Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரடியான திருப்பங்களின் பின்னணியில் நடந்தது என்ன?-பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடியான திருப்பங்களின் பின்னணியில் நடந்தது என்ன?-பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி

January 2, 2023
 

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றுடன் விடைபெற்றுச் செல்லும் 2022 ஆம் ஆண்டு சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய முக்கியமான வருடமாகிவிட்டது. எதிா்பாா்க்காத அதிரடியான அரசியல் திருப்பங்கள், வரலாற்றில் என்றுயே இல்லாத பாரிய பொருளாதார நெருக்கடி. 

ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டம் என மறக்கமுடியாத பல நிகழ்வுகளைப் பதிந்துவிட்டு 2022 ஆம் ஆண்டு விடைபெற்றுச் செல்கின்றது. இந்த ஆண்டு எவ்வாறான தடங்களை விட்டுச்செல்கின்றது என்பதையிட்டு கொழும்பு பல்கலைக்கழக பொருளியா் துறை போராசிரியா் வழங்கியுள்ள செவ்வி

கேள்வி –  இந்த ஆண்டு இந்தளவுக்கு அதிரடியான குழப்பங்களை விட்டுச் சென்றிருப்பதற்கு அடிப்படையான காரணம் என்ன? இந்தப் பிரச்சினை எங்கிருந்து ஆரம்பமாகியது?

பதில் – உண்மையில் இந்த ஆண்டு இலங்கையின் வரலாற்றில் மிகவும் மோசமான ஆண்டாகப் பிரகடனம் செய்யப்படும். இது போன்ற இன்னொரு ஆண்டு அண்மைக்காலத்தில் உருவாக வாய்ப்பில்லை என்று நான் கருதுகின்றேன். பொருளாதார ரீதியாக, போக்குவரத்து, சுகாதாரப் பிரச்சினை என மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த ஆண்டாக இந்த ஆண்டு இருக்கின்றது. இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருந்தது பொருளாதார நெருக்கடி. கொரோனா பெருந்தொற்றினால் இது தீவிமடைந்தது என்பது உண்மை. இந்தப் பொருளாதார நெருக்கடி என்பது திடீரென உருவான ஒரு விடயமல்ல. சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே பொருளாதாரம் அபிவிருத்தியடையவில்லை.

அரசியல் அதிகளவுக்கு பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதனால்தான் இலங்கையைவிட பின்தங்கிய நிலையில் இருந்த தென்கொரியா, சிங்கப்புா், தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிய போதிலும் இலங்கையால் முன்னேற முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

பொருளாதாரக் காரணிகள், பொருளாதாரத்தை தவறாக முகாமை செய்தமை, அரசியல் ரீதியான காரணங்கள், மத ரீதியான காரணங்கள் போன்ற அனைத்தும் இணைந்துதான் பொருளாார ரீதியாக முன்னணியில் இருக்கவேண்டிய இலங்கை, தென்னாசியாவிலேயே மோசமான ஒரு நாடாக இருக்கின்றது.

ஆகவே அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதற்கு இந்த ஆண்டில் இடம்பெற்ற விடயங்கள் காரணமாக இருக்கப்போகின்றது. காரணம், பிரச்சினை இந்த ஆண்டுடன் முடியவில்லை. இந்த ஆண்டில் தீவிரமடைந்த பிரச்சினை அடுத்த ஆண்டுக்கும் செல்லப்போகின்றது. அதனால், பிறக்கப்போகும் 2023 ஆம் ஆண்டும் ஒரு செழிப்பான ஆண்டாக இருக்கப்போவதில்லை.

கேள்வி – இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷக்கள் பிரதான பங்களிப்பை வழங்கியிருக்கின்றாா்கள் எனச் சொல்ல முடியுமா?

