Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு உண்டா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு உண்டா?

  • யூ.எல்.மப்ரூக்
  • பிபிசி தமிழுக்காக
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரணில் விக்கிரமசிங்க

பட மூலாதாரம்,PMD

 

படக்குறிப்பு,

ரணில் விக்கிரமசிங்க

'போலிப் பெரும்பான்மை' மூலம் ரணில் விக்ரமசிங்க - ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். 'மக்களின் விருப்பத்தினை ரணிலுக்குக் கிடைத்த நாடாளுமன்றப் பெரும்பான்மை பிரதிபதிக்கவில்லை' என்பது சுமந்திரனின் கருத்தாக உள்ளது.

அரசியலமைப்பிலுள்ள 'ஒட்டை' வழியாகவே, ரணில் இந்தப் 'போலி'ப் பெரும்பான்மையைப் பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார் என பலரும் விமர்சிக்கின்றனர்.

69 லட்சம் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் போராட்டத்துக்குப் பயந்து - ஜனாதிபதிப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், மக்களால் புறக்கணிக்கப்பட்டு பொதுத் தேர்தலில் தோற்றுப் போய் - தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமுன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ஆகியுள்ளமை - திகைப்பூட்டும் ஆச்சரியமாகும்.

இலங்கை அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் உச்சமானவையாக உள்ளன. இந்த இரண்டு பதவிகளும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்திருக்கின்றன. இதில் விசித்திரமான விடயம் என்னவென்றால், எதிர்பாராத வகையில் ஜனாதிபதி பதவிகள் வெற்றிடமான சந்தர்ப்பங்களில்தான், மேற்படி இரண்டு பதவிகளும் ரணில் விக்ரமசிங்கவுக்கு முதன்முதலில் கிடைத்திருக்கின்றன.

1993ஆம் ஆண்டு மே 01ஆம் தேதி, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ - குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதையடுத்து, பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்க - ஜனாதிபதியானார். இதனால் காலியான பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். அது அவர் பிரதமரான முதலாவது சந்தர்ப்பமாகும்.

இப்போது, ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் பதவியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது அவர் ஜனாதிபதியான முதல் தடவையாகும்.

 

 

line

 

line

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி - அரசியல் நெருக்கடியாக மாறியதையடுத்து, கடந்த மே 09ஆம் தேதியன்று பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். அதனையடுத்து பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ - ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்த இடத்துக்கு ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 40(1) பின்வருமாறு கூறுகிறது. 'ஜனாதிபதியின் பதவி - அவரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் காலியானால் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையுடையவராயுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தல் வேண்டும்'.

இதற்கு அமையவே ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்ட மூன்று நபர்களில் ஒருவரைத் தெரிவு செய்யும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் 134 எனும் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதெல்லாம் நாம் அறிந்த விடயங்களாகும்.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க - போலிப் பெரும்பான்மையின் ஊடாக ஜனாதிபதியானார் என்கிற குற்றச்சாட்டுக்களும், மக்களின் விருப்பத்தினை ரணிலுக்குக் கிடைத்த நாடாளுமன்றப் பெரும்பான்மை பிரதிபதிக்கவில்லை என்கிற விமர்சனங்களும் சரியா? தவறா என்கிற கேள்விகள் விவாதங்கள் உருவாகியுள்ளன.

 

இலங்கை கொடி

இதுகுறித்து அரசிலமைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த இருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுடைய விருப்பு - வெறுப்புகள்தான் அவர்களின் பிரதிநிதிகள் ஊடாக வெளிப்பட வேண்டும்" என்கிறார் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சர்வதேச சட்டத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம். "மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது, இரு தரப்புக்கும் இடையில் உட்கிடையான ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது" என்றும், "அது - 'சமூக ஒப்பந்தம்' என அழைக்கப்படுகிறது" எனவும் அவர் தெரிவிக்கிறார்.

"மக்களின் அடிப்படைச் சுதந்திரம், உரிமைகள், பாதுகாப்பு, மேம்பாடு, முன்னேற்றம், நலன்புரி அம்சங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் அனைத்தும் பாதுகாத்து மேம்படுத்தப்படும் என அந்த ஒப்பந்தம் அமையும். இதனடிப்படையிலேயே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். இது 'மக்கள் ஆணை' அல்லது 'ஜனநாயகத்தின் அடிப்படை' எனக் கூறப்படுகிறது.

மக்களின் விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையில்தான் ஆட்சி அமைய வேண்டுமென ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகின்றது.

