Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டாவது தலைவர்- யோ.கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும்,  இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிருந்தாலும் இனி இஞ்சயிருந்தால் பிசகுவரும். நான் சுவிஸ் போகப்போறன். நான் அபுதாபி போகப்போறன் என்று கதைக்கிறவையள் ஒரு பக்கம்இ மாறி மாறி ரெலிபோன் நம்பருகள் பரிமாறுறவை ஒரு பக்கமென பெரிய சத்தமாக இருக்கிறது.

எங்கட ஆளின்ர கையில விடுதலைப் பத்திரத்தை இப்பதான் ஒரு ஆமிக்காரன் குடுத்திட்டுப் போறான். ஆள் பத்திரத்தை ஒன்றுக்கு மூன்றுதரம் விஸ்தாரமாக வாசிச்சார். மூன்று மொழியிலயும் விசயத்தை இரத்தினச் சுருக்கமாக எழுதியிருக்கினம். என்ன இரத்தினச் சுருக்கமாக எழுதியென்ன, விபரம் என்னவோ பரிசு கெட்ட விபரம் தான். இன்ன ஆள், இன்ன இன்ன இடத்தில இருந்து வந்து கடைசிச் சண்டையில சரணடைஞ்சு, இவ்வளவு காலம் வைச்சிருந்து புனர்வாழ்வு குடுத்திட்டு விடுறம் என்றதுதான்.

எங்கட ஆளுக்கு முன்னுக்கிருக்கிற ஆள் ஆரென்று பார்த்தால், அது கலாமோகன் மாஸ்ரர். மாஸ்ரர் தான் கனகாலமாக ஆளுக்கு பொறுப்பாக இருந்தவர். மாஸ்ரரிட்ட நல்ல பணிஸ்மன்ற்றெல்லாம் வாங்கியிருக்கிறார். இப்ப எல்லாத்தையும் நினைச்சுப் பார்க்க, வயிறு பத்தி எரியுது. என்னயிருந்தாலும் தன்ர கையில பத்திரம் கிடைக்க முதல் மாஸ்டருக்கு கிடைச்சிட்டுது.இதென்ன நீதி? மோட்டுச் சிங்களவன் என்ன இன்குவாரி பண்ணினவன்? இது பெரிய அநீதியென யோசித்தார். பிறகு, எல்லாம் எங்கட ஆக்கள்தானே. எப்பிடியெண்டாலும் வந்து சேரட்டும் என்றும், எங்கட ஆக்கள் இப்பிடி மாறி மாறித் தங்களுக்க அடிபட்டுத் தானே சுதந்திர தமிழீழம் இல்லாமல் போனது என்றும் யோசித்து விட்டு, மாஸ்ரரைத் தட்டிக் கதைக்க முடிவு செய்தார்.

இந்த காம்பில ஒன்றரை வருசமாக இரண்டு பேரும் இருக்கினம். ஆனால் , ஒரு வசனம் கதைச்சது கிடையாது. கண்டால் ஒரு சிரிப்பு. அவ்வளவுதான். கதைக்கிறதில மாஸ்ரருக்கு ஒரு பிரச்சனையுமிருக்கிற மாதிரித்தெரியவில்லை. எங்கட ஆள்த்தான் கதைக்காமல் திரிஞ்சார். இப்ப விருப்பப்பட்டு மாஸ்ரரின்ர முதுகை தட்டுறார்.

“எப்பிடி மாஸ்ரர்… வீட்ட போய் என்ன செய்யப் போறியள்?…”

மாஸ்ரர் ஒரு பக்கமாக திரும்பியிருந்து கொண்டு கதைக்கத் தொடங்கினார். சிங்களவன் ஆளும் நாட்டில் அடிமை வாழ்வு வாழ இஸ்டமில்லையெனவும், ஆனால் விதி தமிழர்களை பழிவாங்குகிறது எனவும், தான் ஏதாவது கப்பல் மூலம் கனடா அல்லது அவுஸ்ரேலியாவிற்கு போகவுள்ளதாகவும் கூறினார்.

