்ட பாலத்தீன அகதிகள் பிரச்னையின் பிறப்பு' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "மே 14, 1948க்கு அடுத்த நாள், இஸ்ரேலிய ராணுவத்திற்கு அஞ்சி ஏழரை மில்லியன் பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களில் பலர் கடத்தப்பட்டனர். பலர் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டுத் தப்பி ஓடினர். அவர்களால் அந்த வீடுகளின் பூட்டுகளைத் திறக்க ஒருபோதும் திரும்பி வர முடியவில்லை. அவர்களின் சாவிகள் இந்த நாளின் நினைவாக வைக்கப்பட்டன."
ஆனால் இஸ்ரேல் இதை ஏற்கவில்லை. பாலத்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் அல்ல, மாறாக அரபு நாடுகளின் படையெடுப்பால் தப்பி ஓடியதாகவே அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல் இந்த மக்களைத் திரும்ப அனுமதிக்கவில்லை. அவர்களின் வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாலத்தீன அகதிகளுக்காக அண்டை நாடுகளில் முகாம்கள் அமைக்கப்பட்டன.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கடந்த 1948ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி, மக்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு தப்பி ஓடினர்
இஸ்ரேலிய - அரபுப் படைகள்
அரேபியர்களை இஸ்ரேல் தோற்கடித்தது அரசியல் களத்தில் ஒரு சுனாமியை போல் இருந்தது. இன்றுவரை, இந்தப் பிராந்தியம் அந்த சுனாமியின் பின்விளைவுகளால் இன்னும் பாதிக்கப்பட்டு வருகிறது.
அரபு நாடுகள் இந்தத் தோல்வியில் இருந்து ஒருபோதும் முழுமையாக மீளவில்லை. அண்டை நாடுகள் தன்னை வரைபடத்தில் இருந்து துடைத்தெறிய முயன்றதை இஸ்ரேல் ஒருபோதும் மறக்கவில்லை. மற்றொரு போர் தவிர்க்க முடியாதது என்பதை இரு தரப்பினரும் அறிந்திருந்தனர்.
இஸ்ரேல் தோற்கடித்த நாடுகளின் படைகள் தங்கள் சொந்த அரசுகளைக் கவிழ்க்கத் தொடங்கின. சிரியா தொடர்ந்து அரசாங்கங்களை மாற்றத் தொடங்கியது.
இஸ்ரேலுக்கு எதிரான போரில் போரிட்ட ஓர் அதிகாரி, மற்ற இளம் அதிகாரிகளுடன் எகிப்தில் ஒரு கிளர்ச்சியை வழிநடத்தி சுல்தானை கவிழ்த்தார். அந்த அதிகாரியின் பெயர் கமால் அப்துல் நாசர். நாசர் 1956இல் எகிப்தின் அதிபரானார்.
அதே ஆண்டில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி, அவர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார். இந்தச் செயல் அவரை அரபு உலகில் ஒரு நாயகனாக்கியது.
சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டாக எகிப்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. ஆனால் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எகிப்து ராஜதந்திர ரீதியிலான ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது.
பட மூலாதாரம்,Alamy
புகைந்த நெருப்பு
கடந்த 1948 போரை எந்தவொரு பெரிய ஆயுதங்களும் இன்றி எதிர்கொண்ட இஸ்ரேல், தனது ராணுவத்தை வலுப்படுத்தத் தொடங்கியிருந்தது. 1965ஆம் ஆண்டுக்குள், அதன் ராணுவம் வலிமை மிக்கதாக மாறியிருந்ததுடன், பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கியிருந்தது. அது அயராது உழைத்திருந்தது.
பத்து லட்சத்துக்கும் அதிகமான யூத குடியேறிகளுக்கு இடம் கொடுக்கப்பட்டதால், மனித வளம் அதிகரித்திருந்தது. இஸ்ரேலுக்கு வரும் குடியேறிகளுக்கு ராணுவத்தில் சேவை செய்வது கட்டயமாக்கப்பட்டிருந்தது.
இப்போது மத்திய கிழக்கில் ஒரு போர் மூண்டால், யார் பிழைப்பார்கள் என்பதை மேற்கத்திய நாடுகள் உணர்ந்திருந்தன. இஸ்ரேலால் குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கேனும் அரபு நாடுகளின் கூட்டுப் படைகளை தனியாகவே எதிர்த்துப் போராட முடியும் என்று அமெரிக்க தலைமைத் தளபதி கூறியிருந்தார்.