சிலவேளை ஆட்சியாளர்களின் நடவடிக்கை காரணமாக, மக்களின் அடிப்படைச் சுதந்திரம், உரிமைகள், பாதுகாப்பு, மேம்பாடு, முன்னேற்றம், நலன்புரி அம்சங்கள் மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் முறிவடையும். அப்போது 'ஆட்சியாளர்கள் - மக்கள் பிரதிநிதிகள் இல்லை' எனும் நிலை ஏற்படும் என்பது கோட்பாடாகும்.

தேர்தல்களின் போது மக்கள் தமது இறைமையை தமது பிரதிநிதிகளுக்கு வழங்குகின்றனர். இலங்கை ஒரு குடியரசு என்பதனால் - இங்கு மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சியே நடைபெறுகிறது.

மக்களுக்கும் - மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தமானது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் 5 வருடங்களைக் கொண்டதாக இருக்கும் என அரசியலமைப்பு கூறுகின்றது.

 

ரணில்

பட மூலாதாரம்,PMD

 

படக்குறிப்பு,

பதவியேற்கும் ரணில்.

'அரசியலமைப்பின் கறுப்பு எழுத்துக்கள் மாத்திரம் - மக்களின் இறைமையினைத் தீர்மானிக்க முடியாது. யதார்த்தத்திலும் நடைமுறையிலும் உள்ள விடயங்களே அதனைத் தீர்மானிக்கும்' என்கிற ஓர் அரசியல் கோட்பாடு உண்டு என்கிறார் அவர்.

எனவே அரசியலமைப்பை பொருள்கோடல் செய்ய வேண்டிய கடமை நீதித்துறையைச் சென்றடைகிறது. அரசியலமைப்பை நீதித்துறை பொருள் கோடல் செய்யும் போது, மக்களின் இறைமையை பாதுகாக்கும் அடிப்படையில் நடந்து கொள்தல் வேண்டும். அவ்வாறு பொருள்கோடல் செய்யாமல் அரசியலமைப்பின் எழுத்துக்களுக்கு பொருள் கொண்டால், அரசியலமைப்பியம் தோற்றுவிடும். ஆனாலும் அரசியலமைப்பு பாதுகாக்கப்படும்," என சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் கூறுகின்றார்.

"இலங்கையைப் பொறுத்த வரையில் இப்போது நடைமுறையில் மக்களின் எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்துள்ளன, தேவைகள் நிறைவேற்றப்படவில்லை, மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சியாளர்கள் செயற்படவில்லை. இந்த நிலைவரத்தை அரசியலமைப்பின் கறுப்பு எழுத்துக்களின் படி பார்த்தால், அனைத்தும் சரியாக நடப்பதாகவே தோன்றும். ஆனால் யதார்த்தத்தைப் பிரதிபலிக்காத அரசியலமைப்பு தோல்வி கண்டதாகிவிடும்" என அவர் குறிப்பிட்டார்.

"மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்புக்கு பொருள் கொள்ளப்பட்டால், நாடாளுமன்றம் தற்போது மக்களுடைய யதார்த்தமான அபிலாசைகளைப் பிரதிபலிக்கவில்லை என்று சொல்ல முடியும்".

 

இலங்கை

"இது இலங்கையினுடைய ஜனநாயக கட்டமைப்பு, ஜனநாயக மரபு, ஜனநாயக பாரம்பரியம் போன்றவற்றின் தோல்வியே தவிர - அரசியலமைப்பின் தோல்வியல்ல" எனவும் ஹக்கீம் விவரித்தார்.

உச்ச நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தலாம்

"பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில், எந்தவொரு இலங்கைப் பிரஜையும் உச்ச நீதிமன்றில் தன்னுடைய அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்க செய்ய முடியும்" என்கிறார் சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி ஹக்கீம்.

"அதாவது "நாட்டின் அதியுட்ச சட்டமான அரசியலமைப்பு, எனது அடிப்படை உரிமையை, மக்கள் ஆணையை, இறைமையை பாதுகாக்கவில்லை" எனக் கூறி, அரசியலமைப்பின் 12(1)இன் கீழ் சாட்டுதல் செய்து மனுவொன்றைத் தாக்கல் செய்யலாம். அப்போது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்தின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் பொருள்கொள்ள வேண்டுமே தவிர, எழுத்துக்களின் அடிப்படையில் பொருள்கொள்ள முடியாது. அப்படி உரிய முறையில் பொருள் கொண்டால், 'இது ஜனநாயகத்தையும், மக்களின் உண்மையான அபிலாசைகளையும் பிரதிபலிக்கவில்லை' என நீதிமன்றம் கூறும். ஆனால் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறோ அல்லது நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவை ரத்துச் செய்யுமாறோ உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது".