 

மாஸ்ரரின்ர குணம் இன்னும் மாறயில்லை. மாஸ்ரர் முந்தி அரசியற்துறையில இருந்தவராம். நல்லாக் கதைப்பார். இயக்கத்தில ஞாயிற்றுக்கிழமையில கலைநிகழ்ச்சியள் வைப்பினம். இதில மாஸ்ரரின்ர தலைமையில பட்டிமன்றம் நடக்கும். தமிழீழப் பெண்கள் சாதனைப் பெண்களா ? இல்லையா?, தமிழீழத்தை அடையச் சிறந்தவழி அகிம்சைப் போராட்டமா ? ஆயுதப் போராட்டமா?, இந்தியா தமிழீழத்தின் நட்பு நாடா? எதிரிநாடா? போன்ற விசயங்கள் பட்டிமன்றத் தலைப்புக்களாக இருக்கும். எங்கட ஆளும் மாஸ்ரரின்ர பேச்சுக்கு கைதட்டின ஆள்த்தான்.  இரண்டு பேருக்குள்ளும் இந்தக் கதைகள் வளர்ந்து கொண்டிருக்க, ஒரு ஆமிக்காரன் வேகமாக ஓடிவந்து விசிலடிச்சான். எல்லோரையும் அமைதியாக இருக்குமாறு கத்தினான். இவனின்ர வேகத்தை பார்த்த மற்றைய ஆமிக்காரரும் ஓடியோடி எல்லோரையும் ஒழுங்கான வரிசையில் இருத்திச்சினம். ஒழுங்கில்லாமல் அப்பிடிஇப்பிடி இருக்கிற சிலருக்கு அடியும் விழுது.

ஆமிக்காரர் பரபரப்பாக இருக்கிறதைப் பார்க்க, ஆரோ பெரிய ஆள் வரப் போறார் என்பது விளங்குது. வழமையாக, ஆமிக்காரர் ஓடித்திரியிற வேகத்தை வைச்சு வரப்போற ஆளின்ர தரத்தை தீர்மானிக்கலாம். இந்த வேகம் சாதாரண வேகம் இல்லை. அசுர வேகம்.

ஆர் வரப்போயினம்? என்று எங்கட ஆள் மண்டையைப் போட்டுப் குழப்பிக் கொண்டிருக்குது. ராஜபக்ச குடும்பத்தில ஆரும் வரப்போயினமோ? கருணா அம்மான் வரப் போகிறாரோ? வேற வெளிநாட்டு தூதர் ஆரும் வரப்போயினமோ? என்று பலதையும் யோசிக்கிறார். ஒன்றும் பிடிபடயில்லை.

கொஞ்ச நேரத்தில விருந்தாளியள் வருகினம். வெள்ளையும் மண்ணிறமும் கலந்த சேட்டும். வெள்ளை ரவுசரும் போட்டு கூலிங்கிளாசோட ஒராள் வருகுது. அவர்தான் விருந்தாளியாக இருக்க வேணும். அவருக்குப் பக்கத்தில வலு பவ்வியமாக ஆமிக்காரர் வருகினம். ஆமிக்காரரென்றால்,சும்மா ஆமிக்காரரில்லை. வன்னிக் கட்டளைத் தளபதியாயிருக்கிற கமால் குணரட்ண ஏற்கனவே இந்தக் காம்பிற்கு வந்திருக்கிறார். அவரும் கூலிங்கிளாசுக்குப் பக்கத்தில பவ்வியமான சிரிப்போட வாறார். எல்லாம் பொடியளும், எங்கட ஆள் மாதிரியே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கினம்.

இதெல்லாம் சரி. இதுக்குப் பிறகு நடந்துதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக எல்லாப் பொடியளாலும் நோக்கப்பட்டது. நடக்கிறது உண்மையோ என்று கூட எங்கட ஆளுக்கு சந்தேகம் வந்திது. தமிழில,  வலு சுத்தத் தமிழில, நாங்களெல்லாம் கதைக்கிற தமிழில வந்தேறு குடிகளென்று சரத்பொன்சேகாவால் சொல்லப்பட்ட தமிழர்களின் தமிழில் அந்தாள் வணக்கம் சொல்லிச் சிரிச்சார். இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராகப் பொத்திப் பிடிச்சுக் கொண்டு கதைக்கத் தொடங்கினார். அவர் கதைச்சதை விடச் சிரிச்சது அதிகம். இடையில் ஒருமுறை கண்ணை வேறு துடைத்துக்கொண்டார். அவர் கதைத்ததின் சாரம் நானும் உங்கட ஆள்த்தான். எல்லோரும் ஒரே ஆக்கள்தான். தமிழர் சிங்களவரென்ற வித்தியாசமில்லை. யுத்தம் கொடூரமானது. எல்லோருமதைப் புரிந்துகொள்ள வேண்டும். இனி வன்முறையை நாடாதீர்கள். உங்களை உயிரோடு விடும் அரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருங்கள் என்பதுதான்.

