Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்று நோய்கள் குறித்து சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

மக்கள் தாங்கள் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெங்கு, மலேரியா மற்றும் எலிக் காய்ச்சல் ஆகிய நோய்களும் தற்போது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. எனவே, 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் 30,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கிடையில், மழைக்காலத்தில் எலிக்காய்ச்சலால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, இரண்டு பருவமழைகளைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் உச்சத்தை அடைவதால், பருவகால மாறுபாட்டால் நோய் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகிறது.

இந்த சூழலில், சுகாதார அதிகாரிகள், குறிப்பாக உள்ளங்கால் அல்லது கால்களில் காயங்கள் வெளிப்பட்டால், தண்ணீர் அல்லது சேற்றில் இறங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல், தசைவலி, நிறம் மாறுதல் போன்ற நோயின் அறிகுறிகள் இருந்தால் அரச மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மலேரியா எதிர்ப்பு பிரசாரத்தின் பணிப்பாளர், வைத்தியர் சம்பா அலுத்வீர கூறுகையில், மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது.

2022 இல் மொத்தம் 37 மலேரியா நோயாளிகள் பதிவாகினர். இருப்பினும், ஜனவரி 2023 முதல் 17 மலேரியா நோயாளிகள் உள்ளனர். அனைத்து நோயாளிகளும் வெளி நாடுகளில் இருந்து திரும்பியவர்களாவர்.
அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த ஒருவர் மலேரியா நோயினால் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

https://thinakkural.lk/article/252034

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை ! 

Published By: DIGITAL DESK 5

04 MAY, 2023 | 12:27 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றினை இன்புளுவன்சா வைரஸ் நோய் நிலைமையிலிருந்து வேறுபடுத்தி கண்டறிய முடியாது.

எனவே தற்போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது அத்தியாவசியமாகும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் இதுவரையில் 30 000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே காணப்படுகின்றனர்.

எனவே காய்ச்சல் போன்ற நிலைமைகள் ஏற்படும் போது உடனடியாக வைத்தியர்களை நாட வேண்டியது அவசியமாகும்.

இதே வேளை கடந்த ஓரிரு வாரங்களாக கொவிட் தொற்றாளர்களும் இனங்காணப்பட்டு வருகின்றனர். ஆசிய நாடுகளான இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். எனினும் இந்த நிலைமை குறித்து நாம் வீண் அச்சமடையத் தேவையில்லை.

எவ்வாறிருப்பினும் கொவிட் காலத்தில் பின்பற்றிய சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பேணுவதே ஆரோக்கியமானதாகும். குறிப்பாக நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் முதியோர் மிக அவதானமாக செயற்பட வேண்டும். இதே போன்று தற்போது எலிக்காய்ச்சல் பரவும் வீதமும் அதிகரித்து வருகிறது.

பற்றீரியாவினூடாகவே எலிக்காய்ச்சல் பரவுகின்றது. விலங்குகளின் சிறுநீரிலிருந்து இந்த பற்றீரியாக்கள் பரவுகின்றன. வயல் போன்ற பகுதிகளிலேயே குறித்த பற்றீரியாக்கள் அதிகளவில் பரவி காணப்படும்.

இதனால் ஏற்படக் கூடிய எலிக்காய்ச்சல் தீவிரமடைந்து மரணம் கூட சம்பவிக்கக் கூடும். மார்ச் தொடக்கம் மே மாதம் வரை பெரும்போக நெற்செய்கைக் காலம் என்பதால் விவசாய சமூகத்தினர் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

காய்ச்சல் , கண் சிவத்தல் , தசை வலி, மஞ்சள் நிறத்தில் சிறுநீர் செல்லல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி வைத்தியர்களை நாட வேண்டும்.

இந்த நோய் இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களிலேயே அதிகளவில் பதிவாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள மக்கள் தமது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/154475

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெங்கு வகை 3 நாட்டில் பரவுகிறது – வைத்தியர் சந்திம ஜீவந்தர

நாட்டில் டெங்கு வகை 3 செரோடைப் பரவி வருவதாக பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு,பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

புதிய டெங்கு வகையை எதிர்கொள்வதற்கான நோயெதிர்ப்பு சக்தியை நோயாளிகள் வளர்த்துக் கொள்ளாத காரணத்தினால், 2017 ஆம் ஆண்டு முதல் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்ட அனைத்து மாதிரிகளும் டெங்கு 3 செரோடைப் என கண்டறியப்பட்ட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு டெங்குவுக்கு எதிரான நோய்யெதிர்ப்பு அளவைக் கண்டறிய சோதனை செய்யப்பட்டது. 24% மாணவர்கள் நோய்க்கு எதிரான நோய்யெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளனர். இருப்பினும், திருகோணமலை மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான
மாணவர்கள் வைரஸுக்கு எதிரான நோய்யெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளனர்.