"ஏனென்றால் சட்டவாக்க சபையான நாடாளுமன்றம், நிறைவேற்றுத் துறையான ஜனாதிபதி மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்துவமான துறைகளாக செயற்பட முடியுமே தவிர, ஒரு துறை - இன்னொரு துறையில் தலையீடு செய்ய முடியாது. உதாரணமாக நாடாளுமன்றம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என, நீதித்துறை கூற முடியாது," என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பும் திருத்தங்களும்

"நமது அரசியலமைப்பு 20 தடவை திருத்தப்பட்டுள்ளது. அநேகமாக ஆட்சிக்கு வந்தவர்கள் தமது விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையிலும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவுமே அரசியலமைப்பைத் திருத்தினார்கள். அரசியலமைப்பின் ஊடாக மக்களின் உரிமை, சுதந்திரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஒற்றுமை, பன்மைத்துவத்தைப் பாதுகாத்தல், இனப் பிரச்சினை மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல் போன்ற நோக்கங்களுக்காக அரசியலமைப்பு திருத்தப்படவில்லை.

 

ராணுவம்

13ஆவது திருத்தம் (மாகாண சபை முறைமை) மட்டும் இதற்கு விதிவிலக்காக அமைந்துள்ளது.

மேலும் 17 மற்றும் 19ஆவது திருத்தங்கள் அதிகாரங்களைக் குறைப்பனவாக அமைந்துள்ளன. ஜனாதிபதிக்கான அதிகாரங்களை நாடாளுமன்றுக்கு வழங்குவனவாக அமைந்திருந்தன.

எனவே மக்களுக்குத் தேவையானதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியதாகவும் அரசியல் அமைப்பைத் திருத்த வேண்டும். அது எவ்வாறெனில், இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து இன்று வரையுள்ள தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிதாக அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு பன்மைத்துவ அடிப்படையில் தீர்வு வழங்கக் கூடிய வகையில் அரசியலமைப்பு அமைதல் வேண்டும். மேலும் கட்சிமுறை அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காத அரசியலமைப்பாக அது இருக்க வேண்டும். பொருளாதார ரீதியான தீர்மானங்களுக்கு பதில் சொல்லும் வகையிலான அரசியலமைப்பாகவும் இருக்க வேண்டும். அதாவது அரசியல் ரீதியாக பொருளாதார நடைமுறைகளைத் தீர்மானமாக எடுக்கும் (Political economy) நிலையிலிருந்து அரசியலமைப்பு சார் பொருளாதாரம் (Constitutional economy) எனும் கருத்து நிலைக்கு மாற்றமடைதல் வேண்டும். அதாவது பொருளாதார ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்காக வழிமுறைகளையும் வழிகாட்டிக் கோட்பாடுகளையும் அரசியலமைப்பு குறிப்பிடுதல் வேண்டும்".

"இந்த ஏற்பாடுகள் இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கிறதா? இல்லையா எனக் கேட்டால், இருக்கிறது".

"அரசியலமைப்பின் 6ஆவது அத்தியாயத்தில் 'அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும்' எனும் தலைப்பில் உள்ளது. கொள்கைகளை வகுக்கின்ற போதும் சட்டங்களை ஆக்குகின்ற போதும் - நாடாளுமன்றமும் அமைச்சரவையும் 06வது அத்தியாயத்தைப் பின்பற்ற வேண்டும் என கூறுகிறது. ஆனால், அந்த அத்தியாயம் பின்பற்றப்படுவதில்லை. ஆனாலும் அதனைப் பின்பற்றாமல் விட்டால், அதற்காக நீதிமன்றத்தில் அதனைக் கேள்விக்குட்படுத்த முடியாது என்றும் அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அரசியலமைப்பின் அந்த ஏற்பாடுகள் அர்த்தமற்றவையாக மாறிவிட்டன".

"அரசியலமைப்பின் 06ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பின்பற்றாமல் விடும் போது, அதனை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தும்படியாக மாற்றினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டிவிடும். அரசியலமைப்பின் 06ஆவது அத்தியாயத்தில் இலங்கையில் தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கிட்டத்தட்ட தீர்வுகள் உள்ளன" என அவர் விளக்கமளித்தார்.

 

ரணில் விக்கிரமசிங்க

பட மூலாதாரம்,PMD

"இலங்கை வரலாற்றில் தற்போதைய போராட்டக்களம் என்பது ஒரு சாதனையாகும்" எனக்கூறுகின்ற ஹக்கீம்; "இந்தப் போராட்டம் - மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார்.