 

அவர் நல்ல உற்சாகமான மனுசனாக இருக்க வேணும். இந்த நாளைச் சந்தோசமானதாக்க யாராவது ஒருவரைப் பாடச்சொன்னார். ஒருதரும் எழும்பயில்லை. இந்தப் பெரிய கூட்டத்தில ஒரு பட்டுக்காரன் இல்லையோ? முந்தி எவ்வளவு பாட்டை இயக்கம் விட்டது. இயக்கத்தின்ர மரியாதையைக் காப்பாற்ற ஒராளை எழும்பச் சொன்னார். முன் வரிசையிலயிருந்து ஒருவன் எழும்பினான். என்ன பாட்டு பாடப்போகிறான் எனக்கேட்டார்.

“புலி உறுமுது புலி உறுமுது”என்று முதல்வரியை எடுத்து விட்டான். அவரின்ர முகம் ஒரு மாதிரிப் போனது.பிறகு மெல்லிய சிரிப்புடன் சொன்னார் – “ஏனப்பு திரும்பத் திரும்ப அப்பிடிப் பாட்டுகள் பாடுறியள்… வேற நல்ல பைலாப்பாட்டு… ஆ… சிங்களத்தில இருக்குதே ‘என்டமல்லி’ பாட்டு… அது மாதிரி…” என்று. பாடுவதற்கு தயாரான பொடியனுக்கு அந்தப் பாட்டுத் தெரியாது. கடைசியில,அவரோட வந்த ஒரு ஆமிக்காரன் றப்பட்ட றப்பட்ட சொல்லி ‘என்ட மல்லி என்ட மல்லி’என்று பாட எல்லோரும் ஆடிஆடித் தாளம் போட்டு அந்த புரோகிராமை முடிச்சினம். அவரும் போயிற்றார்.

முன்னால இருந்த மாஸ்ரரை தட்டி, இது ஆரென எங்கட ஆள் கேட்டுது. மாஸ்ரர் ஒன்றும் சொல்லுறார் இல்லை. பேசாமல் இருந்தார். பிறகு, “அதைவிடு… உதுகளைப் பற்றி யோசிக்காமல் உருப்படியான காரியங்களைச் செய்..’| என்றார்.

எங்கட ஆளுக்கு வந்த கோபத்தில மாஸ்ரரின்ர முதுகில ஒரு மிதிமிதித்தால் என்ன என யோசித்தார். மாஸ்ரர்… இந்த உறண்டல் மனுசன் இப்பிடித்தான். அங்கயும் இப்பிடித்தான். இஞ்சயும்  இப்பிடித்தான். இன்னும் குணம் மாறவில்லை. இந்த இடத்தில மாஸ்ரர் இல்லாமல் வேறயாரும் இருந்திருக்க வேணும். எங்கட ஆள் ஒரு போடுபோட்டிருக்கும். தன்ர முதலாவது பொறுப்பாளரென்றதால பேசாமலிருக்கிறார்.

எங்கட ஆளின்ர குறூப் ரெயினிங் முடிச்சு முல்லைத்தீவில நிற்குது. மொத்தம் நூற்றியிருபது பேர். எல்லாரும் யாழ்ப்பாணத்துப் பக்கப் பொடியள். ஒருநாள் சூசையண்ணை வந்து கதைச்சு, கடற்புலிக்கு வர விருப்பமானவர்களை கையை உயர்த்தச் சொன்னார். அதில கையை உயர்த்தி கடற்புலிக்கு போனதுதான் எங்கடஆள். அங்க போனால், இவர்தான் உங்கட பொறுப்பாளரென்று ஒரு ஆளை அறிமுகப்படுத்துகினம். ஒருபெரிய சிரிப்போட மாஸ்ரர் வாறார். மாஸ்ரர் வலு கட்அன்ட்ரைட்டான மனுசன். விடியப்புறம் நாலரைக்கு எழும்பவேணும்.ஆறுமணிக்கு சத்தியப்பிரமாணம் எடுக்கவேணும். ரெயினிங்கில பம்மாத்து விடக்கூடாது. சென்ரியில நித்திரை கொள்ளக்கூடாது. கிழமைக்கு கிழமை குளோரோகுயின் குளிசை போடவேணும்.