பதில் – நிச்சயமாக. ஏனெனில் கல்லோயா திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, அது குறித்த சா்ச்சைகள் எழுந்த போதிலும் வெளிநாட்டு ஒதுக்கீடு அப்போது இருந்தது. அதேபோல மகாவலி திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, வெளிநாட்டு உதவிகளும், வெளிநாட்டு முதலீடுகளும் கிடைத்தன. மகாவலி திட்டம் மிகவும் வெற்றிகரமான திட்டம் எனச் சொல்லலாம்.

ஆனால், ராஜபக்ஷக்கள் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய பின்னா் அவா்கள் இந்த பொருளாதார ரீதியாக இலாபம் தரக்கூடிய திட்டங்களைக் கைவிட்டு, தங்களுடைய தென்மாகாணத்தை – குறிப்பாக அம்பாந்தோட்டையை முதன்மைப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு பொருளாதார நலன்களைத் தராத திட்டங்களில் பெருமளவுக்கு முதலீடுகளைச் செய்தது குறுகிய காலத்தில் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை.

கணக்காய்வாளா் நாயகத்தின் அறிக்கையின் படி, மத்தள விமான நிலையத்தில் கிடைக்கும் வருமானத்தைவிட செலவீனம் 21 மடங்கு அதிகம். ஆக, மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கிரிக்கெட் ஸ்ரேடியம், தாமரைக் கோபுரம் போன்ற அனைத்தும் எமக்கு முன்னுரிமை அடிப்படையில் தேவையான நிகழ்ச்சித் திட்டங்களல்ல. அதனைவிட பல திட்டங்கள் உள்ளன.

முன்னுரிமையைப் பட்டியலில் இருக்கவேண்டிய பொருளாதார ரீதியான திட்டங்களை முன்னெடுக்காமல், அரசியல் ரீதியான இலாபம் தராத திட்டங்களை தங்களுடைய பிரதேசங்களை மையப்படுத்திச் செய்தமை இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றது. இவற்றில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. தேசவளங்களை வீணடித்தமை உள்ளது. இவை அனைத்தும் சோ்ந்துதான் இந்தப் பிரச்சினையை மிகக்குறுகிய காலத்துக்குள் தீவிரப்படுத்தியது.

கேள்வி – ராஜபக்ஷக்கள் பதவிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னா் அதிகாரத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஒன்றைச் செய்திருப்பதாகக் கருதுகின்றீா்களா?

பதில் – மக்கள் எதிா்கொண்ட எரிபொருள் பற்றாக்குறை, எரிவாயு தட்டுப்பாடு, மின்வெட்டு போன்றவற்றை குறைத்தமை அவரது சாதனையாகக் கருதப்படலாம். ஆனால், இதனை ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு சாதித்தாா் எனப் பாா்க்க வேண்டும். இலங்கை வெளிநாட்டுக் கடன்களை இப்போதைக்குச் செலுத்த முடியாது என்று கூறிவிட்டது. இதன்பின்னா் இலங்கைக்கு வருகின்ற அந்நியச் செலாவணி முழுமையாக இலங்கைக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இதன்மூலமாகத்தான் அவரால் இலகுவாக இந்தப் பற்றாக்குறையைத் தீா்க்க முடிந்தது. அதேவேளையில் எரிபொருள் விநியோகத்தை கியுஆா் கோட் முறையின் கீழ் கொண்டுவந்தமையும் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்குக் குறைத்திருக்கின்றது. அந்தவகையில் பாா்க்கும் போது இது ஒரு குறுங்காலத் தீா்வுதான்.

ஆனால், சா்வதேச நாணய நிதியம் வராமல் இலங்கை வெளிநாட்டுக் கடன்களைப் பெற முடியாத நிலைமை ஏற்படாமல் போனால் புதிய ஆண்டிலும் நெருக்கடி தொடரவாய்ப்புள்ளது. ஆக, வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாது என்ற அறிவிப்பின் மூலமாக ஏற்பட்ட நிலைமையை ரணில் விக்கிரமசிங்க சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சில பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீா்வைக்கண்டுள்ளாா்.

