Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதியவாதிகளால் நிரம்பும் தமிழ்த் தேசிய அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதியவாதிகளால் நிரம்பும் தமிழ்த் தேசிய அரசியல்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி விக்னேஸ்வரன், தன்னுடைய சாதியை அறியும் நோக்கில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் அண்மையில் வெளிப்படுத்தி இருக்கிறார். 

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், விக்னேஸ்வரன் அணியில் ஐங்கரநேசன் முக்கிய பங்கை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்திலேயே, ஐங்கரநேசனின் சாதியை விக்னேஸ்வரன் அறிய முயன்றிருக்கிறார். தன்னுடைய அணியில் முக்கிய நபராகச் செயற்பட்ட இன்னொருவரின் சாதியை சுட்டிக்காட்டியே, ஐங்கரநேசனின் சாதியையும் விக்னேஸ்வரன் அறிய விரும்பி இருக்கிறார்.

தமிழ்த் தேசிய அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக, தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் சாதியவாதிகளும் மதவாதிகளும் நிரம்பி இருக்கிறார்கள். இன்றும், ஒருவரின் சாதியையும் மதத்தையும் அறிந்து, தேர்தல்களில் போட்டியிட அனுமதிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்கும் நிலை இருக்கிறது. 

இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடங்கி இந்த நிலைக்கு எந்தவொரு கட்சியும் விதிவிலக்கானது அல்ல. ஆனால், வெளிப்படையாக  சாதியவாதத்தையோ மதவாதத்தையோ பேசுவதை தவிர்க்கின்றன. அதற்கு, ஆயுதப் போராட்டம் சாதிய, மதவாத சிந்தனைகளுக்கு அப்பால் நின்று எழுந்த ஒன்று என்பதும் காரணம். அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு என்பது, சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மத நல்லிணக்கத்திலும் நிலைத்து நின்றது. அதன் தொடர்ச்சியைப் பேண வேண்டிய கடப்பாடு, இப்போதுள்ள தேர்தல் நோக்கு அரசியல் கட்சிகளின் தலையில் தவிர்க்க முடியாமல் இறக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. அதனால்தான், வெளிப்படையாக சாதிய, மதவாத சிந்தனைகளை இந்தக் கட்சிகள் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால், சாதிய, மதவாத சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவர், எவ்வளவுதான் பொதுவெளியில் மறைத்துச் செயற்பட்டாலும், அவரை அறியாமல் எங்காவது வெளிப்பட்டுவிடும். இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. 

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சியில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மலைய மக்களை நோக்கி, சாதிய அடையாளங்களைக் குறிக்கும் வார்த்தைகளை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தி இருந்தார். 

பௌத்த சிங்கள அரசாங்கங்களால் காலத்துக்கு காலம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனக்கலவரங்களை அடுத்து, மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், கிளிநொச்சியிலும் வன்னிப் பெருநிலப்பரப்பு முழுவதும் மூன்று தலைமுறைகளாக வசிக்கிறார்கள். அந்த மண்ணின் மைந்தர்களாகி விட்டார்கள். 

அவர்கள், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அதியுச்சம் என்று நம்பப்படும் ஆயுதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மாவீரர்களாகவும் போராளிகளாகவும் இறுதி மோதல் வரையில் பங்களித்து இருக்கிறார்கள். அதனால், அவர்கள் இன்றைக்கும் போராட்ட வடுக்களோடு பின்தங்கிய நிலையில் வாழ வேண்டி இருக்கின்றது. 

அவர்களை, மலையக மக்களாக அடையாளப்படுத்தும் வேலைகளை தென் இலங்கை இனவாத சக்திகள் திட்டமிட்டு செய்து வருகின்றன. அதற்கு, சிறிதரன் போன்ற சாதியவாத சிந்தனை கொண்டவர்கள் மறைமுகமாக உதவுகிறார்கள். வாக்குக்காக மட்டுமே அந்த மக்களை சிறிதரன் போன்றவர்கள், மாற்றான்தாய் மனநிலையிலேயே தொடர்ந்தும் அணுகி வருகிறார்கள். அதைத்தான், சிறிதரனின் சாதியவாத உரையாடல் வெளிப்படுத்தியது. 