கடலே தெரியாமல் வளர்ந்த எங்கட ஆள், மாஸ்ரரின்ர பொறுப்பிலதான் கடல் றெயினிங் எடுக்குது. பத்து கடல்மைல் நீந்தச் சொல்லுங்கோ. அல்லது முல்லைத்தீவு கடலில ஒரு வோட் குடுத்து தாய்லாந்தின்ர சிறீரச்சா துறைமுகத்தில ஏறச்சொல்லுங்கோ. எங்கட ஆளுக்கு எல்லாத்துக்கும் ஓம்தான். எல்லாம் மாஸ்ரரின்ர கண்காணிப்பில பழகினதுதான்.

உண்மையில,மாஸ்ரர் நல்லவரா? கெட்டவரா ? என்பது இன்றுவரை எங்கட ஆளுக்கு தெரியாது. நல்ல பொறுத்த பணிஸ்மன்றும் குடுப்பார். சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க போனால், ஒருவாய் தீத்தியும் விடுவார். எங்கட ஆளுக்கும் இரண்டும் நடந்ததுதான்.

எல்லாம் நல்லாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்பதான் எங்கட ஆளுக்கு ஒரு சந்தேகம் வருது. ஆரம்பத்தில இதைப் பற்றியெல்லாம் யோசிக்கயில்லை. போகப்போகத்தான் சந்தேகங்கள் வருது. கொஞ்சம் பிடிபடப் பிடிபட சந்தேகங்கள் வரும் தானே. இந்த சந்தேகத்தை ஒரு பொடியளாலயும் தீர்க்க முடியாமல் போயிற்றுது. உண்மையைச் சொன்னால், ஆள் இதைப்பற்றி கதைக்கத் தொடங்கினதுக்குப் பிறகுதான் கனபொடியள் இதைப் பற்றி யோசிக்கவே தொடங்கினவை. அந்த நேரம் சந்திக்கிற எல்லாப் பொடியளிடமும் கேட்டார் – “எங்கட இரண்டாவது தலைவர் யார்?…”

முந்தின காலமென்றால் மாத்தையா இருந்தார். எங்கட ஆள் அப்ப இயக்கத்தில இல்லை. ஆனால் மாத்தையாவில நல்ல விருப்பம். அவரின்ர மீசை, உடம்பு,உயரம் எல்லாமே கம்பீரமானவை. பிரபாகரனும் மாத்தையாவும் பக்கத்தில பக்கத்தில நிற்கும் படத்துடன் முந்தின காலத்து ஈழநாதப் பேப்பரின்ர கலண்டர் வரும். இந்தப் படத்துக்காகவே வீட்டில சண்டை பிடிச்சு பேப்பர் எடுக்க வைச்சிருக்கிறார். அந்த கலண்டர் கனகாலமாக வீட்டு சுவரிலயிருந்தது. பிறகு, தகப்பன்காரன் மாத்தையா இருக்கிற படத்தை மட்டும் கிழித்து எடுத்து விட்டார். பாதிக் கலண்டர்தான் சுவரிலயிருந்தது.

அந்த நேரம் இயக்கத்தில இருந்த ஆட்களின்ர வாயில தமிழீழத்துக்கு அடுத்தபடியாக உச்சரிக்கப்பட்ட வசனமென்றால் அது இந்திய றோவாகத்தானிருக்கும். அந்நிய ஊடுருவல் போன்ற வசனங்களெல்லாம் தாராளமாக பாவிக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வல்லரசு புலனாய்வு அமைப்புகள் என்று றெயினிங் காம்பில கலைக்கோன் மாஸ்ரர் தொடர் வகுப்பெடுத்தவர். ஆனால், யாரும் மாத்தையாவின்ர பெயரை உச்சரிக்கினமில்லை. இயக்கத்திலும் சிலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர் என்ற தொனிப்பட வகுப்பு நடக்கும்.

எங்கட ஆள் மாத்தையாவைப் பற்றி சிலரோட கதைச்சும் பார்த்தார். மாத்தையா ஆர்?என்ன செய்தவர்? இப்ப எங்கே? இனி யார் இரண்டாவது தலைவர்? தலைவருக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் இரண்டாவது தலைவரை அறிஞ்சு வைக்கிறது நல்லதுதானே. பிறகு வீண் பிரச்சனையள் வராது என யோசித்தார். ஆனால் பொடியள் இது பற்றி கதைக்கினமில்லை. மெல்ல கழன்று விடுகினம். தேவையில்லாத கதை கதைச்சு வீண் பிரச்சனையில மாட்டாதை என்று அட்வைஸ் பண்ணின ஆட்களும் இருக்கத்தான் செய்யினம்.

