Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா?

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா? 

— வி. சிவலிங்கம் — 

–           அரசியல் கட்சிகள் மத்தியில் இணக்கமில்லை. 

–           அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன

–           ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா

–           குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் இல்லை. 

–           திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட பிரதான கட்சிகள் தயாரா

–           சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை ஆட்சியாளர்கள் ஏற்பார்களா

தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் முற்றிலும் வரலாறு காணாதவை. அது போலவே இன்று நடைபெறும் போராட்டங்களும் புதிய வரலாற்றைப் படைக்கின்றன. இவை ஒரு வகையில் அரசியல் புரட்சியைத் தோற்றுவித்துள்ளன. பழமையாகப் புரட்சி என்றால் ஆயுதப் புரட்சியை நினைவூட்டுவார்கள். ஆனால் அரசிடம் காணப்படும் உயிர்கொல்லி ஆயுதங்கள் இரத்தக் களரி ஏற்படுத்துமே தவிர மாற்றத்தைத் தராது மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்க வல்லன என்பதை அனுபவங்கள் காட்டுகின்றன.  

இலங்கையில் தற்போது எழுந்துள்ள போராட்டங்களில் பல அம்சங்கள் முன்னெப்போதையும் விட முன்னேற்றகரமானது மட்டுமல்ல, சமூகங்களில் அரசியல் மாற்றங்கள் தொடர்பாக ஏற்பட்டுவரும் பண்பு மாற்றங்களையும் அடையாளம் காட்டுகின்றன. இன்றைய போராட்டங்கள் தேசிய அளவிலும், அதன் பரிமாணத்திலும் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் தேசிய பொருளாதார புரிதல்களையும் தந்துள்ளன. உதாரணமாக, கொரோனா நோய், இரசாயன பசளை பாவனைக் கட்டுப்பாடு, இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு கைத்தொழில் நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகளில் காட்டப்பட்டுள்ள பாரபட்சம், மருந்துத் தட்டுப்பாடு காரணமாக சாமான்ய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சார விநியோக பிரச்சனைகள் போன்றன சமூகத்தின் சகல பிரிவினரையும் வெவ்வேறு அளவில் பாதித்துள்ளன.  

நாட்டில் வாழும் சமான்ய உழைக்கும் மக்கள் முதல் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வருமானப் படியில் உயர் நிலையிலுள்ள வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்துறை மற்றும் சிவில் அதிகாரிகள் போன்றோர் பொருளாதாரப் பிரச்சனைகளின் தாக்கத்தை உணர ஆரம்பித்துள்ளனர். இதனால் போராட்டங்கள் என்பது வெறுமனே கொழும்பைச் சுற்றியதாகவும், தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டங்களாகவும் இருந்த நிலை மாறி கிராமங்களை நோக்கியதாக மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக விவசாயிகள், சிறு வர்த்தகர், அன்றாட உழைப்பில் வாழ்பவர்கள் என்போர் மதம், மொழி போன்றவற்றைக் கடந்து ஒரே தாக்கத்தை உணர்கின்றனர். இக் கொடுமையான நிலைக்கு யார் காரணம்? என்பதனையும் மிகவும் தெளிவாகவே இன்றைய ஆட்சியாளரை நோக்கித் திரும்பியுள்ளனர். 

தற்போது எழுந்துள்ள பொருளாதாரப் பற்றாக்குறை குறைந்த வருமானத்தைப் பெறும் பிரிவினரையே மிகவும் பாதித்துள்ளது. இப் பிரிவினர் தேசம் தழுவிய ரீதியில் மதம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கடந்து பாதித்துள்ளதால் அவற்றைத் தீர்ப்பதற்கான போராட்டத்தில் இணைந்து செயற்படுவதன் அவசியத்தை அந் நிலமைகளே தீர்மானிக்கச் செய்கின்றன. அதன் காரணமாகவே ‘கோதா வீட்டிற்குப் போ’ என்ற குரல் நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் எழுந்துள்ளது. அதனால் கடந்த காலங்களில் நாட்டில் நிலவி வந்த இனவாதம் என்பது போலியானது என்பதோடு தோற்கடிக்க முடியும், அது அதிகார சக்திகளின் கூட்டுச் சதி என்பதும் மக்களால் புரியப்பட்டுள்ளது. அதனால் ஆட்சியாளர்களால் இனவாதத்தைப் பயன்படுத்த முடியவில்லை. இப் போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாடுகள் சதி செய்வதாக கூற முடியவில்லை. போராட்டங்கள் அவ்வாறான எல்லைகளைக் கடந்து சென்றுள்ளது. சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தைப் பயன்படுத்தி தமது வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிய பௌத்த உயர்நிலை பிக்குகளால் மக்களின் இப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முடியவில்லை. ஏனெனில் இக் கொடுமையான ஊழல் அரசியல்வாதிகளை முன்னணிக்கு அழைத்து வந்தவர்கள் இவர்களே. தமது பணப் பைகளை நிரப்பி மக்களை வறுமைக்குத் தள்ளியதாக மக்கள் குற்றம் சுமத்தும்போது அந்த மக்களின் பக்கத்தில் நிற்க இப் பிக்குகள் தவறியுள்ளனர்.  