மலையகத்திலிருந்து வடக்கு, கிழக்கில் குடியேறிவிட்ட மக்கள் இன்றைக்கு, தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு பகுதியினர். அவர்களைப் பிரித்து வைத்து, சிறு அரசியல் புரிந்தாலும் அது அநாகரிகத்தின் உச்சம்.

சிறிதரனின் சாதியவாத உரையாடல்கள்  ஒலிவடிவில் வெளியாகிய பின்னரும் கூட, தமிழரசுக் கட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அது குறித்து எந்தவொரு பதிலையும் கூட வெளிப்படுத்தவில்லை. தமிழ்த் தேசிய அரங்கில் இருக்கின்ற கட்சிகளில் பிரதான கட்சியாக தமிழரசுக் கட்சி அப்போது பொறுப்போடு செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால், வாய்மூடி மௌனியாக இருந்ததுதான் வரலாறு. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த காலத்தில், அதற்குள் சாதிய பாகுபாடுகள் இருந்ததில்லை. 

ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பின் சாதியவாத அணுகுமுறை தெளிவாக வெளிப்பட்டது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குக்கூட, சாதிய அடிப்படைகளுக்காக, கூட்டமைப்புக்குள் சரியாக மதிப்பளிக்கப்படாத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அழைத்து வரப்பட்டதும் சாதியவாத, மதவாத, மேட்டுக்குடி அணுகுமுறைகளால்தான் நிகழ்ந்தது.  அவர், அரசியலுக்கு வந்தது முதல் தன்னை தமிழ்த் தேசிய அரசியல்வாதியாக முன்னிறுத்துவதைக் காட்டிலும், தன்னுடைய மதத்தையும் மேட்டுக்குடி மனநிலையையும் வெளிப்படுத்துவதிலும் குறியாக இருந்தார். 

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் மோடியிடம், சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமானந்தாவுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் வலியுறுத்தி இருந்தார். அது அவரின் மதவாத நோக்கு நிலையால் வந்ததொன்று!

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், விக்னேஸ்வரனை மேட்டுக்குடி என்பதற்காக அரசியலுக்கு அழைத்து வந்தார் என்பது வெளிப்படையானது. ஆயுதப் போராட்டத்தின் மீது சம்பந்தனுக்கு சிறிதும் அபிமானம் இல்லை. அந்தப் பின்னணியில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும், அவர்களை ஒவ்வாமையோடுதான் அணுகி வந்திருக்கிறார். அதனை அவர், பொது வெளியிலேயே வெளிப்படுத்தி இருக்கின்றார். அதனால்தான், விக்னேஸ்வரனை அவர் அரசியலுக்கு அழைத்து வந்தார். சம்பந்தனின் எண்ணத்தை நிறைவேற்றுவதில், அப்போது எம்.ஏ சுமந்திரன் பெரும்பங்காற்றினார். அதில், விக்னேஸ்வரன் மீதான குரு என்கிற விசுவாசம் கூட இருந்திருக்கலாம்.

விக்னேஸ்வரன் எவ்வாறான அணுகுமுறைகளோடு தமிழ்த் தேசிய அரசியலுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றார் என்பது, சிறிய காலத்துக்குள்ளேயே வெளிப்பட்டுவிட்டது. ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிக் கொண்டு யாழ். மையவாத புத்திஜீவிகளும், அரசியல் ஆய்வாளர்களும் தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்து, விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமையாக கட்டமைக்க முயன்ற வரலாறு, தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு பக்க அவலத்தை வெளிப்படுத்துவதற்கு போதுமானதாகும்.  

விக்னேஸ்வரன் ஒரு சாதிய மேட்டுக்குடி சிந்தனைகள் நிரம்பிய மதவாதி என்பது வெளிப்படையானது. அவரை, சம்பந்தனுக்கு மாற்றான தலைவராக நிறுத்துவதற்காக அவருக்கு ஜனவசிய பிம்பங்களை நாளும் பொழுதும் வரைந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், விக்னேஸ்வரனை சித்திரிக்கும் வேலைகளை எல்லாம் தமிழ் மக்கள் பேரவை எனும் பெயரில் யாழ். மையவாத குழு பண்ணியது. 