பலதையும் யோசிச்சுப் பார்த்திட்டு, ஒரு நாள் நேரடியாக மாஸ்ரரிடமே போய்க் கேட்டார். வெளியில் எங்கேயோ போவதற்காக வாகனத்தில் ஏறி இருந்த மாஸ்ரர், விசயத்தை கேட்டதும் இறங்கினார். அடிக்கிறதுக்கு கை ஓங்கிப்போட்டுச் சொன்னார் “இயக்கத்தில அடிக்கக்கூடாதென்ற ஓடர் இல்லாமலிருந்திருக்க வேணும். உனக்கிப்ப என்ன நடந்திருக்குமென்று எனக்கே தெரியாது..” என அடிக்காமல் விட்டவர். ஆயிரம் தோப்புக்கரணம் போடச்சொல்லி பணிஸ்மன்ற் தந்தார். தோப்புக்கரணம் போடுவதை எண்ணுவதற்கும் ஒரு பொடியனை விட்டார். இதுக்குப் பிறகு எங்கட ஆள் மாஸ்ரரோட அவ்வளவாக முகம் குடுத்துக் கதைக்கிறதில்லை. ஏதும் அலுவலிருந்தால் மட்டும் அளவான கதையிருக்கும்.

கொஞ்ச நாளில எல்லாமே எங்கட ஆளுக்குப் பிடிபட்டிட்டுது. நாலு இடத்துக்குப் போய் நாற்பது பேருடன் பழகத் தொடங்க நெளிவு சுழிவுகள் விளங்கினமாதிரி, இரண்டாவது தலைவர் பிரச்சனையும் விளங்கியது. அதாவது முதல் மாத்தையா இருந்திருக்கிறார். அதுக்குப் பிறகு, வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இரண்டாவது தலைவர் மாதிரி கிட்டு மாமா தான் வெளிநாட்டில இருந்திருக்கிறார். அவர் தமிழீழத்திற்கு வந்து சேர்ந்திருந்தால் அவரை இரண்டாவது தலைவராக இயக்கம் அறிவிச்சிருக்குமாம். அதுவும் பிசகிவிட்டுது. அதுக்குப் பிறகு இப்ப, இரண்டாவது தலைவர் மாதிரி இரண்டு பேர் இருக்கினமாம். தமிழீழத்தில ஒராள். வெளிநாட்டில ஒராள். தமிழீழத்தில பொட்டம்மான். வெளிநாட்டில இருக்கிறவரை கன இயக்ககாரருக்கே தெரியாதாம். கொஞ்சம் வயசான  ஆள் வேறயாம். அனேகமாக அது அன்ரன் பாலசிங்கமாக இருக்கலாமென்று எங்கிட ஆள் யோசிச்சார். என்னயிருந்தாலும் பொட்டம்மான் தான் இதுக்கு சரியான ஆளென அபிப்பிராயப்பட்டார். இதையும் சிலரோட கதைச்சவர் தான்.

மாஸ்ரர் பணிஸ்மன்ற் குடுத்த சம்பவம் எங்கட ஆளுக்கு பிடிக்கயில்லை. என்னயிருந்தாலும் இந்தக் கேள்வியை ஒரு தேசத்துரோகக் குற்றம் மாதிரி மாஸ்ரர் பார்த்திருக்கக் கூடாது என யோசிச்சார். இதுக்குப் பிறகு மாஸ்ரருக்குக் கீழ் இருக்கப் பிடிக்கயில்லை. ஒருநாள் ஆற அமர இருந்து யோசித்து விட்டு, வலு கிளீனான ஒரு கடிதம் எழுதினார். எதிரிகளினால் முற்றுகைக்குள்ளாகி தேசம் இக்கட்டான நிலையிலிருக்கும் போது, என்னை மாதிரி செங்களம் புக ஆவல் கொண்ட வேங்கைகளை ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள். ஆணையிடுங்கள் தலைவா என்பதுதான் சாரம். கடிதம் சூசையண்ணைக்குப் போகுது.

அடுத்த கிழமை மெயின்காம்பிற்கு வரச்சொல்லி அறிவித்தல் வருது. ஆளுக்கு பதற்றமாகவுமிருக்குது. சந்தோசமாகவுமிருக்குது. சொன்ன வேலை செய்ய வேண்டுமென இயக்கத்தில சேர்ந்த நாளிலயிருந்து  சொல்லித்தாற விசயம். இதை விட்டிட்டு,வேற வேலை தா என எழுதியது பிடிக்காமல் போகுமோ என பலதையும் யோசித்துக்கொண்டு போனார். அங்க ஒரு பிரச்சனையுமில்லை. ஆள் விரும்பியது மாதிரியே வேறு வேலை கிடைக்குது. இவ்வளவு நாளும் தரையில கிடந்த ஆள், இனி வருசக்கணக்காகக் கடல் தானென ஆனது.