"அது அர்த்தமுள்ளதாக மாற வேண்டுமென்றால், மக்கள் - அரசியல் ரீதியான விழிப்புணர்ச்சியைப் பெறுதல் வேண்டும். தங்களுடைய அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான அடிப்படைகளை மக்கள் விளங்கிக் கொள்தல் வேண்டும்" என சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் வலியுறுத்தினார்.

அரசியலில் மக்கள் முதிர்ச்சியடையவில்லை - பேராசிரியர் சர்வேஸ்வரன்

'போலிப் பெரும்பான்மை மூலமாக - ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார்' எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் ஆர். சர்வேஸ்வரனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எனும் வாதம் ஒன்று இருந்தாலும், அதற்கு மறுவாதமாக; 'கொழும்பு மாவட்டத்திலுள்ள மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் விட்டிருந்தாலும் கூட, இலங்கை முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் அவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்' என, ரணில் தரப்பு கூற முடியும்" என்றார்.

"ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என்பது எதிர்பார்க்கபட்டதுதான். ஆனாலும் இந்தளவுக்கு பெருவெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படவில்லை".

"நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அவர்களின் பிடியை கட்சிகளுக்குள் இழந்து விட்டனர். ஜே.வி.பியை தவிர ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தத்தமது கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு மாறாக வாக்களித்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது. அதனால்தான் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளைப் பெற்றார்" என, பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

"ரணிலுடன் போட்டியிட்ட டளஸ் அழகப்பெருமவைப் பொறுத்தவரையில் அவர் ரணிலைப் போல் படித்த, செல்வாக்குப் பெற்ற நபரில்லை. மேலும், தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பெரிதாக அறியப்பட்டவராகவும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவின் அபார வெற்றிக்கு அதுவும் காரணமாகும்".

"ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் போது, அந்தப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் எனவும், அவர் முந்தைய ஜனாதிபதியின் மீதமுள்ள பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக இருப்பார் எனவும் அரசியலமைப்பு கூறுகிறது.

அரசியலமைப்பில் கூறப்பட்டதற்கிணங்கவே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அரசியலமைப்பை அவர் துஷ்பிரயோகம் செய்து இந்தப் பதவியை அவர் அடையவில்லை" என, பேராசிரியர் சர்வேஸ்வரன் குறிப்பிட்டார்.

 

ரணில் விக்கிரமசிங்க

பட மூலாதாரம்,PMD

 

படக்குறிப்பு,

ரணில் விக்கிரமசிங்க

"69 லட்சம் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக வந்த கோட்டாபய ராஜபக்ஷவை, மூன்று வருடங்கள் நிறைவடைவதற்குள் மக்கள் விரட்டியடித்து விட்டார்கள். அதேவேளை மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

இலங்கை மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்களாக இல்லை. அவர்கள் பெரும்பாலும் மனவெழுச்சியின் அடிப்படையில் செயற்படுகின்றவர்கள். அதாவது அப்போதுள்ள உணர்வுகளின் அடிப்படையில் தேர்லில் வாக்களிக்கின்றவர்களாகத்தான் இருந்து வருகின்றார்கள். மக்களின் மன எழுச்சியின் அடிப்படையில்தான் கோட்டாபய ராஜபக்ஷவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் மக்களின் விருப்பு - வெறுப்பு என்பது கொள்கை சார்ந்ததாகவோ, நிலையானதாகவோ இருப்பதில்லை" என, அவர் விவரித்தார்.

திருத்துவதுதான் ஒரே வழி

இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட முறைமை இனி இலங்கையில் இனி இருக்கக் கூடாது என்றால், அதற்குள்ள ஒரே வழி - அரசியலமைப்பைத் திருத்துவதுதான் என, கூறிய பேராசிரியர் சர்வேஸ்வரன்; "ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் போது, ஜனாதிபதி தேர்தலொன்றினை நடத்த வேண்டுமென அரசியலமைப்பு திருத்தப்படுதல் வேண்டும்" என்கிறார்.

"அப்படி திருத்தப்பட்டாலும், இன்றுள்ள சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போது, ஜனாதிபதித் தேர்தலொன்றினை நடத்துவதற்கான பொருளாதார நிலை இலங்கையில் இல்லை" என்கிறார்.

"அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானங்களை எடுக்கின்ற போது, தமது கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் விருப்புகளை அறிந்து அவற்றுக்கு அமைய முடிவுகளை எடுப்பதாகவும் கூற முடியாது.

