Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு: 'போராட்டத்தைக் கைவிடவில்லை; பேரணி மட்டுமே தற்காலிக வாபஸ்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு: 'போராட்டத்தைக் கைவிடவில்லை; பேரணி மட்டுமே தற்காலிக வாபஸ்'

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

போராட்டம்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று (அக்டோபர் 15) அமைச்சர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, சென்னையில் அக்டோபர் 17ம் ஒருங்கிணைத்திருந்த விமான நிலைய எதிர்ப்பு நடை பயணம் மற்றும் பேரணியை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஏகனாபுரம் கிராமத்தில் 80 நாட்களை கடந்து நடைபெற்றுவரும் மாலை நேரப் போராட்டம் தொடர்வதாகவும், அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான் அந்த போராட்டம் பற்றி கிராம மக்கள் முடிவுசெய்வார்கள் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட எட்டு போராட்டக்காரர்கள் அரசின் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இருப்பதால், சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத்தை நோக்கி செல்லும் மக்கள் எதிர்ப்புப் பேரணி மட்டும் தற்காலிகமாக கைவிடப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள பரந்தூரில் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனை அடுத்து, விமான நிலையம் அமைப்பதற்குத் தேர்வான ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் 81வது நாளை இன்று எட்டியுள்ளது. பல்வேறு வடிவங்களில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதில் ஒரு பகுதியாக, அக்டோபர் 17ம் தேதி சென்னையில் சட்டமன்றத்தை நோக்கி கிராமமக்கள் நடைபயணமாக வந்து பேரணி நடத்துவது என்று முடிவு செய்திருந்தனர். அந்த பேரணி மட்டும் தற்போது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

விவசாய நிலம்

ஊடகங்களிடம் பேசிய, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பின் செயலாளர் சுப்பிரமணியன், ''ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அமைச்சர்களின் பேச்சு வார்த்தை எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. எங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி கூறினார்கள். நல்ல தீர்வு விரைவில் எட்டப்படும் என்றும் உத்தரவாதம் தந்ததால் எங்களது பேரணியை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளோம். தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவை பொறுத்து எங்களுடைய அடுத்த கட்ட முடிவு அமையும்,''என்றார்.

பேச்சுவார்த்தையில் கிராம மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்ததாகக் கூறிய அவர், ''13 கிராம மக்கள் எவ்வளவு பாதிப்புகளை சந்திப்பார்கள் என அமைச்சர்களிடம் எடுத்து சொன்னோம். விமான நிலையம் வந்தால், கிராமங்களின் புவியில் அமைப்பு எப்படி மாறும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், ஏகனாபுரம் கிராம பஞ்சாயத்து அழிக்கப்படும் என்பதால் எங்கள் கிராம மக்கள் தங்களின் அடையாளத்தை இழக்க நேரிடும் என தெரிவித்தோம். எங்கள் முகவரி தொலைந்துபோகும் என்று தெரிவித்தோம். எங்கள் கருத்துகளை அமைச்சர்கள் உள்வாங்கிக்கொண்டார்கள். நல்ல தீர்வை தருவதாக கூறியுள்ளார்கள் என்பதால் தற்காலிகமாக பேரணியை நிறுத்திவைத்துள்ளோம்,''என்றார்.

 

ஏரி

பிபிசி தமிழிடம் பேசிய போராட்டகுழுவை சேர்ந்த கதிரேசன், சென்னையில் சட்டமன்றத்தை நோக்கி செல்லும் போராட்டம் மட்டும்தான் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.

''அக்டோபர் 17ம் தேதி நடைபெறுவதாக இருந்த பேரணியை மட்டும்தான் நாங்கள் கைவிட்டுள்ளோம். தினமும் மாலை நேரத்தில் எங்கள் கிராமத்தில் நடைபெறும் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைத்து கருத்துகளை அமைச்சர்கள் கேட்டுள்ளனர். அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளனர் என்பதால்தான் பேரணியை கைவிட்டுள்ளோம். விமான நிலையம் எங்கள் கிராமத்தில் அமையாது என்று சொன்னால் மட்டும்தான் கிராமத்தில் போராட்டம் நிறுத்தப்படும்,'' என்றார்.

https://www.bbc.com/tamil/india-63268907

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'பரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை; பாதிப்பு இல்லாமல் செய்ய முயற்சி' - தங்கம் தென்னரசு

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தங்கம் தென்னரசு

 

படக்குறிப்பு,

தங்கம் தென்னரசு

பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் போராட்டம் நடத்திவரும் நிலையில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

விமான நிலையம் அமைக்கப்படும் போது பாதிப்புகள் இல்லாத வகையில் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் சட்டமன்றத்தில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 13 ஊர்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய், பள்ளிக்கூடங்கள், கோயில்கள் போன்றவை இவற்றில் அடங்கியிருக்கின்றன.