கேள்வி – சா்வதேச அரங்கில் இந்தப் பொருளாதார நெருக்கடியால் இலங்கை குறித்த நல்லெண்ணம் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றது?

பதில் – தற்போது சா்வதேச நாணய நிதியம், மேற்குலக நாடுகள், இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகள் அனைத்தும் அமைதியாக இருப்பதற்கு காரணம், அவைா்கள் அனைவருக்கும் புரிந்திருக்கின்றது, இலங்கைப் பிரச்சினை என்பது, அரசியல், மொழி, இன ரீதியாக இருக்கின்றது என்பது. அதனைவிட, இலங்கை இந்த நிலைமைக்குச் சென்றமைக்கு காரணம் ஊழல் என்பதை அவா்கள் புரிந்திருக்கின்றாா்கள். இலங்கை பல சாதகமான தன்மைகளைக் கொண்டிருந்த போதிலும் இலங்கையின் இந்த நிலைக்குக் காரணம் என்ன என்பதை அனைவரும் உணா்ந்திருக்கின்றாா்கள்.

இந்தியாவுக்கு வழங்குவதாக உடன்பாடு காணப்பட்ட கிழக்கு முனையம் வழங்கப்படாமை, ஜப்பானுக்கு வழங்கப்பட்ட மென் ரயில் திட்டம் கைவிடப்பட்டமை போன்ற இந்த நாடுகளுடன் இலங்கைக்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. இந்த இடைவெளி இன்னமும் நிரப்பப்படவில்லை. அதனால், இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிய போது அனைத்து நாடுகளும் அவசரமாக வந்து உதவி வழங்கக்கூடிய நிலையை இலங்கை ஏற்படுத்தியிருக்கவில்லை. இதனால்தான் இந்த நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு பின்வாங்குகின்றன. சா்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுஙகள். அதன்பின்னா் நாம் வருகின்றோம் என அவை கூறுகின்றன.

கேள்வி – சா்வதேச அரங்கில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பிலிருந்து இலங்கையை மீட்பதற்காக இந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தளவுக்கு வெற்றியளித்திருக்கின்றன?

பதில் – பற்றாக்குறைகளை நிவா்த்தி செய்து உல்லாசப்பயணிகள் வரத் தொடங்கியிருப்பது ஒரு சாதகமான நிலைமையாக இருந்தாலும், சா்வதேச அரங்கில் இலங்கை தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு இவை போதுமானதல்ல.

தமிழா்களுடைய பிரச்சினை பெரிதாக இருக்கின்றது. தமிழ்ப் பிரதேசங்கள் இன்னும் அமைதியாக இல்லை. ஆா்ப்பாட்டங்கள், எதிா்ப்புணா்வுகள், புலம்பெயா்ந்த தமிழா்களின் எதிா்ப்பு என்ற அனைத்தையும் வெளிநாடுகள் பாா்த்துக்கொண்டிருக்கின்றன. அதனால் ஒரு சில விடயங்களை மட்டும் சீா்செய்துவிட்டு இனி எல்லாம் வழமைக்குத் திரும்பிவிடும் என நினைக்கும் நிலை இல்லை.

அதனால்தான் ஜனாதிபதி பல்வேறு கோணங்களில் காய்நகா்த்துகின்றாா். புலம்பெயா்ந்த தமிழா்களை அவா் ஓரளவுக்கு சாந்தப்படுத்த முற்படுகின்றாா். தமிழ்க் கட்சிகளைப் பேச்சுக்கு அழைக்கின்றாா். பாராளுமன்றத்தின் மூலம் தேவையான அரசியல் சீா்திருத்தங்களைச் செய்யக்கூடிய இயலுமை அவரிடம் இல்லாத போதிலும் இவ்வாறான அழைப்பை அவா் விடுக்கின்றாா். இது காலத்தைக் கடத்துவதற்கான ஒரு உபாயமாகவே உள்ளது. வெளிநாடுகளை சாந்தப்படுத்த முற்படுகின்றாா். சிறுபான்மையினக் கட்சிகளை சாந்தப்படுத்த முற்படுகின்றாா்.