 

நாடாளுமன்ற நடைமுறை

 

படக்குறிப்பு,

ஜனாதிபதி பதவிக்கு வாக்கெடுப்பு

கட்சிகளின் தீர்மானங்களுக்கு மாறாக, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்வதைப் போல, கட்சிகளின் தலைமைகளும் தமது கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவும் முடிவுகளை எடுப்பதுண்டு.

மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சிக்கு வருபவரும், மக்களால் நிராகரிக்கப்பட்டவரும் ஒரு குறுகிய காலத்துக்குள் - அந்த நிலையிலிருந்து மாறலாம். மக்களால் ஆதரிக்கப்பட்டவர் மக்களாலேயே வெறுக்கப்படலாம். மக்கள் வெறுத்தவரை - பின்னர் மக்களே ஆதரிக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவின் பலவீனம்

நாடாளுமன்றம் மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச போட்டியிட்டிருக்க வேண்டும் எனக்கூறும் பேராசிரியர் சர்வேஸ்வரன்; வி யூகங்களை வகுப்பது அரசியலின் ஒரு பகுதி எனவும், சஜித் பிரேமதாச தனது கட்சியின் ஆதரவுடனும், தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் ஆரவுடனும், பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது பக்கத்துக்கு இழுத்து, அவர்களின் ஆதரவைப் பெற்றும், அவர் வெற்றிபெற முயற்சித்திருக்க வேண்டும் என்கிறார்.

"அவ்வாறு செய்யாமல் அவர் பின்வாங்கியமை மட்டுமல்லாமல், ராஜபக்ஷ குடும்பத்தினரின் பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்ரான டலஸ் அழக பெருமவை தேர்தலில் நிறுத்தி - ஆதரித்தமை, சஜித் பிரேமதாசவின் அரசியல் பலவீனத்தினையே காட்டுகிறது" எனக் குறிப்பிட்டதோடு, "பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி தேர்வின் போது சஜித் ஆதரித்திருக்கவே கூடாது" என்றும் கூறினார்.

மேலும், "மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பவை கூட இலங்கையில் ஒரு மாயையாகவே இருக்கின்றது" எனவும் சர்வஸே்வரன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62283253

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

"ஏனென்றால் சட்டவாக்க சபையான நாடாளுமன்றம், நிறைவேற்றுத் துறையான ஜனாதிபதி மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்துவமான துறைகளாக செயற்பட முடியுமே தவிர, ஒரு துறை - இன்னொரு துறையில் தலையீடு செய்ய முடியாது. உதாரணமாக நாடாளுமன்றம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என, நீதித்துறை கூற முடியாது," என்றும் அவர் தெரிவித்தார்.


நாடாளுமன்றிலே தேசிய இனப்பிரச்சினைக்குத்தீர்வாக(அது முழுமையானதாக இல்லாதபோதும்) முதன் முறையாக இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 42 ஆவதின் பிரிவின் படி 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.  20 ஆண்டுகளின் பின் இலங்கை ஜனநாயகக் குடியரசின் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் படி 16 ஐப்பசி 2006ம் திகதி இணைந்த வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகமானதுவடக்கு மாகாண நிர்வாகம், கிழக்கு மாகாண நிர்வாகம் என இரு வேறு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டது. சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி ஹக்கீம் அவர்களின் கூற்றுப்படி எப்படி இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. முரணாக இல்லையா. தமிழ்ச் சட்ட அறிஞர்கள் அல்லது அரசியல் நிபுணர்களால் கவனிக்கப்படவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nochchi said:


நாடாளுமன்றிலே தேசிய இனப்பிரச்சினைக்குத்தீர்வாக(அது முழுமையானதாக இல்லாதபோதும்) முதன் முறையாக இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 42 ஆவதின் பிரிவின் படி 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.  20 ஆண்டுகளின் பின் இலங்கை ஜனநாயகக் குடியரசின் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் படி 16 ஐப்பசி 2006ம் திகதி இணைந்த வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகமானதுவடக்கு மாகாண நிர்வாகம், கிழக்கு மாகாண நிர்வாகம் என இரு வேறு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டது. சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி ஹக்கீம் அவர்களின் கூற்றுப்படி எப்படி இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. முரணாக இல்லையா. தமிழ்ச் சட்ட அறிஞர்கள் அல்லது அரசியல் நிபுணர்களால் கவனிக்கப்படவில்லையா? 

சுருக்கமாக:

1. இலங்கை போன்ற எழுத்தில் அரசியல்சட்டம் இருக்கும் நாட்டில், பாராளுமன்றம், அரசாங்கம், நீதி துறை இவற்றுக்கு மேலான ஒரு நிலையில் அரசியல் சட்டம் இருக்கிறது. இங்கே மக்களின் கூட்டு இறைமையானது, அரசியல் சட்டத்தில் உள்ளிருத்தி பேணப்படுகிறது.