அப்போது, விக்னேஸ்வரனை மிகப்பெரிய உன்னத தலைவராக, ஐங்கரநேசன் நம்பியதாக இப்போது கூறுகிறார். விக்னேஸ்வரன், சாதி கேட்டதை மாபெரும் குற்றமாக இப்போது அவர் வெளிப்படுத்துகிறார். ஆனால், இதில் இருக்கும் வியப்பு என்னவென்றால், வடக்கு மாகாண சபையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அளவில் விக்னேஸ்வரனின் அமைச்சரவையில், அவருக்கு அடுத்த நிலையில் ஐங்கரநேசன் இருந்திருக்கிறார். விக்னேஸ்வரனை அனைத்து இடங்களிலும் நியாயப்படுத்துவதிலும் குறியாக நின்று அப்போது இயங்கியிருந்தார். 

அப்படிப்பட்டவருக்கு, விக்னேஸ்வரனின் உண்மையான சாதியவாத, மதவாத முகம் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில்தான் வெளிப்பட்டது என்பதைதான் எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.

தமிழ்த் தேசிய அரசியல் சாதிய, மதவாத, வகுப்புவாத, பிரதேசவாத சிந்தனைகளைப் புறந்தள்ளி, மக்களை ஒரே மக்களாக, ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கான அடிப்படை நோக்கங்களைக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். 

ஆயுதப் போராட்ட காலத்தில் குறிப்பாக, புலிகளின் காலத்தில் அதனை நோக்கி நகர்வு குறிப்பிட்டளவு இருந்தது. ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசிய பயணம் என்பது, சமூக விடுதலைக்குப் புறம்பான சிந்தனை கொண்டவர்களால் ஆக்கிரமிக்கப்படும் சூழல் இருக்கின்றது. 

விக்னேஸ்வரன், சிறீதரன் போன்றவர்கள் ஒருசில உதாரணங்கள் மட்டுமே! அவர்கள், ஆர்வக்கோளாறு அல்லது தன்னிலை மறந்து நின்று தங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! மற்றப்படி, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இருப்பவர்களில் குறிப்பிட்டளவானவர்கள்  சாதிய, மதவாத சிந்தனைளோடு இருப்பவர்கள்தான் என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை. 

இது, தமிழ்த் தேசிய இயக்கத்துக்கு மிகவும் அச்சுறுத்தலானது. இந்த யதார்த்தத்தை மறைத்து நின்று, தமிழ் மக்கள் எந்த விடுதலையையும் பெற்றுவிட முடியாது.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாதியவாதிகளால்-நிரம்பும்-தமிழ்த்-தேசிய-அரசியல்/91-316211

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், சக அமைச்சர் ஒருவரது சாதியை அறிவதற்காக அனுப்பியதாகக் கூறப்படும் ஈமெயில் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது. 

அது குறித்து இதுவரை அவர் அங்கம் வகித்த - அங்கம் வகிக்கின்ற எந்தக் கட்சியும் மறுப்பறிக்கை விடவில்லை. அதேபோல தமிழ் மக்களின் அதிக விருப்பு வாக்குகளினால் முதலமைச்சராகி பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் எவ்வித மறுப்பறிக்கையும் விடவில்லை. 

எனவே இந்த சாதி விசாரிப்பு ஈமெயில் மெய்யானது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அந்த முடிவிலிருந்து பின்வரும் விடயங்களைப் பகிரவேண்டியுள்ளது. 

கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான சாதியத்தை நம்பும் - பின்பற்றும் ஒருவர் தமிழ் தேசியம் பேசினால், அவரால் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க முடியும். வாக்கிற்கு சாதியிருப்பதில்லை. வாக்களித்த பின்னரே சாதி பார்க்கப்படவேண்டும் என்கிற பிற்போக்குத்தனமான, நரித்தனமான சிந்தனையின் அரசியல் செயற்பாட்டு வடிவமாகவே சி.வி.விக்கினேஸ்வரன் வலம் வருகின்றார். 

பக்திமான், தமிழ் புலமை, வெண்ணிற ஆடை போன்றன எல்லாவிதமான பிற்போக்குத்தனங்களையும் மறைக்கும் கருவி மாத்திரமே தவிர, தனி மனித ஒழுக்கத்தின் விழுமியங்கள் அல்ல. அதனைப் போர்த்திக்கொண்டு எத்தனை காலத்துக்கும், எல்லா தமிழ் மக்களையும் ஏமாற்றலாம். அதுவும் வாழவேண்டிய தமிழ் இளையவர்களின் செந்நீராலும், கண்ணீராலும் வளர்க்கப்பட்ட தமிழ் தேசியத்தைத் தம் கதிரை அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொள்ள, எவ்வித கபடங்களையும் செய்யலாம். 