கடந்த 1967இல் டெல் அவிவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரி, இஸ்ரேலிய ராணுவம் தலைமைத்துவம், பயிற்சி, பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடங்கள் என அனைத்துத் துறைகளிலும் முன்னெப்போதையும்விட சிறப்பாகத் தயாராகியிருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
பிபிசி மத்திய கிழக்கு ஆசிரியர் ஜெரிமி போவன், "எகிப்தில், நாசர் இஸ்ரேலை பழிவாங்க விரும்பினார். ஆனால் அவர் மற்றும் அவரது கூட்டாளியான சிரியாவின் படைகள் அந்த அளவுக்கு நன்கு பயிற்சி பெற்றிருக்கவில்லை. அவர்கள் வெறுமனே பெரிய வாக்குறுதிகளை மட்டும் அளித்துக் கொண்டிருந்தனர். நாசர் அரபு உலகை வழிநடத்த விரும்பினார். ஆனால் இந்த நாடுகளிடையே ஒற்றுமை இல்லை. அரேபியர்கள் தேசியம் மற்றும் ஒற்றுமை குறித்துப் பேசினார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் பிளவுபட்டிருந்தனர். ஜோர்டானும் சௌதி அரேபியாவும் தங்களுக்கு எதிராக சரி செய்வதாக சிரிய மற்றும் எகிப்திய தலைமைகள் புகார் கூறின," என்று எழுதினார்.
பட மூலாதாரம்,Getty Images
ஆறு நாட்களில் மாறிய மத்திய கிழக்கின் அரசியல்
இஸ்ரேல், சிரியா இடையிலான எல்லைப் பிரச்னைதான் கனன்று கொண்டிருந்த நெருப்புக்குக் காரணம்.
பிபிசி மத்திய கிழக்கு ஆசிரியர் ஜெரிமி போவன் இதுகுறித்துக் குறிப்பிட்டபோது, "சிரியா பாலத்தீன கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது. இந்தக் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை தொடர்ந்து தாக்கி வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களை நிரந்தரமாகத் தடுக்க இஸ்ரேல் நினைத்தது. இந்தக் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்தனர். இஸ்ரேல் இதை 'பயங்கரவாத தாக்குதல்' என்று கூறி பலவந்தமாக பதிலடி கொடுத்தது," என்று எழுதியுள்ளார்.
ஜோர்டானிய தலைவர் ஷா ஹுசைன் இஸ்ரேலுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இஸ்ரேல் தனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அவர் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், 1966 நவம்பரில், ஜோர்டான் ஆக்கிரமிப்பில் இருந்த மேற்குக் கரையில் உள்ள சமுவா கிராமத்திற்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்தன.
ஷா ஹுசைன் அதிர்ச்சியடைந்தார். மூன்று ஆண்டுகளாக இஸ்ரேலுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் அமெரிக்க உளவுத்துறையிடம் கூறினார். இஸ்ரேலிய நடவடிக்கைக்கு முந்தைய நாள் காலையில், மேற்குக் கரையில் எந்தப் பதிலடி நடவடிக்கையும் இருக்காது என்று இஸ்ரேல் தரப்பில் இருந்து தன்னிடம் கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஷா ஹுசைன் மேற்குக் கரையில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். மேற்குக் கரையின் பாலத்தீன மக்கள், தங்கள் துக்கத்திலும் கோபத்திலும் தன்னைக் கவிழ்த்துவிடுவார்கள் என்று அவர் ஏறக்குறைய உறுதியாக நம்பினார்.
தங்கள் ராணுவத்தில் உள்ள நாசரின் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள் என்றும், அதன் விளைவாக இஸ்ரேல் மேற்குக் கரையைக் கைப்பற்றிவிடும் என்றும் அவர்கள் அஞ்சினர்.
இஸ்ரேல், சர்ச்சைக்குரிய பகுதிகளுக்குள் ஆக்ரோஷமாக முன்னேறி, படைகள் இல்லாத இடங்களில் கவச வாகனங்களை ஓட்டி வந்தது. மறுபுறம், சிரியா-இஸ்ரேல் போருக்கான மேகங்கள் திரளத் தொடங்கின. சிரியா, இஸ்ரேல் இடையிலான போர் ஏப்ரல் 7, 1967 அன்று தொடங்கியது.
"இஸ்ரேலிய ராணுவத்திற்கு முன்பாக அரபுப் படைகள் சரிந்து கொண்டிருப்பதாக ஒரு பிரிட்டிஷ் தூதர் கூறினார். இந்த அவநம்பிக்கையால் அதிர்ச்சியடைந்த பாலத்தீன இளைஞர்கள், 'எகிப்திய படைகள் எங்கே?' என்று கேட்டுக் கொண்டிருந்தனர்" என்று ஜெரிமி போவன் எழுதுகிறார்.
நாசர் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வந்தது.
பட மூலாதாரம்,Getty Images
எகிப்திய ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அமீர், தனது படைகளைத்க் தயாராக இருக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் எகிப்திய ராணுவத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே ஏமனில் போரிட்டுக் கொண்டிருந்தனர். ராணுவத்தின் செயல் தலைவர் அன்வர் அல்-காதி, இதை அமீரிடம் தெரிவித்தார்.
அதற்கு, ஜெனரல் அன்வர், தாம் போருக்குச் செல்ல விரும்பவில்லை என்றும், இது வெறும் படைபலத்தைக் காட்டும் செயல் மட்டுமே என்றும் கூறினார்.
எகிப்திய அதிபர் நாசர், யூத அரசுக்கு எதிராகத் துணிந்து நிற்கும் ஓர் அரபுத் தலைவராக உலகம் முழுவதும் அறியப்பட விரும்பினார். அவர் சினாய் எல்லைக்கு படைகளை அனுப்பி, டிரான் நீரிணை வழியாக இஸ்ரேல் செல்வதைத் தடுத்தார்.