இந்த மாதிரியான நாட்டில், அரசியல் சட்டத்தின் சரத்துக்கு முரணாக, ஜனாதிபதி, அரசாங்கம், பாராளுமன்றம், நீதிதுறை, யாரும் செயல்பட முடியாது.

அது மட்டும் இல்லாமல் அரசியல் சட்டத்தை வியாக்கியான படுத்தும், ஒரு விடயம் அரசியல் சட்டத்துக்கு அமைவானதா இல்லையா என தீர்ப்பு கூறும் பொறுப்பும் தனியே, அரசியல்சட்ட நீதி மன்றாக செயல்படும் உச்ச நீதி மன்றிடம் மட்டுமே இருக்கிறது.

அண்மையில் நடந்த 19ம் திருத்தத்தின் போது, பாராளுமன்றம் பல விடயங்களை பிரேரித்தது. ஆனால் அவை அரசியல் சட்டத்துக்கு அமைவானவையா என சபாநாயகர், உச்ச நீதிமன்றிடம் ஆலோசனை கேட்டார். உச்ச நீதிமன்று பல விடயங்கள் ஏற்புடையன அவற்றை 2/3 பெரும்பான்மையோடு மாற்றலாம் என கூறினாலும். மேலும் சில மாற்றங்களை - அவை அரசியலமைபுக்கு முரணானவை - அவற்றை நிறைவேற்றுவதாயின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் ஆணை பெறப்பட வேண்டும் என கூறியது.

சர்வஜன வாக்கெடுப்பை வெல்வது கஸ்டம் என்பதால் நல்லாட்சி அரசு இந்த அம்சங்களை நீக்கி விட்டு, ஏனையவற்றை சேர்த்து 19ம் திருத்தத்தை நிறைவேற்றியது.

ஆகவே இலங்கை போன்ற நாட்டில் (அமெரிக்காவிலும்) பாராளுமன்ற மேலாண்மை (Parliamentary Supremacy) என்பது வரையறை அற்றது அல்ல. அது அரசியல் சட்டத்துக்கு கீழானதே. பாராளுமன்றத்துக்கு “செய், செய்யாதே” என நீதிமன்றம் உத்தரவு போட முடியாது, ஆனால் பாராளுமன்றம் அரசியல் சட்டத்துக்கு முரணாக ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், அதற்கு எதிராக வழக்கு போடப்பட்டால், அல்லது சபாநாயகரே கருத்து கேட்டால் - அதை பரிசீலிக்கும், தீர்ப்பு கூறும் உரிமை உச்சநீதிமன்றுக்கு உண்டு.

2. மேலே சொன்னதை வைத்து அணுகும் போது - உச்ச நீதிமன்றம் இதில் தீர்ப்பு கூற தகுதியுள்ளது என்பது தெளிவாகும். ஆனால் உண்மையில் இந்த வழக்கு, வடக்கு-கிழக்கு இணைப்பானது தற்காலிகமானது, என்ற புள்ளியை வைத்தே தீர்பாகியது. தற்காலிக இணைப்பு, பின் சில நடவைக்கைகள் எடுத்த பின், இணைப்பதா இல்லையா என ஒரு சர்வஜன் வாக்கெடுப்பு (வடக்கில், கிழக்கில் தனிதனியாக) என்பதே 87 ஒப்பந்தம்.  ஒரு தற்காலிக ஏற்பாட்டை, சர்வஜன வாகெடுப்பு இன்றி 20 வருடமாக தொடர்ந்தது அரசியலமைபுக்கு ஏற்றதல்ல என்பதே 2006ம் ஆண்டு தீர்ப்பின் பிரதான புள்ளி.

பிகு

ரணிலின் தேர்வானது முழுக்க முழுக்க, அரசியல் சட்டம் சொன்ன வழிப்படிதான் நடந்துள்ளது.

மொட்டு கட்சி பெரும்பான்மையான இப்போதைய இலங்கை பாராளுமன்றம் மக்கள் ஆதரவை இழந்து விட்டது என்கிறோம். நானும் அப்படித்தான் நம்புகிறேன். ஆனால் இதற்கு என்ன ஆதாரம்? ஆகவே அடுத்த தேர்தல்வரை இந்த பாராளுமன்றம்தான் - பாராளுமன்றம்.

ஜனாதிபதி பதவி விலகினால் - பாராளுமன்ற்றே அடுத்த ஜனாதிபதியை தேரும் என்று மிக தெளிவாக அரசியல் சட்டம் கூறும் போது - அதை விட்டு வெளியால் போவது சட்ட விரோதமாகவே பார்க்கப்படும்.