மழைக்காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாட்டில் 30,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/252315

  • கருத்துக்கள உறவுகள்

மலேரியாவை வெற்றிகரமாக இலங்கையிலிருந்து ஒழிக்க தீவிரமான நுளம்புக் கட்டுப் பாடு பிரதான காரணம். டெங்குவையும் அப்படித் தான் கையாள வேண்டியிருக்கிறது. மக்கள் வேறு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளலாம்:

1. டெங்கு: இது இரத்த சோகை (anemia) நிலையை ஏற்படுத்தும் ஒரு வைரஸ். இதனால், மரணம் நிகழும் ஆபத்து சிறு குழந்தைகளில் அதிகமாக இருக்கும். இதன் காரணம், சாதுவான காய்ச்சல் என்றாலும் சின்னன்கள் ஒரு இடத்தில் இருக்காமல் ஓடித் திரியுங்கள். இலங்கையில் வீட்டிலேயே உடல் வெப்ப நிலை பரிசோதிக்கும் வழக்கம் இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. அப்படி இருந்தால் குழந்தைகளில்  காய்ச்சல் நிலை இருக்கிறதா என கவனமாகக் கண்காணிக்கலாம். குழந்தைகள் சற்றுச் சோர்வாக இருந்தாலும், ஒரு தடவை மருத்துவரிடம் காட்டி இரத்த சோகை நிலை இருக்கிறதா எனப் பார்த்து விட வேண்டும். டெங்குவைப் பொறுத்த வரை, அனேகமான சிறுவர் மரணங்கள், இரத்த சோகை முற்றிய நிலையில், உடலில் ஒக்சிசன் குறைந்தே ஏற்பட்டிருக்கின்றன.

2.எலிக்காய்ச்சல் (Leptospirosis):  மாடு, எருமை மாடு, எலி போன்றவை அளைந்த தண்ணீர் எங்கள் உடலில் இருக்கும் சிறு காயங்களுடன் தொடர்பில் வருவதால் தொற்றும் ஒரு பக்ரீரியா தொற்று இது. இதனால் தான் வயலில் செருப்பின்றி வேலை செய்வோரும், இரத்தினச் சுரங்கங்களில் பாதுகாப்பின்றி வேலை செய்வோரும்  அதிகம் பாதிக்கப் படுகின்றனர். டெங்குவோடு ஒப்பிடும் போது எலிக்காய்ச்சலைக் குணப்படுத்தும் மருந்துகள் உண்டு. ஆனால், சிறு நீரகம், ஈரல் என்பவை பாதிக்கப் பட முன்னர் மருத்துவரிடம் செல்ல வேண்டும். காமாளைக் குணம் (jaundice)  காய்ச்சலோடு இருந்தால் அனேகமாக அது எலிக்காய்ச்சலாக இருக்கும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவும் - விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

Published By: DIGITAL DESK 3

05 MAY, 2023 | 05:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வருகிறது. அதனால் 48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடி மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

நாட்டில்  டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்து வருவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் பொதுவாக மே, ஜூன் மாதங்களில் ஏற்படும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிப்பு ஏற்பட்டுவருகிறது.

என்றாலும் கடந்த  வருத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி, மார்ச் மாதங்களிலும் அடிக்கடி மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுகிறது.

அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் மழையுடனான காலநிலை தொடரும் நிலை இருப்பதால் டெங்கு நோய் அதிகரிக்கும் சாத்தியக்கூறு அதிகமாகவே இருக்கிறது.

அதனால் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்த சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறே பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொருவரும் சமூக பொறுப்புடன் செயற்பட்டு தத்தமது சூழலை சுத்தமாக வைத்துக்கொண்டால் டெங்கு நோயை கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமாகும்.

மேலும் இதுவரைக்கும் உள்ள அறிக்கையின் பிரகாரம் மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டிருக்கின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. 

அதனால் இந்த பிரதேசங்களில் இருப்பவர்கள் யாருக்காவது 48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் அவர்கள் உடனடியாக வைத்தியரை நாடி, மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

அதேநேரம் நாற்பட்ட நோயாளர்கள், வயோதிபர்கள் 48 மணிநேரம் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் அவர்கள் தங்கள் உடலில் வழமைக்கு  மாறான வித்தியாசத்தை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/154584

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் 6,500 டெங்கு நோயாளர்கள் : பரவுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

Published By: VISHNU

07 MAY, 2023 | 01:52 PM
image

 

(எம்.வை.எம்.சியாம்)

நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  31,098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் இந்நிலைமை மோசமடைய முன்னர் பல்வேறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் அறிக்கை ஒன்றை

வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு  பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

டெங்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த சுகாதார அதிகாரிகளுடன் பணிக்குழு செயல்படும்.

கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 6,953 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 6,500 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவாமல் தடுக்க நுளம்பு பரவும் இடங்களை அகற்றுதல், பாதுகாப்பு ஆடை அணிதல்  உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/154702

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.