இயக்கத்தின்ர ஆயுதக் கப்பலொன்றில ஆளை ஏத்தினார்கள். உங்களில சிலருக்கு தெரிந்திருக்கும் இயக்கத்தினது ஆயுதப் பரிவர்த்தனை பற்றி. இப்ப லாவோசின்ர கறுப்புச் சந்தையில கொஞ்சச் சாமான் வாங்கப்படுகிறது என்று வையுங்கோ. அது ஒரு கிழமையிலயோ, ஒரு வருசத்திலயோ முல்லைத்தீவில இருக்கும்.  அங்க ஏற்றுவதற்கும் , இங்கே இறக்குவதற்குமிடையில் வேலையை மூன்று செக்சனாகப் பிரித்திருந்தார்கள். இதில இடையில சாமானை  வாங்கி இலங்கை எல்லை வரை கொண்டுவரும் இரண்டாவது செக்சன்காரர் வருசக் கணக்காக கடலிலயே இருப்பினம். அவையள் கரையை காணுறதென்பது எப்போதாவது வெகுஅரிதாகவேயிருக்கும். ஆள் இப்ப இந்த செக்சனோடதான்.

இந்த வாழ்க்கை ஆளுக்கு நல்லாப் பிடிச்சிருந்தது. என்ன, கரைக்குப் போகேலாது. நாலு பேரைச் சந்திக்க ஏலாது. மற்றும்படி எல்லாம் இயக்க வேலைதானே. ஒரு வருசமும் எட்டு மாதமும் கரையையே காணாமல் கடலுக்குள்ள ஓடித்திரிந்து கொண்டிருந்த கப்பலில ஆள் இருக்குது. எங்கட ஆளின்ர கப்பலில்தான் ஒரு முக்கியமான சாமான் தமிழீழத்திற்கு வந்தது. அந்த நேரம் சுப்பசொனிக், கிபீர் என அரசாங்கத்தின் ஜெட்விமானங்கள் இயக்கத்திற்கு பெரிய தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. இதுகளை விழுத்திற ஏவுகணை வாங்க இயக்கமும் நாயாய் பேயாய் அலைந்துதிரியுது. ஒரு இடமும் சரிவராமலிருந்தது. எங்கட ஆள் கப்பலுக்கு போன ராசியோ என்னவோ கடைசியில ஒரு இடத்தில மாட்டியது. அதுவும் உக்ரைனிடமிருந்து. அவையள் தாங்கள் செய்த வெப்பத்தை நாடிச் செல்லும் ஏவுகணையள் கொஞ்சத்தை வித்திட்டினம். இப்ப நீங்கள் யோசிப்பியள், உக்ரைனிட்டயிருந்து ஏவுகணை வாங்கிக்கொண்டு வந்தும் பொடியளால ஏன் கிபிரை விழுத்த முடியாமல் போனதெனக் கதையைக் கேளுங்கோ.

தாய்லாந்தின் சிறீரச்சா துறைமுகத்துக்குக் கிட்டவாக கப்பலை வைச்சிருந்த ஆட்களை, அவசரமாக உக்ரைன் வரச் சொல்லியாச்சுது. அது உக்ரைன் நேவியின்ர துறைமுகம். விசயம் வலு ரகசியமாக காதும் காதும் வைச்சது மாதிரி நடக்குது. கப்பலில இருக்கிற பொடியளுக்கு உக்ரைன்காரர் அன்று டின்னர் குடுத்திச்சினம். அவையளின்ர சாப்பாடு பொடியளுக்கும் பிடிச்சிருந்தது. இடைக்கிடை தங்களின்ர ஏவுகணையைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தினம். அன்றிரவு ஒரு பரிசோதனையும் செய்து காட்டிச்சினம். அந்த பரிசோதனையை பார்க்க வெளிநாட்டிலயிருக்கிற எங்கட பெரிய ஆட்கள் சிலரும் வந்திருந்தார்கள். வெள்ளை ரீசேட்டும், வெள்ளை ஜம்பரும் போட்டிருந்த நடுத்தர வயசுக்கார மனிதர். கறுப்பு உடுப்புடனிருந்த இளைஞன் மற்றும் இன்னும் சிலருமிருந்தனர். வெள்ளை ஜம்பரும், கறுப்பு உடுப்பும் தான் முக்கியமானவர்கள் போல. அவர்களுடன்தான் உக்ரைன்காரர் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கப்பலில வந்த பொடியளைக் கொஞ்சம் தள்ளி நிற்பாட்டி வைத்து விட்டார்கள். இதனால் இயக்க பெரியவர்களை சரியாகப் பார்க்க முடியாமல் போனது.