இதனால் பௌத்த பிக்குகளால் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முடியவில்லை. ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியவில்லை. சிங்கள, பௌத்த பேராதிக்க சிந்தனைகளைப் பரப்பி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் தத்தமது சொந்தங்கள், நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோருக்கு அதிக வாய்ப்புகளை அளித்து தேசிய செல்வத்தைச் சுரண்டியது மட்டுமல்ல, அவற்றை வெளிநாட்டு வங்கிகளிலும், சொத்துக்களை குவித்தும் வருவது ‘பண்டோரா’ அறிக்கைகள் மூலம் வெளியாகிய நிலையில் இன்றைய ஆட்சியாளர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் கூடவே மக்களால் முன் வைக்கப்படுகின்றன.  

அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி தமது அதிகார துஷ்பிரயோகத்திற்குப் பாதுகாப்புத் தேடி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள ஏற்படுத்திய மாற்றங்கள் நாட்டின் பாதுகாப்பு, இறைமை என்ற போலி வாதங்கள் என்பதை மக்கள் புரிந்துள்ளதால் வெறுமனே ஆட்சி மாற்றம் அல்ல, அரச ஆட்சிப் பொறிமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு புதிய ஆட்சிப் பொறிமுறை உருவாக்கப்பட்டு குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அளவிற்கு மக்கள் கோரிக்கைகள் மாற்றமடைந்துள்ளன. இங்கு எமது கவனத்திற்குரிய அம்சம் எதுவெனில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாகவும், வெளிநாடுகள் சில நாட்டிற்கு எதிராக சதி செய்வதால் பலமான ‘ஹிட்லர்’ போன்ற தேசியவாதி ஒருவர் அவசியம் எனக் கூறி ‘நந்தசேன கோதபய ராஜபக்ஸ’ அவர்களை ஜனாதிபதி ஆக்கினார்கள். இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே சிங்கள பௌத்த போலிப் பெருந் தேசியவாதத்தின் கொடுமை நிறைந்த தோற்றங்களை மக்கள் இனங் கண்டுள்ளார்கள். இதன் விளைவாகவே ஒட்டு மொத்த ராஜபக்ஸ வம்ச அரசியலை நாட்டிலிருந்து அகற்ற வேண்டுமென மக்கள் முழுமையான மாற்றத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளார்கள்.  

ராஜபக்ஸ ஆட்சியாளர்கள் இன்னமும் ராணுவத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதை பிரதமர், ஜனாதிபதி என்போரின் சமீபத்தைய விஷேச உரைகள் உணர்த்துகின்றன. கடந்த காலங்களில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய நாயகர்கள் என ராணுவத்தினரை ஆட்சியாளர்கள் வர்ணித்து வந்தார்கள். உண்மையில் ராணுவத்தினர் மக்களைப் பாதுகாக்கவே தியாகங்களை மேற்கொண்டார்கள் எனில் மக்கள் வாழ்வா? சாவா? எனப் போராட்டம் நடத்தும் வேளையில் ராணுவத்தினர் ஏன் ஊழல் மிக்க அரசியல்வாதிகளைப் பாதுகாத்து வருகிறார்கள்? ஏன் மக்களைத் துன்புறுத்துகிறார்கள்? என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர். ராணுவம் தனது கடமையை அரசியல் யாப்பின் பிரகாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும், மக்களின் கோரிக்கைக்கு மாறாக அதிகாரத்தில் குந்தியிருக்கும் போக்கு மக்கள் இறைமைக்கு முரணானது என மக்கள் கருதுகின்றனர். இவற்றை அவதானிக்கும்போது ராணுவம் ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதாகவும், மக்கள் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் எண்ணுகின்றனர்.  

இலங்கையில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சி என்பது கடந்த காலத்தை விட மிகவும் மாற்றமடைந்துள்ளதை நாம் காணலாம். தனி நபர் வழிபாட்டுக்கு எதிராக அதாவது ‘கோதபய’ போன்ற தனிநபர்களால் மாற்றங்களைத் தர முடியாது என்பதும், அவை தற்போது அரசியல்வாதிகள், கட்சிகள், குழுக்கள் என்பவற்றிற்கு எதிராக மாற்றமடைந்துள்ளது. இம் மாற்றங்கள் கடந்த காலங்களில் மக்களின் கவனத்திற்கு வராத பல அம்சங்களை தற்போது முன்னிறுத்தியுள்ளது.  

அதாவது மாற்றங்கள் வெளிப்படையானதாகவும், பொறுப்புக் கூறுவனவாகவும் இருப்பதோடு, தனி நபரின் கைகளில் அதிகாரக் குவிப்பு ஜனநாயக விரோத நிலமைகளை நோக்கித் தள்ளுவதாகவும், அதன் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிக அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது. ஊழலுக்கெதிராக சட்டங்கள் இயற்றப்பட்டு தேசிய செல்வம் சூறையாடப்படுவது தடுக்கப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். தேசிய அளவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகள் கடந்த 73 ஆண்டுகளாக நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகவிருந்த இனவாதம் தோல்வியை நோக்கிச் செல்வதையும், மக்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு ஆதரவாக மாறிவருவதும், மக்கள் மதம், மொழி, சாதி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து வருவது மிகவும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்குக் கட்டியம் கூறுகிறது.  

தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து சில பிரிவினர் அவ நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதையும் காண முடிகிறது. இன்றைய ஆட்சியாளர்கள் மிக இலகுவாக அதிகாரத்திலிருந்து வெளியேற மாட்டார்கள் என ஒரு சாராரும், இன்னொரு சாரார் தமிழ் மக்கள் இப் போராட்டங்களிலிருந்து விலகியிருக்க வேண்டுமெனவும், சிங்கள மக்களே உருவாக்கிய இனவாத ஆட்சியை அவர்களே அகற்ற வேண்டுமெனவும் கூறி சிங்கள, தமிழ், முஸ்லீம் இணைவதற்கு எதிராக பாரிய தடைகளை விதிக்க எண்ணுகின்றனர். மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் வரலாறு காணாத மாற்றங்கள் காரணமாக அதிகார வர்க்கம் தடுமாற்றத்தில் தள்ளப்பட்டுள்ளதால் எடுக்கும் முடிவுகளின் தாக்கங்கள் இவை என்பதை இவர்கள் காண மறுக்கின்றனர். உதாரணமாக,சமீப காலமாக ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிப்பதாகவும், அதனடிப்படையில் மந்திரிகள் ராஜினாமா செய்தனர். அது மட்டுமல்ல நாடு தழுவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியின் சூழ்ச்சி வலையில் சிக்கவில்லை. அதேபோலவே மக்கள் இச் சட்டங்களை உதாசீனம் செய்து வீதிகளில் ஆயிரக் கணக்கில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் அர்த்தம் என்ன? ஜனாதிபதி அதிகாரம் செயற்படவில்லை. அரசியல் யாப்பு அடிப்படையிலான ஆட்சி தோல்வியை நோக்கிச் செல்கிறது என்பதாகவே அர்த்தங் கொள்ளமுடியும். அது மட்டுமல்ல புதிதாக அமைச்சரவையில் இணைய வரும்படி எதிர்க்கட்சிகளைக் கேட்ட போதிலும் யாரும் முன்வரவில்லை. தனது பதவியை ராஜினாமாச் செய்த முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி நிதி அமைச்சர் வேறு எவரும் முன் வராததால் பதவியை ஏற்பதாக தெரிவித்துள்ளார். அரசாங்கம் பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவு இரண்டு நாட்களுக்குள்ளாகவே மீளப் பெறப்பட்டது.  

நாட்டின் அரசியல் நிலமைகள் இவ்வாறு செல்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் ஜனாதிபதி மூன்று பொருளாதார நிபுணர்களை தமக்கு ஆலோசனை வழங்க நியமித்துள்ளார். இவர்கள் சர்வதேச நாணய சபையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வர். நிபுணர்கள் தேவையான வேலைத் திட்டங்களைத் தயாரித்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான ஆட்சிப் பொறிமுறை இல்லாத நிலையில் அதற்கான வாய்ப்புகள் உண்டா? என்ற கேள்வி எழுகிறது. ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பிரதான அமைச்சர்கள் பலர் ஊழலில் சிக்கியிருப்பதாகவும், இவ்வாறான ஊழல் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் இந்த ஊழல்வாதிகளுடன் எவ்வாறான அரசைத் தோற்றுவிக்க முடியும்? மக்கள் ஊழல் சக்திகளுடன் மீண்டும் ஒரு அரசை அமைப்பதை ஏற்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. 

நாம் இங்கு இரண்டு அம்சங்களில் எமது கவனத்தைச் செலுத்துவது அவசியமாகிறது. அதாவது பொருளாதார அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் அல்லது கடன் வழங்கும் நாடுகள் மத்தியில் நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாயின் ஸ்திரமான ஆட்சி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். எனவே முதலில் அரசியல் நெருக்கடி சுமுக நிலைக்குத் திரும்ப வேண்டும். இம் மாற்றமே சர்வதேச நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பின்புலத்தை வழங்க முடியும். 

அவ்வாறாயின் அரசியல் பேச்சுவார்த்தைகள் நாட்டின் எதிர்கால பொருளாதாரம் தொடர்பாகவும் தீர்மானிக்க வேண்டும். ஆனால் நாட்டின் பொருளாதார திட்டமிடல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் இதுவரை இல்லை. குறிப்பாக ஆளும் கட்சி மத்தியில் திறந்த பொருளாதாரத்தைத் தொடர்ந்து பேணுவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. உதாரணமாக, நாட்டின் முக்கியமான பொருளாதார மையங்கள் அந்நிய நாடுகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு துறைமுக நகர் என்ற பெயரில் சீன உதவியுடன் கட்டப்படும் நகரம் வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்படுகிறது. இந்த துறைமுக நகர் திட்டம் சீனாவின் குடியேற்ற நாடாக இலங்கையை மாற்றிவிடும் ஆபத்து உள்ளதாக பலரும் கருதுகின்றனர். அது மட்டுமல்ல, சீன நெருக்கம் இந்திய நலன்களுக்கு எதிராக மாறினால் மேலும் பல ஆபத்துகள் உண்டு.  