 

சந்தை மதிப்பைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக தமிழ்நாடு அரசு வாக்குறுதி அளித்த நிலையிலும், வாழ்வாதாரம் பறிபோவதாகக் கூறி கிராம மக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

 

விமான நிலையம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்

 

படக்குறிப்பு,

விமான நிலையம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்

நீர் நிலைகள் அழிக்கப்பட்டால் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும், சென்னை வரை வெள்ள அபாயம் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள்.

பெங்களூரு, ஹைதராபாத்துடன் சென்னையை ஒப்பிட்ட அமைச்சர்

விமான நிலையம் அமைக்கத் தங்கள் விளை நிலத்தைத் தருவோருக்கு நிலத்தின் மதிப்பை விட 3.46 மடங்கு தர வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளதாகவும், வேலைவாய்ப்பு தருவதுடன், வீடுகளை இழப்போருக்கு மாற்று இடம், வேறு வீடு உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாளும் திறன் பெற்றுள்ளது. 2025இல் ஆண்டுக்கு 3.5 கோடி பேர் பயன்படுத்துவார்கள் என்று தமது பதிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2009-19 காலகட்டத்தில் ஒன்பது சதவிகித வளர்ச்சி உண்டாகியுள்ளது. 2008இல் நாட்டில் மூன்றாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் தற்போது ஐந்தாம் இடத்துக்கு சென்றுள்ளது; அப்போது ஐந்தாம் இடத்தில் இருந்த பெங்களூர் விமான நிலையம் இப்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையம் 9% வளர்ந்துள்ள காலகட்டத்தில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் விமான நிலையங்கள் 14 % மட்டும் 12% வளர்ச்சி கண்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மொத்தமுள்ள 13 கிராமங்களில் விளைநிலங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகள் பகுதி அளவு மட்டுமே விமான நிலையத்துக்கு போகும் நிலையில், சுமார் 2400 பேர் வசிக்கக் கூடிய ஏகனாபுரம் என்ற கிராமம் முற்றிலும் நில எடுப்பின் கீழ் வருகிறது.

இந்த கிராமம் உள்ள இடம், புதிதாக அமையவுள்ள விமான நிலையத்தின் இரு ஓடுதளங்களுக்கும் இடையே வருகிறது என்று இன்று குறிப்பிட்ட அமைச்சர், திட்ட மேலாண்மை ஆலோசகர்களுடன் ஆலோசித்து, கிராமங்களை மாற்றும் வழிகள் குறித்த தொழில்நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் இருக்கும் விளைநிலங்கள்

 

படக்குறிப்பு,

விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் இருக்கும் விளைநிலங்கள்

ஆனால், ஏகனாபுரம் கிராமம் பாதிக்காத வகையில் விமான நிலையத்தின் அமைப்பு மாற்றப்படுமா அல்லது கிராமமே ஒட்டுமொத்தமாக வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்று அவர் தெளிவாகக் கூறவில்லை.

கவன ஈர்ப்பு தீர்மானம்

சட்டமன்றத்தில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் போராட்டம் நடந்துவருவது குறித்தும், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை மற்றும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், ஏற்கனவே ஒன்றிய அரசின் உத்தரவாதத்தை நம்பி நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு நிலங்களை வழங்கிய மக்கள் நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பதாக தெரிவித்தார்.

''ஒன்றிய அரசின் உத்தரவாதத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தற்போது விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கப்படும்போதும், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு உத்தரவாதம் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. தமிழக அரசின் வாக்குறுதியில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால், விமான நிலையத்திற்கு நிலம் வழங்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதி வேண்டும். அவர்களை பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் விமான நிலையம் கொண்டுவரவேண்டும்,''என்றார். மேலும் கம்பன் கால்வாய் என்ற முக்கிய நீர் ஆதாரம் பாதிக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசுகையில், தனது ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் கொண்டுவரப்படும் திட்டம் குறித்து பிற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார். ''மக்களிடம் நேரடியாக அமைச்சர்கள் பேசியிருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான ஒரு திட்டத்தை நாம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். கிராம மக்களிடம் தொடர்ந்து தெளிவுபடுத்திவருகிறோம். ஆனால் ஒரு சில தீய சக்திகள், சில இயக்கங்கள் மக்களிடம் தவறான ,விஷமான கருத்துக்களை பரப்பி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்,''என்றார் செல்வப்பெருந்தகை