சட்டததரணி ஹக்கீம் சொல்வது போல ரணிலின் ஜனாதிபதி தேர்வை எதிர்த்து வழக்கு போட்டால் - உச்ச நீதிமன்றம் அதை முதல் பார்வையிலேயே தள்ளுபடி செய்யும்.

சுருங்க சொல்லின் ரணில் 100% சட்ட வலுவும்,0% தார்மீக வலுவும் உள்ள ஜனாதிபதி (100% legality, 0% legitimacy).

மக்களால் நிராகரிக்கபட்டு, தேசிய பட்டியல் மூலம் எம்பி ஆகிய அவருக்கு தார்மீக வலு இல்லை - ஆகவே அவருக்கு ஜனாதிபதியாக சட்ட வலுவை கொடுக்க கூடாது என எம்பிக்கள் சிந்திது இருக்க வேண்டும். ஆனால் 134 பேர் அவரை ஆதரித்து அவரை, அரசியல் சட்டம் பரிந்துரைத்த வழியில் சட்ட வலுவுள்ள ஜனாதிபதியாக்கி உள்ளார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை

இலங்கை அரசு/பாராளுமன்றம் விரும்பினால் - சர்வஜன வாக்கெடுப்பின் பின் எப்போதும் வடக்கு-கிழக்கை மீள இணைக்கலாம் (தியரி படி, ஆனால் நீதித்துறை உட்பட எங்கும் இனவாதம் கோலூச்சும் நாட்டில் - வெளியார் அளுத்தம் இன்றி இது சாத்தியமில்லை - அல்லது அரசியல் அமைப்பு மாற்றபட்டு, புதிய அரசியல் அமைப்பிலேயே வடக்கு-கிழக்கு இணைப்பு பிரகனபடுத்த பட வேண்டும்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சுருக்கமாக:

1. இலங்கை போன்ற எழுத்தில் அரசியல்சட்டம் இருக்கும் நாட்டில், பாராளுமன்றம், அரசாங்கம், நீதி துறை இவற்றுக்கு மேலான ஒரு நிலையில் அரசியல் சட்டம் இருக்கிறது. இங்கே மக்களின் கூட்டு இறைமையானது, அரசியல் சட்டத்தில் உள்ளிருத்தி பேணப்படுகிறது.

இந்த மாதிரியான நாட்டில், அரசியல் சட்டத்தின் சரத்துக்கு முரணாக, ஜனாதிபதி, அரசாங்கம், பாராளுமன்றம், நீதிதுறை, யாரும் செயல்பட முடியாது.

அது மட்டும் இல்லாமல் அரசியல் சட்டத்தை வியாக்கியான படுத்தும், ஒரு விடயம் அரசியல் சட்டத்துக்கு அமைவானதா இல்லையா என தீர்ப்பு கூறும் பொறுப்பும் தனியே, அரசியல்சட்ட நீதி மன்றாக செயல்படும் உச்ச நீதி மன்றிடம் மட்டுமே இருக்கிறது.

அண்மையில் நடந்த 19ம் திருத்தத்தின் போது, பாராளுமன்றம் பல விடயங்களை பிரேரித்தது. ஆனால் அவை அரசியல் சட்டத்துக்கு அமைவானவையா என சபாநாயகர், உச்ச நீதிமன்றிடம் ஆலோசனை கேட்டார். உச்ச நீதிமன்று பல விடயங்கள் ஏற்புடையன அவற்றை 2/3 பெரும்பான்மையோடு மாற்றலாம் என கூறினாலும். மேலும் சில மாற்றங்களை - அவை அரசியலமைபுக்கு முரணானவை - அவற்றை நிறைவேற்றுவதாயின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் ஆணை பெறப்பட வேண்டும் என கூறியது.

சர்வஜன வாக்கெடுப்பை வெல்வது கஸ்டம் என்பதால் நல்லாட்சி அரசு இந்த அம்சங்களை நீக்கி விட்டு, ஏனையவற்றை சேர்த்து 19ம் திருத்தத்தை நிறைவேற்றியது.

ஆகவே இலங்கை போன்ற நாட்டில் (அமெரிக்காவிலும்) பாராளுமன்ற மேலாண்மை (Parliamentary Supremacy) என்பது வரையறை அற்றது அல்ல. அது அரசியல் சட்டத்துக்கு கீழானதே. பாராளுமன்றத்துக்கு “செய், செய்யாதே” என நீதிமன்றம் உத்தரவு போட முடியாது, ஆனால் பாராளுமன்றம் அரசியல் சட்டத்துக்கு முரணாக ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், அதற்கு எதிராக வழக்கு போடப்பட்டால், அல்லது சபாநாயகரே கருத்து கேட்டால் - அதை பரிசீலிக்கும், தீர்ப்பு கூறும் உரிமை உச்சநீதிமன்றுக்கு உண்டு.