ஆளும் பொதுஜன பெரமுன திறந்த பொருளாதாரத்தை நோக்கிச் செல்கையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சமூக சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை வற்புறுத்துகிறது. அதாவது திறந்த சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்த போதிலும் மிகவும் வலிமையான திறந்த சந்தைப் பொருளாதாரத்தை மேற்பார்வை செய்யும் அரசை நிர்மாணிப்பதாகக் கூறுகிறது. எனவே திறந்த பொருளாதாரம், சமூக சந்தைப் பொருளாதாரம் என்பவற்றிற்கு மத்தியில் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் சில கூறுகளை ஆதாரமாகக் கொண்ட தேசிய பொருளாதாரக் கட்டுமானத்தை உருவாக்கப் போவதாக ஜே வி பி இனர் கூறுகின்றனர்.  

எதிர்காலப் பொருளாதாரக் கட்டுமானம் தொடர்பாக இணக்கமில்லாத போக்கு பிரதான கட்சிகள் மத்தியில் காணப்படுகையில் சர்வதேச நாணயசபையின் ஆலோசனைகளை ஏற்கும் எவரும் பெரும் சோதனைகளுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படலாம். உதாரணமாக, உலக வங்கி தனியார் வர்த்தகத்தை ஆதரிக்கிறது. அதன் மூலமாகவே தேசிய பொருளாதாரம் வளரும் எனக் கூறுகிறது. அதே போலவே அரசின் செலவினங்களைக் குறைப்பது அவசியம் என்ற ஆலோசனையும் வழங்கப்படும். உதாரணமாக, பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகளை ஆதரித்த போதிலும், அவை தேசிய வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வரவு, செலவை வற்புறுத்துகிறது. இன்றைய ஆட்சியாளர்கள் பொருளாதார அடிப்படையில் பாதித்துள்ள மக்களுக்கான கொடுப்பனவுகள் என்ற போர்வையில் பல கோடி பணம் அரசியல் தேவைகளை நோக்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல தேசிய பொருளாதாரம் வளராத போதிலும், நாணயத் தாள்களை அச்சடித்து விநியோகித்து தற்போது பணவீக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதானால் அதனால் பாதிக்கப்படுவது சமான்ய மக்களே. சர்வதேச நாணய சபையின் ஆலோசனைகள் மேலும் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். ஆனால் தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி? என்பது பிரதான கேள்வியாகும்.     

எனவே உலக வங்கியிடம் உதவிகளைக் கோருவதால் நாட்டிப் பாலும் தேனும் ஓடும் என்ற நம்பிக்கையை சில சந்தைப் பொருளாதார அரசியல்வாதிகள் விதைக்கின்றனர். வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை நிலவும் இன்றைய நிலையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன தேசிய நெருக்கடியை தணிக்குமா? உக்கிரப்படுத்துமா? 

( தொடரும்)       
 

 

https://arangamnews.com/?p=7481

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா?அல்லது உக்கிரப்படுத்துமா? – பகுதி 2

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா?அல்லது உக்கிரப்படுத்துமா? – பகுதி 2 

அரசியல் தீர்வு குறித்து தமிழ் தலைமைகள் ஏன் மௌனம்?  

            —- வி. சிவலிங்கம் — 

–           பாராளுமன்றம் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டும். 

–           பிரதமரின் ஆலோசனை அடிப்படையில் ஜனாதிபதி செயற்பட வேண்டும். 

–           சர்வதேச அடிப்படைச் சட்டங்களின் அடிப்படையில் சட்ட இயற்றலில் பாகுபாடு காட்டப்படுவது தடுக்கப்படல் வேண்டும்.  

–           மக்களின் கூட்டுச் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். 

–           எந்த அரசு அமையினும் தேசிய சிறுபான்மை இனங்கள் ஏற்ற விகிதத்தில் மந்திரிசபையில் நியமிக்கப்பட வேண்டும்.  

–           அரச உயர் கட்டுமானங்களில் தேசிய சிறுபான்மை இனங்களின் நியமனம் ஏற்ற விகிதத்தில் அமைதல் வேண்டும்.  

–           சர்வதேச மனித உரிமை அம்சங்கள் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.  

–           கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.   

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் பாராளுமன்றத்திற்குள் அரசியல் பிரச்சனைகளைத் தணிப்பதற்கான முயற்சிகளும், மத்திய வங்கியின் தலைமையில் பொருளாதார பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இம் முயற்சிகள் குறித்து பல்வேறு தரப்பினரின் அபிப்பிராயங்களும் ஓர் குழப்பமான நிலமைகளைத் தோற்றுவித்து வருகின்றன. நாட்டில் அரசியல் ஸ்திரமாக அமையாவிடில் பொருளாதாரத் தீர்வுகள் எதுவும் மாற்றத்தைத் தரமாட்டா. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய சபை போன்றன கடன்களை வழங்குவதற்கான முன் நிபந்தனைகளாக அரசியல் மாற்றங்களை நிச்சயமாக வற்புறுத்தும். ஏனெனில் கடன் வழங்கும் நாடுகள் தமது முதலீடுகளுக்கான வருமானத்தை உறுதி செய்வதையே முதலில் கவனத்தில் கொள்ளும்.  

மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தரும் பாடமென்ன

தற்போது நிலவும் அரசியல் நிலமைகளை அவதானிக்கும்போது நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன. நாட்டில் நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகள் மக்களை வீதிக்கு இழுத்து வந்துள்ள நிலையில் அவை அரசியல் நெருக்கடிகளை மேலும் உக்கிரப்படுத்தியுள்ளன. பிரதமர், ஜனாதிபதி மற்றும் ஒட்டு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு கோரி அவர்களது வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் பாராளுமன்றம் அவற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் பாராளுமன்ற விவாதங்கள் எந்த விதத்திலும் மக்களின் பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரியவில்லை.  

இங்கிருந்தே நாம் பிரச்சனைகளை அவதானிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக தற்போது நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும், விவாதங்களும் இதுவரை காணாத அளவில் பாரிய பண்பு மாற்றங்களைத் தந்துள்ளன. உதாரணமாக 2019ம், 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் முற்றிலும் வித்தியாசமான பிரச்சனைகள் முன் வைக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் பாதுகாப்பையும், சிங்கள, பௌத்த ஏகபோக அதிகார பலத்தையும் வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. தனிச் சிங்கள மக்களின் அதிகரித்த வாக்குப் பலத்தின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும் என்ற அளவிற்கு விவாதங்கள் முன்னிறுத்தப்பட்டன. இதன் மூலம் இலங்கை என்பது பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்பதை முற்றாக நிராகரிக்கும் போக்கு அதிகரித்தது. இதன் விளைவாக தனிச் சிங்கள வாக்குப் பலத்தின் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதோடு, 2020ம் ஆண்டு தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதன் மூலம் சிங்கள, பௌத்த பேராதிக்கத்தின் சட்டங்களை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரானார்கள். இதனடிப்படையில் அரசியல் யாப்பில் 20வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகின.  

மிகவும் வேகமாக சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை நடைமுறைப்படுத்த ராணுவம் துணைக்கழைக்கப்பட்டு அரச உயர் கட்டுமானங்களில் ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். இதன் மூலம் அரச கட்டுமானம் என்ற நிர்வாகப் பொறிமுறை அரசியல் யாப்பு, சட்டரீதியான ஆட்சி, சுயாதீன நீதித்துறை என்பதை அரசியல் மயமாக்கி பாராளுமன்ற ஆட்சி முறை பலவீனமாக்கப்பட்டது. சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம், ராணுவ கலப்புடனான அரச கட்டுமானம் என நாட்டின் அரசுப் பொறிமுறை படிப்படியாக மாற்றம் கண்டது. 

கொரொனாவும்ஊழலும் 

இங்கிருந்தே இன்றைய நாட்டு நிலமைகளை நாம் அவதானிக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் ஆட்சியாளரின் உள் நோக்கங்களை மிக விரைவாகவே அம்பலப்படுத்தியது. கொரோனா நோய்த் தடுப்புத் தொடர்பான முடிவுகள் வைத்திய அதிகாரிகளுக்குப் பதிலாக ராணுவ அதிகாரிகள் மேற்கொண்டார்கள். இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ராணுவ அதிகாரிகளின் உத்தரவுகளுக்குப் பணிந்து செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நோய் தொடர்பாகவும், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வைத்தியர்களின் ஆலோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. அதே போலவே தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து வகைகள், வைத்திய உபகரணங்கள் போன்றன தனியாரால் இறக்குமதி செய்யப்பட்டன. மருந்துகளினதும், உபகரணங்களினதும் தரங்களை நிர்ணயம் செய்யும் சுகாதாரப் பகுதியின் செயற்பாடு முடக்கப்பட்டு தரமற்ற மருந்துகளும்,உபகரணங்களும் தனியாரால் இறக்குமதி  செய்யப்பட்டு மிகப் பெருந்தொகையான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டதோடு மக்களின் சுகாதாரம் அலட்சியப்படுத்தப்பட்டது.   

இவ்வாறு நாட்டின் சகல துறைகளிலும் ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என்பது சர்வ சாதாரணமாகியது. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்தது. நாட்டில் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் சாமான்ய மக்களினதும், தேசிய உற்பத்திக்கும் பயன்படுத்தாமல் வசதிபடைத்த சமூகத்தின் சிறு பிரிவினரின் ஆடம்பர வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் தேவைக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டன. வெளிநாடுகளில் வாழும் கோடிபதிகள் பயன்படுத்தும் வாகனங்கள் இலங்கையிலும் இறக்குமதி செய்யப்பட்டன. போதுமான போக்குவரத்து வீதிகளோ, இதர ஏற்பாடுகளோ இல்லாத நிலையிலும் மிக விலையுயர்ந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் வீதி விபத்துகள் அதிகரித்தன.  