பரந்தூர் விமான நிலையம் பின்னணி

சென்னையில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இரு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. "பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

விமான நிலையத்துக்காக பரந்தூரை ஒட்டியிருக்கும் 13 கிராமங்களில் 4,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நிலம் எடுக்கப்படும் என்றும் 4 கிராமங்கள் முற்றிலுமாகக் கையகப்படுத்தப்படும் என்றும் தெரியவந்திருக்கிறது. குடியிருப்புகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் போன்றவை இதில் அடங்கியிருக்கின்றன. நிலம், குடியிருப்புகளுக்கு ஏற்பக மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக அரசு அறிவித்திருக்கிறது.

இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் 60 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று வருகின்றனர். "ஊரைவிட்டு வெளியேற மாட்டோம்" என்று போராட்டத்தில் பங்கேற்கும் மக்கள் கூறுகிறார்கள்.

https://www.bbc.com/tamil/india-63310297

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரந்தூர் விமான நிலையம்: "சொந்த நிலத்தில் அகதிகளாவோம்" - தொடரும் எதிர்ப்பு

  • நந்தினி வெள்ளைச்சாமி
  • பிபிசி தமிழ்
20 அக்டோபர் 2022, 02:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தங்கம் தென்னரசு

பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள்போராட்டம் நடத்திவரும் நிலையில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பை விட 3.4 மடங்கு இழப்பீடு, அரசு வேலை, மாற்று இடம், வீடு உள்ளிட்ட இழப்பீடுகளை அமைச்சர் அறிவித்திருந்தாலும், தங்களின் கோரிக்கை பரந்தூரில் விமான நிலையம் கூடாது என்பதே என உறுதியாக இருக்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (அக். 19) சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் போராட்டம் நடந்து வருவது குறித்தும், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை மற்றும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

அமைச்சர் பேசியது என்ன?

 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, விமான நிலையம் அமைக்கப்படும் போது பாதிப்புகள் இல்லாத வகையில் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

மேலும், "சரக்குகளை கையாளும் திறனில் நாம் 4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம். ஆனால், ஐதராபாத் மற்றும் பெங்களூரு இரண்டு மடங்கு கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளனர்" என அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு காரணமாக அந்த இரு நகரங்களிலும் அமைந்துள்ள புதிய இரண்டு விமான நிலையங்களை சுட்டிக் காட்டுகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. சரக்குகளை கையாள்வதில் உள்ள தேக்கநிலையை சரிசெய்ய, புதிய விமான நிலையம் அமைவது காலத்தின் சூழல் என்றும் அவர் கூறினார்.

ஏற்கெனவே உள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இரண்டாவது விமான நிலையத்தால் புதிய விமான வழித்தடங்கள் வருவதற்கான வாய்ப்பு, ஆசியாவின் பல பகுதிகளை சென்னை மாநகருடன் இணைப்பதற்கான வாய்ப்பு, தொழில் முதலீடுகள் உள்ளிட்ட நன்மைகள் இருப்பதாக அமைச்சர் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

டெல்லி, நவி மும்பை போன்ற நகரங்களில் வரவிருக்கும் புதிய விமான நிலையங்கள், மாநகருக்கு சுமார் 60 கி.மீ. தள்ளியே அமையவிருப்பதாக கூறினார்.

மேலும், புவியியல் அமைப்பு, நீரியல் சூழ்நிலைகள், தொழில்நுட்ப காரணங்களால் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, எந்த விவசாயிக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகத் தெரிவித்தார்.

 

பரந்தூர் விமான நிலையம்

கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பைவிட 3.4 மடங்கு இழப்பீடு, அரசு வேலை, மாற்று இடம், வீடு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மொத்தமுள்ள 13 கிராமங்களில் விளைநிலங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகள் பகுதி அளவு மட்டுமே விமான நிலையத்துக்கு போகும் நிலையில், சுமார் 2400 பேர் வசிக்கக் கூடிய ஏகனாபுரம் என்ற கிராமம் முற்றிலும் நில எடுப்பின் கீழ் வருகிறது.