பரிசோதனை நடக்கிற இடத்துக்குப் பக்கத்தில ஒரு இடத்திலயிருந்து ஆட்லறி செல்லடிச்சினம். அது தானியங்கி ஏவுகணை. அதன் உணர் திறனுக்குட்பட்ட பகுதியில் வெப்பத்தை வெளியிட்டபடி ஏதும் போனால் தானாகவே புறப்பட்டு துரத்தும். உக்ரைன் ஆட்லறி செல்லையே நடுவானத்தில அந்த ஏவுகணை அழிச்சது.

பொடியளுக்கு நல்ல சந்தோசம். இனி சிங்களவனின்ர பிளேன் எல்லாம் சுக்குநூறாக உடையப்போகுதென்ற கதையைத்தான் எல்லோரும் கதைத்தார்கள். அன்று கப்பலில எங்கடஆள் பெரியகுரலெடுத்து “நந்தசேன மல்லி நீ வந்ததேனோ துள்ளி” என்ற பாட்டை பாடினார். பொடியளெல்லாரும் கைதட்டி ஆட்டம் போட்டினம். இந்தப் பயணம் தான் இப்படி பாட்டும் கூத்துமாக அமர்க்களப்பட்டது. சாமானை முல்லைத்தீவுக்குக் கிட்டவாக கைமாற்றிப்போட்டு, கிபிர் விழுந்திட்டுதாம் என்ற செய்திக்காக பொடியள் காத்திருந்தினம். கடைசிவரை அப்பிடியொரு செய்தியே வரவில்லை. பிறகுதான் தெரியும், பொடியளுக்கு ஏவுகணையை விற்ற கையோடையே அரசாங்கத்துக்கு விசயத்தை சொல்லி, ஏவுகணைக்கான எதிர்ப்பை அரசாங்கத்துக்கு விற்ற உக்ரைன் காரனின்ர பிஸ்னஸ்.

கொஞ்சக் காலத்துக்குப் பிறகு எங்கட ஆள் திரும்பவும் முல்லைத்தீவில தரையிறங்கினார். ஒரு மோட்டார் சைக்கிள் கொடுத்து ஒரு மாதம் லீவில விட்டினம். ஆள் வன்னி முழுவதும் ஓடித்திரிந்தார். அப்ப மாஸ்ரர் இடைக்கிடை முட்டுப்படுறவர் தான். ஆனால், இப்ப ஆள் பெரிய ஆள்த்தானே. முந்தித்தான் மாஸ்ரருக்குக் கீழே. இப்ப எங்கிட ஆள் நினைச்சுக் கொண்டிருக்குது,  தனக்கு மேல மூன்று பேர்தான் இருக்கினமென. முதலாவது தலைவர். அடுத்தது அந்த இரண்டாவது தலைவர் பிறகு, சூசையண்ணை. மாஸ்ரர் கணக்கிலேயே இல்லை. இடையிடையே எங்காவது எதிர்ப்பட்டால், கோர்ன் அடித்தபடி போவார். எங்காவது நேருக்குநேர் சந்தித்தால் இரண்டொரு கதை. அதுக்குப் பிறகு இப்போதுதான் கதைக்கிறார்கள்.

இவ்வளவு காலத்திற்கு பிறகு கதைக்கிறம். அப்ப கூட பார் இந்த உறண்டல் மனுசனை. தேவையில்லாத கதையை விடட்டாம். எது தேவையில்லாத கதையென எங்கட ஆள் தனக்குள்ளயே வெப்பியாரப்படத் தொடங்கினார்.

இப்ப மெல்ல மெல்ல ஆட்களை விடுதலை செய்யத் தொடங்குகிறார்கள். விடுதலையாகும் ஆளை நெருங்கிய உறவுக்காரர் ஒருவர் பொறுப்பெடுக்க வேண்டும். கொஞ்சக் கொஞ்ச ஆட்களாக கூப்பிட்டு வீட்டுக்காரர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லாப் பழகின ஆட்களை ஆமிக்காரரும் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சி பிரியாவிடை சொல்லுகினம்.