இந்த இழி செயலுக்கு எந்தத் தண்டனைகளும் கிடையாது. எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது. மக்களுக்குத் தலைமைதாங்கும் தம் கட்சியைச் சார்ந்த ஒருவரது இவ் இழி செயலுக்கு எந்தக் கட்சியும் காரணம் கேட்காது. கள்ள மௌனமே காக்கும். இது விடயத்தில் சி.வி.விக்கினேஸ்வரனிடம் அவரை அரசியலுக்கு அறிமுகம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் கேள்வியெழுப்பவில்லை. தற்போது அவரைக் காவிச் செல்லும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டமைப்பும் எதுவும் கேட்கவில்லை. அவரிடம் கேட்காவிட்டாலும், தாம் பொறுப்புச் சொல்லவேண்டிய மக்களிடம் கூட வாய் திறக்கவில்லை. ஏனெனில் இந்த விடயத்தில் தீவிர தமிழ் தேசியம் பேசும் இரு கட்சிகளுமே மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்கிற நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றன. ஏனெனில் இங்கு இயங்குகின்ற அனைத்துக் கட்சிகளுமே சாதிய வாக்குகளைக் கணக்கிட்டுப் பொறுக்கிக்கொள்வதற்குத் தனி வாய்ப்பாடொன்றையே வைத்திருக்கின்றன. 

அடுத்தவரிடம் எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ அவரது சாதியை பற்றி வினவுவது என்பது ஒரு வகையான வெறுப்புப் பேச்சுத்தான். சக மனிதரது ஒதுக்கிவைக்க எடுக்கும் முதல் முயற்சிதான். சக மனிதருக்குள்ள சமத்துவத்தை மதியாமையின் வெளிப்பாடுதான். எவ்விதத்திலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஆனால் துயரம் என்னவென்றால், இலங்கையின் நீதித்துறையின் உச்ச பதவியான நீதியரசர் பதவியையும், வட மாகாண மக்கள் ஜனநாயக ரீதியில் அதிக விருப்பு வாக்குகளால் தெரிவுசெய்து வழங்கிய முதலமைச்சர் என்கிற தலைமைத்துவப் பொறுப்பையும், யாழ்ப்பாண மக்கள் இணைந்து வழங்கிய தம் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் வைத்திருக்கும் ஒருவரின் உச்சபட்ச மனித விழுமியம் இதுதான்.

 

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02QEhjExt7vn1ev1T86EK5e4qVMaiQ7BDtwCME2qjJtY7vjpBfiqBTd2xFEVJQYMzjl&id=100002206875129

  • கருத்துக்கள உறவுகள்

“ஆனால் துயரம் என்னவென்றால், இலங்கையின் நீதித்துறையின் உச்ச பதவியான நீதியரசர் பதவியையும், வட மாகாண மக்கள் ஜனநாயக ரீதியில் அதிக விருப்பு வாக்குகளால் தெரிவுசெய்து வழங்கிய முதலமைச்சர் என்கிற தலைமைத்துவப் பொறுப்பையும், யாழ்ப்பாண மக்கள் இணைந்து வழங்கிய தம் அரசியல் பிரதிநிதித்துவத்தையும்வைத்திருக்கும் ஒருவரின் உச்சபட்ச மனித விழுமியம் இதுதான்.“

இவர்கள்தான் எங்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரப்போகிறார்கள்.  😁

 

இன்னொரு திரியில், கடஞ்சா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார் "

எல்லா அரச குடும்பங்களும், அவர்களுக்கு  இடையில் இப்பொது கூட, ஒருதாய் வயிற்றில் பிறந்த சகோதரத்துவ உணர்வு.

அவர்கள் பகைத்து கொண்டாலும், தனிப்பட்ட அடிப்படையில் அந்த உணர்வு மாறவில்லை."

எல்லா அரச குடும்பங்களும், அவர்களுக்கு  இடையில் இப்பொது கூட, ஒருதாய் வயிற்றில் பிறந்த சகோதரத்துவ உணர்வு.

அவர்கள் பகைத்து கொண்டாலும், தனிப்பட்ட அடிப்படையில் அந்த உணர்வு மாறவில்லை."

 

👆இந்தச் சமன்பாடு அரசியல்வாதிகளுக்கும் பொருந்துமல்லவா? 

🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.