இந்த கிராமம் உள்ள இடம், விமான நிலையத்தின் இரு ஓடுதளங்களுக்கும் இடையே வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், திட்ட மேலாண்மை ஆலோசகர்களுடன் ஆலோசித்து, கிராமங்களை மாற்றும் வழிகள் குறித்த தொழில்நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

"திட்டம் வேண்டாம் என்பதே எங்கள் கோரிக்கை"

அமைச்சரின் பேச்சு குறித்து ஏகனாபுரம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரில் ஒருவரான இளங்கோ பிபிசி தமிழிடம் பேசுகையில், "இத்திட்டம் பாதிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து மீண்டும் அமைச்சரிடம் பேசுவோம். ஏற்கெனவே இம்மாதிரியான திட்டங்களில் அரசு அளித்த வாக்குறுதிகள் முழுமையாகச் சென்று சேர்ந்ததில்லை. எனவே எங்களுக்கு அது குறித்த அச்சம் உள்ளது. எங்களின் கிராமம், விவசாய நிலம் எதனையும் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தக் கூடாது என்பதுதான் எங்களின் உறுதியான கோரிக்கையாக உள்ளது," எனத் தெரிவித்தார்.

 

பரந்தூர் விமான நிலையம்

மேலும், "இத்திட்டம் வந்தால் 2,750 ஏக்கர் நன்செய் நிலங்கள் அழியும், 13 ஏரிகள் அழியும். நீர்நிலைகளும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படாமல் இத்திட்டத்தை செயல்படுத்துவது எப்படி சாத்தியம்? அரசு புறம்போக்கு நிலம் 350 ஏக்கர்தான். அதை வைத்து எப்படி விமான நிலையம் அமைப்பார்கள்? ஆனால், 4,700 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் வருகிறது. அரசிடம் மீண்டும் பேசிவிட்டு அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.

"சட்டப் போராட்டம் மூலம் வெல்வோம்"

அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நல கூட்டமைப்பின் செயலாளருமான சுப்பிரமணியன், "ஏகனாபுரம் கிராம மக்களின் கோரிக்கைகளை அரசு புரிந்துகொண்டுள்ளதாகக் கருதுகிறேன், அரசு யோசிக்க ஆரம்பித்துள்ளது. எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை இன்று அமைச்சர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. தொழில்நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது இதனை உணர்த்துகிறது. எங்கள் போராட்டத்தில் 25 சதவீதம் வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறோம்" என்றார்.

ஆனால், "இந்த விமான நிலைய திட்டம் எங்கள் கிராமத்தில் வேண்டாம் என்பதே எங்களின் கோரிக்கை, அதில் மாற்றமில்லை. எங்கள் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டம் (அக்டோபர் 19 அன்று) 85வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து போராடுவோம்" என தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் பல சவால்கள் இருப்பதாக தெரிவித்த அவர், "புவியியல் அமைப்பை விமான நிலையத்திற்கு ஏற்ப மாற்றுவது நிச்சயம் அரசுக்கு சவாலானதாகவே இருக்கும். இத்திட்டத்தில் வரும் 1,000 ஏக்கர் நிலம் ஏரி, குட்டைகள்தான். நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. நீர்நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல உத்தரவுகள் உள்ளன. தேவை கருதி நாங்கள் நீதிமன்றம் சென்றால் எங்கள் சார்பாகவே தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். இதனை சட்டப் போராட்டம் மூலமாக வெல்வோம்" என சுட்டிக்காட்டினார்.

மேலும், இத்திட்டம் வந்தால், "ஏகனாபுரத்தின் வரலாறே அழிக்கப்படும். எங்களுக்கென முகவரியே இல்லாமல் போய்விடும். சொந்த நிலத்திலேயே மக்கள் அகதிகளாகிவிடுவர். விவசாய நிலங்கள் பறிபோனால் அவர்கள் விவசாய கூலிகளாவர். ஆட்சி மாறும், கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது.

மற்றொரு பகுதிக்கு நாங்கள் சென்றால் அங்கு கூலிகளாகத்தான் இருக்க முடியும். சுதந்திர உணர்வுடன் நிலம், வீடுடன் வாழ்ந்தது எப்படி? வேறு கிராமத்தில் கூலிகளாக வாழ முடியுமா? எங்கள் கிராமத்திற்கு மாற்று வாழ்விடமாக மதுரமங்கலத்தில் 100 ஏக்கர் நிலத்தை அரசு பரிசீலித்திருக்கிறது. ஆனால், ஏகனாபுரத்திற்காக இங்கு நிலம் ஒதுக்காதீர்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் அக்கிராமத்தினர் மனு அளித்துள்ளனர். அவர்கள் எப்படி எங்களை ஏற்றுக்கொள்வார்கள்?" என்கிறார் சுப்பிரமணி.

https://www.bbc.com/tamil/india-63321179

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.