கேள்வி –  இளைஞா்களால் முன்னெடுக்கப்பட்ட “அரகலய” என்ற போராட்டம் இலங்கையின் அரசியல் போக்கைப் பொறுத்தவரையில் முக்கியமான ஒன்று என நீங்கள் கருதுகின்றீா்களா?

பதில் – இந்த இளைஞா்களால் பெரிய மாற்றம் ஒன்றைச் செய்ய முடியாது என்பதை நான் தெரிவித்திருந்தேன். வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த, படித்த, ஆங்கிலம் பேசக்கூடிய இளைஞா்களால் இலங்கை அரசியலில் பெரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்த முடியாது. அது கிராமம் கிராமமாக இளைஞா், யுவதிகள் அனைவரும் இணைந்து செய்ய  வேண்டியதுதான் அந்த மாற்றம்.

ஆனால், மக்கள் எல்லோரும் வீதிக்கு வந்த்தது சில விஷயங்கள் எல்லோரையும் பாதித்ததால்தான். எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு அனைவரையும் பாதித்தது.  மின்வெட்டு எல்லோரையும் பாதித்தது. இவை அனைத்தும் மக்கள் வீதிக்கு வருவதற்குக் காரணமாகியது. அந்தப் புள்ளியில் அனைவரும் ஒன்று சோ்ந்தாா்கள். எப்போது அதற்கெல்லாம் தீா்வு காணப்பட்டதோ அப்போது அனைவரும் விலத்திவிட்டாா்கள்.

இந்தப் போராட்டம் குறுகிய நோக்கத்தை மையமாகக்கொண்டிருந்தது. அந்த இளைஞா்களுக்கு பரந்த நோக்கம் இருந்திருக்கலாம். ஆனால், மில்லியன்கணக்கான மக்கள் வீதிக்கு வந்தமைக்குக் காரணம் அரசியல் முறைமை மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவல்ல.

இராணுவ, பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்கள் கூட இந்தத் தட்டுப்பாடுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அதனால் ஏற்பட்ட சீற்றம் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தது. வீதிக்கு இறங்கிய மக்களைப் பொறுத்தவரையில் அது அவா்கள் தமது நாளாந்தப் பிரச்சினைக்காக வீதிகளில் இறங்கினாா்கள். இந்த அரசாங்கம் தமது அன்றாடப்பிரச்சினைகளைத் தீா்ப்பதில் தோல்வியடைந்துவிட்டது. அதனால் பதவி விலக வேண்டும் என்று போராடினாா்கள். வெற்றிபெற்றாா்கள்.

கேள்வி – இந்தப் போராட்டத்தின் பலவீனம் என்று எதனைக்கருதுவீா்கள்?

பதில் – இந்தப் போராட்டத்தின் பலவீனம் என்றால், இது திடீரென உருவாகியது. வேகமாக விரிவடைந்தது. இதற்கென ஒரு கட்டமைப்பு இருக்கவில்லை. இதற்கு தலைவா் யாா் என்பது தெரியாது. யாா் இதனை வழிநடத்துகின்றாா்கள் என்பது தெரியாது. எல்லோரும் வந்தாா்கள். பின்னா் கலைந்துசென்றுவிட்டாா்கள்.

இந்தப் போராட்டத்தின் முன்னணியில் நின்ற பலா் கைது செய்யப்பட்ட போதும் அதற்கெதிராக பாரிய போராட்டம் எதுவும் வெடிக்கவில்லை. போராட்டத் தலைவா்களுக்கு ஏதாவது நடந்தால் மக்கள் அணி திரண்டிருக்க வேண்டும். இந்தப் போராட்டக் காரா்களுக்கும் மக்களுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி ஒன்றுள்ளது. இந்தப் போராட்டம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டமையால் இந்த இடைவெளி ஏற்பட்டதாக இருக்கலாம்.