குழு ஆதிக்கத்தின் அவலங்கள் 

இலங்கை அரசியற் கட்டுமானம் சிறு குழுவினரின் ஆதிக்கத்திற்குள் சென்றுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரமும் அதே சிறு குழுவினரின் ஆதிக்கத்திற்குள் சென்றது. ஒரு புறத்தில் கொரானா நோயின் தாக்கமும் அதனால் மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் குறிப்பாக விலைவாசி உயர்வு, உற்பத்திப் பாதிப்பு, வருமானப் பற்றாக்குறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு பிரிவினர் ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனவே நாட்டில் வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறைக்குக் காரணம் அரசு அவற்றை உரிய முறையில் செலவு செய்யத் தவறியதாகும். ஒரு புறத்தில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய அப் பணத்தை வழங்காமல் ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்குப் பெரும் பணம் செலவு செய்தமையால் வெளிநாட்டுச் செலாவணி விரயமாகியது.  

இதனால்தான் அரசு அமைக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலத்திற்குள்ளாகவே அதன் மிகவும் பலவீனமான பொருளாதார திட்டங்களின் தாக்கம் மக்களால் உணரப்பட்டது. சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை மூலதனமாக்கி மக்களின் வாக்குகளை அபகரித்த போலித் தேசியவாதத்தின் உண்மைத் தோற்றம் மக்களால் மிக இலகுவாகவே அடையாளம் காணப்பட்டது. தாமே இந்த அரசைப் பதவிக்கு கொண்டு வந்ததாக இன்று ஏற்றுக் கொள்ளும் சிங்கள மக்கள் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை தாமே ஏற்றுக் கொள்கின்றனர். எனவேதான் தாம் வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதியை, பொதுஜன பெரமுன அரசை நிராகரிக்கின்றனர். அது மட்டுமல்ல தாம் கடந்த 70 ஆண்டு காலத்திற்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து ஓர் நீதியான அரசாங்கத்தை அமைக்க உதவுமாறு கோருகின்றனர்.  

இலங்கையர்‘ என்ற அடையாளத்தை நோக்கி… 

நாடு முழுவதும் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் அரசியல் மாற்றத்தையும் மக்கள் கோருகின்றனர். சகலரும் ‘இலங்கையர்’ என்ற அடிப்படை உணர்வோடு வாழும் வகையில் புதிய அரசியல்  பொறிமுறை ஒன்றின் அவசியத்தை நாடுகின்றனர். இதுவே இன்று காணப்பாடும் பாரிய பண்பு மாற்றமாகும். இப் பண்பு மாற்றத்தை உரிய விதத்தில் நாம் புரிந்து கொண்டால் மாத்திரமே புதிய அரசியலை நோக்கி நாம் செல்ல முடியும். இம் மாற்றங்கள் என்பது வெறுமனே அரசியல் கட்சிகள் மட்டத்தில் அல்லது கல்வியாளர் மட்டத்திலே காணப்பட்ட நிலை மாறி இன்று அவை சாமான்ய மக்களாலும் பேசப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம் இன்றைய நெருக்கடிகள் சகல மக்கள் பிரிவினரையும் தாக்கியுள்ளது. மின்சாரம், எரிபொருள், பொருட்களின் விலை உயர்வு போன்றன சகல வருமானப் பிரிவினரையும் ஒரே விதமாகப் பாதித்துள்ளது. இதனால்தான் மக்களின் சிந்தனையும் ஒரே விதமாக மாற்றம் பெற்று வருகிறது. மக்கள் ஊழலை ஏற்றே வாக்களித்தார்கள். அதிகார துஷ்பிரயோகத்தை ஏற்றே ஆதரித்தார்கள். ஏனெனில் அவை அவர்களது வாழ்க்கையை அதுவரை பாதிக்கவில்லை. இன்று அதே ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்றன மக்களால் ஏற்றுக் கொள்ளும் எல்லைகளைக் கடந்து விட்டன. இதனால்தான் முழுமையான அரசியல் பொறிமுறை மாற்றத்தைக் கோருகின்றனர்.  

போராட்டங்களும், விமர்சனங்களும் 

இலங்கையின் சகல பாகங்களிலும் பொருளாதாரப் பிரச்சனைகள் பாதித்துள்ள நிலையில் மக்களின் போராட்டங்களும் கிராமங்களிலேயே மிகவும் வலிமையாக நடைபெறுகின்றன. ‘கோதா வீட்டுக்குப் போ’ என்ற கோரிக்கை கொழும்பில் மட்டுமல்ல, அம்பாந்தோட்டை வரை பரந்து செல்கிறது. விவசாயிகள், தொழிலாளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், வைத்தியர்கள், அரச ஊழியர்கள் என சகல தரப்பாரும் கிராமப் புறங்களில் போராட்டங்களை விஸ்தரித்துள்ளனர். இன்றைய போராட்டங்களின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ளாத சில பிரிவினர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் நடைபெறும் போராட்டங்களை கேளிக்கை விழாவாக, மத்தியதர வர்க்க பொழுது போக்காக வர்ணனை செய்து கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர். இவை எதுவும் ஆச்சரியமானது அல்ல. ஏனெனில் வர்க்கப் பிளவுகள் உள்ள சமுதாயங்களில் போராட்டங்கள் தொடர்பான விமர்சனங்களும், பார்வைகளும் வர்க்க அடிப்படையிலேயே அமைகின்றன. நாடு எங்ஙணும் வியாபித்து நடைபெறும் இப் போராட்டங்களின் ஒரு பகுதியாக கொழும்பை மையப்படுத்திய போராட்டங்களை அவதானிக்காமல் மேலெழுந்தவாரியாக ஏளனம் செய்வது வரலாறு பலதடவை உணரத்தியுள்ளது. இருபதாவது திருத்தத்தின் மூலம் சர்வாதிகார, குடும்ப ஆதிக்கத்தை நோக்கி அதிகார வர்க்கத்தினரே சென்றனர். இன்று 21வது அரசியல் யாப்பு மாற்றத்தை நோக்கித் திரும்பியிருப்பது மக்களின் போராட்டத்தின் பெரு வெற்றியாகும். 20வது திருத்தத்தின் மூலம் எதைச் சாதிக்கலாம் என நம்பினார்களோ அவர்களே அதன் தோல்வியை ஒப்புக் கொண்டு மீண்டும் 19வது, 21வது திருத்தங்கள் எனப் பேசத் தொடங்கியிருப்பது மக்களுக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.  