இப்ப எங்கட ஆளையும் இன்னும் கொஞ்சப் பேரையும் கூப்பிடுகினம். அதில தான் மாஸ்ரரும் வாறார். விபரங்களைப் பதிவு செய்து புகைப்படம் எடுத்து,கைரேகை பதிந்து ஆட்களை வெளியில் விட்டார்கள். வெளியில வாற எங்கட ஆளின்ர தகப்பன்காரன் நின்று கட்டிப்பிடிச்சு அழுகிறார். எங்கட ஆளும் கண்ணை மூடிக் கொண்டு நிக்குது. இந்த சென்டிமென்ற் எல்லாம் முடிய எங்கட ஆள் பஸ் ஏறப் போனார். அந்த நேரம் பின்னால ஆரோ கூப்பிடுகினம். திரும்பிப் பார்த்தால், மாஸ்ரர். மாஸ்ரர் கத்திச் சொன்னார்.

“நீ ரெண்டாவது தலைவர் ரெண்டாவது தலைவரென்று நச்சரிப்பியே… நாளைய உதயன் பேப்பரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளு”என.

அன்று வீட்டுக்கு வந்த எங்கட ஆளுக்கு பலத்த வரவேற்பு. சொந்தம் பந்தமெல்லாம் மாலைபோடாத குறையாக வரவேற்கினம். எல்லோருடனும் கதைத்துவிட்டு படுக்க நடுச்சாமம் கடந்துவிட்டது. ஆனாலும் அடுத்தநாள் நேரத்துக்கே எழும்பி சந்தியிலயிருக்கிற பேப்பர் கடைக்குப் போனார். ஒரு உதயன் வாங்கினார். அதில நேற்று நடந்த விசயமிருந்தது.

இன்னார் வந்து இன்ன இன்ன அட்வைஸ் பண்ணினாரென்ற விபரம் படத்துடன் வந்திருக்குது. அதை வாசித்த எங்கட ஆளுக்கு தலைவிறைச்சுது. நேற்று வந்தவர் கதைச்ச விசயத்தை போட்டு அவரின்ர பழைய படம் ஒன்றுதான் போட்டிருந்தினம். அது உக்ரைன் ஏவுகணை பரிசோதனைக்கு வந்த ஆள். அந்த ஆள்த்தானா நேற்று வந்த ஆள். எவ்வளவு மாறிவிட்டார்? அவர்தானா எங்கட இரண்டாவது தலைவர்? இது தெரிந்திருந்தால் அவருடன் கதைக்க முயன்றிருக்கலாமென யோசித்துக்கொண்டு கடைக்கு முன்னாலையே நிற்கிறார். “ச்சா… எவ்வளவு பெரிய பிழை விட்டிட்டன.”என தனக்குள்ளே சொல்லிக்கொண்டார். பிறகு, இந்தப் பிழைக்கு தான் மட்டும் பொறுப்பில்லைதானேயெனவும் யோசிக்கத் தலைப்பட்டார். ஏனெனில்,முன்னரெல்லாம் குமரன் பத்மநாபன் என்ற பெயர் பத்திரிகைகளில் வருவதில்லை.

அப்படி வந்தாலும் , யாழ்ப்பாணத்திலும் பிற இடங்களிலும் கூட்டம் வைத்து

யுத்தத்தின் அழிவுகளை நினைத்துக் கண்ணீர் விடுவது  மாதிரியான படங்களெதுவும் பிரசுரமாகியிருக்கவில்லைத்  தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் , நன்னி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 21/10/2022 at 13:06, nunavilan said:

இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் , நன்னி.

 

மறந்துவிட்டேன். இந்தாருங்கள். சேர்த்துவிடுங்கள்.

https://www.facebook.com/legacy/notes/210682605609698/

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இரண்டாவது தலைவர்தான் இணைந்த வட-கிழக்கிற்கான தலைவரோ தெரியாது 🤨

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

மறந்துவிட்டேன். இந்தாருங்கள். சேர்த்துவிடுங்கள்.

நல்ல கதை.இணைப்புக்கு நன்றி நன்னி.

3 hours ago, Kapithan said:

எங்கள் இரண்டாவது தலைவர்தான் இணைந்த வட-கிழக்கிற்கான தலைவரோ தெரியாது 🤨

ஓஓஓ

அப்ப சுமந்திரன் சாணக்கியன் இல்லியோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல கதை.இணைப்புக்கு நன்றி நன்னி.

ஓஓஓ

அப்ப சுமந்திரன் சாணக்கியன் இல்லியோ?

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.