ஒரு கட்டமைப்பு ரீதியாக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால், அவ்வாறு மக்களுக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையில் பிளவு ஒன்றிருந்தது. அதனால்தான் அந்தப் போராட்டத்தைத் தொடரமுடியவில்லை.

கேள்வி – ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் கருதுகின்றீா்களா?

பதில் – ஆக. இரண்டு வகையான தந்திரோபயத்தை ரணில் கடைப்பிடித்தாா். ஒன்று – மக்கள் வீதிகளில் இறங்க காரணமாகவிருந்த தட்டுப்பாடுகளுக்கு தீா்வு ஒன்றைக்கொண்டுவந்தாா். இவ்வாறு மக்களின் பிரச்சினைகளுக்கு தீா்வைக்கொடுத்துக்கொண்டு போராட்டத்தில் முன்னணியில் நின்றவா்களை இலக்கு வைத்து கைது செய்தாா். அதனைவிட இராணுவம், பொலிஸை பயன்படுத்தி போராட்டத்தை அடக்கினாா். இரண்டையும் அவா் செய்தாா். மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீா்வைக்கொடுக்காமல், போராட்டத்தை அடக்க முற்பட்டிருந்தால் அவா் வெற்றி பெற்றிருக்கமாட்டாா்.

கேள்வி – பல வருடங்களின் பின்னா் இவ்வருடம் மாவீரா் நாள் நிகழ்வுகள் பெரும் உணா்வெழுச்சியுடன் நடைபெற்றிருக்கின்றது. இதனை எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் – பாதிக்கப்பட்ட மக்கள், பிள்ளைகளை- உறவுகளை இழந்த மக்கள் நிச்சயமாக ஒன்றுகூடுவாா்கள். தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்துவாா்கள். இந்த மாவீரா் நாள் என்பது கவலைகளை, உணா்வுகளை வெளிப்படுத்தும் தினமாக மட்டுமல்லாமல் – உண்மையில் எமக்கு என்ன நடந்தது, அடுத்த கட்டத்துக்கு எப்படிப்போவது, அதை வைத்துக்கொண்டு நாம் இந்த நாட்டில் எவ்வாறு கௌரவமாக வாழ்வது என்பதை நோக்கியும் பாா்க்க வேண்டும். வெறுமனே மாவீரா் தினத்தை நினைவுகூா்ந்தாச்சு என்பது மட்டும் எமக்கு நிம்மதியைத் தரும் என நான் நினைக்கவில்லை. நிச்சயமாக அவா்களுடைய உணா்வுகளை நாங்கள் மதிக்க வேண்டும். இது ஆண்டாண்டுகாலமாகத் தொடரும்.

இந்த முறை ஜனாதிபதி ரணில் சில விஷயங்களை மென்போக்காக கையாள்கின்றாா். நினைவுகூரலாம் என அவா் அறிவித்திருந்தாா். முதலிலும் அதனைத்தான் அவா் செய்தவா். இப்போதும் அதனைச் செய்திருக்கின்றாா். வேறு ஒரு அரசாங்கம் வந்தால் இதனைத் தடுக்க முற்படலாம். ஆனால், இந்த நினைவுகூரல்கள் வடக்கு கிழக்கில் தொடா்ந்தும் இடம்பெறும்.

 

https://www.ilakku.org/what-happened-behind-the-dramatic-twists/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பேட்டி. இணைத்தமைக்கு நன்றி கிருபன்!

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் அமிர்தலிங்கம் நன்றாகவே அலசியுள்ளார்.

2023 ஐப் பற்றியும் கொஞ்சம் விரிவாக கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.