நவீன போர் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு மத்தியில் நாசர் நிற்கும் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது. அது, தான் எவ்வளவு வலிமையானவர் என்பதைக் காட்ட அவர் மேற்கொண்ட ஒரு முயற்சி.
ஜோர்டானின் ஷா ஒரு மத நெருக்கடியில் இருந்தார். தன்னைச் சுற்றி நடப்பனவற்றைக் கண்ட அவர், தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது என்ற ஒரேயொரு குறிக்கோளை மட்டுமே மனதில் கொண்டிருந்தார். ஆகையால், அவர் தயக்கத்தோடு நாசருடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
இரு தரப்பினரும் பலவந்தமாக அச்சுறுத்தப்பட்டதால், ஒரு போர்ச் சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. அரபு வானொலி நிலையங்களும் இஸ்ரேலிய நாளிதழ்களும் தினமும் ஒன்றையொன்று அச்சுறுத்திக் கொண்டிருந்தன. இதற்கிடையில், இஸ்ரேல் விரக்தியின் ஆழத்திற்குத் தள்ளப்பட்டது.
பிரதமர் லெவி எஷ்கோலும் கவலைப்பட்டார். மே 28 அன்று அவர் ஆற்றிய உரையால் மக்கள் மேலும் அஞ்சினர். அவர் தனது உரையின்போது தடுமாறினார், அவரால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை.
உரையாற்றிய பிறகு நடந்த ஒரு கூட்டத்தில், இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் பிரதமரை கடுமையாகச் சாடினர். "இன்று உங்கள் மிகப்பெரிய ஆயுதத்தை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அந்த ஆயுதம் மற்றவர்களின் பயம்" என்று பிரிகேடியர் ஜெனரல் ஏரியல் ஷரோன் கூச்சலிட்டார்.
போருக்குச் செல்லும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இராக் ராணுவம் ஜோர்டான் பள்ளத்தாக்கையும் இஸ்ரேலையும் நோக்கி முன்னேறியிருந்தது. எனவே ஜூன் 4 அல்லது 5ஆம் தேதி இஸ்ரேல் தாக்கும் என்று நாசர் கணித்தார். போர் தொடங்கிவிட்டது.
ஜூன் 5ஆம் தேதி காலை 7:45 மணிக்கு, எகிப்து, ஜோர்டான், சிரியா முழுவதும் உள்ள விமான நிலையங்களை அழிப்பதற்காக இஸ்ரேலிய போர் விமானங்கள் விரைந்து சென்றபோது, டெல் அவிவின் சக்திவாய்ந்த தலைவர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இஸ்ரேலிய விமானப் படை பல ஆண்டுகளாக இதற்கெனத் தயாராகி வந்தது. அவர்களின் ஆராய்ச்சி மிகவும் விரிவானதாக இருந்ததால், அரபு ராணுவ அதிகாரிகளின் குரல்களை அடையாளம் காணக்கூடிய ஒரு தனி அமைப்பைக்கூட அவர்கள் உருவாக்கியிருந்தனர்.
அரபு நாடுகளின் ராணுவக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வானத்தில் இருந்து குண்டுகள் விழத் தொடங்கின.
வெறும் ஐந்து நாட்களில், இஸ்ரேல் எகிப்து, ஜோர்டான், சிரியாவின் படைகளை வேருடன் பிடுங்கியது. அது எகிப்திடம் இருந்து காஸா முனை, சினாய் பகுதி ஆகியவற்றையும், சிரியாவிடம் இருந்து கோலன் குன்றுகளையும், ஜோர்டானிடம் இருந்து மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமையும் கைப்பற்றியது.
இரண்டாயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக, யூத மக்களின் புனிதமான இடமாகக் கருதப்படும் ஜெருசலேம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இந்த முறையும் பாலத்தீனர்கள் அங்கிருந்து இடம்பெயர வேண்டியிருந்தது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் நிலைமை 1948இல் இருந்ததைப் போல மோசமாக இருக்கவில்லை.
நாசர் ராஜினாமா செய்தார். ஆனால் மக்களின் எதிர்ப்புக்குப் பிறகு அதைத் திரும்பப் பெற்றார். அவர் இறக்கும் வரை பதவியில் நீடித்தார். அடுத்த அதிபரான அன்வர் சதாத், இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் விளைவாக, அவரது சொந்த மெய்க்காப்பாளர்களே அவரைச் சுட்டுக் கொன்றனர்.
எகிப்தின் ராணுவ தளபதி அமீர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தார். அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
ஜோர்டானின் மன்னர் ஹுசைன் கிழக்கு ஜெருசலேமை இழந்தார். ஆனால் அவரது ஆட்சி அப்படியே நீடித்தது. இரு நாடுகளும் 1994இல் ஓர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சிரியாவின் விமானப்படை தளபதி ஹபீஸ் அல்-அசத் 1970இல் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 2000ஆம் ஆண்டில் அவர் காலமான பிறகு, அவரது மகன் பஷர் அல்-அசத் பொறுப்பேற்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c3ex94v1dxjo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.