இப் பின்னணியில்தான் இம் மாற்றங்கள் தொடர்பாக நடைபெறும் விவாதங்களை நோக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையர்கள் மத்தியில் இப் போராட்டங்கள் மிகவும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்,ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வருவது என முடிவு செய்துள்ளனர். இருப்பினும் இம் முடிவுகள் சட்ட அடிப்படையில் சாத்தியமா?என்ற கேள்விகளும் எழும்பியுள்ளன.   

உதாரணமாக, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்பது அமைச்சர்கள் மீதான பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எனக் கொள்ளலாம். ஏனெனில் அமைச்சர்களே இந் நிலமைகளுக்குப் பொறுப்பானவர்கள்.  இந் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற பாராளுமன்ற சாதாரண பெரும்பான்மை பொதுமானது. அதாவது 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவு இருப்பின் அரசாங்கம் கலைக்கப்படலாம். அவ்வாறான நிலையில் ஜனாதிபதி மாற்று அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பொருட்டு புதிய அமைச்சர்களை நியமிக்கலாம். இதனால் பாராளுமன்றம் ஓர் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்படலாமே தவிர ஜனாதிபதியின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜனாதிபதியின் ராஜினாவைக் கோராது.  

ஜனாதிபதி மீதான குற்றச் சாட்டுகளைச் சுமத்துதல் 

அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த முடியாது. வழக்குத் தொடர முடியாது. ஆனால் பாராளுமன்றம் ஜனாதிபதி மீது குற்றங்களைச் சுமத்தி அதனடிப்படையில் அதாவது அவரால் கடமைகளை மேற்கொள்ள முடியாது எனவும்,அவரது மனநிலை அல்லது உடலாரோக்கியம் போதுமானதாக இல்லை அல்லது அரசியல் அமைப்பு விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தி அல்லது ஊழல் மற்றும் தவறான நடத்தைகளைக் காரணம் காட்டி பதவி விலகுமாறு கோரலாம். ஆனாலும் இத் தீர்மானத்திற்குப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அது மட்டுமல்ல, சில சமயம் பாராளுமன்றத்தின் பாதிப் பேரின் கோரிக்கை போதுமானதாயின் அதனை சபாநாயகர் உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்து விசாரணையைக் கோரலாம். ஜனாதிபதி நீதிமன்றத்தின் சந்தேகங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். இருப்பினும் நீதிமன்றமே அவரின் பதவி தொடர்பாக முடிவு செய்யும்.  

ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 

பாராளுமன்றம் ஜனாதிபதி மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியும். ஏனெனில் அவர் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டுள்ளார். அவரே தனது முடிவுகளுக்குப் பதில் கூற வேண்டும். உதாரணமாக, 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் முதலீட்டாளர்கள் மீதான வரிச் சலுகைகளை அறிவித்தார். இதனால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய பெருந்தொகையான வரியை வரித் திணைக்களம் இழந்தது. இதனால் பொருளாதாரப் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள திறைசேரியிடம் பணம் போதவில்லை. மத்திய வங்கியின் ஆளுநராக ஓர் அரசியல்வாதியை நியமித்தார். மத்திய வங்கி என்பது அரசாங்கத்திற்கு வழிகாட்டியாக செயற்பட வேண்டும். சுயாதீனமாக இயங்க வேண்டும். ஆனால் அரசின் தலையீடு மத்திய வங்கியில் காணப்பட்டதால் நாட்டின் தேவைக்கு அதிகமான அளவில் நாணயம் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. இதனால் பணவீக்கம் அதிகரித்து, நாணய மதிப்பு இறக்கம் ஏற்பட்டு பொருட்களின் விலையும் உயர்ந்தது. இரசாயனப் பசளைகள் இறக்குமதி தடை காரணமாக தேயிலை உற்பத்தி, விவசாய உற்பத்தி குறைந்ததோடு, விவசாயிகளின் வருமானத்திலும் பிரச்சனை ஏற்பட்டது. எரி வாயு பற்றாக்குறை, எரி பொருள் தட்டுப்பாடு, பாலுணவு பற்றாக்குறை மற்றும் உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டது. இவை யாவும் ஜனாதிபதியின் தீர்மானத்தின் விளைவாக நாட்டில் பாரிய பிரச்சனைகளைத் தோற்றுவித்தன. தமது தீர்மானங்களில் தவறுகள் நடந்துள்ளதாக தற்போது ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறாயின் ஜனாதிபதி தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்தியை இழந்துள்ளதாகக் கருத முடியும். இதே ஜனாதிபதி தொடர்ந்து பதவியில் இருந்தால் மக்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக்கூடும் என்பதால் ஜனாதிபதி மேல் பாராளுமன்றம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியும்.  