2. மேலே சொன்னதை வைத்து அணுகும் போது - உச்ச நீதிமன்றம் இதில் தீர்ப்பு கூற தகுதியுள்ளது என்பது தெளிவாகும். ஆனால் உண்மையில் இந்த வழக்கு, வடக்கு-கிழக்கு இணைப்பானது தற்காலிகமானது, என்ற புள்ளியை வைத்தே தீர்பாகியது. தற்காலிக இணைப்பு, பின் சில நடவைக்கைகள் எடுத்த பின், இணைப்பதா இல்லையா என ஒரு சர்வஜன் வாக்கெடுப்பு (வடக்கில், கிழக்கில் தனிதனியாக) என்பதே 87 ஒப்பந்தம்.  ஒரு தற்காலிக ஏற்பாட்டை, சர்வஜன வாகெடுப்பு இன்றி 20 வருடமாக தொடர்ந்தது அரசியலமைபுக்கு ஏற்றதல்ல என்பதே 2006ம் ஆண்டு தீர்ப்பின் பிரதான புள்ளி.

பிகு

ரணிலின் தேர்வானது முழுக்க முழுக்க, அரசியல் சட்டம் சொன்ன வழிப்படிதான் நடந்துள்ளது.

மொட்டு கட்சி பெரும்பான்மையான இப்போதைய இலங்கை பாராளுமன்றம் மக்கள் ஆதரவை இழந்து விட்டது என்கிறோம். நானும் அப்படித்தான் நம்புகிறேன். ஆனால் இதற்கு என்ன ஆதாரம்? ஆகவே அடுத்த தேர்தல்வரை இந்த பாராளுமன்றம்தான் - பாராளுமன்றம்.

ஜனாதிபதி பதவி விலகினால் - பாராளுமன்ற்றே அடுத்த ஜனாதிபதியை தேரும் என்று மிக தெளிவாக அரசியல் சட்டம் கூறும் போது - அதை விட்டு வெளியால் போவது சட்ட விரோதமாகவே பார்க்கப்படும்.

சட்டததரணி ஹக்கீம் சொல்வது போல ரணிலின் ஜனாதிபதி தேர்வை எதிர்த்து வழக்கு போட்டால் - உச்ச நீதிமன்றம் அதை முதல் பார்வையிலேயே தள்ளுபடி செய்யும்.

சுருங்க சொல்லின் ரணில் 100% சட்ட வலுவும்,0% தார்மீக வலுவும் உள்ள ஜனாதிபதி (100% legality, 0% legitimacy).

மக்களால் நிராகரிக்கபட்டு, தேசிய பட்டியல் மூலம் எம்பி ஆகிய அவருக்கு தார்மீக வலு இல்லை - ஆகவே அவருக்கு ஜனாதிபதியாக சட்ட வலுவை கொடுக்க கூடாது என எம்பிக்கள் சிந்திது இருக்க வேண்டும். ஆனால் 134 பேர் அவரை ஆதரித்து அவரை, அரசியல் சட்டம் பரிந்துரைத்த வழியில் சட்ட வலுவுள்ள ஜனாதிபதியாக்கி உள்ளார்கள்.

 

சரியானதொரு விளக்கத்தைப் பகிர்ந்த  கோசான் சே அவர்களுக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிற்சேர்க்கை

இலங்கை அரசு/பாராளுமன்றம் விரும்பினால் - சர்வஜன வாக்கெடுப்பின் பின் எப்போதும் வடக்கு-கிழக்கை மீள இணைக்கலாம் (தியரி படி, ஆனால் நீதித்துறை உட்பட எங்கும் இனவாதம் கோலூச்சும் நாட்டில் - வெளியார் அளுத்தம் இன்றி இது சாத்தியமில்லை - அல்லது அரசியல் அமைப்பு மாற்றபட்டு, புதிய அரசியல் அமைப்பிலேயே வடக்கு-கிழக்கு இணைப்பு பிரகனபடுத்த பட வேண்டும்)

இப்படி ஏதேனும் நடந்தால் முழுச் சிங்களவர்களும் எமது மதிப்புக்குரிய இஸ்லாமிய உறவுகளும் காலிமுகத்திடல் போராட்டத்தைவிட பெரும்போராட்டம் ஒன்றைச் செய்வார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.