ஜனாதிபதி மீதான மேலும் பல குற்றங்களைப் பாராளுமன்றம் முன்வைக்க முடியும். உதாரணமாக 20 வது அரசியல் திருத்தத்தின் மூலம் அதிக அதிகாரங்களைப் பெற்ற ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரங்களைப் போதுமான வகையில் பயன்படுத்தவில்லை என்பதோடு, அவ்வாறாக மிக அதிகாரங்களைத் தனி ஒருவர் மீது குவித்து நாட்டில் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தியிருப்பதனால் 20வது திருத்தம் தொடர்ந்தும் செயற்பட முடியாது என்பது மிகவும் வெளிப்படையாகிறது. அதாவது தனி மனிதரிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படுகிறது என்பதற்கு இன்றைய நிலமைகள் மிகவும் உதாரணமாகும். அத்துடன் அதிகாரக் குவிப்பு என்பது ஜனாதிபதியின் இயலாமையையும்,நடைமுறைப்படுத்தல் என்பது தனி மனிதரால் முடியாது என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே 20வது திருத்தம் அகற்றப்படுவதோடு, பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்படும் வகையில் 19வது திருத்தத்தில் மேலதிக மாற்றங்களோடு புதிய 21வது திருத்தம் கொண்டு வரப்படுதல் அவசியமாகிறது.  

நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் நீண்டகாலப் பிரச்சனைகள் தொடர்பாகவும் கவனத்தைத் திருப்பியுள்ளது. உதாரணமாக, தேசிய இனப் பிரச்சனை நாட்டிப் அமைதியின்மையை மட்டுமல்ல, தேசிய ஐக்கியத்தையும் குலைத்துள்ளது. இதன் தாக்கம் தற்போது மக்களால் மிகவும் உணரப்பட்டு வருகிறது. இதனால்தான் ‘இலங்கையர்’ என்ற அடையாளத்தை நோக்கி மக்கள் கவனம் குவிந்து வருகிறது.  

ஆனால் தமிழ் மக்களில் சில பிரிவினர் இன்னமும் இம் மாற்றங்களைக் காண மறுக்கின்றனர். இன்னமும் இனவாத அரசியலிற்குள் தமது தலைகளைப் புதைத்து கடந்த கால சந்தேகங்களை இன்னமும் நியாயப்படுத்தி அதில் அரசியல் குளிர்காய எண்ணுகின்றனர். தமிழ்க் குறும் தேசியவாதத்திலிருந்து மக்கள் மிக வேகமாக விலகி தேசிய அடிப்படையிலான மாற்றங்களை நோக்கிச் செல்கின்றனர். சிறுபான்மைத் தேசிய இனங்களில் பெரும்பான்மையோர் சிங்களப் பிரதேசங்களில் வாழ்வதாலும்,இன்றைய இளைய தலைமுறையினர் பலர் சிங்கள மொழியில் தேர்ச்சியுடையவர்களாக மாறி வருவதாலும் இனவாதிகளுடன் தினமும் போராட்டம் அவர்களின் பிரதேசங்களிலேயே நடத்தி வருகின்றனர். இன்று சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அதன் அடிப்படைகளை இழந்து வருகிறது. நாட்டைக் கொள்ளையிடுவதற்கான சூழ்ச்சிகளாக இனவாதத்ததை மக்கள் காண்கின்றனர். இம் மாற்றங்களை வடக்கு,கிழக்கிலுள்ள குறும் தேசியவாத சக்திகள் காண மறுப்பதோடு, மக்களிடமிருந்து படிப்படியாக அந்நியப்பட்டுச் செல்கின்றனர்.  

இன்றைய அரசியல் சூழலில் குறிப்பாக சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் கொடிய கோலங்கள் மக்களுக்குத் தெரிவதனால் மாற்றங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை மேலும் உரத்துச் சொல்வதற்கும் போராடுவதற்குமான வாய்ப்பான சூழலாக இன்றைய நிலமைகளை நாம் பயன்படுத்த வேண்டும். பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கல், அதிகார பகிர்வு என்ற சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அணுகுமுறையை நோக்கிச் சென்றுள்ளதாக தமிழ் அரசியல் தலைமைகள் உண்மையில் கருதினால் அவற்றை மேலும் வற்புறுத்தி சிங்கள மக்களின் நம்பிக்கையை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பான தருணம் இதுவாகும்.  

( தொடரும் )          
 

https://arangamnews.com/?p=7594

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.